Posted on 2 Comments

பீஹார்: சில அரசியல் கணக்குகள் – ச.திருமலைராஜன்

பீஹார் இந்தியாவின் வளமான ஆனால் மோசமாக நிர்வகிக்கப்பட்ட ஒரு மாநிலமாகவே இருந்து வந்தது. நிதிஷ்குமாரின் தலைமை பீஹாருக்கு குண்டர்களின் ராஜ்யத்தில் இருந்து சற்று விடுதலையை அளித்திருந்தது. அந்த அமைதியையும் வளர்ச்சி நோக்குள்ள அரசாங்கத்தையும் தன் சுயநலத்திற்காக ஒழித்தவர் நிதிஷ் குமார். நிதிஷ் குமார் நேர்மையான திறமையான முதல்வர் என்று பேர் எடுத்திருந்தாலும் தனது ஆணவமும், சுயநலனும், திமிரும் கூடிய சுபாவத்தினால் சீரான அரசாங்கத்தைத் தானே குலைத்தார்.

மோடியை பிரதமர் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி அறிவித்தவுடனேயே நிதிஷ் வேறு கணக்குகளைப் போட ஆரம்பித்தார். திடீரென்று மதச்சார்பின்மை குல்லாவை அணிந்து கொண்டு பிஜேபி கூட்டணியில் இருந்து பிரிந்து வெளியே வந்தார். அன்றிலிருந்து மீண்டும் பீஹார் பழைய பாதைக்குச் செல்ல ஆரம்பித்தது.

வாஜ்பாய் அரசில் இருந்த பொழுது ஏற்படாத தீட்டு மோடியின் பெயரைச் சொன்னவுடன் வந்த காரணம், நிதிஷ் தன்னை மோடியை விடப் பெரிய தலைவராக நினைத்துக்கொண்டதுதான். எதிர்காலப் பிரதமராக எதிர்க்கட்சிகளினால் தேர்ந்தெடுக்கப் படக் கூடிய ஒரு வாய்ப்பு தனக்கு இருப்பதாக தன்னைக் குறித்து மிகையான ஒரு பிம்பத்தையும் அதன் மூலமாகப் பேராசையையும் வளர்த்துக் கொண்டார். அதன் விளைவாக குஜராத் முதல்வராக மோடி அளித்த வெள்ள நிவாரண நிதியை மறுத்து மோடியை அவமானப் படுத்தினார். மோடியை பாஜகவின் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் ஒரு மதவாதி என்றும் அறிவித்து வெளியேறினார். இதே நிதிஷ்குமார், மோடி பிரதமர் வேட்பாளாராக இல்லாமல் வெறும் குஜராத் முதல்வராக மட்டும் இருந்த பொழுது அவரைப் பாராட்டியுள்ளார். அவர் மீது எந்தவிதமான குற்றமும் கூறியதில்லை. மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே அவருக்கு மதச்சார்பின்மையும் மோடியின் மத வெறியும் தீடீர் என்று நினைவுக்கு வந்துவிட்டது.

நிதிஷ் குமாரின் எதிர்பார்ப்பு

பாஜக கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ், லாலு கூட்டணியுடன் இணைவதன் மூலமாக அகில இந்திய அளவில், மோடி எதிர்ப்பு கூட்டணிக்குத் தன்னைத் தலைவராகவும் இதைத் தொடர்ந்து வருங்காலத்தில் வேறு வழியின்றி காங்கிரஸும் பிற எதிர்க்கட்சிகளும் தன்னைப் பிரதமர் வேட்பாளராக நிறுத்தி விடும் என்றும் கனவு கண்டார். அந்தப் பேராசையின் விளைவாகவே அவர் அமைதியாகவும் மரியாதையுடனும் பீஹாரின் வளர்ச்சியுடனும் சென்று கொண்டிருந்த பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு படகைப் பாதியிலேயே கவிழ்த்து விட்டார்.

காங்கிரஸிடம் சரியான தலைமை கிடையாது என்பதினாலும் அகில இந்திய அளவில் எதிர்க்கட்சியினரிடம் தன்னை மிஞ்சிய இன்னொரு திறமையான ஊழல் கறை படியாத ஒரு தலைவர் இல்லை என்பதினாலும் 2019ம் ஆண்டு பாராளுமன்றத்திற்குத் தன்னை மட்டுமே பிரதமர் வேட்பாளராக காங்கிரஸும் பிற எதிர்க்கட்சிகளும் நிறுத்தும் என்றும் உறுதியாக நம்பினார். அந்த நம்பிக்கையுடன் மட்டுமே மதச்சார்பின்மையைக் காரணம் காட்டி மோடியை அவமதிக்கவும் எதிர்க்கவும் தலைப்பட்டார்.

2014 பாராளுமன்றத் தேர்தலில் நிதிஷ் குமார் தனித்துப் போட்டியிட்டு தனக்குத் தனியாக இருக்கும் வாக்கு வங்கியை உறுதிப் படுத்திக் கொண்டார். தனித்துப் போட்டியிட்ட பிஜேபி பீஹாரில் 28 இடங்களை வென்றது. லாலுவுடனும் காங்கிரஸுடனும் கூட்டணி வைத்தால் சட்டசபைத் தேர்தலில் பெரும் வெற்றி அடையலாம் என்று திட்டமிட்டு கணக்குப் போட்டு அவர்களுடன் கூட்டணி அமைத்துக் கொண்டார்.

நிதிஷ் குமாருக்கு என்று நிரந்தரமான கொள்கைகள் ஏதும் கிடையாது. தனது சுயநலன், தனது அரசியல் கணக்குகள் மட்டுமே அவருக்கு முக்கியமானவை. பீஹாரைப் பற்றியோ அதன் வளர்ச்சி குறித்தோ ஊழலற்ற அரசு குறித்தோ பெரிதாக அக்கறை கொண்டவர் அல்ல. காங்கிரஸ் ஊழல்களின் உறைவிடம் என்பதை நன்கு அறிவார். லாலுவின் குடும்பம் பெரும் கொள்ளைக் கூட்டம் என்பதையும் நன்கு அறிவார். ஆட்சிக்கு வந்த பிறகு லாலுவின் குடும்பம் எப்படியும் அன்றாட அரசாங்கத்தில் தலையிட்டுப் பழைய ரவுடி சாம்ராஜ்யத்தை, ஊழல் பேரரசை மீண்டும் உருவாக்குவார்கள் என்பதையும் நன்கு அறிந்தவர்தான் நிதிஷ். இவற்றையெல்லாம் எப்படியும் ஐந்தாண்டுகள் சமாளித்து விட்டால் அல்லது 2019 வரையிலும் சமாளித்து விட்டால் எப்படியும் 2019ல் எதிர்க்கட்சிகளின் மகாபந்தனக் கூட்டணியின் தலைவராக, பிரதமர் வேட்பாளராகத் தன்னை முன்னிறுத்தித்தான் ஆகவேண்டும் என்று கணக்கிட்டார். ராகுல் காந்தியை வைத்துக் கொண்டு காங்கிரஸால் பாஜகவைச் சமாளிக்க முடியாது என்பது நிதிஷ் குமாரின் கணக்கு. இதை மனதில்கொண்டே ஊழல் மற்றும் அராஜக லாலுவின் குடும்பத்துடனும், பீஹாரில் செல்வாக்கு இழந்து போன காங்கிரஸ் கட்சியுடனும் கூட்டணி வைத்தார்.

தான் தந்திரமாகப் போட்ட திட்டங்கள் அனைத்துமே மோடியின் தொடர் வெற்றிகளினாலும் அவருக்கு வளர்ந்து வரும் மக்கள் செல்வாக்கினாலும் உத்தரபிரதேசத்தில் பிஜேபியின் அபரிதமான வெற்றியினாலும் தகர்ந்து விழுவதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்தார் நிதிஷ்குமார். உத்தரபிரதேசத்தில் முலாயம் குடும்பத்தின், மாயாவதியின் தோல்வியும், வட கிழக்கில் வளர்ந்து வரும் பாஜக அலையும் பிற மாநிலங்களில் பாஜகவுக்கு உருவாகும் பெரும் ஆதரவும் அவரை பெரும் அச்சத்தில் தள்ளின. தான் போட்ட கணக்கு பெரும் தப்புக் கணக்கு என்றும் ஒரு பெரும் நரகக் குழியைத் தன் சுயநலத்தால் தோண்டி விட்டதையும் உணர்ந்தார்.

தனது பிரதமர் பதவி கனவு தன் கண் முன்னாலேயே வேகமாக மறைந்து வருவது அவருக்குப் புரிந்தது. அதே சமயத்தில் பீஹாரில் ரவுடிகள் ராஜ்யம் மீண்டும் தலை விரித்தாட ஆரம்பித்ததும் முகத்தில் அடித்தது. ஊழல்கள் பெருகின. லாலுவின் புதல்வர்களும் குடும்பத்தினரும் தங்களது காட்டு ராஜ்யத்தை நிதிஷுக்கு எந்தவிதமான மரியாதையும் அளிக்காமல் தொடர ஆரம்பித்தனர். இந்தியாவின் பிரதமர் கனவு பகல்கனவு ஆகிப் போனது. இதே நிலை நீடித்து, லாலுவின் ரவுடி ராஜ்யத்தின் ஊழல் சாம்ராஜ்யத்தின் கூட்டாளியாகத் தான் தொடர்ந்தால் பீஹாரில் ஒரு வார்டு கவுன்சிலராகக்கூடத் தன்னால் வெற்றி பெற முடியாமல் போய் விடும் என்ற அபாயத்தை உணர ஆரம்பித்தார்.

தன் கால்களின் கீழே பெரும் பீஹார் பூகம்பம் ஒன்று லாலுவின் குடும்பத்தாரால் தோண்டப் படுவதை தினம்தோறும் அனுபவித்து வந்தார். ஒரு பக்கம் பிரதமர் கனவு பாழாகிப் போனது, மறுபுறமோ இருக்கும் முதல்வர் பதவிக்கும், தான் இத்தனை ஆண்டு காலமாக கவனமாக உருவாக்கி வைத்திருக்கும் ஊழலற்ற திறமையான அரசியல்வாதி என்ற பிம்பத்துக்கும், தனது ஆதார இருப்புக்குமே பெரும் அச்சுறுத்தல் என்பதைப் புரிந்துகொண்டார்.

சாதுர்யமான தந்திரமான புத்திசாலியான நிதிஷ் தான் தோண்டிய குழியில் இருந்து தானே வெளியேற முடிவு செய்து தன் தலையில் தானே அள்ளிப் போட்டுக் கொண்ட மண்ணில் இருந்து தன்னை மீட்டு, மீண்டும் பழைய தேசிய ஜனநாயகக் கூட்டணிக்காவது தாவி கொஞ்ச நஞ்சம் மீதம் இருக்கும் மரியாதையையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று அனலில் இட்ட புழுவாகத் துடிக்க ஆரம்பித்தார். அவரது நிலையைச் சரியாக அவதானித்து வந்த அமித் ஷா, மோடி இருவரும் தக்க சமயத்திற்காகக் காத்திருந்தனர். நிதிஷும் மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை, பாகிஸ்தான் தாக்குதல் ஆகியவற்றைப் பாராட்டி ஆதரவளித்ததன் மூலமாக மெதுவாக மீண்டும் பாஜக பக்கம் சாயும் தனது ஆசையைத் தெரிவித்து வந்தார். இந்த சமிஞ்கைகளை பாஜக கச்சிதமாகப் புரிந்து கொண்டு செயல்பட்டது. நிதிஷுக்குத் தேவையானது அவரது மரியாதைக்கும் அந்தஸ்துக்கும் பங்கம் வந்து விடாமல் பக்குவமாக லாலு காங்கிரஸ் கூட்டணியில் இருந்து பிரிய ஒரு தருணம் என்பதைப் புரிந்து கொண்டனர். நிதிஷ் தனக்கு பாஜக அந்தத் தருணத்தை உருவாக்கித் தரும் என்று காத்திருந்தார். பாஜக உருவாக்கியது. கச்சிதமாகப் அதைப் பிடித்துக் கொண்டு தனக்குத் தானே வெட்டியக் குழியில் இருந்து வெளியேறி மீண்டும் பாதுகாப்பான தனது இடத்துக்கு வந்து விட்டார்.

காங்கிரஸின் தப்புக் கணக்கு

மோடி எதிர்ப்பாளராக மதச்சார்பின்மையின் முகமாக திறமையான ஊழலற்ற ஆட்சியாளர் என்ற பிம்பத்தில் ஊறித் திளைத்துக் கொண்டிருக்கும் நிதிஷுக்குத் தங்களை விட்டால் வேறு போக்கிடம் கிடையாது என்று காங்கிரஸ் உறுதியாகக் கடைசி வரையிலும் நம்பிக் கொண்டிருந்தார்கள். நிதிஷின் சமிஞ்கைகள் எதையுமே அவர்கள் உரிய கவலையுடன் எதிர் கொள்ளவில்லை. மாறாகக் கழுதை கெட்டால் குட்டிச் சுவர் என்ற ரீதியில், நிதிஷுக்குத் தங்களை விட்டால் வேறு நாதி கிடையாது என்று நம்ப ஆரம்பித்தார்கள். பண மதிப்பு நீக்க ஆதரவு, பாகிஸ்தான் தளங்களின் மீதான தாக்குதலுக்கான ஆதரவு, ஜனாதிபதி வேட்பாளருக்கான ஆதரவு, சோனியாவைப் புறக்கணித்து விட்டு மோடியுடன் மதிய உணவுக்குப் போனது என்று அனைத்தையுமே அலட்சியமாக எடுத்துக் கொண்டனர் சோனியாவும் அவரது கட்சியினரும். சில வாரங்களுக்கு முன்பாக ராகுலை விட்டுத் தான் அடுத்த தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளர் கிடையாது என்று சொல்ல வைத்ததன் மூலம் நிதிஷூக்கு ஆசை காட்டுவதாக நினைத்தார்கள்.

என்னதான் காங்கிரஸ் பிரதமர் பதவி என்னும் கேரட்டை முன்னால் நீட்டிக் கொண்டிருந்தாலும் நாட்டின் நிலவரம், எதிர்க்கட்சிகளின் பலவீனங்கள், ஆளும் பாஜக அரசின் வலுவான ஆதரவு அலைகள் ஆகியவற்றைக் கணக்குப் போட்டுப் பார்த்த நிதிஷ், காங்கிரஸின் பசப்பு வார்த்தைகளை நம்பாமல் தன்னிச்சையாக முடிவெடுத்திருக்கிறார். நிதிஷ் தங்களை விட்டு எங்கும் போக முடியாது என்ற மதர்ப்பிலும் முட்டாள்தனத்திலும் அரசியல் சாதுர்யம் இன்றி மூழ்கிக் கிடந்தது காங்கிரஸ். மேலும், சோனியா பெரும்பாலும் உடல்நலக் காரணங்களினால் ஒதுங்கியிருக்க, ராகுலுக்கு எதிலும் ஆர்வமோ, அறிவோ, அக்கறையோ, புத்தி சாதுர்யமோ இல்லாமல் போனது மற்றொரு காரணம்.

பீஹார் மாநிலப் பிரச்சினையில் இரு தரப்பையும் அழைத்து ஊழல் குற்றசாட்டிற்குள்ளான லாலுவின் பையன் தேஜஸ்வி யாதவை துணை முதல்வர் பதவியில் இருந்து சில காலத்திற்காவது விலகச் சொல்லி விலக வைத்திருந்தால் நிதிஷுக்கு கூட்டணியில் இருந்து விலகச் சரியான காரணம் கிடைக்காமல், இன்னும் வலுவான காரணம் கிட்டும் வரை கூட்டணியில் தொடர வேண்டிய நிர்ப்பந்தத்தை உண்டாக்கி இருக்கலாம். ஆனால் ராகுலோ, ‘வந்தால் வரட்டும் இருந்தால் இருக்கட்டும் போனால் போகட்டும்’ என்று விட்டேற்றியாகச் செயல்பட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சியோ அதன் கூட்டணியோ அழிவது குறித்து எந்தவிதமான கவலையும், ‘விடுமுறைகளுக்கு நடுவில் இந்திய அரசியலுக்குள் எட்டிப் பார்க்கும்’ ராகுலுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அவர் கட்சியில் நேரு குடும்பத்தை எதிர்த்துப் பேசும் துணிவும் வேறு எவருக்கும் இல்லை. இந்த நிலையில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, எந்தத் தைரியத்தில் நிதிஷ் இந்த மண் குதிரைகளை நம்பி 2019ம் தேர்தல் ஆற்றில் குதிக்க முடியும்? அது தற்கொலைக்கு ஒப்பானது என்பதை உணர்ந்த நிதிஷ் எதையும் யோசிக்காமல் பாஜகவிடம் அடைக்கலமாகியுள்ளார். இதற்கு காங்கிரஸ் தலைமையின் இயலாமையும் முனைப்பின்மையும் ராஜ தந்திரமின்மையும் அலட்சியமும் தப்பான ஆணவமான கணக்குகளும் முக்கிய காரணங்களாக அமைந்து விட்டன

பாஜகவின் கணக்குகள்

பீஹார் அரசியல் நிலையின்மைகளின் ஒட்டுமொத்தப் பயனை அறுவடை செய்யப் போவது பாஜக மட்டுமே. நிதிஷ் தன் தலையைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். பாஜகவோ தன் எதிர்கால வெற்றியை உறுதி செய்து கொண்டுள்ளது. பீஹாரில் பாஜக தனியாகப் போட்டியிட்டு கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட 40% ஓட்டுக்களையும் 40 இடங்களில் 28 இடங்களையும் கைப்பற்றியது. சட்டசபைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வலுவான கூட்டணியினாலும் நிதிஷுக்கு மக்களிடம் இருந்த நம்பிக்கையினாலும் கிட்டத்தட்ட 30% சதவிகிதம் ஓட்டுக்களையும் 58 இடங்களையும் மட்டுமே பெற்றிருந்தது. வலுவான கூட்டணி இருந்த போதிலும் பீஹாரில் பாஜக 30% முதல் 40% வரையிலான ஓட்டுக்களைப் பெறும் வலுவான இடத்திலேயே இருக்கிறது. இருந்தாலும் பீஹாரின் ஜாதீய கணக்குகளினாலும் முஸ்லீம் ஓட்டுக்களினாலும் தனித்து நின்று பெரும்பான்மையைப் பெறும் இடத்தை பாஜக இன்னும் அடையவில்லை. ஒரு வேளை அடுத்த தேர்தல்களில் பாஜக தனியாக நின்றிருந்தால் நிதிஷ் – லாலு ஊழல் கூட்டணியின் மீதான வெறுப்பில் பாஜக தனியாகவும் வெல்லும் நிலைக்குச் செல்லக் கூடும்.

ஆகவே இப்பொழுது நம்பிக்கைத் துரோகியான சந்தர்ப்பவாதியான நிதிஷ் அரசுக்கு பிஜேபி ஆதரவு அளிப்பதை நான் உட்பட அதன் பெரும்பான்மையான ஆதரவாளர்கள் விரும்பவில்லை. இருந்தாலும் அரசியல் என்பது வேறு. வரும் 2019ம் பாராளுமன்றத் தேர்தலில் பாஜக வெறும் தனிப் பெரும்பான்மை வெற்றிக்கு மட்டுமே முயலவில்லை. மாறாக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை நோக்கிக் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது. அந்த இலக்கை அடையும் எந்தவொரு உத்தியையும் பிஜேபி தவற விடாது. ஏற்கெனவே மணிப்பூர், நாகாலாந்து, கோவா, அருணாச்சல் ஆகிய மாநிலங்களில் வாய்ப்புகளைத் தவற விடாமல் கைப்பற்றியதில் இருந்தே இதைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்தச் சூழலில் இந்தியாவின் இந்தி சூழ் (Hindi belt) மாநிலங்களில் ஒன்றான பீஹாரை மீண்டும் கூட்டணியின் மூலமாகவாவது கைப்பற்றுவதை, 2019ல் மூன்றில் இரண்டு பங்கு வெற்றியை எட்டும் இலக்கின் ஒரு முக்கியமான நடவடிக்கையாகக் கருதுகிறது பாஜக. இந்தக் கூட்டணியின் மூலமாக ஏற்கெனவே பாஜகவுக்குத் தனியாக இருக்கும் 40% வாக்கு வங்கியுடன் நிதிஷின் 16% ஓட்டுக்களும் இணையும் பொழுது ஒட்டுமொத்த மாநிலத்தையே மொத்தமாக ஜெயிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. மேலும் இந்தக் கூட்டணியின் மூலமாக ராஜ்ய சபாவில் தனிப் பெரும்பான்மையையும் பாஜக அரசு 2018லேயே அடைய முடியும். இல்லாவிட்டால் அது 2019ல் மட்டுமே சாத்தியமாகும். மேலும் எதிர்க்கட்சிக் கூட்டணியின் ஊழல் கறைபடாத ஆட்சித் திறன் உள்ள ஒரே தலைவரும் கூட பாஜகவின் பக்கம் சாய்வது பாஜகவுக்குப் பிற மாநிலங்களில் பெரும் அளவில் தார்மீக வலுவையும் ஆதரவையும் பெருக்கும். ஒருவேளை ஆளும் கட்சிக்கு எதிரான ஒரு எதிர்ப்பு குஜராத், மபி, ராஜஸ்தான் மாநிலங்களில் அதன் ஓட்டு எண்ணிக்கையையும் அதன் மூலமாக பாராளுமன்ற இடங்களைக் குறைக்குமானாலும்கூட இந்தக் கூட்டணியின் மூலமாக வரும் அதிகப்படியான எண்ணிக்கைகள் அதை ஓரளவுக்குச் சரிக்கட்டவும் கூடும்.

மேலும் பிஜேபிக்கும் நிதிஷூக்கும் சித்தாந்த ரீதியிலான கொள்கை வேறுபாடுகள் எதுவும் பெரும் அளவில் கிடையாது. நிதிஷின் மதச்சார்பின்மை என்பது வெற்று அரசியல் மட்டுமே. பாஜகவின் மீது பெருமளவு எதிர்ப்பு எல்லாம் அவரிடம் இருந்தது கிடையாது. ஏற்கெனவே வாஜ்பாய் அரசில் கூட்டாளியாக இருந்தவர்தான். பாஜகவுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த பெரும் தவறை பாஜகவினர் இப்பொழுதைக்கு மறந்துவிட்டு, 2019ம் ஆண்டின் கணக்கை உத்தேசித்து, நீதீஷூடன் கூட்டணி வைப்பதில் அவர்களுக்கு ஏதும் பெரிய தயக்கம் இருக்கப் போவதில்லை.

நிதிஷுடன் இணைவது மூலமாக மோடியின் திறன்மிகு அரசாட்சியை பீஹாரிலும் எந்த எதிர்ப்பும் இல்லாமல் திறமையாக அமல்படுத்தலாம். கங்கைத் தூய்மை திட்டம், மேக் இன் இண்டியா திட்டம், ஸ்வச் பாரத் போன்ற அனைத்துத் திட்டங்களும் பீஹாரிலும், லாலு- காங்கிரஸ் கட்சியினரின் முட்டுக்கட்டைகள் ஏதுமின்றி எளிதாகச் செயல்படுத்தப்படும். இதன் மூலமாக ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கியமான மாநிலமான பீஹாரை, பின்தங்க விடாமல் மோடி அரசாங்கம் அணைத்துச் செல்லும்.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே பிஜேபி காய்களை நகர்த்தியுள்ளது. லாலுவின் அராஜகங்களையும் அவமரியாதைகளையும் தாங்க முடியாத நிலையிலும், தன் பிரதமர் கனவு தகர்ந்துவிட்ட நிலையிலும் நிதிஷ் நிலைகுலைந்து இருந்த தருணத்தை பாஜக நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளது. நிதிஷின் மன நிலையை அறிந்துகொண்டு அவரது மரியாதைக்குப் பங்கம் வராவண்ணம் கூட்டணி ஆட்சியில் இருந்து விலகுவதற்கான காரணங்களை பாஜக ஒன்றன்பின் ஒன்றாக தேர்ந்த சதுரங்க ஆட்டத்தின் காய் நகர்த்துதல் போல நகர்த்தியுள்ளது. லாலுவின் மீதான வழக்குகளை முடுக்குதல், அவரது குடும்பத்தின் முறைகேடான சொத்துக்களை முடக்குதல், லாலுவின் மகன் மற்றும் மகளின் ஊழல்களை வெளிப்படுத்துதல், அவற்றை ரிபப்ளிக் டி வியின் அர்நாப் மூலமாக அம்பலப்படுத்துதல் என்று ஒவ்வொரு கட்டமாக பாஜக மிக சாதுர்யமாகச் செயல்பட்டது. இறுதியில் தான் வெளியேறுவதைவிட வேறு வழியில்லை என்ற நிதிஷின் நிலைப்பாட்டில் நியாயம் உள்ளது போலவும் அவரது வெளியேறல் ஒரு சந்தர்ப்பவாதச் செயலாகத் தெரியாதது போலவும் அதற்கான சூழல்களை பாஜக உருவாக்கி லாலு கூட்டணியில் இருந்து நிதிஷ் வெளியேறுவதை அவருக்கு வசதியாக ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.

பாஜக தானாக வலியப் போய் எந்தவொரு கூட்டணியையும் பிரிக்கவில்லை. எவரையும் விலைகொடுத்து வாங்கவில்லை. பீஹாரின் அரசியல் சூழல்களைத் தனக்கும் தேசத்துக்கும் சாதகமான முறையில் பயன்படுத்திக் கொண்டுள்ளது. இந்த முயற்சியை, காங்கிரஸ் அந்தக் காலத்தில் எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களைக் கலைத்தும், ஆட்களை விலைக்கு வாங்கியும் தன் ஆட்சியைத் திணித்த அயோக்கியத்தனங்களுடன் ஒப்பிடவே முடியாது.

ஆக பீஹார் விஷயத்தில் இந்திய அரசியல் கட்சிகளின் பல்வேறு கணக்குகள் ஒட்டுமொத்தமாக தேசத்திற்கு நன்மையாகவும் வலுவான உறுதியான வளர்ச்சியுடைய பாரதத்தை உருவாக்கும் பாஜகவின் திட்டங்களுக்கு உறுதுணையாகவும் அமைந்து விட்டிருக்கிறது. இதன் மூலமாக நிதிஷ் தனது பிம்பத்தை, மரியாதையைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்திருக்கிறது. பாஜக தன் எதிர்கால வெற்றியை உறுதி செய்து கொண்டுள்ளது. பீஹார் மாநிலம் ரவுடிகளின் ராஜ்ஜியத்தில் இருந்து விடுதலை அடையப் போகிறது. பாரத தேசமும் இதன் பயனை அடையப் போகிறது. ஆகவே சில பாஜக ஆதரவாளர்களுக்குத் தனிப்பட்ட வகையில் இது ஒரு கசப்பான முடிவாகத் தெரிந்தாலும் ஒட்டுமொத்த தேச நலனை உத்தேசிக்கும் பொழுது இது ஒரு நல்ல முடிவாகவே அமைந்துள்ளது. ஒரு வேளை ஒரு சில எம் எல் ஏக்களின் விலகல்களினால் நிதிஷின் ஆட்சி கவிழ்க்கப்பட்டாலும்கூட அடுத்த முறை மாபெரும் வெற்றியை இந்தக் கூட்டணி சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் அடைந்தே தீரும்.

2 thoughts on “பீஹார்: சில அரசியல் கணக்குகள் – ச.திருமலைராஜன்

  1. அருமையான அரசியல் ஆய்வு."சோ"விற்கு பின்னால் தேசநலன் சார்ந்த அக்கறையுள்ள ஒரு அரசியல் விமர்சகராக திருமலைராஜன் விளங்குகிறார்.

  2. சூப்பர் ஜி

Leave a Reply