Posted on Leave a comment

வலம் மார்ச் 2019 இதழ் – முழுமையான படைப்புகள்


வலம் மார்ச் 2019 இதழின் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.

புல்வாமா தாக்குதல் | கேப்டன் எஸ்.பி. குட்டி

நேர்காணல்: ஹெச்.ராஜா | அபாகி

பட்ஜெட் 2019 | ஜெயராமன் ரகுநாதன்

கனம் நீதிபதி அவர்களே, ஒளியிலிருந்து இருட்டுக்கு இட்டுச் செல்லாதீர்கள் | அரவிந்தன் நீலகண்டன், தமிழில்: மைத்ரேயன்

ஒடிசாவில் ஒரு இறையியல் சுற்றுலா | சுமதி ஸ்ரீதர்

இரண்டாவது மொழி | ரஞ்சனி நாராயணன்

சில பயணங்கள் சில பதிவுகள் – 18 | அவசர நிலை | – சுப்பு

சாலா (சிறுகதை) | மதிபொன்னரசு

செண்டலங்காரர் தெட்டபழம் | சுஜாதா தேசிகன்

Posted on Leave a comment

செண்டலங்காரர் தெட்டபழம் | சுஜாதா தேசிகன்

தமிழில் சுமார் நூறு வார்த்தைகளை மட்டுமே நாம் அன்றாடம் பேசவும்
எழுதவும் உபயோகிக்கிறோம். ஆழ்வார்கள் உபயோகித்த வார்த்தைகள் பல ஆயிரம் இருக்கும். நம்
சொல்லகராதி (vocabulary) மிகக் குறைவு, ஆதலால் நமக்கு எளிய உரைகள் தேவைப்படுகின்றன.
கீழே உள்ள பெரியாழ்வார் பாசுரத்தில் எவ்வளவு வார்த்தை உங்களுக்கு தெரியும் என்று பாருங்கள்.

பருப்பதத்துக் கயல்
பொறித்த
பாண்டியர் குலபதி போல்
திருப் பொலிந்த சேவடி என்
சென்னியின் மேல் பொறித்தாய்

எளிய விளக்கம்: மேரு மலையில் தனது கயல் (மீன்) சின்னத்தை
வெற்றிக்கு அடையாளமாகப் பொறித்த பாண்டியர் குலத்துப் பேரரசனைப் போன்று அழகு பொலிந்த
திருவடிகளை என் தலை மீது அடையாளமாக (பெருமாள்) பொறித்தருளினான் என்று ஆழ்வார் கூறுகிறார்.
இன்னும் கொஞ்சம் ஆழமாக இந்தப் பாசுரத்தை அனுபவிக்க மேலும் சில விஷயங்களைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

பெரியாழ்வார் காலத்தில் மூன்று பாண்டியர்கள் அரசு செய்தார்கள்.
அவர்கள் முறையே கோச்சடையான், மாறவர்மன், பராந்தகன். பராந்தகன் பரம வைஷ்ணவன். ஆனால்
அவன் தந்தை மாறவர்மன் அப்படி அல்ல. பெரியாழ்வார் காலத்தில் சமயவாதம் நிகழ்ந்து மாறவர்மன்
ஆழ்வாருக்கு அடியவன் ஆனான். செப்பேட்டில் ‘பரமவைஷ்ணவதானாகி’ என்று வருவதே இதற்குச்
சான்று.

இந்தப் பாசுரத்தில் பாண்டியனைச் சிறப்பித்துப் பேசி அவனுடைய
இலச்சினையை ஏன் பெரியாழ்வார் பெருமாளின் திருவடிக்கு ஒப்பிடுகிறார் என்று கொஞ்சம் ஆராயலாம்.

பாண்டியரின் இலச்சினை இரண்டு மீன் நடுவில் ஒரு சாட்டை போல
இருப்பதைப் பார்க்கலாம். சாட்டை போல இருப்பது பாண்டியரின் செங்கோல். இதைப் பார்த்தவுடன்
ஆழ்வாருக்குப் பெருமாளின் திருவடியும், தன் நெற்றியில் இருக்கும் திருமண்னும் (நாமம்)
நினைவுக்கு வந்திருக்கும் என்று தோன்றுகிறது.

மேலே சொன்ன இந்த உதாரணம் எதற்கென்றால், செய்யுளில் சொற்கள்
சாதாரணமாக நமக்குத் தெரியும். ஆனால் சரியான பொருள் தெரிந்தால்தான் அதன் அலாதியான சுவை
புரியும்.
பாண்டியனின் சின்னத்தில் நடுவில் செண்டு போல இருப்பதைப் பார்த்தால்
உ.வே.சாமிநாதையர் எழுதிய ‘செண்டலங்காரர்’ என்ற கட்டுரை நினைவுக்கு வருகிறது. அதன் சுருக்கத்தை
இங்கே தருகிறேன்.

செண்டலங்காரர்

வில்லிபுத்தூரார் இயற்றிய பாரதம் தமிழிலே சுவையானது. தமிழர்களுடைய
உள்ளத்தை அது கவர்ந்தது. உ.வே.சாமிநாதையர் தன் இளமையிலே அந்நூலைப் படித்து அதிலுள்ள
சந்த அமைப்பைக் கண்டு வியந்திருக்கிறார்.
அதில், சூதாடித் தோற்ற வரலாற்றில் சூதாட்டம் முடிந்தபிறகு
துரியோதனன் அரசவைக்குத் திரௌபதியை அழைத்து வரத் தன் தம்பி துச்சாதனனுக்குக் கட்டளையிடுகிறான்.
காந்தாரியோடு இருந்த திரௌபதியை அவன் வலியப் பிடித்து இழுத்து வருகின்றான். அதை விவரிக்கும்
செய்யுள் இது.

“தண்டார் விடலை தாயுரைப்பத்
 தாய்முன் னணுகித் தாமாரைக்கைச்
செண்டால் அவள்பைங் குழல்பற்றித்
 தீண்டா னாகிச் செல்கின்றான்
வண்டார் குழலு முடன்குலைய
 மானங் குலைய மனங்குலையக்
கொண்டா ரிருப்ப ரென்றுநெறிக்
 கொண்டா ளந்தோ கொடியாளே”

“தன்னுடைய தாயாகிய காந்தாரி, ‘நீ போய் வா’ என்று கூற, துச்சாதனன்
அன்னை போன்ற திரௌபதியின் முன் சென்று தன் கையிலுள்ள செண்டால் அவளது கூந்தலைப் பற்றிச்
செல்லலானான். கொடிபோன்ற திரௌபதி, அந்தோ!, தன் குழல் குலைய மனங்குலையத் தான் செல்லுமிடத்தே
தன் கணவர் இருப்பர் என்ற தைரியத்தோடு சென்றாள்” என்பது இச்செய்யுளின் பொருள்.

உ.வே.சாவிற்கு ‘கைச் செண்டால் அவள்பைங் குழல்பற்றி’ என்று
வரும் வரியில் ஐயம் வந்தது. செண்டு என்பதற்குப் பூச்செண்டு என்று பொருள் கூறுவர். துச்சாதனன்
கையில் பூச்செண்டு எங்கிருந்து வந்தது?
திரௌபதி கூந்தலில் அணிந்திருந்த மாலையைப் பிடித்து இழுத்தான்
என்று வைத்துக்கொண்டால், திரௌபதி அக்காலத்தில் தீண்டாத நிலையில் இருந்தாள், அதனால்
அவள் கூந்தலில் மலர் அணிந்திருக்க சாத்தியமில்லை. செண்டென்பதற்குப் பந்தென்று ஒருபொருள்
உண்டு. பந்துக்கு இங்கே என்ன சம்பந்தம் என்று பல ஐயங்கள் ஐயருக்கு இருந்திருக்கின்றன.

பல வருடங்கள் கழித்துத் தமிழ் யாத்திரையில் சீர்காழி-மாயூரம்
பக்கம் ஆறுபாதி என்னும் ஊருக்கருகில் சென்று கொண்டிருந்தபோது அங்கே ஒரு பெருமாள் கோயில்
இருக்க, அங்கே சென்றார். அக்கோயிலின் வாசலில் தர்மகர்த்தாவும் வேறு சிலரும் யாரோ பெரிய
உத்தியோகஸ்தர் ஒருவருடைய வரவை எதிர்பார்த்துக்கொண்டு இருந்தபோது உ.வே.சா. அவர்களைப்
பார்த்து, இவர்தான் அந்தப் பெரிய உத்தியோகஸ்தர் என்று எண்ணிவிட்டார். “வாருங்கள்,
வாருங்கள்” என்று உபசரித்து வரவேற்றுப் பெருமாள் தரிசனம் செய்து வைத்தார்.

தரிசனம் செய்தபோது பெருமாள் திருக்கரத்தில் பிரம்பைப்போல
ஒன்று அவர் கண்ணில் பட்டது. அதன் தலைப்பில் இரண்டு வளைவுகள் இருந்தன. தர்மகர்த்தாவை
நோக்கி, “இது புதிதா யிருக்கிறதே, என்ன?” என்றார். “அதுதான் செண்டு” என்று தர்மகர்த்தா
கூற, “செண்டா!” என்று சொல்லி, “எங்கே, அதை நன்றாகக் காட்டுங்கள்” என்று உ.வே.சா கேட்க,
கோயில் அர்ச்சகர் கற்பூர தீபத்தால் அந்தச் செண்டை நன்றாகப் பார்க்கும்படி காட்டினார்.
உ.வே.சாவின் மனக்கண்முன் திரௌபதியின் உருவம் வந்து நின்றது. துச்சாதனன், தலைப்பு வளைந்த
பிரம்புபோன்ற ஒரு கருவியால் அவள் கூந்தலைப் பற்றியிழுக்கும் காட்சி அவர் கண்முன்னே
வந்தது.
அர்ச்சகர் காட்டிய கற்பூர தீபம் பெருமாள் திருக்கரத்திலிருந்த
ஆயுதத்தைக் காட்டி, பலகாலமாக அவர் மனத்திலிருந்த சந்தேக இருளை அகற்றியது.
அர்ச்சகர் மேலும் “இந்தப் பெருமாளும் மன்னார்குடியில் எழுந்தருளியிருக்கும்
பெருமாளும் ஒரே அச்சு. அங்கும் பெருமாளின் திருக்கையில் செண்டு உண்டு. ‘செண்டலங்காரப்
பெருமாள்’ என்றும் அவரது திருநாமம்” என்று கூறினார்.

மன்னார்குடிப் பெருமாளுக்குச் செண்டலங்காரப் பெருமாளென்னும்
திருநாமம் உண்டென்று தர்மகர்த்தா கூறியதை இலக்கிய வாயிலாகவும் பிறகு உறுதி செய்துகொண்டார்.
பெருமாள் தரிசனத்தின் பயன் அன்று அவருக்குக் கிடைத்தது.
*
தெட்டபழம்

ஸ்ரீராமானுஜர் காலட்சேபம் (வேதம் மற்றும் ஆழ்வார்ப் பாசுரங்களுக்கு
விளக்க உரை) செய்யும்போது அன்று திருமங்கையாழ்வார் அருளிச் செய்த பாசுரங்களை அனுபவித்துக்கொண்டு
இருந்தார்.

பட்டு அரவு ஏர் அகல் அல்குல், பவளச் செவ்வாய்,
      பணை நெடுந்தோள், பிணை நெடுங்கண், பால்
ஆம் இன்சொல்*
மட்டு அவிழும் குழலிக்கா, வானோர் காவின்
      மரம் கொணர்ந்தான் அடி அணைவீர்!* அணில்கள்
தாவ
நெட்டு இலைய கருங் கமுகின் செங் காய் வீழ,
      நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு* பீனத்
தெட்ட பழம் சிதைந்து, மதுச் சொரியும் காழிச்
      சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.

சீர்காழி (காழிச் சீராமவிண்ணகரம்) பெருமாள் பற்றிய பாசுரம்: 

“சத்தியபாமைக்குப் பரிசாக பாரிஜாத மரத்தைக் கொணர்ந்து பெருமான் திருவடியை அடைய விருப்பம்
உள்ளவர்களுக்கு காழிச் சீராம விண்ணகரமே கதி” என்கிறார் ஆழ்வார்.

இந்தப் பாசுரத்தில் ஆழ்வார் ஊரை எப்படிச் சொல்லுகிறார் பாருங்கள்
என்று விவரிக்கத் தொடங்கினார். “பட்டுச் சேலையை விரித்த மாதிரியான நிலப்பரப்பு. அங்கே
பவழம் போலச் சிவந்த வாய், மூங்கில் போன்ற நீண்ட தோள்களையும் அமுதம் போன்ற இனிமையான
வாய்மொழிகளையும்… என்று அடுக்கிக்கொண்டு விவரித்த ஸ்ரீராமானுஜர், அங்கே நீண்ட இலைகளை
உடைய கரிய பாக்கு மரங்களின் செங்காய்கள் அணில்கள் தாவியதால் கட்டுக் குலைந்து கீழே
விழுந்தன” என்றார்.

விவரிக்கும்போது ‘தெட்ட பழம்’ என்ற சொல்லுக்குச் சரியான பொருள்
அவருக்குப் பிடிபடவில்லை. சரியான பொருள் கூற முடியாமல் தவித்தார். அவர் மனதில் ‘தெட்ட
பழம்’ என்னவாக இருக்கும் என்ற ஐயம் உண்டாயிற்று.
பிறகு ஒருசமயம் அவர் திவ்யதேச யாத்திரையில் சீர்காழி தலத்தின்
சோலை வழியாக, திருமங்கை ஆழ்வார் வர்ணித்த இயற்கை அழகை அனுபவித்துக்கொண்டு வந்தபோது
அங்கே ஒரு நாவல் மரம் பழுத்துக் குலுங்கியதைக் கண்டார். நாவல் மரத்தின் கிளையில் அமர்ந்துகொண்டிருந்த
ஒரு பையன் கிளைகளை அசைக்க, கீழே உதிர்ந்த நாவற்பழங்களைச் சிறுவர்கள் பொறுக்கிக்கொண்டு
இருந்தார்கள்.

அப்போது ஒரு சிறுவன் “அண்ணே தெட்ட பழமாகப் பார்த்துப் பறித்துப்போடு”
என்று மரத்தின் மீதமர்ந்த பையனைப் பார்த்து கூற, ஸ்ரீராமானுஜர், “பிள்ளாய் தெட்ட பழம்
என்றால் என்ன?” என்று வினவ, அதற்கு அந்தச் சிறுவன் “பழுத்த பழம்” என்று சொல்ல, ஸ்ரீராமானுஜர்
அந்தச் சிறுவனை வணங்கினார். ஆழ்வார் அங்கு வழங்கும் வட்டார மொழியில் அருளிச் செய்திருப்பதை
உணர்ந்து வியந்தார்.

Posted on Leave a comment

சாலா (சிறுகதை) | மதிபொன்னரசு

“ஏட்டி, புள்ளைக்கு எப்படி இருக்கு?”
“இன்னும் விட்டுவிட்டுத்தான் காச்ச அடிக்கி. பேதிலபோவான் கிணத்துப்பக்கம்
போவானா.. யெ உயிர எடுக்கணும்னே புறந்திருக்கான்.”
“புள்ளையே காச்சல்ல கிடக்கு, அதப்போய் திட்டிகிட்டு இருக்க.”
“பின்ன என்னத்தே, ஒரு சொல்பேச்சு கேக்கானா பாருங்க.”
“ஏல ராசா, அந்த கிணத்து பக்கம் போவதியாலே, அங்கன அவ நிக்கானு சொல்லிட்டு
கிடைக்காவல்ல எல்லாரும்… பின்னையும் எண்டே இப்படி அழிச்சாட்டியம் பண்ணுதியோ.”
அந்த கிணறு குளத்துக்குள் இருந்தது. குளத்துக்குள் கொஞ்சதூரம் இறங்கி
நடந்துதான் கிணற்றை அடைய முடியும். கிணத்தடி உண்டு. கிணற்றைச் சுற்றி மூன்று அடி
அகலத்துக்கு சிமிண்ட் தரை போட்டிருக்கும். அது குளத்தில் இருந்து இடுப்பளவு உயரம்
இருக்கும். குதித்து எற வேண்டியிருக்கும். அதில் உட்க்கார்ந்து துணி துவைக்க,
அலசும் வேலைகள் நடக்கும்.
கிணற்றின் மேல நாலு பக்கமும் நாலு அடி உயரத்துக்கு கல்தூண் நிற்கும்.
நீச்சல் தெரியாதவர்கள் சேலையைக் கிணற்றுக் கல்தூணில் கட்டிட்டு இன்னொரு முனையை இடுப்பில்
கட்டிக்கொண்டு உள்ளே குதித்து நீந்துவது மாதிரி நடிக்கலாம். நாம் அந்த வகைதான்.
அந்த ஞாயித்துகிழமை நல்ல விடியலாக இல்லை. ரொம்ப நாளைக்கு அப்புறம் தண்ணி
நல்லா குளத்துல ரொம்பி இருந்துச்சு. கிணத்துலயும் முக்கா கிணத்துக்கு தண்ணி.
கிணத்தடில நின்னுகிட்டு குனிஞ்சா கிணத்து தண்ணிய தொடலாம். அந்த அளவு தண்ணி.
நாங்க ஏழாவது படிச்சிக்கிட்டிருந்தோம். அப்பொ வழக்கம் போல அன்னிக்கி
குளிக்க போனோம்… இல்ல ஓடினோம். தெருவில புடிச்ச ஓட்டம்… சிட்டாய் பறக்கதுனு
சொல்வாங்களே, அந்த மாதிரி.
 
வெங்கிட்டு, வெள்ளையா, வெயிலுக்கந்தன், மணி, நான். இதில் வெயிலுக்கந்தன்
மிக வேகமாக ஓடினான். குளத்தில் இறங்கியதும் கொஞ்சம் வேகம் தடைபட்டது. ஆயினும்
இடுப்பளவு நீரில் வேகமாக ஓடினான். ஓடி கிணத்தடி அடைந்து அதில் ஏறினான்.
எறியவன் அப்படியே கிணற்றுச் சுவரைப் பிடித்து ஆவியம் (ஒருவர் குனிந்து
நிற்க அவரின் முதுகில் கை வைத்து அப்டியே தாண்டுவது) தாண்டுவதுபோலத்
தாண்டி,குளத்தில் குதித்தான்.
“ஏ, நான் தான் பர்ஸ்டே.”
சொல்லிக்கொண்டே குதித்தான். 
நாங்கள் அப்போது தான் கிணத்தடி ஏறினோம். கிணற்றில் குதித்து உள்ளே
போனவன்… வந்தான்… அவன் கூடவே… வேறு எதோ ஒன்று… பச்சை கலர் துணி…. இல்லை…
சேலை… இல்லை…
“டேய்ய்ய் … மேலே ஏறுடா.” வெள்ளையா கத்தினான்.
வெயிலுக்கந்தன் மேலே வரும்போதே ஏதோ இடித்துக்கொண்டே வருவதை உணர்ந்தான். ‘அதுக்குள்ள
இந்த பயலுவோ குதிச்சிட்டானுவலா’ என்ற யோசித்தபடியே காலை உதைத்துத் தண்ணீரின்
மேற்பரப்புக்கு வந்து கொண்டிருந்தான் .
அவன் உதைக்க உதைக்க காலை எதோ இடித்துக்கொண்டே இருந்தது. வெள்ளையாவாதான்
இருக்கும். அவன்தான் இந்தச் சேட்டை பன்னுவான் என்று நினைத்தபடியே மேல வந்தவன்,
தன்னை இடித்துக்கொண்டிருந்தவனைத் திட்ட திரும்பியவன் அதிர்ந்தான்.
இதற்குள் நாங்கள் எல்லோரும் கத்த
ஆரம்பித்தோம்.
“மேல வாலே…மேல ஏறுல.”
இப்போது முகம் நன்றாகத் தெரிய ஆரம்பித்து இருந்தது.
பச்சைக்கலர் சேலை கட்டிய பெண் பிணம்.
அதுவரை கீழே இருந்தது, இவன் குதித்ததும் கால் பட்டு மிதக்க
ஆரம்பித்திருந்தது. இப்போதுதான் அவன் நன்றாகப் பார்த்தான்.
“எ… ம்… மே …”
அலறிக்கொண்டே நீந்தினான். நல்லவேலையாக அந்தப் பதற்றத்தில் இன்னும் வேகமாக
கிணற்றுச் சுவர் நோக்கி நீந்தினான். கிணற்றின் சுவர் அருகில் வரவும் அவன் கையைப்
பிடித்துத் தூக்கி வெளியே இழுத்தோம்.
இதை வெளியில் சொல்லாமல் அமைதியாக இருப்போம் என முடிவெடுத்தாலும் ,வெயிலு
கத்திக்கொண்டே சென்றான்.
“எ… ம்…மே, பொ…ண…ம்… கிணத்துல பொணம்.” அழுதுகொண்டே ஓடினான்.
“ஏல… என்ன சொல்லுதே.”
“எங்க ல?”
“யாருல?”
அவன் ஓடும் வழி எங்கும் கேட்பவர்களுக்குப் பதிலே சொல்லவில்லை.வீட்டை நோக்கி
ஓடிக்கொண்டே இருந்தான். நாங்கள் அதிர்ச்சியில் பிரம்மை பிடித்ததுபோல் சென்று
கொண்டிருந்தோம். யாரும் கேள்வி கேட்டால் பதில் சொல்லவா வேண்டாமா, சொன்னால் நல்லதா,
சும்மானாச்சுக்கும் அழுது நடித்துவிடலாமா என்றெல்லாம் மனசுக்குள் குழம்பிக்கொண்டோம்.
மென்று முழுங்கி, “அந்த கிணத்துல பொணம் மிதக்கு” என்று சொன்னோம். கிட்டத்தட்ட
அழத் தயாராக இருந்தோம்.
“எப்ப பாரு குளம் கிணறுனு. ஒழுங்கா வீட்டுல இருக்குதுங்களா பாரு.” யார்
யாரோ திட்டினார்கள். வீட்டுக்குள் வந்து பதுங்கினோம்.
“டே, உங்கள தான் போலீசு தேடுதாம், சாட்சி சொல்ல ஆள் வேணுமாம்” என்றார்
போஸ்ட் ஆபீஸ் பெரியப்பா. இன்னும் பயந்தோம். பீதியில் கிடந்தோம்.
கந்தனுக்கு காய்ச்சல் வர ஆரம்பித்திருந்தது. அவன் அப்பா ஒரு அப்பிராணி
என்பார்கள். எந்த வம்பு தும்புக்கும் போகமாட்டார். அதிர்ந்து பேச மாட்டார். “அவருக்கு
இப்படி ஒரு புள்ளை.”
“புள்ளெழுவலா இதுங்க, எல்லாம் வினைங்க.”
“சரி. எப்படியும் யாராவது போய் குளிக்கையில அது வந்து தானே ஆவணும். இவனுவ
குளிக்கையில் வந்திட்டு, ஆனா தைரியசாலி புள்ளெழுவதான்.”
“அதானே பாரேன், தைரியமா நடந்து வந்திட்டானுவளே, இவனுவளும் முங்கிராம. அதுவே
பெரிய விஷயம்லா.”
“அது இவனுவள அடிக்காம இருந்துச்சே.”
ஆளாளுக்குப் பேசிக்கொண்டார்கள்.
“என்னமோ நாங்க கொன்னு கிணத்துல போட்ட மாதிரி பேசுறீங்க.”
கோபம், அழுகை, ஆற்றாமை எல்லாம் ஒன்று சேர வெங்கிட்டு சொன்னான். “அது யார்னே
எங்களுக்கு தெரியாது.” அவனுக்காவது பேச்சு வந்தது. எங்களுக்கெல்லாம் மூசசு
மட்டும்தான் வந்து கொண்டிருந்தது.
“ஓ, சார்வாளுக்கு அந்த ஆசை வேறயா.” காதைப் பிடித்துத் திருகிக்கொண்டே
சொன்னார் ஆறுமுக சித்தப்பா. “எவனும் வீட்டை விட்டு வெளிய வரக்கூடாது. மூணு
நாளைக்கு எவனையும் ஒண்ணா பாக்க கூடாது.போங்கல” என விரட்டினர்.
கிணத்தடிப்பக்கம் கூட்டம் அலை மோதியதாக எதிர் வீடு அத்தை சொன்னார்கள்.
“யாராம் டி” – காந்தி பெரியம்மா கேட்டாள்.
பெரியம்மா ரொம்ப குண்டாக இருப்பாள். பிந்துகோஷ் மாதிரி. ஆனால் உட்கார்ந்த
இடத்தில இருந்தே எல்லா செய்தியையையும் சேகரித்து விடுவாள். எங்க தெரு ஆல் இந்திய
ரேடியோ.
“தெரியல மயினி”என்று இழுத்தபடியே சொல்ல, “ஏத்தாடி, இந்த அநியாயம் எங்கும்
உண்டுமா” என்று புலம்பியபடியே வந்து சேர்ந்தாள் பார்வதி ஆச்சி. “சே, பச்சைபுள்ளகாரித்தா,
ரெண்டு நாளா காணோமாம்தா. ரெண்டு நாளும் தேடாமலா இருப்பாவோ.”
“சீ, என்ன அநியாயம்.” – எதுத்த விட்டு அத்தை.
“சித்தி, என்ன சொல்லுத, யாரு?” – பெரியம்மா.
“தெற்கு தெருதான், எட்டையபுரத்து சங்கரன் இருக்காருல்லா, அவர்
மருமவதானாம்தா.”- ஆச்சி.
“எது, அந்த கலரா ஒரு புள்ளை இருக்குமே அதுவா?” – பெரியம்மா.
“ஆமாட்டி, அது பேரு சாலா-ட்டி.”- விசாலாட்சிதான் சாலாவாகச் சுருங்கிப்
போனாள்.
“அய்யயோ, யேன் இப்புடி பண்ணுச்சாம்.”
“என்னனு ஒன்னும் தெளிவா தெரியல. சண்டையும் கூட்டமுமா இருந்துருக்கு போல.
பாதவத்தி, இந்த முடிவெடுத்துட்டா. அந்த கைபுள்ளை அழுதமேனிக்கு இருக்குத்தா… சீ..
இப்படியும் உண்டுமா” என்ற பார்வதி ஆச்சி கொஞ்சம் நேர மெளனத்துக்குபி பின் சொன்னாள்.
“பாதவத்தி. என்ன கஷ்டமும் இருக்கட்டுமே. பச்சைப்புள்ளை மொவத்துக்காக வாழ வேண்டாமா.”
சொல்லும்போதே அழுகை வந்தது ஆச்சிக்கு. “எங்க ஆத்தாலாம் என்ன கஷ்டபட்டு என்னைய
வளர்த்தா தெரியுமா, மூதி, இப்படி பண்ணிட்டு பேயிருக்கா.” லேசா அழுது முந்தானையில்
துடைத்துக்கொண்டாள். “இதுல வவுத்தெரிச்சல் என்ன தெரியுமா, இரட்டைவட சங்கிலி
தொலஞ்சுற கூடாதுனு ரவிக்கையோட சேத்து ஊக்கு மாட்டிட்டு விளுந்துருக்காத்தா. அந்த
சங்கிலி ரவிக்கையோட ஒட்டி கிடக்கு.”
“ஏம்தா, அவளா குதிச்சாளா, இல்லை அடிச்சு தூக்கி போட்டுட்டானுவலா? ”-
பெரியம்மா விசாரணையைத் துவங்கினாள்.
“அப்பிடியும் இருக்குமோ, யார் கண்டா?”
நான் சாலாக்காவை ரெண்டொருதரம் பார்த்திருக்கிறேன். இடுப்பில் குழந்தையைத்
தூக்கி வைத்துக்கொண்டு சோறூட்டும். அழகாக இருக்கும். சிரித்த முகம்.
தெற்கு தெரு ஆட்களே சேர்ந்து தூக்கி தெருவில் கொண்டு வந்து போட்டார்களாம். இரவு
ஒரு எட்டுமணிக்கு நான் சென்று தெற்குத் தெருவை லேசாக எட்டிப் பார்த்தேன். தெருமுனையிலேயே
போட்டிருந்தார்கள். சாலாக்காவின் மீது வெள்ளைத் துணி போர்த்தப்பட்டிருந்தது.ரெண்டு
போலீசுகாரர்கள் இரும்பு சேரில் உக்காந்திருந்தார்கள். குளிருக்கு மப்ளர் கட்டி
இருந்தார்கள். கையில் டார்ச் வைத்திருந்தார்கள். ‘எங்கே கூப்பிட்டு விசாரிப்பார்களோ’
என்ற பயத்தில் ஓடி வந்துவிட்டேன்.
யாரிடம் என்ன விசாரித்தார்கள் எனத் தெரியவில்லை. எங்கள் யாரிடமும் எதுவும்
விசாரிக்கவில்லை.
“நம்மளா போய் சொன்னா என்னல, என்ன என்ன பாத்தோம்னு, கோர்ட்டலாம் பாக்கலாம். ஜம்ம்னு
போலீஸ் ஜீப்ல போலாம்” என்றான் கட்டமுத்து.
“வா, போலாம்” என வெள்ளையா இழுத்தான்.
“ஏய் போப்பா, நான் ச்சும்மால சொன்னேன்.”
கட்டமுத்து காமெடி என்ற பெயரில் இப்படித்தான் எதாவது பேசுவான்.
 “அவம் துட்டுள்ள பார்ட்டில்லாடே. இளக்க
வேண்டியதை இளக்கி எல்லாத்தையும் சரி பண்ணிருவாம் பாரு” எனப் பொதுவாகப்
பேசிக்கொண்டார்கள்.
மறுநாள் எல்லாம் முடிந்தது. இரண்டாவது நாள் நாங்கள் மெல்ல ஒன்று கூடினோம். கந்தனுக்கு
விட்டுவிட்டுக் காய்ச்சல் வந்துகொண்டு இருந்தது. ‘இரவில் உளருதாம்’ என்று
சொன்னார்கள். முதலில் இரண்டு நாட்களுக்கு எங்களை கந்தனைப் பார்க்க விடவில்லை.
‘எல்லாம் உங்களாலதாம்ல; என்று திட்டினார்கள் அவன் அம்மா. அவன் அப்பவும்
அமைதியாக வெறிச்சமேனிக்கு இருந்தார். எங்களுக்கும் கந்தனை நினைத்துப் பயம் வந்தது.
“நேத்து நைட் 12 மணிக்கு ஜல்ஜல்னு சத்தம் கேட்டுச்சுல.” – குமாரு சொன்னான்.
“நான் லேசா ஜன்னல் கதவை திறந்து பாக்கலாம்னு நினைச்சேன். பயமா இருந்துச்சு.”
ஆளாளுக்கு ஒரு கதை சொன்னார்கள். சாலா கிணற்றடியில் உட்கார்ந்து அழுது
கொண்டிருந்தாள்… வா வா எனக் கூப்பிட்டாள்… நேற்று குளத்தங்கரை முனையில்
நின்றிருந்தாள் என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள்.
*
அந்தக் கிணற்றடிக்குத்தான் ராசா போய்ட்டு வந்திருக்கானாம்.
“பேயா இருந்தாலும் கும்பிடுத்தவங்கள ஒண்ணும் செய்யாது, நாம சாலாக்காவ
கும்பிட்டுருவோமா” என்றேன்.
“எப்படி கும்பிடுதது.”- கட்ட முத்து.
“பூசைக்கு வீட்டுல வாங்குவோம்ல, அத எல்லாம் வாங்கிடுவோம்” என்றான் மணி.
பதினாறாம்நாள் கழிந்த சனிக்கிழமை யாரும் வராத பதினோரு மணிக்கு, பகல்தான், போக
பயம். ஒருவேளை சாலாக்கா வந்துட்டாள்னா?
வெற்றிலை பாக்கு, பழம், சூடம், பத்தி, பூ, பொரிகடலை வாங்கி குளத்தங்கரை
போனோம். கீழே வெற்றிலை, பாக்கு, பழம் வைத்தோம். பத்தி கொளுத்திக் காட்டினோம். கீழே
பார்த்துக்கொண்டே, கிணற்றைப் பார்க்க தீபாதரனை காட்டினோம். கிணற்றைப் பார்க்க
பயம்.
“கடைசியாக ஒருதடவை கிணத்த பார்த்துருவோமா.”- கட்டையன்.
“சும்மாருல, அப்படியே குனிஞ்ச தலை நிமிராம போயிருவோம்” எனக் கத்தினேன்.
“யக்கா, கந்தன ஒன்னும் பன்னிரதக்கா… அவன் ரொம்ப நல்லவன். வேனும்னு ஒன்ன
மிதிக்கல.” கிட்டத்தட்ட அழும் குரலில் சொன்னான் மணி.
“யாரையுமே ஒன்னும் பன்னிராதக்கா.” இது கட்டமுத்து.
ஒருமாதம் ஆகியும் பயம் போகவில்லை. யாரும் கிணத்துக்குப் போகவில்லை. தண்ணி
எடுக்கவும் வழியில்லை. ஊர் கொஞ்சம் திணறியது. இறுதியில் ஒரு பூசாரி வைத்துப் பூஜை செய்வது,
எல்லாவற்றுக்கும் பரிகாரம் செய்வது என்று முடிவானது.
பூசாரி வந்தார், உடுக்கை வேப்பிலை சகிதம். நெற்றி மற்றும் உடல் முழுவதும்
திருநீறு. உடுக்கை அடித்தபடியே காளி பாடல்களை உக்கிரமாய்ப் பாட ஆரம்பித்தார். ஒரு
பெண்ணுக்கு உடுக்கைச் சத்தத்தில் சாமி வந்தது. இல்லை சாலாக்கா வந்தாள்!
“யாரிட்டி ஆடுதா?” கண்ணை இடுக்கிக்கொண்டு பார்வதி ஆச்சி கேட்டாள்.
“தெற்கு தெரு ராணி தாம்.”
என்னென்னவோ மந்திரங்களை உச்சரித்தபடி பூசாரி, “ஏன் இப்படி பண்ணினே, சொல்லு.”
சாலாக்கா அமைதியாக இருந்தாள்.
“சொல்லு, ஏன் இப்படி பண்ணினே.”
“சொல்ல மாட்டேன். சொல்ல மாட்டேன்.”
சரி, இனிமே இந்த
பக்கம் நீ வரக்கூடாது. ஹே…ஹே…ய்… சொல்லு. வர மாட்டேன்னு சொல்லு.” திருநீறை
வாரி முகத்தில் அடித்தார்.
“ஊருக்கு குடிக்க தண்ணி வேணும்தா, நீ போய்ரு …” யாரோ ஒருவர் கத்தினார்.
சாலாக்கா காறித் துப்பினாள். “த்த்த்தூஊ… ஒரு பொம்பள புள்ளை… ஹ..ஹ ..ஹ..”
மூச்சு வாங்கியபடி சொன்னாள். “அழுது அரட்டுறப்போ….. ஹ..ஹ ..ஹ…. காப்பாத்த
துப்பில்லை… ஹ.. ஹ.. ஹ.. தண்ணி வேணுமாடா… தண்ணி.”
“யாத்தீய்ய்ய், எம் மருமவள வுட்டுருத்தா… உனக்கு என்ன வேணுமோ கேளுத்தா.”-
ராணியின் மாமியார்க் கிழவி சொன்னாள்.
“உவ்வ்வ்வ்வ்வ்…. இன்னொரு சாலா… ஹ..ஹ.. ஹ.. இந்த ஊருல.. ஹ..ஹ..ஹ இருக்கக்
கூடாது…”
“சரி..த்..தா..” மருமகள் காலில் விழுந்து மாமியார்க் கிழவி கும்பிட்டாள்.
*
இரண்டு வருடங்கள் ஆகியிருந்த. பம்பாயிலிருந்து
நேற்று ஊருக்கு வந்த மலர் அத்தை ராணியிடம் கேட்டார்கள்.
“எப்படிட்டீ இருக்க?”
“நல்லாருக்கேன்த்தே.”
“மவளா, பேரு என்ன ராசாத்திக்கு?”
“சாலா.”
“யேம்ட்டி , அவ பேர வச்சுருக்க?”
“அவளாலதாம்த்தே நிம்மதியா வாழ்தேன், அடி உதை இல்லாம.”
குழந்தை அழகாகச் சிரித்தது, சாலாக்கா கன்னத்தில் இருக்கும் மரு மாதிரியே
ஒரு அழகிய மருவுடன்.

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 18 | அவசர நிலை | – சுப்பு


இந்திரா காங்கிரஸோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு
1971 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றது
திமுக. இருந்தாலும் இந்த நல்லுறவு நெடுநாள் நீடிக்கவில்லை. அன்றையத் தமிழக முதல்வர்
மு.கருணாநிதியும் பாரதப் பிரதமர் இந்திராவும் மாலைகளை அணிந்தபடி அருகருகே இருப்பது
போன்ற சுவரொட்டிகளை வெளியிட்டது திமுக.

இதற்கு காங்கிரஸ் கட்சியின் தரப்பிலிருந்து கடும் கண்டனம்
தெரிவிக்கப்பட்டது. இந்தக் கசப்பு இரண்டு பக்கமும் பரவிக்கொண்டிருந்த வேளையில் தமிழின்
முன்னணி வார இதழுக்குப் பேட்டியளித்தார் திமுக.ச் சேர்ந்த மாநில அமைச்சர் ஒருவர். அவர்
சொன்னது “கலைஞர் விரும்பினால் இந்திரா என்ன, 16 வயது சந்திரா கூட…” என்று.

இதுபோன்ற திமுகவின் பழக்கமான ஆபாசத் தாக்குதல்கள் ஒருபக்கம்
இருந்தாலும், இதுமட்டுமல்ல இந்திய அரசியல் குறித்த திமுகவின் பார்வையில் ஒரு மாற்றமும்
தென்படத் துவங்கியிருந்தது. எழுபதுகளின் முற்பகுதியில் இந்திராவின் காங்கிரசுக்கு எதிராக
பீகாரிலும் குஜராத்திலும் உருவாகி வந்த எழுச்சிக்கு ஆதரவான குரல்கள் திமுக தரப்பிலும்
கேட்கத் தொடங்கின. இதன் நீட்சியாகத்தான் அமைந்தது திமுகவின் ‘அவசரநிலை எதிர்ப்பு’ என்கிற
நிலைப்பாடு.

இந்தச் சூழலில் பாரதிய ஜனசங்கத்தின் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாயி
சென்னைக்கு வந்தார். குமுதம் வார இதழ் அட்டைப் படத்தில் அவரை வெளியிட்டுப் பிரபலப்படுத்தியது.
அதன் உள்ளே இருந்த பேட்டியில் “திமுகவினர் நாடாளுமன்றத்தில் மொழிப் பிரச்சினை பற்றி
மட்டும்தான் பேசுவார்கள். பொருளாதாரம் போன்ற முக்கியமான விஷயங்களில் அவர்களுடைய குரல்
ஒலிக்காது” என்று குறிப்பிட்டிருந்தார். குமுதம் இதழ் வெளிவந்த ஞாயிற்றுக்கிழமையில்
தமிழகத்தின் அரசியல் பரப்பு முழுவதும் இது பரபரப்பாகப் பேசப்பட்டது.

அன்று மாலை சென்னையில் கோட்டூர்புரத்தில் குடிசைமாற்று வாரிய
வீடுகள் திறப்பு விழா நடந்தது. விழாவில் பேசிய திமுகவின் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர்
முரசொலி மாறன் ‘பொருளாதாரம் குறித்துத் தான் வாஜ்பாயி உடன் விவாதிக்கத் தயார்’ என்று
சவால் விடுத்தார்.
ஆனால் கருணாநிதி ‘பூர்ஷ்வாக்களோடு விவாதம் செய்யக்கூடாது’
என்று சொல்லி அவரை அடக்கிவிட்டார்.

*

பங்காளதேசத்துப் போரின்போது இந்தியாவுக்குள் தஞ்சமடைந்த ஒரு
கோடி அகதிகளுக்கு உணவளித்ததின் காரணமாக இந்திய நாட்டின் தானியக் கையிருப்பு வெகுமளவில்
குறைந்துவிட்டிருந்தது. தவிர, நாட்டின் பெரும்பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்தது.
விலைவாசி உயர்வின் காரணமாகத் தன்னெழுச்சியாக வெகுஜனப் போராட்டங்களும் நடைபெற்றன. மே
1974ல் நடந்த அகில இந்திய ரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்தமும் பிரச்சினைகளைக் கூர்மையாக்கியது.
குஜராத்தில் மாணவர்களால் உருவாக்கப்பட்டப் போராட்டம் எதிர்க்கட்சிகளால் முன்னெடுத்துச்
செல்லப்பட்டது. வெகுஜன எழுச்சியை எதிர்கொள்ள இயலாமல் மாநில அரசு ராஜினாமா செய்தது;
குடியரசுத் தலைவரின் ஆட்சி அமலுக்கு வந்தது. இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது மொரார்ஜி
தேசாயின் உண்ணாவிரதப் போராட்டம்.

குஜராத் எழுச்சியைத் தொடர்ந்து பிகாரிலும் மாணவர்கள் களத்தில்
குதித்தனர் (மார்ச் 1974). மாணவர்களுடைய போராட்டத்தை லத்தியாலும் துப்பாக்கியாலும்
ஒடுக்கிவிடலாம் என்று நினைத்த காங்கிரஸ் அரசின் முயற்சி பலிக்கவில்லை. ஜெ.பி. என்றழைக்கப்பட்ட
ஜெயபிரகாஷ் நாராயண் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்து அதற்கு முழுப் புரட்சி
என்கிற வடிவமும் கொடுத்தார். இதைத் தொடர்ந்து குஜராத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில்
காங்கிரஸ் கட்சித் தோல்வியடைந்தது.
லஞ்ச ஊழலாலும் விலைவாசி நெருக்கடியாலும் பாதிக்கப்பட்ட மக்களின்
போராட்டம் இயல்பானது. ஆனால் இதை அடக்குமுறையால் ஒடுக்கிவிடலாம் என்று நினைத்தது இந்திராவின்
எதேச்சிகார எண்ணம். பிகாரில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 27 மாணவர்கள்
உயிரிழந்தனர் (18-03-1974). சமஸ்திபூரில் நடந்த குண்டு வெடிப்பில் மத்திய ரயில்வே அமைச்சர்
உயிரிழந்தார். இந்தப் படுகொலைக்கு ஆர்எஸ்எஸ்தான் காரணம் என்று குற்றம் சாட்டினார் இந்திரா.

விலைவாசி உயர்வுக்கும் லஞ்ச ஊழலுக்கும் எதிராக மக்கள் கிளர்ச்சி
செய்த வேளையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மட்டும் இந்திராவின் ஜால்ராவாக செயல்பட்டது
என்பது சரித்திரத்தின் கரும்புள்ளிகளில் ஒன்று.
இந்திரா எதிர்ப்பும் காங்கிரஸ் எதிர்ப்பும் நாடு முழுவதும்
திரண்டு வந்துகொண்டிருந்த வேளையில் அலகாபாத் நகரிலிருந்து வந்த ஒரு செய்தி வெடிமருந்தில்
வெப்பம் கலந்ததுபோல் ஆயிற்று. ஜனநாயக மாதா அலகாபாத் நகரில் 1975 ஜூன் 12ஆம் தேதி தனக்குத்
தானே ஒரு மாலை சூட்டிக்கொண்டாள். அந்த ஜனநாயகத்தின் வெற்றியைக் கொண்டாடித்தான் வெடிமருந்தில்
வெப்பம் சேர்ந்தது.

“இந்திரா காந்தி தேர்தலில் ஊழல் செய்தார். எனவே ஆறு ஆண்டுகளுக்குத்
தேர்தலில் நிற்க அவருக்குத் தகுதியில்லை” என்கிற தீர்ப்பு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி
ஜக்மோகன்லால் சின்ஹாவால் வழங்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து இந்திரா காந்தி உச்சநீதிமன்றத்திற்குச்
சென்றார். விடுமுறைக் கால நீதிபதியாகப் பணியாற்றிய நீதியரசர் கிருஷ்ண ஐயர் பிறப்பித்த
உத்தரவில் இந்திரா நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட முடியாது என்றும் ஆனால் அவர் பிரதம
மந்திரியாகச் செயல்படலாம் என்றும் தெளிவுப்படுத்தினார்.
இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட இந்திரா அவசரநிலையைப்
பிரகடனப்படுத்தினார் (25-06-1975).

*

இந்திரா அவசர நிலையை அறிவித்தபோது நான் கோவாவிலிருந்து சென்னைக்கு
வந்து கொண்டிருந்தேன். சென்னைக்கு வந்ததும் விட்டுப் போன செய்தித்தாள்களை எல்லாம் தேடிப்
பிடித்துப் படித்தேன். இந்தியாவெங்கும் பத்திரிக்கைத் தணிக்கை அமலில் இருந்தாலும் கருணாநிதி
கொடுத்த தைரியத்தில் தமிழகத்துப் பத்திரிக்கைகள் தாக்குப் பிடித்தன. அவசர நிலையைக்
கண்டித்து திரு. காமராஜ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ஆர்எஸ்எஸ்காரர்களால் பிரசுரிக்கப்பட்டு
விநியோகிக்கப்பட்டது. ஆர்எஸ்எஸ்காரர்கள் லோச் சங்கர்ஸ் ஸமிதி (திரு.ஜெ.பி.யின் ஸ்தாபனம்)
என்ற பெயரில் தங்கள் அரசியல் போராட்டங்களை நடத்தி வந்தார்கள். தவிர ரகசியப் பிரசுரங்களையும்
அவ்வப்போது வெளியிட்டார்கள். பெரும்பாலான ஆர்எஸ்எஸ் தலைவர்கள் போலிஸின் பிடியில் சிக்காமல்
தப்பிவிட்டதாக, இவற்றில் செய்திகள் வெளியிடப்பட்டன. இந்தப் பிரசுரங்களை நானும் நண்பர்களும்
பஸ் ஸ்டாண்டிலும் பொது இடங்களிலும் விநியோகித்தோம்.
அவசரநிலையை எதிர்த்து ஆர்எஸ்எஸ்காரர்கள் சத்தியாகிரகம் செய்தார்கள்.
வடபழனியில் நடந்த சத்தியாகிரகத்திற்கு நான் போயிருந்தேன். அன்று போலிஸ் ஸ்டேஷன் வாசலில்
நின்றுகொண்டு ‘அவசரநிலை ஒழிக’ என்று கோஷம் போட்டோம். பக்கத்தில் நடந்து கொண்டிருந்த
பொதுக்கூட்ட மேடையில் ஏறி மைக்கில் கோஷம் போட்டோம். ஆனால் அன்று யாரும் கைது செய்யப்படவில்லை.
இண்டு இடுக்கெல்லாம் இந்திராவின் பாஸிசம் பரவியிருந்த காலத்தில்
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

அந்த நேரத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தமிழ்நாட்டுக் கிளைக்குச்
சொந்தமான நிதி ஒரு வங்கிக் கணக்கில் இருந்தது. அந்தக் கணக்கை முடக்கவேண்டும் என்று
ஒரு சனிக்கிழமை அன்று ஆளுநர் உத்தரவிட்டார்.
கையெழுத்திட்ட மை காய்வதற்குள்ளேயே சங்கத்துக்காரர்களுக்குத்
தகவல் தெரிந்துவிட்டது. என்னதான் அவசரநிலை, அடக்குமுறை என்றாலும் அரசு இயந்திரம் அசைவதற்குக்
கொஞ்சம் நேரமாகும் என்று தெரிந்தது. இரண்டு நாள் இடைவெளி கிடைத்தது.

அதற்குள் பணத்தை எடுக்க முடியாதபடி ஒரு சிக்கல். அந்த வங்கிக்
கணக்கு இரண்டுபேர் கையெழுத்திட வேண்டிய ஜாயின்ட் அக்கவுண்ட். ஒருவர் சென்னை மத்தியச்
சிறையில் மிசா கைதியாக இருந்த ரெங்கசாமி தேவர். இவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தமிழ்நாட்டுக்
கிளைக்குத் தலைவர். இன்னொருவர் கே.சூரிய நாராயணராவ் என்கிற முழுநேர ஊழியர். சூரிய நாராயணராவ்
தேடப்படும் நிலையில் தலைமறைவாக இருந்தார். இவர் கையெழுத்திட்ட காசோலையில் ரெங்கசாமி
தேவர் கையெழுத்திட வேண்டும். காசோலையை வங்கியில் சேர்ப்பித்து வல்லிசாகப் பணத்தை எடுத்துவிட
வேண்டும் என்பது செயல்திட்டம்.

சிறையிலிருக்கும் கைதியிடம் காசோலையைக் கொண்டுசெல்வது எப்படி?
கையெழுத்திட்ட காசோலையை வங்கிக்குக் கடத்தி வருவது எப்படி? இருப்பதோ இரண்டுநாட்கள்.

இந்தச் சிக்கலோடு என்னைத் தேடி வந்தார் பிரசாரக் ரவி. நான்
நொச்சிக்குப்பத்தில் இருந்தேன். நான் செயல்பட்டேன்.
செவ்வாய்க்கிழமை காலை அரசு அதிகாரிகள் வங்கிக்கு வந்தபோது
காசு, காக்கா ஊஷ் ஆகிவிட்டிருந்தது.

தொடரும்…



Posted on Leave a comment

இரண்டாவது மொழி | ரஞ்சனி நாராயணன்



ஒரு அம்மா பூனையும், குட்டிப் பூனையும் ஒரு நாள் மதியம் நல்ல
வெய்யிலில் நட்ட நடுச் சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தன. அப்போது எங்கிருந்தோ ஒரு
நாய் பாய்ந்து வந்து இந்தப் பூனைகளைத் துரத்த ஆரம்பித்தது. சும்மா இல்லை; ‘பௌ பௌ’,
‘பௌ பௌ’ என்று குலைத்தபடியே. பூனைகள் இரண்டும் பயந்து ஓட ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில்
தாய்ப்பூனை சிந்திக்க ஆரம்பித்தது. காரணமேயில்லாமல் இந்த நாய் நம்மைத் துரத்துகிறது,
நாமும் பயந்து போய் ஓடிக்கொண்டிருக்கிறோமே, என்ன அநியாயம் இது என்று நினைத்து ஒரு கணம்
சட்டென்று நின்றது. காலை பலமாக ஊன்றிக் கொண்டு அந்த நாயின் கண்களைப் பார்த்து ‘பௌ பௌ’
என்று கத்தியது. நாய் விதிர்விதிர்த்துப் போய்விட்டது. என்னடாது பூனை ‘மியாவ்’ என்றல்லவா
கத்த வேண்டும். இந்தப் பூனை என்ன இப்படி நம்மைப் போலக் குலைக்கிறதே! அதற்கு இப்போது
பயம் வந்துவிட்டது. தலை தெறிக்க ஓட ஆரம்பித்தது. தாய்ப்பூனை தன் குட்டியிடம் சொல்லிற்று:
‘பார்த்தாயா? இரண்டாவது மொழியின் ஆற்றலை?’ என்று.


ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகப் படிக்க வேண்டியதன் அவசியத்தை
பேராசிரியர் திருமதி ஜெயந்தஸ்ரீ பாலக்ருஷ்ணன் இந்தக் கதை மூலம் மிக அழகாகச் சொல்லுவார்.


எனக்கு இரண்டாவது மொழியின் ஆற்றல் புரிந்தது என் பாட்டியும்
அதாவது என் அம்மாவின் மாமியாரும் நாங்கள் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரரான கோதாவரி
அம்மாவும் தெலுங்கு பாஷையில் பேசும்போதுதான். தமிழ் தெரிந்த இருவரும் திடீரென்று தெலுங்கில்
பேச ஆரம்பிப்பார்கள். என் பாட்டியிடமிருந்து அனாவசியமாக முன் குறிப்பாக அல்லது பின்குறிப்பாக
ஒரு வாக்கியம் வரும்: ‘கமலம், நாங்க உன்னைப்பத்திப் பேசல!’ என்று.


என் அம்மாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். ‘என்னைப்பத்தித்தான்
பேசுங்களேன். சூரியனைப் பார்த்து நாய் குலைக்கிறது – நாயெல்லாம் குலைக்கிறது – என்று
நினைச்சுக்கறேன்!’ என்று பதிலடி கொடுப்பாள். அவ்வளவுதான் தெலுங்கு மொழி அப்போதே அங்கேயே
செத்து விழுந்து விடும்.


கையில் எட்டாவது வகுப்புப் பாடப்புத்தகத்துடன் இந்தக் கூத்தை
வேடிக்கை பார்க்கும் எனக்கு அந்த இரண்டாவது மொழி மேல் ஒரு காதல் வந்துவிட்டது. எப்படியாவது
வேறு ஒரு மொழியைக் கற்றுக் கொண்டு யாருக்கும் புரியாமல் பேச வேண்டும் என்று ஒரு தீராத
வேட்கை வந்துவிட்டது.
சென்னை புரசைவாக்கத்தில் இருந்த கோதாவரி அம்மாவின் வீடு ‘ஸ்டோர்
வீடு’ அதாவது பொதுவான ஒரு வாசல், உள்ளே நுழைந்தால் பல வீடுகள். எல்லா வீடுகளுக்கும்
பொதுவான நீளமான மித்தம் அல்லது முற்றம் வாசலிலிருந்து ஆரம்பித்து கடைசி வீடு வரை இருக்கும்.
முற்றத்தில்தான் குழாய், தண்ணீர் தொட்டி, தோய்க்கிற கல் எல்லாம் இருக்கும். நான்கு
வீடுகளுக்கு இரண்டு குளியலறை; இரண்டு கழிப்பறை. எங்களைத் தவிர இன்னும் மூன்று குடித்தனங்கள்
அங்கிருந்தன. கடைசி வீடு வீட்டுக்காரம்மாவினுடையது. பிள்ளை, மாட்டுப்பெண் பேரன் பேத்திகளுடன்
அந்த அம்மா அங்கே கோலோச்சிக் கொண்டிருந்தார்.


கோதாவரி அம்மாள் வீட்டில் எல்லோரும் தெலுங்கு பேசினாலும்
எங்களுடன் தமிழில்தான் பேசுவார்கள். அந்தக் குழந்தைகளும் எங்கள் பள்ளியில் தமிழ் வழியிலேயே
படித்துக் கொண்டிருந்ததால் எனக்கு தெலுங்கு கற்றுக் கொள்ள ஆர்வம் வரவில்லை. மேலும்
என் தாய்க்குப் பிடிக்காத மொழி அது. அதைப் போய்க் கற்பானேன் என்று கூடத் தோன்றியிருக்கலாம்.
இந்த சமயத்தில்தான் காலியாக இருந்த நடு போர்ஷனுக்கு ஒரு குடும்பம்
குடியேறியது. மங்களூர் ராவ் குடும்பம். குடும்பத்தலைவர் தங்கநகை செய்பவர். பெரிய குடும்பம்.
வரிசையாகக் குழந்தைகள். பெரிய பிள்ளை சந்துருவில் ஆரம்பித்து பிரதிபா, ஷோபா, விக்ரம்,
காயத்ரி, காஞ்சனா என்று இன்னும் இரண்டு மூன்று குழந்தைகள். இவர்களில் பிரதிபா என் வயதுப்
பெண். பெரிய குடும்பம்; சிறிய வருமானம். அவர்கள் துளு என்ற மொழி பேசுபவர்கள். எப்படியாவது
அந்த மொழியைக் கற்றுக்கொண்டு விடவேண்டும் என்று நான் அவளுடன் ரொம்பவும் நட்பாக இருந்தேன்.
அவள் என்னை விட வேகமாக தமிழைக் கற்றுக் கொண்டு பேச ஆரம்பிக்கவே எனக்கு அந்த மொழியைச்
சொல்லிக் கொடுப்பதில் அவள் அக்கறை காட்டவில்லை. இன்றைக்கு எனக்கு நினைவு இருக்கும்
ஒரே ஒரு வாக்கியம்: ‘ஜோவான் ஜல்லே?’ இதன் அர்த்தம் சாப்பாடு ஆயிற்றா என்று நினைக்கிறேன்.


பள்ளிக்கூடத்தில் 9ம் வகுப்பில் ஹிந்தி மொழியை விருப்பப்
பாடமாக எடுத்துக்கொண்டேன். இந்த முறை ஹிந்தியை நான் விரும்பும் இரண்டாவது மொழியாகக்
கற்றுக் கொண்டு விடுவேன் என்ற எனது நம்பிக்கையில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் வந்து
மண்ணை அள்ளிப் போட்டது. ஹிந்தி ஓரளவுக்கு எழுத படிக்கக் கற்றுக்கொண்டதுடன் நின்று போயிற்று.
ஹிந்தி இருந்த இடத்தில் சமஸ்கிருதம் வந்தது. ‘ராம: ராமௌ ராமா:’ சப்தம் படுத்திய பாட்டில்
அந்த மொழி மேல் அவ்வளவாகக் காதல் வரவில்லை. இப்படியாகப் பல வருடங்கள் தமிழைத் தவிர
வேறு எந்த இந்திய மொழியும் தெரியாதவளாகவே இருந்தேன்.


திருமணம் ஆகி, கூட்டுக் குடும்பத்தில் இருந்து தனிக்குடித்தனம்
போனோம். அண்ணா நகரில் வீடு. பக்கத்து வீட்டில் ஒரு மலையாளக் குடும்பம். அவர்களது குழந்தைகளும்
என்னுடைய குழந்தைகளும் ஒரே வயது. குழந்தைகள் மாலைவேளைகளில் விளையாடும்போது குழந்தைகளின்
அம்மாவும் வருவாள். ஒருநாள் அவளாகவே, ‘எனக்குத் தமிழ் சொல்லித் தருகிறீர்களா?’ என்று
கேட்டு என் வலையில் விழுந்தாள். எனக்கு அவள் மலையாளம் சொல்லித் தருவதாக டீல்! படு சந்தோஷத்துடன்
நினைத்துக்கொண்டேன்: நான் கற்க வேண்டும் என்று ஏங்கிக்கொண்டிருந்த அந்த இரண்டாம் மொழி
மலையாளமோ? யார் காண்டது? அன்றிலிருந்து நான் தமிழில் பேச, அவள் மலையாளத்தில் சம்சாரித்தாள்.
நானே ஒரு நாள் கேட்டேன்: ‘எனக்கு மலையாளம் எழுதப் படிக்கக் கற்றுக் கொடுக்கிறீர்களா?’
என்று. நான் அவளுக்குத் தமிழ் எழுதப்படிக்கக் கற்றுக் கொடுத்தேன். அவள் எனக்கு மலையாளம்
எழுதப்படிக்கக் கற்றுக் கொடுத்தாள். மிகவும் தீவிரமாக உட்கார்ந்து மதியவேளையில் எழுதி
எழுதிப் பயிற்சி செய்வேன். அப்படி இப்படியென்று மலையாள மனோரமாவில் வரும் விளம்பரங்களை
எழுத்துக் கூட்டிக்கூட்டி வாசிக்க ஆரம்பித்தேன். மலையாளப் படங்கள் பார்க்க ஆரம்பித்தேன்.
ஒருநாள் கணவர் ‘பெங்களூரில் ஆரம்பித்திருக்கும் புது நிறுவனத்திற்கு
என்னை மாற்றி விட்டார்கள்’ என்ற செய்தியுடன் வந்தார். என் தோழி ஜெயா சொன்னாள்: ‘நீ
இனிமேல் சாக்கு, பேக்கு என்று கன்னடம் பேசலாம்’ என்று. இரண்டாம் மொழி கேட்டவளுக்கு
மூன்றாவது மொழியையும் அருளிய கடவுளுக்கு எப்படி நன்றி சொல்லுவது என்று எண்ணியபடியே
பெங்களூருக்கு மூட்டை முடிச்சுடன் வந்து சேர்ந்தேன். வெகு சீக்கிரமே கன்னடம் பேசக்கற்றுக்
கொண்டு விட்டேன். என் குழந்தைகளுடன் சேர்ந்து எழுதப்படிக்கவும் கற்றுக்கொண்டேன்.


பிறகு ஒரு சுபயோக சுபமுஹூர்த்தத்தில் ஸ்போக்கன் இங்க்லீஷ்
பயிற்சியாளர் ஆனேன். அங்கு வரும் மாணவர்களில் பெரும்பாலோர் ஹிந்தி பேசுபவர்கள். ஆங்கிலம்
கற்க வந்திருந்தாலும் டீச்சர் ஹிந்தியில் பேச வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். அவர்களது
சந்தேகங்களுக்கு ஹிந்தியில் பதில் சொல்ல முடியாமல் தடுமாறுவேன். ஒரு மாணவர் கேட்டார்:
‘அது எப்படி மேடம் உங்களுக்கு நமது நாட்டின் தேசிய மொழி (ஹிந்தி) – நேஷனல் லாங்குவேஜ்
தெரியவில்லை?’ என்று.
‘ஐ நோ இன்டர்நேஷனல் லாங்குவேஜ்’ என்று அப்போதைக்கு சமாளித்தாலும்
ஹிந்தி தெரியாதது கையொடிந்தாற் போலத்தான் இருந்தது. வீட்டில் என் மகள், மகன் இருவரும்
ஹிந்தி நன்றாகப் பேசுவார்கள். எனக்குச் சொல்லித் தாருங்கள் என்றால் சிரிப்பார்கள்.
மகள் சொன்னாள்: ‘ஹிந்தி சீரியல் பாரு. எஸ்.வி. சேகர் (வண்ணக் கோலங்கள்) ஜோக்கெல்லாம்
நினைச்சுண்டே பார்க்காதே! சீரியஸ்ஸாக கண், காது எல்லாவற்றையும் திறந்து வைத்துக்கொண்டு
ஃபோகஸ் பண்ணி பாரு. ஹிந்தி வரும்’ என்று. எத்தனை சீரியஸ்ஸாக பார்த்தாலும் ஒரு வார்த்தை
கூடப் புரியவில்லை. அதைவிட தமாஷ் ஒன்று நடந்தது. சீரியல்கள் ஆரம்பிப்பதற்கு முன்


‘தோபஹர் (दोपहर) ………
3 மணிக்கு ………. (சீரியல் பெயர்)
3.30 மணிக்கு …… (சீரியல் பெயர்)

என்று வரும். நான் அதை சீரியஸ்ஸாக படித்துப் பார்த்துவிட்டு
என் பெண்ணிடம் ‘அந்த தோபஹர் எப்போ வரும்?’ என்று கேட்டேன்!
என்னை ஒருநிமிடம் கண்கொட்டாமல் பார்த்துவிட்டு, ‘அம்மா! இது
கொஞ்சம் ஓவர்! தோபஹர் என்றால் மத்தியானம்’ என்றாள். ஓ!
இன்னொரு நாள்: நான் சீரியஸ்ஸாக முகத்தை வைத்துக்கொண்டு டீவியைக்
கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். என் மகன் அப்போதுதான் வெளியில் போய்விட்டு
வந்தான். என்னையும் டீவியையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு ‘அம்மா! இது காமெடி சீரியல்மா.
கொஞ்சம் சிரி’ என்றான். நான் திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டேன். எப்போதெல்லாம்
டீவியில் சிரிப்பு ஒலி வந்ததோ அப்போதெல்லாம் நானும் ‘கெக்கே கெக்கே’ என்று சிரிக்க
ஆரம்பித்தேன்.


என் மகன் கடுப்பாகிவிட்டான். அக்காவிடம் சொன்னான்: ‘இந்த
அம்மாவை ஒண்ணுமே பண்ணமுடியாது. என்ன படுத்தறா, பாரு! நாம ரெண்டுபேரும் இந்த விளையாட்டுலேருந்து
விலகிடலாம்’ என்று என்னைத் தண்ணி தெளித்து விட்டுவிட்டார்கள். மறுபடியும் நான் ஹெல்ப்லஸ்
ஆகிவிட்டேன்.
அப்போதுதான் எனது பக்கத்துவீட்டில் புது கல்யாணம் ஆன ஜோடி
ஒன்று புதுக் குடித்தனம் வந்தது. பால் காய்ச்ச வேண்டும் என்று எங்கள் வீட்டில் வந்து
அடுப்பு, பால், சர்க்கரை பாத்திரம் எல்லாம் வாங்கிக்கொண்டு போனார்கள். எங்கள் வீட்டுப்பாலை,
எங்கள் வீட்டுப் பாத்திரத்தில் ஊற்றி, எங்கள் வீட்டு அடுப்பில் காய்ச்சி, எங்கள் வீட்டு
சர்க்கரையைப் போட்டுச் சாப்பிட்டுவிட்டு பிறகு ஒரு நல்லநாளில் குடியேறினார்கள். டெல்லியைச்
சேர்ந்தவர்கள். கணவன் பெயர் வினோத் மிஸ்ரா. மனைவி (ரொம்பவும் சின்னப்பெண்) பெயர் ருசி.


‘அந்தப் பெண்ணுடன் ஹிந்தியில் பேசு. உனக்கு ஹிந்தி வரும்;
இந்த வாய்ப்பையும் விட்டுவிட்டால் உனக்கு ஹிந்தி எந்த ஜன்மத்துக்கும் வராது’ என்று
‘பிடி சாபம்’ கொடுத்தான் என் பிள்ளை.
ஒரு நாள் மிஸ்ரா என்னிடம் வந்து ‘ஆண்டிஜி! ருசி நோ நோ கன்னடா.
ஹெல்ப் ப்ளீஸ்!’ என்று சொல்லிவிட்டுப் போனான். அவளிடம் போய் ஒரு டீல் போட்டேன். ‘நீ
எனக்கு ஹிந்தி சொல்லிக்கொடு. நான் உனக்கு கன்னடா சொல்லித் தரேன்’ என்று. அவள் ‘நோ கன்னடா.
ஒன்லி இங்கிலீஷ்’ என்றாள். ஆங்கிலம் தான் நமக்கு தண்ணீர் பட்ட பாடாச்சே என்று ஆரம்பித்தேன். 



‘வாட் இஸ் யுவர் நேம்?’
‘மை நேம் இஸ் ருசி.’
‘வாட் இஸ் யுவர் ஹஸ்பெண்ட்ஸ் நேம்?’ என்று கேட்டு முடிப்பதற்குள்
‘ஆண்டிஜி! ஐ … முஜே… ஒன்லி ஒன் … ஏக் ஹஸ்பெண்ட்…
ஒன்லி. ஆப் க்யூ(ன்) ஹஸ்பெண்ட்ஸ்…?’ சந்தேகமாக என்னைப் பார்த்தாள். அந்தப் பார்வை
‘உங்களுக்கு இங்க்லீஷ் தெரியுமா?’ என்று கேட்பது போல இருந்தது. ‘லுக், ருசி! என்று
ஆரம்பித்து ஃபாதர்ஸ் நேம், மதர்ஸ் நேம் என்றெல்லாம் அரைமணி நேரம் மூச்சுவிடாமல் விளக்கினேன்.


அடுத்த நாள் ருசியைக் காணவில்லை. நேற்றைக்கு அபாஸ்ட்ரஃபியை
பற்றி ரொம்பவும் ஓவராகச் சொல்லிக் கொ(கெ)டுத்துவிட்டேனோ? கிட்டத்தட்ட பத்து நாட்கள்
ஓடிவிட்டன. ருசி வரவேயில்லை. ருசிக்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுப்பதைவிட நான் ஹிந்தி கற்றுக்
கொள்வது நின்றுவிட்டதே என்று இருந்தது. அடுத்த சில நாட்கள் என் கணவருக்கு உடல்நிலை
சரியில்லாமல் போகவே வீட்டிற்கும், மருத்துவ மனைக்கும் அலைந்து கொண்டிருந்ததில் ருசியை
பார்க்கவில்லை. இரண்டு மூன்று மாதங்கள் ஆகியிருக்கும்.


‘அந்த ருசிப் பொண்ணு அடிக்கடி ஆஸ்பத்திரி போய்விட்டு வருதும்மா’
என்று எங்கள் வீட்டுப் பணிப்பெண் வந்து ஒருநாள் சொன்னாள். ‘என்ன ஆச்சாம்?’ ‘அதென்னவோ
அந்தப் பெண்ணுக்கு தலை ரொம்ப அரிக்கிதாம். எப்போ பார்த்தாலும் தலையை சொறிஞ்சிகிட்டே
இருக்கும்மா. நேத்திக்கு மயக்கம் போட்டு விழுந்திடிச்சி!’ என்றாள்.


என்னவாக இருக்கும் என்று எனக்கும் மனதிற்குள் அரித்தது. என்னவோ
சரியில்லை என்று மட்டும் உள்ளுணர்வு சொல்லியது. அவளுக்கு உதவியாக அவளது அம்மா, அவள்
மாமியார் வந்திருந்தனர். அவர்களிடம் என் ஹிந்தி அறிவைக் காண்பிக்காமல் சற்று ஒதுங்கியே
இருந்தேன். ருசியைப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேயிருந்தேன்.
கணவரின் உடல்நிலையில் திரும்பத்திரும்ப ஏதோ ஒரு சிக்கல். அவரைக் கவனித்துக் கொள்ளும்
மும்முரத்தில் ருசியை மறந்தே போனேன்.
ஒருநாள் காலை எதிர்வீட்டுப் பெண்மணி வந்து ‘ருசி ரொம்ப சீரியஸ்ஸா
இருக்காளாம். ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்கிறார்கள்’ என்று ஒரு குண்டை வீசிவிட்டுச்
சென்றார். ரொம்பவும் பதறிவிட்டேன். அன்று முழுக்க வேலையே ஓடவில்லை. இரவு ருசியின் உடலை
வீட்டிற்குக் கொண்டு வந்துவிட்டார்கள். அவளுக்கு மூளையில் கட்டி இருந்திருக்கிறது.
அதனால்தான் அந்த அரிப்பு. ஏதோ தலைமுடியில் பிரச்சினை என்று நினைத்து இந்த எண்ணெய் தடவு;
அந்த எண்ணெய் தடவு என்று காலத்தைக் கடத்தியிருக்கிறார்கள். அது என்னவென்று தெரிந்து
வைத்தியம் பார்ப்பதற்குள் அவளது முடிவு நெருங்கிவிட்டது. காலன் காலத்தைக் கடத்தாமல்
வந்து அந்தச் சின்னப்பெண்ணை அழைத்துக் கொண்டு போய்விட்டான். இரக்கமில்லாதவன்.


இரண்டாவது மொழிதானே கேட்டாய்; மூன்றாவதாக எதற்கு இன்னொரு
மொழி என்று கடவுள் நினைத்துவிட்டார் போலிருக்கிறது. இன்று வரை ஹிந்தியைக் கற்றுக்கொள்ளவில்லை.
ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் ருசி தான் நினைவிற்கு வருகிறாள். என்ன
செய்ய?



Posted on 1 Comment

ஒடிசாவில் ஒரு இறையியல் சுற்றுலா | சுமதி ஸ்ரீதர்

இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒடிஸாவின் தலைநகரான புபனேஸ்வரும்
ஒன்று. பொ மு மூன்றாம் நூற்றாண்டுவரை பின்னோக்கி பாய்கிறது புபனேஸ்வரின் வரலாறு. கால
ஓட்டத்தின் பல சுவடுகள் படிந்து பல சமய மற்றும் கலாசார அடுக்குகள் உருவாகியிருக்கின்றன.
சமணம், பௌத்தம், சாக்தம், சைவம், வைணவம் ஆகிய சமயங்கள் வெவ்வேறு காலகட்டத்தில் கோல்லோச்சியதற்கான
தொல் எச்சங்கள் மாநிலமெங்கும் மூலைமுடுக்கெல்லாம் புதைந்து கிடக்கின்றன.

சைவம்

புபனேஸ்வர் பெரிய நகரம். திரும்பிய இடமெல்லாம் கோவில்கள்.
அதில் முக்கியமானவை ராஜா- ராணி கோவில், சித்தேஷ்வர்-முக்தேஷ்வர் இரட்டை ஆலயங்கள் மற்றும்
ஊரின் பிரதான தெய்வமான லிங்கராஜ் ஆலயம். இவை அனைத்துமே சிவாலயங்கள். புபனேஸ்வர் என்று
ஊர் பெயரே திருபுவனத்தைக் கட்டி ஆளும் சிவபெருமானின் பெயரைத்தான் குறிக்கிறது.
இந்த மூன்று ஆலயங்களுமே பொயு 10-11ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
அன்றைய கலிங்கத்தை ஆண்ட மன்னர்களால் கலிங்கத்துக் கட்டடக் கலையை ஒட்டி எழுப்பப்பட்டவை.
பூரி ஐகன்நாதர் ஆலயம் உட்பட ஒடிசாவின் பெரிய ஆலயங்கள் யாவும் ரேகா தேவூள் என்ற கட்டடப்
பாணியையொற்றி உயர்ந்த கோபுரம் மற்றும் நுழைவாயில்கள் யாவும் நுட்பமான அலங்காரங்களுடன்
செதுக்கப்பட்டிருக்கின்றன.

ராஜா – ராணி கோவிலில் இன்று விக்கிரகம் ஏதும் இல்லாததால்
பூசை நடப்பதில்லை. மற்ற ஆலயங்கள் இன்றளவும் உபயோகத்தில்உள்ளன.

(சித்தேஸ்வர் முக்தேஸ்வர் ஆலயம்)

ஊரின் பிரதான தெய்வமான லிங்கராஜ் ஆலயத்தில் உறைந்திருக்கும்
சிவன் ஹரிஹரன் என்று அழைக்கப்படுகிறார். கட்டமைக்கப்பட்ட காலத்தில் அது சிவன் (ஹரன்)
கோவிலாக இருந்தாலும் மிகத் தீவிரமாகப் பரவி வந்த ஜகன்நாதர் மரபின் தாக்கத்தால் ஹரியும்
(விஷ்ணு) சேர்க்கப்பட்டது என்பது உள்ளூர் வரலாற்றாசிரியர்களின் கருத்து.

பௌத்தம்

ஒடிசா என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கலிங்கத்துப் போர்.
பொ மு மூன்றாம் நூற்றாண்டில், அண்டைய ராஜ்ஜியமான மகதத்தை ஆண்ட அசோக மன்னன் கலிங்கத்தின்
மீது போர் தொடுத்து அந்நாட்டைச் சின்னாபின்னமாக்கி, குருதியாறு ஓடச்செய்ததாக வரலாறு.
போரில் ஒரு லட்சம் பேரைக் கொன்று குவித்ததாகவும் ஒரு லட்சத்து
ஐம்பதாயிரம் பேரை நாடு கடத்தியதாகவும் அசோகன் சூளுரைத்த கல்வெட்டு புபனேஷ்வரிலிருந்து
15 கிலோமீட்டர் தூரத்தில், தவளகிரி அல்லது தவுளி என்றழைக்கப்படும் சிறு குன்றின் அருகில்
உள்ளது. குன்றின் மீது ஏறி நின்று அன்றைய போர்க்களத்தைப் பார்த்தால் வயல்கள், பச்சை
மரங்கள் என இயற்கை எழில் கொஞ்சும்அமைதிப் பூங்காவாக மிளிர்கிறது.
அசோகர் ஏன் இத்தனை பேரழிவை மேற்கொண்டார் என்பதற்கு சரித்திரப்
பேராசிரியர்கள் பல காரணங்களைக் கூறுகிறார்கள். அதில் முக்கியமானது கலிங்கம் இந்தியத்
துணைக்கண்டத்தின் வடகிழக்குp பகுதியின் முக்கியமான துறைமுகங்களைத் தன் கட்டுப்பாட்டில்
வைத்திருந்தது என்பதுதான்.

மகதத்தை ஆண்ட மௌரியர்களின் கடல் வணிகத்திற்கு கலிங்கம் பெரும்
இடைஞ்சலாக இருந்து வந்திருக்கிறது. அசோகரின் அப்பா பிந்துசாரன் காலத்திலேயே கலிங்கத்தை
மகதப் பேரரசுடன் இணைக்கும் முயற்சி தோல்வியையே தழுவியது. மேலும், மகதப் பேரரசு தெற்கை
நோக்கி விரிவடைவதற்கான திட்டத்திற்கும் கலிங்கம் தடையாக இருந்து வந்ததும் போருக்கான
ஒரு காரணம் என்கிறார்கள். இதைத்தவிர கலிங்கத்து மக்கள் சமண சமயத்தைச் சார்ந்து இருந்ததும்
போருக்கு ஒரு காரணமாக இருந்திருக்ககூடுமோ என்ற ஐயமும் எழுகிறது. காரணம் என்னவாக இருந்தாலும்,
இந்தப் போர் இந்திய துணைக் கண்டம் மற்றும் தென் கிழக்கு ஆசியா முழுவதும் பௌத்தம் பரவுவதற்கு
மிகப் பெரிய காரணமாக இருந்தது என்பது எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டிய உண்மை.
இன்று தவளகிரி குன்றின் மீது ஒடிசா அரசாங்கம் ஜப்பானியர்களுடன்
இணைந்து சாந்தி ஸ்தூபி ஒன்றை எழுப்பியிருக்கிறது. அந்த ஸ்தூபியின் மீது புத்தரின் வாழ்க்கையில்
நடந்த முக்கியமான சம்பவங்கள் மற்றும் அசோகர் கலிங்கத்துப் போருக்குப் பின் மனமாற்றம்
அடைந்ததையும் சித்தரித்திருக்கிறார்கள்.

தவளகிரியிலிருந்து இறங்கி வரும் வழியில் இந்தியாவின் மிகப்
பழமையான சிற்பங்களில் ஒன்று காணக் கிடைக்கிறது. அது அசோகர் காலத்தில் செதுக்கப்பட்ட
ஒரு யானை. இதுவரை இந்தியத் துணைக்கண்டத்தில் செதுக்கப்பட்ட யானை சிற்பங்களிலேயே இவ்வளவு
செம்மையாக இதுவரை வேறு எங்கும் செய்யப்படவில்லை என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
சொல்வது போல் யானை பார்ப்பதற்கு கம்பீரமாகத்தான் இருக்கிறது. ஆனால் முழுமையான யானை
செதுக்கப்படவில்லை. ஒரு பாறையில் இருந்து அது வெளிப்படுவதுபோல், யானையின் முன் பகுதியைச்
செதுக்கியிருக்கிறார்கள். இந்தச் சிலைக்கு புத்த மதத்தில் ஒரு சிறப்பு உண்டு. புத்தரின்
தாய் மாயா தேவியின் கர்ப்பத்தை ஒரு வெள்ளை யானை ஊடுருவியதாகவும் அதன் பின்தான் அவர்
புத்தரை கருத்தரித்தார் என்று சொல்லப்படுகிறது. தவளகிரியின் பாறையில் வடிக்கப்பட்ட
யானை மாயாதேவியின் கர்ப்பத்திலிருந்து வெளிவருவது போல் செதுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட
2,300 ஆண்டுகள் பழைய சிற்பம் இத்தனை காலம் மழை வெயில் குளிர் தாண்டி இயற்கையால் பாதுகாக்கப்பட்டிருக்கிறது
என்றால் அது ஒரு பெரிய ஆச்சரியம்தான்.
அசோகர் காலத்தில் புத்தருக்கு ஒரு வடிவம் கொடுக்கப்பட்டு
இருக்கவில்லை. அவரை வெறும் சின்னங்களைக் கொண்டே சித்தரித்தனர். ஆகையால் இங்கு புத்தரின்
வடிவத்திற்கு பதில் புத்தரின் பிறப்பைக் குறிக்கும் யானை செதுக்கப்பட்டுள்ளது.

யானை அரசு அதிகாரத்தின் சின்னமும் ஆகும். அசோகரின் அரசு பிரகடனங்கள்
அருகிலேயே ஒரு பாறையில் பிராகிருத மொழியில், பிராமி எழுத்துக்களில் செதுக்கப்பட்டிருக்கின்றன.
கல்வெட்டில் பௌத்த தர்மத்தின் சிறப்பை எடுத்துக் கூறி மக்கள் தர்மத்தின் வழியில் எவ்வாறு
செல்ல முடியும் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றன.

இந்திய, பௌத்த வரலாற்றில் ஈடுபாடு கொண்ட ஒவ்வொருவரும் அவசியம்
பார்க்க வேண்டிய இடம்.

முன்னே சொன்னது போல அசோகர் காலத்தில் புத்தருக்கு வடிவம்
கொடுக்கப்பட்டிருக்கவில்லை. குசானர் என்றழைக்கப்படும் மத்திய ஆசியாவிலிருந்து வந்து
இந்தியாவை ஆண்ட வம்சத்தினர் காலத்தில்தான் (பொ மு ஒன்றாம் நூற்றாண்டு) புத்தர் உருவக
சிலை வடிக்கும் மரபு உண்டானது.

(புத்தர் சிலை – ரத்னகிரி)

புபனேஷ்வரிலிருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ரத்னகிரி,
லலிதகிரி மற்றும் உதயகிரி என்ற மூன்று முக்கியமான பௌத்த தலங்களில் அகழ்வாராய்ச்சி செய்ததில்
புத்தரின்பல உருவச் சிலைகள் கிடைத்துள்ளன. இந்த இடங்கள் பொ மு மூன்றாம் நூற்றாண்டு
தொடங்கி பொ பி பதிமூன்றாம் நூற்றாண்டு வரை பௌத்தத் தலங்களாகக் கோலோச்சியிருந்தன என்பதை
நிரூபிக்கும் விதமாக அகழ்வாராய்ச்சியில் பல பௌத்த விஹாரங்களும், ஸ்தூபிகளும், பௌத்த
கோயில்களும் கிடைத்திருக்கின்றன.
இதில் முக்கியமாக ரத்னகிரியில், வஜ்ரயானம் என்ற தாந்திரிக பௌத்தம் பின்பற்றப்ப்பட்டதற்கான
ஆவணங்கள் கிடைத்துள்ளன. தாந்திரிக மரபு நம் கலாசாரத்தில் முதல் முதலாக ஒடிசாவில், வஜ்ரயானம்
மூலமாகதான் நுழைந்திருக்கக்கூடும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது.
இங்கு கிடைத்திருக்கும் புத்தர் சிலைகளை மற்றும் வடிவங்களை
வைத்துப்பார்த்தால் ரத்னகிரி நளாந்தாவுக்கு இணையான பௌத்தத் தலமாக இருந்திருக்ககூடிய
சாத்தியகூறுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
ஆனால், காலப்போக்கில் மக்களிடையே பௌத்த சமயத்திற்கான ஆதரவு
குறைய ஒடிசா உட்பட இந்தியாவின் மற்ற பகுதிகளிலிருந்தும் பொ பி 13ம் நூற்றாண்டோடு பௌத்தம்
விடைபெற்றுக் கொண்டது.

சமணம்

ஒடிசாவில் பௌத்தம் தழைத்திருந்த காலகட்டத்தில், மக்களிடையே
சமண மதத்திற்கும் பேராதரவு இருந்தாகத் தெரிகிறது. புபனேஷ்வரில் உள்ள சமண மதத்தைச் சார்ந்த
வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் உதயகிரி-கண்டகிரி என்ற இரட்டைக் குன்றுகளில் குடையப்பட்ட
குகையறைகள்.
அசோகர் காலத்திற்கு பின் பொ மு இரண்டாம் நூற்றாண்டில் கலிங்கத்தை
ஆண்ட காரவேலர் என்னும் மன்னர் காலத்தில் சமணத்துறவிகள் தங்குவதற்காகக் குடையப்பட்ட
குகையறைகள் இவை. காரவேளா சமண மதத்தைத் தழுவி இருந்தவன்.
தவளகிரியில் அசோகரின் பௌத்த தர்ம கல்வெட்டுக்கு சவால் விடுவது
போல் நேர் எதிர் கோணத்தில் 6 மைலுக்கு அப்பால் உதயகிரியில் இந்தியாவில் செதுக்கப்பட்ட
முதல் சமணக் கல்வெட்டு உள்ளது. இந்தக் கல்வெட்டு யானைக் குகை (ஒடியாவில் ஹாதி கும்ஃபா)
என்று பெயரிடப்பட்டுள்ள குகையறையின் கூரைப் பகுதியில் காணக்கிடைக்கிறது.
யானைக் குகைக் கல்வெட்டு காரவேளாவின் சமகாலச் சரித்திர நிகழ்வுகளின்
மிகப்பெரிய ஆவணம். இந்தக் கல்வெட்டு, சமண சமயத்தின் முதலாம் தீர்த்தங்கரான ஆதிநாத்தின்
(தீர்த்தங்கரர்கள் சமண மதத்தின் குரு பரம்பரையைச் சார்ந்தவர்கள்) சிலையைக் கடத்திச்சென்ற
நந்தா வம்சத்து மன்னர்களின் பிடியிலிருந்து காரவேளா மன்னன் எவ்வாறு மீட்டெடுத்தான்
என்பதைக் கூறுகின்றன.
இந்தக் கல்வெட்டில்தான் முதன்முறையாக விந்திய மலைக்கு வடக்கே
உள்ள பகுதியைக் குறிக்க ‘பாரதவர்ஷம்’ என்ற சொல் உபயோகப்படுத்தப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள்
கூறுகின்றனர். இதில் பழங்காலத் தமிழகத்தை ஆண்ட சேர சோழ பாண்டிய மன்னர்கள் பற்றிய குறிப்பும்
இருப்பதாகச் சொல்கிறார்கள்.
உதயகிரியில் சமணத்தீர்த்தங்கரர்களின் வடிவங்கள் ஏதும் காணக்
கிடைக்கவில்லை. ஆனால் அருகில் இருக்கும் கண்டகிரியின் குகையறையில் சமணத்தின் முதல்
9 தீர்த்தங்கரர்களின் உருவங்கள் வடிக்கப்பட்டிருக்கின்றன. சற்றுத் தள்ளி வேறொரு குகையறையில்
சமணர்கள் வழிபடும் எல்லா (24) தீர்த்தங்கரர்களின் சிற்பங்களும் செதுக்கப்பட்டிருப்பதைக்
காணமுடிகிறது.
மும்பைப் பல்கலைக்கழகத்தில் சமண இறையியல் (jainology) பிரிவின்
வருகைப் பேராசிரியராகவும் பாட ஒருங்கிணைப்பாளராகவும் பணிபுரியும் ஷில்பா சேடா, “ தீர்த்தங்கரர்
வழிபாட்டு வரலாற்றைப் பொருத்தவரை உதயகிரி குகைகள் மிக முக்கியமானவை. தீர்த்தங்கரர்களின்
வழிபாடு சிறிது சிறிதாக வளர்ந்து வடிவம் பெற்றதைக் காண முடிகிறது” என்கிறார்.
தாய்த்தெய்வ வழிபாடு மேலோங்கி இருந்த சமூகத்தின் தாக்கம்
சமணத்தின் மீதும் உண்டானதற்கான முக்கிய ஆவணம் இங்குக் கிடைக்கிறது. அது யக்ஷினிகள்
எனப்படும் சமணப் பெண் காவல் தெய்வங்களின் சிற்பங்கள்.
கண்டகிரியில் தீர்த்தங்கரர்களின் வடிவங்களுக்கு அருகிலேயே
அம்பிகை என்னும் யக்ஷினியின் வடிவம் செதுக்கப்பட்டிருக்கிறது. யக்ஷினிகள் தீர்த்தங்கரர்களின்
காவல் தெய்வங்களாக வழிபடப்பட்டனர். சிற்பங்களின் உருவளவை வைத்துப் பார்த்தால் தீர்த்தங்கரர்களுக்கு
சரிசமமாக வடிக்கப்பட்டிருக்கிற அம்பிகையின் உருவம் அவள் சமணத்தில் தீர்த்தங்கரர்களுக்கு
இணையான அந்தஸ்தைப் பெற்றிருந்தது தெரிகிறது.
சமண யக்ஷினியியானஅம்பிகை காலம் செல்ல செல்ல இந்து மதத்தில்
தன்மயமாக்கப்பட்டு இன்று அம்பாளின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறாள்.
யக்ஷினிகள், இந்தியத் தாய்த்தெய்வ வழிபாட்டு மரபின் தாக்கத்தினால்
சமணத்தில் உருவம் பெற்று, பின்னாளில் இந்து வழிபாட்டு மரபில் இணைந்துவிட்டன. இன்று,
கண்டகிரியில் பழைய தீர்த்தங்கரர் உருவங்களைக் கொண்ட சமணக் கோயிலும் மற்றும் அம்பிகை
அம்மனின் இந்துக் கோவிலும் ஒருசேர இருப்பதைக் காணலாம்.

தாந்திரம்

அம்பிகையைப் பற்றி பேசும்போது தாந்திரத்தைப் பற்றிப் பேசாமல்
இருக்கமுடியாது. பௌத்தமும் சமணமும் ஒடிசாவில் வளர்ந்துகொண்டிருந்த காலத்தில் தாந்திரம்
ஒடிசாவை ஆட்கொண்டது.

தாந்திரத்தின் மூலம் அதர்வ வேதத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தாந்திரம் என்பது அடிப்படையில் நம் உடல் என்னும் நுண் அண்டத்தைக் (microcosm) கொண்டு
பிரம்மம் என்னும் பேரண்டத்தை (macrocosm) அறியப் பயன்படும் ஒரு மறையறிவு. யோகமும் தாந்திரத்தில்
அடக்கம்.
வஜ்ரயானம் அல்லது தாந்திர பௌத்தம் வழியாகத்தான் தாந்திரம்
முதல்முதலில் ஒடிசாவில் அறிமுகமானதாகச் சொல்கிறார்கள். பௌத்த தாந்திரத்தில் யோகம்,
மண்டலங்கள் எனப்படும் யந்திரங்கள் மற்றும் சிறப்பு மந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சமணம் அம்பிகை என்னும் பெண் யக்ஷனியை உருவாக்கியதுபோல் பௌத்தம்
தாரா மற்றும் மகா மயூரி போன்ற பெண் காவல் தெய்வங்களை உருவாக்கியது. ரத்னகிரியில் இந்தப்
பெண் தெய்வங்களின் உருவச்சிலைகள் பல கிடைத்துள்ளன.

இந்திய சமய மரபில் சைவமும், சாக்தமும் (சக்தி உபாசனை), தாந்திரமும்
ஒருங்கிணைந்தே பயணித்துள்ளன.

ஒரு காலகட்டத்தில் தாந்திரம் ஒடிசாவை ஆட்கொண்டதற்கான அத்தாட்சியை
புவனேஸ்வரிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஹீரப்பூர் சௌஷட் யோகினி வழிபாட்டுத்தலத்தில்
காணலாம். சௌஷட் என்றால் வடமொழியில் 64 எண்ணிக்கையைக் குறிக்கும். இங்கு 64 தேவதைகளின்
வழிபாடு நடத்தப்படுகிறது. அறுபத்து நான்கு திசைகளுக்கான தேவதைகள் இவர்கள். இந்த அறுபத்து
நான்கு தேவதைகளில் பல கிராமியத் தேவதைகளும் அடக்கம். யோகினிகளுக்கான வழிபாட்டுத்தலங்கள்
பொதுவாகக் கூரையற்று வட்ட வடிவமாக இருப்பதைக் காணலாம். இந்தியாவில், ஒடிசாவிலும் மற்றும்
மத்திய பிரதேஷ் மாநிலங்களில் மட்டும்தான் யோகினிகளை வழிபடுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு
தலத்திலும் யோகினிகளின் எண்ணிக்கை மாறுபடுகிறது.

(ஹீரப்பூர் ஆலய யோகினிகள்)

ஹீரப்பூர் யோகினிகளில் தாரா, சாமுண்டி, வராஹி, நரசிம்ஹி,
அம்பிகா, பத்ரகாளி, கௌமாரி, இந்திராணி, மகாலட்சுமி ஆகியவர்கள் அடங்குவர். அறுபத்தினாலு
தேவதைகளில் முக்கியமாகக் கருதப்படுபவள் மகாமாயா தேவி. பத்து கைகள் கொண்ட மகாமாயா தேவியை
தலைமைத் தேவதையாக வணங்குகிறார்கள் ஊர்மக்கள். ஒவ்வொரு யோகினியின் சிற்பத்தின் கீழேயும்
அவளுடைய வாகனத்தையும் செதுக்கியிருக்கிறார்கள்.
ஆகமக் கோயில்களிலிருந்து ஹீரப்பூர் மாறுபட்டிருந்தாலும் இங்கே
இருக்கும் சிற்பங்கள் செவ்வியல் வடிவில் செதுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு யோகினியின்
சிகை அலங்காரமும் அவள் பூண்டிருக்கும் நகைகளும் வித்தியாசமானவை. இறை வழிபாட்டுத் தலங்களில்
நமக்குக் கிடைக்கும் பொதுவான அனுபவங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட அனுபவம் இங்கு
கிடைக்கிறது. இறைவியல் ஆய்வாளர்கள் தவிர்க்க முடியாத ஒரு தலம் ஹீரப்பூர் யோகினி வழிபாட்டுத்தலம்.

வைணவம்

பௌத்தம், சமணம், சைவம், தந்திரம் ஆகிய எல்லா சமய மரபுகளும்
உச்ச நிலையை அடைந்து ஒருங்கிணையும் புள்ளிதான் ஜகன்நாதர் மரபு.

(நவகுஞ்சரம்)



பூரியில் உறைந்திருக்கும் ஜகன்நாதர், எல்லாருக்குமான தெய்வம்.
ஜெகன்நாதர் மரபின் சடங்குகளிலும் சரி அந்த மரபைச் சுற்றி அமைந்த கதைகளும் சரி ஒடிசாவைத்
தாக்கிய பலதரப்பட்ட சமயங்களின் தாக்கமும் மற்றும் மாநிலம் முழுவதும் மேலோங்கியிருக்கும்
பழங்குடியினரின் கலாசாரக் கலப்பும் அப்பட்டமாகத் தெரிகின்றன.

நம்முடைய அய்யப்பனுக்கு வாவர் மற்றும் ரங்கநாதனுக்கு ஒரு
துலுக்கநாச்சியார் இருந்ததைப் போல ஜகன்நாதருக்கு பொ பி 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த சாலாபேக்
என்ற இஸ்லாமிய பக்தர் இருந்ததாகs சொல்லப்படுகிறது. பொ பி 19ம் நூற்றாண்டில் பஞ்சாப்பை
ஆண்ட சீக்கிய மன்னனான ரஞ்சித் சிங் தனது இறுதி நாட்களில் தன்னிடமிருந்த கோகினூர் வைரத்தை
பூரி ஜகன்நாதருக்கு எழுதி வைத்ததாக ஒரு கதை சொல்லப்படுகிறது.

இன்றும் ஜகந்நாதரின் சமய மற்றும் கலாசார பன்முகத்தன்மையால்
ஈர்க்கப்பட்டு வெவ்வேறு சமயங்களிலிருந்து பக்தர்கள் பூரி ஜகந்நாத் யாத்திரையின்போது
ஒன்று திரள்கிறார்கள்.

ஜகந்நாதர் மரபு பற்றி காலம்சென்ற வங்காள வரலாற்றாசிரியர்
ஜாதுநாத் சர்கார், ‘ஒடிசாவின் பல்வேறு சமயங்கள் காலப்போக்கில் ஒன்றுகூடி ஜகந்நாதர்
மரபில் இணைந்துள்ளன’ என்கிறார்.

ஒடிசாவின் பல அடுக்குக் கலாசாரத்தை ரத்தினச் சுருக்கமாக உணர்த்தும்
ஒரு சிறிய கதை இங்கே. இந்தக் கதை சரளா மகாபாரதம் என்று அறியப்படும் ஒடியா மஹாபாரதத்தில்
வருகிறது.

கதைப்படி ஒருமுறை அர்ஜுனன் மலையின் மீது தவம் செய்து கொண்டிருந்தான்.
அப்போது அவன் முன்னால் ஒரு வினோதமான மிருகம் வந்து நின்றது. அதன் உடல் உறுப்புகள் வெவ்வேறு
மிருகங்களுடையதாக இருந்தன. அந்த மிருகம் சேவலுடைய தலையும், மயிலுடைய கழுத்தும், எருதின்
திமிலும், சிங்கத்தினுடைய வாலும் கொண்டிருந்தது. அதனுடைய மூன்று கால்களில் ஒன்று யானையுடைய
காலாகவும், ஒன்று புலியின் காலாகவும் , மற்றொன்று குதிரையுடைய காலாகவும் இருந்தது.
மிருகத்தின் நான்காவது கால் மனிதனுடையது. மேல்நோக்கி எழும்பியிருந்த ஒரு கை ஒரு நீல
வண்ண சக்கரத்தைப் பிடித்துக்கொண்டிருந்தது. இந்த ஆச்சரியப்படவைக்கும் மிருகத்தைக் கண்டவுடன்
அர்ஜுனன் முதலில் மிரண்டு போனான். அதைக்கொல்ல அம்பு எய்தினான். ஆனால் அடுத்த நொடியே
அவனுக்கு அந்த மிருகம் யார் எனப் புரிந்தது. அந்த மிருகம் வேறு யாருமல்ல, அண்ட பிரம்மாண்டத்தை
ஆளும் நாராயணன் என்பதை அறிந்துகொண்டான். எல்லா உயிரினங்களிலும் வீற்றிருப்பது ஒரே இறைப்பொருள்தான்
என்ற உண்மையைத் தனக்கு உணர்த்தவே நாராயணன் இந்த வினோதமான மிருகத்தின் உருவத்தில் தன்
முன் தோன்றியதை உணர்ந்தான். உடனே வில்லையும், அம்பையும் கீழே இறக்கினான். அந்த மிருகத்தின்
காலில் சென்று விழுந்தான்.
அந்த மிருகத்தின் பெயர் நவகுஞ்சரம். நவகுஞ்சரத்தின் உருவம்
பூரி கோவிலின் வடக்குப்புரத்தில் செதுக்கப்பட்டுள்ளது. அதன் கையில் இருக்கும் நீலச்
சக்கிரம் பூரி கோவில் கோபுர கலசத்தின் உச்சாணியில் கம்பீரமாக வீற்றிருக்கிறது.

(பூரி கோவிலில் நவகுஞ்சரம்)

நவகுஞ்சரத்தைப் பற்றிப் பேசுகையில், மும்பைப் பல்கலைக்கழகத்தில்
‘கம்பாரடிவ் மிதாலஜி (comparative mythology) போதிக்கும் பேராசிரியர் உத்கர்ஷ் படேல்,
“நவகுஞ்சரத்தின் உருவமும் சரி, தத்துவக் குறியீடும் சரி, ஆழ்ந்த அர்த்தம் கொண்டவை,
தனிதன்மை வாய்ந்தவை. இதற்கு ஒப்பாக உலகக் கதைகளில் வேறேதும் இருப்பதுபோல் தெரியவில்லை”
என்கிறார்.
நவகுஞ்சரத்தைப் போலவே ஒடிசாவின் கலாசாரத்தன்மையும் பல பரிமாணங்கள்
கொண்ட கலவைதான். ஆனால் அந்தக் கலவையின் அடித்தளத்தில் இருப்பது பரந்து விரிந்த பிரமாண்டத்தில்
மனிதனின் இருத்தலுக்கான காரணத்தேடல்தான் என்பதில் ஐயமில்லை.

Posted on Leave a comment

கனம் நீதிபதி அவர்களே, ஒளியிலிருந்து இருட்டுக்கு இட்டுச் செல்லாதீர்கள் | அரவிந்தன் நீலகண்டன், தமிழில்: மைத்ரேயன்

கேந்திரிய வித்யாலயா
பள்ளிகளில் ‘அஸதோ மா சத்கமய’ என்ற பாடல் பாடப்படுவதை, மதச்சார்பின்மை என்ற பெயரில்
எதிர்க்கிறார்கள். இது, மதமாற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்ட மதத்தினர், பல தெய்வங்களை
ஏற்றுக்கொள்ளும் பாரத அறிவுப் பாரம்பரியத்தின்மீது கொண்டுள்ள வெறுப்பேயன்றி வேறில்லை.


ஜே.பி.எஸ். ஹால்டேன் (1892-1964) ஒரு பல்துறை வல்லுநர். உயிரியலாளர்களில்
மிகச் சிறந்தவர். இன்று புது டார்வினியம் என்று அறியப்படும் மெண்டலிய மரபியலையும் டார்வினியத்தின்
பரிணாமக் கோட்பாட்டையும் இணைத்த சிந்தனை வழியை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர்.

அவர் ஒரு கட்டத்தில் மார்க்சியராகவும் இருந்தவர். நொந்துபோய்தான்
மார்க்சியத்திலிருந்து வெளி வந்தார். அறிவியல் ரீதியாகப் பொய்யான புது லாமார்க்கியத்தை
சோவியத் குழுமம் மிக முனைந்து பரப்ப முற்பட்டதும், முரண் சமயக் கோட்பாடுகளை ஒடுக்குவதற்கான
குற்ற விசாரணை முறைகளையொத்த மார்க்சிய விசாரணை முறைகளை மரபியலாளர்கள் மீது ஸ்டாலின்
அவிழ்த்து விட்டதும், ஹால்டேனை அதிர்ச்சியடையச் செய்து மார்க்சியத்திலிருந்து அவரை
வெளியேறச் செய்தது.
அவர் இந்தியாவிற்கு வந்து, பண்டைய பாரத தரிசனங்கள் மீது தனக்கிருந்த
ஆர்வத்தை வெளிப்படுத்தலானார். அதே சமயம் இந்தியர்கள் அடைந்திருந்த பெரும் சரிவைப் பற்றி,
குறிப்பிட்டுச் சொன்னால், விமர்சன வழி சிந்தனை முறைகளில் அவர்கள் அடைந்திருந்த தாழ்ச்சி
பற்றிய தன் வருத்தத்தையும் வெளிப்படுத்தினார். ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு அவர் எழுதிய
கட்டுரை ஒன்றில் ஹால்டேன் இப்படி எழுதினார்:

“இந்து சமயம் அறிவியல்
நோக்கை முன்வைக்கிறது; இது அறிவியலை அணுகுவதில் இந்தியர்களுக்குப் பெரும் வலுவைக் கொடுக்கிறது.
காயத்ரி மந்திரத்தை உச்சாடனம் செய்வது, நமக்கு பூமி, காற்று, ஆகாயம் ஆகியன பெரும் சிறப்புள்ளன
என்பதையும், அவற்றைப் பற்றி நம் முழுச் சக்திக்கு எட்டியவரை சிந்திப்பது நம் கடமை என்பதையும்
நினைவூட்டுகிறது. இம்மந்திரத்தை உச்சாடனம் செய்வோரில் நூறில் ஒருவர் இதைச் செய்தாலுமே
அறிவியலில் இந்தியா உலகத் தலைமைக்குச் செல்லும்.”

Science And The Enquiring Mind, த ஹிந்துஸ்தான் டைம்ஸ், மே 18, 1956.

அவர் இந்தக் கூற்றை உரைத்த சுமார் எழுபது ஆண்டுகளுக்குப்
பிறகு, உபநிஷத்துகளில் இருந்து எடுக்கப்பட்ட, மானுடத்தை இருளிலிருந்து வெளிச்சத்துக்கும்
பொய்மையிலிருந்து நிஜத்துக்கும் நகர உந்தும் சிறப்பான ஸ்லோகமானது மதச்சார்பின்மையைக்
குலைக்கிறதா என்று ஆராய இந்திய உச்ச நீதி மன்றம் ஒரு சிறப்பு அமர்வுக்கு உத்தரவிட்டிருக்கிறது.
இதை அறிந்தால் ஹால்டேனின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது.
வழக்கைத் தொடுத்தவர், மேற்படி ஸ்லோகத்தை, குறுகிய குழுவாதம், வறட்டு வாதம் மற்றும்
மதப் பிரார்த்தனை என்று வாதிடுகிறார்.

இதிலுள்ள சிக்கல், இந்து தர்மத்தின் எல்லாவற்றையும் உள்ளடக்கிய
ஆழ்ந்த தன்மையும், நாட்டில் அதிவேகமாகப் பெருகிவரும் பண்பாட்டு அறிவின்மையும்தான்.

இந்து தர்மமானது, மதமாற்றம் செய்யும் மற்ற மதங்கள் போன்றதல்ல;
அது பலவிதமான மதம் மற்றும் தத்துவ இழைகளோடு இணக்கமான, பிரபஞ்சத்தைப் பார்க்கும் ஒரு
நோக்கு என்று ஹால்டேனே கூறியிருக்கிறார். இருளிலிருந்து ஒளிக்கும், பொய்மையிலிருந்து
உண்மைக்கும் பயணிக்குமாறு கூறும் ஸ்லோகம் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்று நாம் சொல்லத்
தலைப்பட்டால், நாளை பரிணாமக் கொள்கையைக் கூட மதச்சார்பின்மைக்கு எதிரானது என்று வாதிடும்
நிலைக்கு நாம் வந்துவிடுவோம். ஆராய்ந்து பார்த்தால் அந்த ஸ்லோகம், இஸ்லாமிய-கிறித்துவ
அடிப்படை நம்பிக்கையான ‘அனைத்தையும் படைத்தது ஒரு சிருஷ்டி கர்த்தர்’ என்பதை மறுக்கிறது.
மாறாக, வேதாந்த அடிப்படை கொண்டதும், மேற்கத்திய தத்துவ மரபில் ஸ்பினோசாவால் முன்வைக்கப்பட்டதுமான
ஆளுமை அற்ற நிர்க்குண இறையைத்தானே முன்வைக்கிறது?

ஏற்கெனவே மதச் சொற்களான கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்குப்
பின் என்பனவற்றுக்குப் பதிலாக, உலகெங்கும் தற்போது பயன்படும் மதச்சார்பற்றச் சொற்களான
, ‘பொது ஆண்டுக்கு முன்’, ‘பொது ஆண்டு’ ஆகியவற்றைப் பயன்படுத்தும் முறையை தமிழ்நாட்டில்
அரசியல் கட்சிகள் தடுத்து நிறுத்தின. காரணம்—கொஞ்சம் சுதாரித்துக்கொள்ளுங்கள்—அவை மதச்சார்பின்மைக்கு
எதிரானவையாம்.

தொலைநோக்குக் கொண்டவரான சீதாராம் கோயல், இந்த வகை ‘மதச்சார்பின்மை’
இந்தியாவின் வக்கிரமான அரசியல் பயன்பாடு என்று முன்பே சொல்லி இருந்தார். இன்று இத்தகைய
மதச்சார்பின்மை என்பது, இந்து தர்மம் என்றழைக்கப்படும் இந்தியாவின் பல இறைமைக் கோட்பாடுகளுக்கும்
பன்முக அறிவுப் பாரம்பரியங்களுக்கும் எதிராக, மதமாற்ற முனைப்புக் கொண்ட மதங்கள் காட்டும்
மூர்க்கமான வெறுப்பே அன்றி வேறில்லை.

அறிவுத் திரட்டிலும், ஆன்மிகத் தேடலிலும் இப்படிப்பட்ட பல
வகையான, பல நோக்குகள் கொண்ட பாரம்பரியங்களுக்குப் புகலிடமாக இருப்பதோடு அவற்றைக் காத்துப்
பேணுவதால்தான் ஒரு தேசமாகவும், நாகரிகமாகவும் பாரதம் உயிர்த்து நிற்கிறது—இதைத்தான்
பலவகையான தத்துவ மரபுகளுக்கும், ஆன்மிகப் பார்வைகளுக்கும் ஒத்திசையக் கூடியது என்று
ஹால்டேன் கூறினார். நவீன இந்தியாவுக்குக் கால்கோளிட்டவர்களிடம் பல குறைகள் இருந்தாலும்
இந்து தேசத்தின்பால் ஆற்ற வேண்டிய இந்தக் கடமை இந்திய தேச-அரசுக்கு இருப்பது உள்ளுணர்வில்
தெரிந்திருக்கிறது. இந்தியக் கடற்படை ஒரு வேத ஸ்லோகத்தையும், இந்திய விமானப் படை கீதையிலிருந்து
ஒரு ஸ்லோகத்தையும், தாம் கடைப்பிடிக்கும் பொன்மொழிச் சொற்களாக (மோட்டோ) ஏன் கொண்டிருக்கின்றன
என்பதையும், இந்தத் தேசம் தனது சின்னத்தில் உபநிஷத ஸ்லோகத்திலிருந்து ‘சத்யமேவ ஜயதே’
என்பதையும் ஏன் கொண்டுள்ளது என்பதையும் இது விளக்கும்.

இந்தியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையக் குழு, தன்
சின்னத்தில் ஈசாவாஸ்ய உபநிஷத்திலிருந்து ஒரு ஸ்லோகத்தைக் கொண்டிருக்கிறது. பிரச்சினைகள்
எழக் காரணம், வேண்டுமென்றோ, அல்லது பிழையாகவோ, இந்தியா ஓர் இந்து நாடாக இருப்பதையும்,
இந்திய அரசு சமயச் சார்பற்ற அரசாக இருக்க வேண்டியதையும் இணைத்துப்போட்டுக் குழப்பிக்
கொள்வதுதான்.

இந்தியாவின் அரசு சமயச் சார்பற்ற ஓர் அரசாக இருக்க வேண்டியது
குறித்து எந்த மாறுபட்டக் கருத்தும் இருக்க முடியாது என்பது போலவே, இந்து என்ற சொல்லின்
மிகுந்த ஆழமும் விரிவும் உள்ள பொருள் பெறும் முறையில் இந்தியா ஓர் இந்து தேசம் என்பது
குறித்தும் மாறுபட்டக் கருத்து இருக்க முடியாது.

இன்று நாம் எதிர்கொள்கிற பிரச்சினையின் வேர் இந்த இரு விஷயங்களிடையே
உள்ள வேறுபாடுகளைத் தெளிவாக இல்லாமல் மங்கவைத்துவிட்ட அரசியல் உணர்வில் நேர்ந்துள்ள
இந்தத் துரதிர்ஷ்டவசமான அடையாளக் குழப்பம்தான். இதனாலேயே, உச்சநீதிமன்றம் கூட அதன்
தரத்துக்கு ஏற்றபடி துச்சமாகக் கருதி உடனடியாக நிராகரித்திருக்க வேண்டிய ஒரு விண்ணப்பத்தைப்
பரிசீலனைக்கு அனுமதித்து, அதைப் பற்றித் தீர்மானிக்க ஒரு சிறப்புக் குழுவையும் உருவாக்கி
இருக்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது.
நம் கல்வித் திட்டங்களில் அவசரமாகத் தேவைப்படுவது ஏதேனும்
உண்டென்றால் அது வேத தரிசனங்கள், வேதாந்தம், சாங்கியம், வேத முறைகளின் சத்காரியவாதம்,
ஜைனத்தின் ஸ்யாத்வாதம் (1), பௌத்தத்தின் ப்ரதித்யசமுத்பாதம் (2) ஆகியவை , அறிவியல்,
கலையியல் மேலும் மானுட ஆய்வியல் துறைகளில் போதனை முறைகளில் அறிவார்ந்த முறையில் சேர்க்கப்பட்டுப்
பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுதான்.
நவீன கால இந்தியக் குடியரசின் வரலாற்றில் துவக்கத்திலேயே
இந்தத் தேவையின் தீவிரம் நன்கு உணரப்பட்டிருந்தது. இயற்பியல் துறையில் பிரசித்தி பெற்றவரும்
கல்வியாளர்களில் முன்னிலையில் இருந்தவருமான பேராசிரியர் தௌலத் சிங் கோத்தாரியின் தலைமையில்
1966ம் ஆண்டு கல்வி ஆய்வுக் குழு, அன்று மத்திய அரசில் கல்வி மந்திரியாக இருந்த மொஹம்மத்
கரீம் சாக்ளாவிடம் சமர்ப்பித்த அறிக்கை கல்வியின் இந்த அம்சம் குறித்துக் கூறியது இது:

“நம் படிப்பினைகளைச்
சரிவரப் பெற்றோமானால், அறிவியலானது நமது பண்பாடு மற்றும் ஆன்மிக மதிப்பீடுகளின்பால்
நமக்கிருக்கும் பொறுப்பை நலிவாக்காமல், வலுவாக்க உதவுவதாக அதைப் பயன்படுத்துவது நமக்குச்
சாத்தியமாகும். வாழ்வின் அடிப்படைப் பிரச்சினைகளைப் பற்றி பண்டைய ஞானிகள் பெற்றிருந்த
உள்ளொளி, சில வழிகளில் தனிச் சிறப்புடையது; அது “உலகின் நிகழ்வுகள் பற்றிய மிக ஆழமான உள்ளறிவின் அரிய எடுத்துக் காட்டாகும்.”
அந்த உள்ளொளிக்கு இன்றைக்கேற்ற மறு விளக்கத்தைப் பெற்று, அதைப் புதிய உயர் தளங்களுக்கு
ஏற்றுவது நம் இலக்காகவும், நம் கடமையாகவும் இருக்க வேண்டும்.”

மேலே மேற்கோளில் தடித்த எழுத்துகளில் உள்ள வாக்கியம் அறிவியலாளர்
ஷ்ரோடிங்கரின் நன்கறியப்பட்ட, நம் காலத்து அறிவியலின் போக்கையே மாற்றி அமைத்த நூலான
‘வாட் ஈஸ் லைஃப்?’ என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டிருந்தது. இதன் பிறகு, அந்த
ஆய்வுக் குழு தன் அறிக்கையில், கேன உபநிஷத்தின் முதல் பாடலிலிருந்து மேற்கோள் காட்டி,
அதை விரித்துரைக்கிறது. ஆய்வுக்குழு இந்த இடத்தில், ஜவஹர்லால் நேருவையும் மேற்கோள்
காட்டுகிறது, அவர் சொல்கிறபடி, நாம் அறிவியலுக்குப் புறம்பாகச் செயல்பட முடியாதென்றாலும்,
“பன்னெடுங்காலமாக இந்தியா எந்த அத்தியாவசியமான கொள்கைகளைக் கடைப்பிடித்ததோ அவற்றையும்
நாம் பொய்யாக்க முடியாது.” இந்தியாவை வெறுப்போரில் மிகக் கெடுமதி படைத்தவரை விட்டு
விட்டால், வேறு எவரும், உபநிஷத்துகள் “பன்னெடுங்காலமாக இந்தியா எந்த அத்தியாவசியமான
கொள்கைகளைக் கடைப்பிடித்ததோ” அவற்றையே பிரதிபலிக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

இந்திய நாகரிகத்தின் இந்தத் தனிச் சிறப்பை இந்தியா அதன் அறிவியல்
பாடத் திட்டங்களில் பயன்படுத்தி அவற்றை மேலெடுத்துச் சென்றிருக்கும் என்று எவரும் எதிர்பார்த்திருப்பார்கள்.
பொறுங்கள்—இது வேத காலத்திலேயே விமானங்கள் இருந்தன; மகாபாரதத்திலேயே அணு ஆயுதம் தரித்த
ஏவுகணைகள் இருந்தன என்பனவற்றையோ, அல்லது டார்வினியத்தை எதிர்க்கும் மூடத்தனமான கருத்துகளையோ
அல்லது போலி குருமார்களின் சிஷ்யர்களால் ‘அபார சக்திகள்’ என விதந்தோதப்படும் மாயாஜாலத்
தந்திரங்களையோ பற்றியது அல்ல. இன்று நாம் காண்கிற இந்த வகை மன நோய்கள், இன்றைய கல்வி
முறையில் பொதிந்துள்ள பண்பாட்டு அறியாமையால் உண்டாகும் தாழ்வு மனோபாவத்தால் விளைபவை.

இங்கு கூறப்படுவது புதுக் கண்டுபிடிப்புகளை அடைவதற்குத் தேவையான
திடகாத்திரமான உளவியலை உருவாக்குவது பற்றியது; வாழ்வின் அனைத்துப் போக்குகளிலும் நித்தியமான
மதிப்பீடுகள் கொண்ட அறிவியலை அடைவது பற்றியது. இந்த நாகரிகம் ஏற்கெனவே, வேதாந்தத்தின்
மதிப்பீடுகள் எப்படி அன்று ஒரு ஜகதீஷ் சந்திரபோஸையும் ஜ்யார்ஜ் சுதர்ஷனையும் இன்று
நம்மிடையே உள்ள மஞ்சுல் பார்கவா மற்றும் சுபாஷ் கக்கையும் படைக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது.
இருப்பினும், இந்த நாகரிகத்தின் இத்தகைய விளைவுகள், இந்த அமைப்பின் விளைவுகளாக இருந்ததை
விட, இதற்கு விதிவிலக்குகள் போலவே தெரியவருகின்றன. உபநிஷத்துகளின் மதிப்பீடுகளையும்,
புத்தர் மற்றும் சங்கரரின் ஆன்மிகத்தையும் நம் கல்வி முறையில் இணைத்து ஓர் அமைப்பை
உருவாக்கி இருந்தோமானால், என்னென்ன வகையான அற்புத மலர்கள் இந்தத் தேச மண்ணில் மலர்ந்திருக்கும்!

ஒரு நோக்கில், உச்ச நீதி மன்றம் ஓர் அரிய வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது
எனலாம், அதாவது அதை நல்லபடியாகப் பயன்படுத்துவதை அது தேர்ந்தெடுத்தால். உபநிஷத்துகள்,
“அஸதோமா சத்கமய” என்பன போன்ற பாடல்கள் மூலம் எதை வெளிப்படுத்துகின்றனவோ அதுதான் இந்தியாவின்
ஆன்மாவும் சாரமும் என்று அறுதித் தீர்மானமாக அது முடிவு சொல்லக் கூடும். இவற்றை நாம்
இழந்தோமானால் இந்தத் தேசம் என்பதன் சாரத்தையே நாம் இழப்போம். அந்த ஆன்மாவை இழந்தால்,
இந்தத் தேசிய-அரசின் அனைத்து நிறுவனங்களும், கருவிகளும் ஆன்மா இல்லாத வெற்று உடலாகத்தான்
நிற்கும்.

* * *
குறிப்பு: இக்கட்டுரையின் மூல ஆங்கில மொழி வடிவம், ஸ்வராஜ்யா
என்ற ஆங்கில அச்சுப் பத்திரிகையில் ஜனவரி 30, 2019 அன்றுவெளியானது. அதன் விவரம்:

‘Your Highness, Lead Us Not From Light To Darkness’ by
Aravindan Neelakandan.
Swarajya Magazine, January 30, 2019.

மொழிபெயர்ப்பாளரின்
குறிப்புகள்:

(1) ஸ்யாதவாதம் என்ற ஜைனச் சிந்தனை முறைக்கு ஒரு விளக்கம்
இங்கே கிட்டும். http://jainworld.com/book/antiquityofjainism/ch10b.asp

நவீன யுகத்தின் ஆய்வுகளுக்கு உறுதுணையாக இருக்கும் ஒரு துறையான
புள்ளியியலில், நிகழ்தகவு ஆய்வு எனப்படும் Probability analysis என்பதற்கு உதவக் கூடிய
சில கோட்பாடுகள் ஸ்யாதவாதம் எனப்படும் இந்த ஜைனத் தத்துவ முறையில் இருப்பதாக, இந்தியப்
புள்ளியியல் துறையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் பி.ஸி. மஹலநோபிஸ் ஒரு கட்டுரையில்
குறிக்கிறார். அது குறித்து மேல் விவரங்கள் இங்கே கிட்டும்:
https://indiaphilosophy.wordpress.com/tag/syadvad/

(2) விக்கிபீடியாவில் பௌத்தக் கோட்பாடுகளுக்கு நிறைய விளக்கங்கள்
கிட்டும். என்றாலும் வலை உலகில் கிட்டும் விளக்கங்களில் பலவும் இந்திய பௌத்தத்தை அடிப்படையாகக்
கொண்டவையாக இருக்க வாய்ப்பு அதிகம். திபெத்தியரின் பௌத்தம் பல வேறுபாடுகளோடு காணப்படும்
என்பதை நாம் அறிவோம். ப்ரதித்யசமுத்பாதத்தை ஒரு திபெத்திய ஆய்வாளர் விளக்குவதை இங்கே
பார்க்கலாம்:
https://journals.ub.uni-heidelberg.de/index.php/jiabs/article/download/8678/2585

பௌத்தம் பெருமளவு விளக்கங்களைக் கொடுக்கப் பயன்படுத்திய பாலி
மொழியில் இதே கோட்பாட்டின் பெயர்: ‘படிச்சசஸமுப்பாத’! (
पटिच्चसमुप्पाद)



Posted on Leave a comment

பட்ஜெட் 2019 | ஜெயராமன் ரகுநாதன்

இந்த பட்ஜெட்டின் முப்பெரும் தாக்கம்:

ஐந்து ஏக்கருக்கும்
குறைவான நிலம் வைத்திருக்கும் பன்னிரண்டு கோடி விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ 6,000
நேரடியாக அவர்களது வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும்.

மூன்று கோடிக்கும்
அதிகமான
எண்ணிக்கையில் உள்ள சம்பளம்
அல்லது பென்ஷன் வாங்கும் அலுவலர்களுக்கு Standard Deduction குறைப்பின் மூலம் வருடத்திற்கு
ரூ 500 முதல் ரூ 3,600 வரை சேமிப்பு.

பத்து கோடிக்கும்
அதிகமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அவர்களின் 60 வயதுக்குப்பின் மாதம் ரூ
3,000 வரை பென்ஷன். வேலை செய்யும் காலத்தில் அவர்கள் மாதம் ரூ 100 செலுத்தினால் போதும்.

முழுக்க முழுக்க தேர்தலை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட்
என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு, ‘ஆமாம்! இப்ப என்னன்றீங்க!’ என்ற ரீதியில்
ஆணித்தரமாக பதில் அளிக்கப்பட்டதும், அவை, முக்கியமாக காங்கிரஸ், சட்டென்று வாயை மூடிக்கொண்டதன்
பின்னணி அப்படி ஒன்றும் அதிசயமல்ல. ஏனென்றால் கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்
கடைசி வருடத்தில் ப. சிதம்பரம் இந்த மாதிரி ஒரு பட்ஜெட்டைத்தான் அளித்தார். ஆனால் அவர்
அளித்த சலுகைகள் மேல்மட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் போய்ச்சேரும் வகையில் இருந்தன.
கார்ப்பரேட்டுக்களுக்கு பலனளிக்கும் மறைமுகமான சலுகைகள் அவை என்னும் குற்றச்சாட்டும்
இருந்தது.

உண்மையில் இந்த பட்ஜெட்தேர்தல் பட்ஜெட் மட்டும்தானா?

இது பாஜக அரசின் ஐந்தாண்டுச் செயல்பாட்டின் ஒரு மதிப்பீடு
என்பது தெளிவு. இந்த அரசின் கடைசி பட்ஜெட் என்பதாலும் இன்னும் இரண்டே மாதத்தில் தேர்தல்
வந்து அதன் மூலம் வேறொரு அரசு பதவியேற்கும் சாத்தியம் இருப்பதாலும் இந்த பட்ஜெட்டில்
அளிக்கப்பட்ட சலுகைகள் கொஞ்சம் அதிகம், புதிதாகப் பதவி ஏற்கும் அரசுக்குப் பெரும் சுமையை
விட்டுச்செல்வது போன்ற செயல் என்னும் வாதத்தை முற்றிலும் புறந்தள்ள முடியாது.

அப்படியானால் இந்த பட்ஜெட் செய்திருப்பது என்ன?

கடந்த ஐந்தாண்டுகளில் பாஜக அரசால் மிக அடிப்படையான தொலைதூரப்பார்வை
கொண்ட பல முடிவுகள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. முதன்மையாக, கடுமையான நிதி நிலை
ஒருங்கிணைப்பு (Fiscal consolidation) முடிவுகள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும்
வரிச்சீர்திருத்தம், மிகச்சிறப்பாக மக்களைச் சென்றடைந்த மானியங்கள் மற்றும் கணிசமாக
அதிகரித்த முதலீடுகள், குறிப்பாக கட்டமைப்புச் சார்ந்த முதலீட்டின் அதிகரிப்பு போன்ற
செயல்களின் நல்ல விளைவுகளையும் அதன் லாபங்களையும் மக்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டிய
ஒரு நல்ல விஷயத்தைத்தான் இந்த பட்ஜெட் செய்திருக்கிறது.

வரி கட்டுவோருக்கு சலுகைகள், விவசாயிகளின் அவலத்தைக் குறைக்கும்
வகையிலான நிவாரண நடவடிக்கைகள் அளிக்கும் இந்த பட்ஜெட், இவற்றால் ஏற்படும் சுமைகள் நிதி
நிலைமையின் மேல் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தா வண்ணம் செய்யப்பட்டிருப்பதைப் பாராட்டத்தான்
வேண்டும். பண மதிப்பிழப்பு, ஜி எஸ் டி போன்ற கட்டமைப்பு நடவடிக்கைகளால் பாதிப்புக்குள்ளான
நேர்மையான மக்களுக்கு அதற்கான வெகுமதியை அளித்திருக்கிறது இந்த பட்ஜெட்.

வல்லுநர்கள் எழுப்பும் ஒருகேள்வி, விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட்டில்
வழங்கப்படப்போகும் தொகை கிட்டத்தட்ட ரூ 20,000 கோடிக்கு மேல் வரும். அடுத்த சில வருடங்களில்
ரூ 75,000 கோடி வரை செலவாகும். இத்தகைய மாபெரும் செலவு எப்படி நமது நாட்டு நிதி நிலைமையைப்
பாதிக்காமல் இருக்கும் என்பதே. ஆனால் ஒன்றைக் கவனிக்க வேண்டும். உலகத்திலேயே மிக வேகமாக
வளர்ந்துவரும் ஆறாவது பொருளாதாரமாக இந்தியா இருக்கிறது. இந்த அளவு மிகப்பெரும் பொருளாதாரத்தைக்கொண்ட
அரசால் நிச்சயமாக மேலே சொன்ன அளவு சலுகைகளை மக்களுக்கு வழங்க முடியும். அதனால் ஏற்படும்
தாக்கம் சதவீத அளவில் அதிகமிருக்காது. விவசாயக்கடன் தள்ளுபடியை விட இந்தச் சலுகை அதிக
விவசாயிகளுக்குப் பயனளிக்கும். மேலும் இதில் முறைகேடுகள் நடக்கும் வாய்ப்புக்களும்
குறைவு.

பண மதிப்பிழப்பு, ஜி எஸ் டி நடவடிக்கைகளினால் நாட்டில் வரி
கட்டுவோரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. அதனால் வரி விகிதத்தைக் குறைத்தாலும்
மொத்தமாக அரசுக்கு வரும் வரிப்பணம் அதிகமாகவே இருக்கும் என்பதை நாம் புள்ளி விவரங்களின்
மூலமாகப் புரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு, பல ஆண்டுகளாக வரி வருமானம் மொத்த உள்நாட்டு
உற்பத்தியில் (GDP) 10% லேயே தேங்கிக்கிடந்தது. ஆனால் இப்போது அது 12% ஆக உயர்ந்திருக்கிறது.
அதே போல ஜி எஸ் டி வரி வருமானமும் இப்போது 5.5% ல் இருந்தாலும் வரும் ஆண்டுகளில் அது
கணிசமாக உயர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு விவரம் பாருங்கள், விவசாயிகளுக்கு
அளிக்கப்பட்ட சலுகைகள் மற்றும் வரி குறைப்பினால் உண்டாகும் செலவினம் நமது மொத்த உள்நாட்டு
உற்பத்தியில் (GDP) 0.4% மட்டுமே. இதுவுமே 0.3% அதிகரித்துவிட்ட வரி வருமானத்தினால்
முக்கால் வாசிக்கு மேல் சரிக்கட்டப்பட்டுவிடும்.
மேலும் இந்த அரசு ஜன்தான் வங்கிக் கணக்குகள் தொடங்கியும்
ஆதார் தகவல் ஒருங்கிணைப்பு மூலமாகவும் விவசாயிகளுக்கு மானியங்களை நேரடியாக, எந்தவித
இடைத்தரகர்களும் இல்லாத வகையில், அவர்களது வங்கிக்கணக்கிலேயே செலுத்திவிடும் வசதியினால்
இந்த மாபெரும் சலுகைகள் உண்மையான பயனாளிகளைச்சென்றடைவது உறுதி. இந்த நேரடி நிதித்தொடர்பு
மூலமாக அரசின் சின்ன பட்ஜெட் செலவினங்கள் கூட நல்ல தாக்கத்தை சாமானியர்களிடம் ஏற்படுத்தி
விடுவது கண் கூடு. காலதாமதம் இல்லாமல், இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகள் மானியத்தைப்
பெற்றுவிடும் வசதி மிகப்பெரிய வரமாகிவிட்டது.
அடுத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான பென்ஷன் திட்டம்
இன்னொரு நல்ல பயனை மக்களுக்குக்கொண்டு செல்லும் முயற்சி. ஆனால் இதன் நிர்வாகம் எப்படி
அமையப்போகிறது என்பது ஒரு கேள்விதான். இத்தனை பெரிய தேசத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களை
ஒருங்கிணைத்து பென்ஷன் திட்டத்துக்குள் கொண்டு வந்து நிர்வகிப்பது சவால்தான்.

இன்று நாம் கண்டு கொண்டிருப்பது குறைவான பண வீக்கம் மற்றும்
ஓரளவுக்கு நிலையான உணவுப்பொருட்களின் விலைவாசி. இவ்விரண்டும் விவசாயிகளுக்கு, செலவுக்கு
மேற்பட்ட விலையைப்பெற்று அவர்களின் உற்பத்தியை அதிகரிக்கும் ஊக்கத்தையும் தரக்கூடும்.
இந்த பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறை சென்ற வருடத்தைப்போல
அதே அளவான 3.4%க்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சலுகைகளுக்குப் பின்னரும் பற்றாக்குறை
கட்டுப்பாட்டில் இருப்பது மிகச்சிறப்பான அம்சம் என்பதில் சந்தேகமில்லை.

நடுத்தர வர்க்கத்திற்கு அதிகமான சலுகைகள் வழங்கப்பட்டிருப்பது
பரவலாக வரவேற்பைப் பெற்றுள்ளது! வரி விலக்கு, வரிப்பிடிப்புச்சலுகை (Tax Deduction
at source), வீடு சம்பந்தப்பட்ட சலுகைகள் ஆகியவை நடுத்தர வர்க்கத்திற்கு இன்னும் அதிக
செலவு செய்யும் திறனை உண்டாக்கி நுகர்வுப் பொருளாதாரத்தை ஊக்குவிப்பது, உற்பத்திப்
பொருளாதாரம் மற்றும் நாட்டின் மொத்த பொருளாதாரத்திற்குமே நன்மை பயக்கும்.

மொத்த வரி வருமானம் 25.52 லட்சம் கோடிகளை எட்டியுள்ளது. இது
சென்ற ஆண்டைவிட 13.5% அதிகமாகும். அதே சமயம் செலவினங்களின் அதிகரிப்பு 13.3% தான்
(ரூ 27.84 லட்சம் கோடி) என்பதால் வருமான உயர்வு செலவின உயர்வை ஓரளவேனும் கட்டுப்படுத்திவிடும்
என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
ஆனால் முதலீட்டைப் பொருத்த வரையில் கட்டுமானப்பணிக்கான செலவு
(Capital Expenditure) மொத்தம் 9.53 லட்சம் கோடியில், கிட்டத்தட்ட 65% வரை, கடனில்லாமல்
அரசே ஈட்டும் பொருளிலிருந்துதான் சரிக்கட்ட வேண்டும். இது நடைமுறையில் சாத்தியமா என்பது
பெரும் சவால்.

கவலைக்குரிய அம்சம் என்னவென்றால் கடந்த ஆறு மாதங்களில் ஜி
எஸ் டியின் மூலம் வரும் வரிப்பணம் 7% மட்டுமே உயர்ந்திருக்கிறது. ஆனால் இந்த வருமானம்
25% வரை உயரும் என்னும் அளவில் அடுத்த வருடகணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.
ஒரு வேளை அது நடக்கவில்லை என்றால் பட்ஜெட்டில் துண்டு விழுவதைத் தவிர்க்க முடியாது.
அடுத்து கேட்கப்படும் கேள்வி, வேலை வாய்ப்பு உயரவே இல்லையே
என்பது. ஆனால் இதற்கான பதில், நேரடி வேலை வாய்ப்பு வெறும் எண்ணிக்கையில் இல்லை. பத்துப்பதினைந்து
வருடங்களுக்கு முன்பெல்லாம் தனியார் மற்றும் பொது நிறுவன வேலைவாய்ப்புக்களுக்கே மிக
அதிகத் தேவை இருந்தது, இன்று தனி வியாபாரம் மற்றும் சுய தொழில் செய்பவரின் எண்ணிக்கை
கணிசமாக உயர்ந்துள்ளது. சமூசா விற்பவர் பற்றி மோடியை ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும்
பரணி பாடியதை நாம் மறந்திருக்க மாட்டோம். ஆனால் அவர் பேசியதுதான் நிதரிசனமான நிஜம்.
ஜி எஸ் டி மற்றும் வருமான வரிகள் கணிசமாக உயர்ந்துகொண்டு வருவது, அதிக வேலை வாய்ப்புக்களைத்தானே
காட்டுகிறது. கூடவே வரி செலுத்துவோர் எண்ணிகையும் பல மடங்கு உயர்ந்திருப்பதும் மறைமுகமாக
வேலை வாய்ப்பு பெருகிவருவதைத்தானே குறிக்கும்! முத்ரா திட்டத்தின் கீழ் 70% கடன் பெண்களுக்கே
அளிக்கப்பட்டிருக்கிறது. இது கிட்டத்தட்ட ரூ 7 லட்சம் கோடி அளவாகும். இதன் மூலம் எத்தனையோ
தொழில்கள் தொடங்க/விஸ்தரிக்கப்பட்டிருக்கின்றன. இதெல்லாம் கூடுதல சுய வேலை வாய்ப்புதானே!

சலுகைகள் பயனாளிகளைச் சென்றடைவதில் இருக்கும் குறைபாடுகளை
விலக்குவது அல்லது குறைப்பதே இந்த பட்ஜெட்டின் முக்கியமான அடிநாதம். இவற்றை நிர்வகிப்பதும்
அதிகக் கஷ்டமான விஷயமும் அல்ல. இப்படிச் செய்வதன் மூலம் வரும் எதிர்கால அரசாங்கங்களும்
இந்த மாதிரியான முறைகளைப் பயன்படுத்தியே மக்களுக்கான பயன் தரும் திட்டங்களை நிர்வகிக்க
வேண்டும். அப்படிச் செய்தால் தேசத்தின் பொருளாதார அடிப்படைக் கட்டமைப்பை பலவீனப்படுத்தாமல்
மக்களையும் வளர்ச்சியில் பங்கேற்கச்செய்து பயன் பெற வைக்க முடியும். அதை இந்த பட்ஜெட்
செய்திருக்கிறது.

கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவின் ஒரு தனி மனிதப் பொருளாதாரத்துக்கு
பா ஜ செய்தவை:

• பணவீக்கத்தைக் கட்டுக்குள்
வைத்திருந்தது.
• கடன் வாங்குதற்கான
செலவை (cost of borrowing) குறைத்தது.
• வருமான மற்றும்
முதலீட்டு வரிகளை உயர்த்தினாலும் நாம் நுகரும் பொருட்களின் வரியைக்குறைத்தது.
• வசதிகளைப் பெருக்கியது
– முக்கியமாக கழிப்பறை, மின்சாரம், சாலை, வங்கிக்கணக்கு மற்றும் கல்வி கிராமப்புறத்தைச்
சென்றடையச் செய்தது.
• நடுத்தர வர்க்கத்துக்கு,
முக்கியமாக அவர்களின் சேமிப்பை அதிகப்படுத்தி சொத்துக்களைப் பெருக்கும் வகையில் அதிகம்
செய்யப்படவில்லை. (இந்த பட்ஜெட்டில் வரி குறைப்பு தவிர.)

நாட்டின் பொருளாதாரத்துக்கு பாஜக அரசு செய்தவை:

• கடந்த வருடங்களின்
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) எண்ணிக்கையைத் திருத்தியது. (அதனால் சமீபத்திய GDP
எண்ணிகை உயர்த்திக் காட்டியது.)
• நிதிப்பற்றாக்குறை,
மாநியங்கள், கடன் மற்றும் விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருந்தது.
• வெளிநாடு முதலீடுகளை
அதிக அளவில் கொண்டு வந்தாலும் உள்நாட்டு முதலீட்டை அதிகம் பெருக்க முடியாதது.
• வேலை வாய்ப்பு ஏற்படுத்தியது
பற்றி முழுமையாக மக்களை உணரச்செய்ய முடியாதது.

இந்த பட்ஜெட் ஒரு பாசிடிவான மன நிலையை உண்டாகியிருப்பதை மறுக்க
முடியாது. அதே சமயம் சவால்களை எதிர்கொண்டாக வேண்டும் என்னும் நிதர்சனத்தையும் ஒதுக்க
முடியாது. 2014லிலிருந்து 2019 வரை நமது GDP 918 பில்லியன் டாலர் ($918 பில்லியன்)
கூடியிருக்கிறது. ஒரு ஒப்பீட்டுக்காகப் பார்க்கப்போனால் பாகிஸ்தானின் GDP $307 பில்லியன்,
பங்களாதேசத்தின் GDP $286 பில்லியன். அதாவது கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியா ஒரு பாகிஸ்தானையும்
இரண்டு பங்களாதேசத்தையும் தன்னுடன் இணைத்துக்கொண்டுள்ளது.

இப்படிப்பட்ட இந்தியா போன்ற பரந்த தேசத்தில் சிக்கல்கள் மிக
அதிகம். வளர்ச்சியின் நன்மைகளைக் கடைக்கோடி மக்களும் அனுபவிப்பதற்கான ஏற்பாட்டைத் தொடங்கியிருக்கிறது
இந்த பட்ஜெட். இது தொடர வேண்டும் என்பதுதானே ஒவ்வொரு இந்தியனின் வேண்டுகோளாக இருக்க
முடியும்.

Posted on Leave a comment

நேர்காணல்: ஹெச்.ராஜா | அபாகி

தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தவே தேவையில்லாத பெயர் ஹெச்.ராஜா.
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக அரசியல் வட்டாரம் அவரைச் சுற்றியே இருக்கிறது. பேச்சைப்
போலவே, அவரும் பரபரப்பாகவே இருக்கிறார். புல்வாமா தாக்குதலுக்கு மறுநாள் அஞ்சலிக் கூட்டங்களுக்குச்
சென்றுவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பியவரை ‘வலம்’ இதழுக்காகச் சந்தித்தோம்.

நீங்கள் எப்படி ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்தீர்கள்?

என் தகப்பனார் பேராசிரியர் ஹரிஹரன் அவர்கள், தமிழகத்துக்கு
ஆர்எஸ்எஸ் அறிமுகமான காலத்திலேயே 1942ல் சங்கத்தில் இணைந்தார். 1948ல் நேரு அரசாங்கம்
சங்கத்தின் மீது வீண் பழி சுமத்தித் தடை செய்தபோது, என் தகப்பனார் பேராசிரியர் ஹரிஹரன்,
பின்னாளில் பாரதிய ஜனதா கட்சியின் அகில பாரதத் தலைவராக இருந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி
ஜி, சமீபத்தில் மறைந்த ஐஏஎஸ் அதிகாரி ஐராவதம் மகாதேவன், அன்றைய தினம் சங்கத்தின் மாநிலச்
செயலாளராக இருந்த அண்ணாஜி, இவர்கள் அனைவரும் சத்தியாகிரகம் செய்ததற்காக, ஆறு மாதம்
மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

நான் 1964ல் மூன்றாவது வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன்.
அப்போது, பத்துஜி (பத்மநாபன்ஜி – பிற்காலத்தில் ஆர்எஸ்எஸ் பிரச்சாரக்காக இருந்தவர்)
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்துக்கொண்டிருந்தார். அவர் என்
தகப்பனாரைப் பார்ப்பதற்காக அடிக்கடி வருவார். ஒருநாள் என்னிடம், “உனக்கு கபடி விளையாடப்
பிடிக்குமா?” என்றார். “பிடிக்கும்” என்றேன். அவரால் அழைத்து வரப்பட்டு, அப்போதிலிருந்து
ஷாகா வரத் தொடங்கினேன்.

எந்தெந்த நிலைகளில் சங்கப்பணி செய்திருக்கிறீர்கள்?

நான் 1974-75ல் நெருக்கடி நிலை அறிவிக்கப்படும் நேரத்தில்
காரைக்குடி ஷாகா முக்கியசிக்‌ஷக் பொறுப்பில் இருந்தேன். 1980லிருந்து 1984 வரை கோல்
இந்தியா நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். பிறகு 1984 முதல் 1990 வரை ராமேஸ்வரம்
விபாக் வியவஸ்தா பிரமுக்காக இருந்தேன். 1990-91ல் இந்து முன்னணி மாவட்டச் செயலாளராக
இருந்தேன். பிறகு, 1991 பிப்ரவரி முதல் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து வருகிறேன். முதலில்
சிவகங்கை மாவட்ட அமைப்பாளராக இருந்தேன். 1993ல் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டேன்.
அப்போது, மதுரையில் பாரதிய ஜனதா கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. அது
வெற்றிகரமாக அமைந்தது. மறுநாள் அத்வானிஜியை நிர்வாகிகள் சந்தித்தபோது, ‘Tamilnadu
learned to mobilize’ என்றார். அதற்குப் பிறகு, 1995ல் மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டேன்.
2006 நவம்பர் வரை 11 ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் இருந்த பிறகு, 2006ல் மாநிலத் துணைத்
தலைவர் ஆனேன். 2014 ஆகஸ்ட் முதல் தேசியச் செயலாளராகப் பணிபுரிந்து வருகிறேன்.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உங்கள் சொந்த தொகுதியான சிவகங்கையைச் சேர்ந்தவர்.
அவரது வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள்?

திரு. ப.சிதம்பரம் ஒன்றும் செல்வாக்கு மிக்க அரசியல்வாதி
அல்ல. நான், 1999 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டேன்.
வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சுதர்சன நாச்சியப்பனைவிட நான் 19,000 வாக்குகள்தான்
குறைவு. ஆனால், அப்போதே ப.சிதம்பரம் என்னை விட 1 லட்சம் வாக்குகள் குறைவாகப் பெற்றார்.
அந்தத் தேர்தலில் சுதர்சன நாச்சியப்பன் பெற்ற வாக்குகள் 2,45,000. நான் பெற்ற வாக்குகள்
2,25,000. சிதம்பரம் பெற்ற வாக்குகள் 1,25,000தான். கடந்த 2014 தேர்தலிலும் அதே நிலைதான்.
அந்தத் தேர்தலில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டார். அதிகமான பணம்
செலவழித்தும் கூட என்னை விட 30,000 வாக்குகள் குறைவாகப் பெற்றார். சிதம்பரத்துக்கு
உள்ளூரில் செல்வாக்கு இல்லை. அவருக்குக் கட்சி மேலிடத்தில் செல்வாக்கு இருக்கிறது.
அது தொடர்கிறது.

சமீப காலமாக உங்கள் பேச்சுகள், சர்ச்சையைக் கிளப்புகிறதே?

சர்ச்சை என்றால் விவாதம் என்று அர்த்தம். நான் ஒரு விவாதத்தைக்
கிளப்புகிறேன். நான் பேசுவது சர்ச்சை என்பவர்கள் யாராவது நான் பொய் பேசுகிறேன் என்று
கூற முடியுமா?

திக, ஈவெரா, நீதிக்கட்சி இவர்களெல்லாம் தேச விரோதிகள் என்று
பேசினேன். இப்போதும் பேசிக்கொண்டிருக்கிறேன். இதெல்லாம் இப்போது இருக்கும் இளைய சமுதாயத்திற்குத்
தெரியாத விஷயங்கள். 1944ல் திராவிடக் கழகத்தின் துவக்க மாநாடு சேலத்தில் ஈவெரா தலைமையில்
நடக்கிறது. அதில், சி.என்.அண்ணாதுரை ஒரு தீர்மானம் கொண்டு வருகிறார். அதில் கூறப்பட்டது,
“ஆங்கிலேயன் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமாம். காந்தியார் சொல்கிறார். அவருக்குப்
பைத்தியம் பிடித்திருக்கிறது. அவருக்கு வைத்தியம் செய்யக்கூட இங்கிலாந்தில் இருந்துதான்
வைத்தியர் வர வேண்டும். அப்படி அவன் வெளியேறிவிட்டால், விஞ்ஞானம் வெளியேறிவிடும்; கார்
ஓடாது; பஸ் ஓடாது. இந்தியாவால் குண்டூசி கூடத் தயார் செய்ய முடியாது.”

அடல்ஜி ஆட்சியில் நாம் குண்டூசி கூடத் தயார் செய்தோம். ஆனால்,
ஈவெராவும், அண்ணாதுரையும் நம்மால் குண்டூசி கூடத் தயார் செய்ய முடியாது என்றார்கள்.
இவர்களெல்லாம் தலைவர்களா?
அடுத்த வரி இன்னும் மோசமானது. “அப்படி இந்தியாவில் இருந்து
வெளியேறுவதாக இருந்தால் லண்டனில் இருந்துகொண்டாவது சென்னை ராஜதானியை ஆள வேண்டும்.”

இவர்கள் தேசவிரோதிகள் என்று கூறினால் சர்ச்சைக்கிடமானது என்பவர்கள்,
இந்த மாதிரி தீர்மானத்தை அவர்கள் போடவில்லை என்று சொல்ல முடியுமா? இதில் ஒரு பம்மாத்து,
அதாவது வெள்ளையன் வெளியேறி விட்டால் பார்ப்பனர் ஆதிக்கம் தலைதூக்கி விடும்; சமூகநீதி
போய்விடும் என்பதால்தான் ஈவெரா அப்படிச் சொன்னார் என்கிறார்கள். ஆனால், அவர்கள் போட்ட
தீர்மானத்தில் எங்காவது சமூகநீதி பற்றி ஒரு வார்த்தையாவது இருக்கிறதா? “வெள்ளையன் வெளியேறினால்
விஞ்ஞானம் வெளியேறிவிடும். கார் ஓடாது; பஸ் ஓடாது.” இதுதானே லட்சணம்? அப்படியென்றால்
ஈவெரா தேசத் துரோகிதானே?

அதேபோல, ஈவெரா தமிழுக்கு மிகப்பெரிய எதிரி. அவரே சொல்கிறார்;
“தமிழ் காட்டுமிராண்டி மொழி. தமிழில் பேசக்கூடாது.” 1969ல் பேசுகிறார். கருணாநிதி அப்போது
பொதுப்பணித்துறை அமைச்சர். ஒரு கூட்டத்தில் ஈவெரா பேசுகிறார்: “தமிழுக்காகப் பதவியைக்கூட
ராஜிநாமா செய்யத் தயாராம். இதற்காகவா நீங்கள் பெரியார்ப் பல்கலைக்கழகத்தில் படித்தீர்கள்?
நான் இந்தியை எதிர்த்தேன். அது இந்த சனியன் தமிழ் வரக்கூடாது என்பதற்காக அல்ல. நீ உன்
பொண்டாட்டியோடு இங்கிலீஷில் பேசு.” இப்படி பேசிய ஈவெரா தமிழ்த் துரோகிதானே? தமிழ் விரோதிதானே?
இப்படியெல்லாம் சரித்திரத்தில் பதிவான உண்மைகளை ஹெச்.ராஜா
பேசுகிறான். நான் பேசும் எல்லாவற்றுக்கும் என்னிடம் ஆதாரம் இருக்கும் ஏன், ஈவெராவே
ஒப்புக்கொண்டிருக்கிறார். “நான் இந்த நாட்டின் சுதந்திரத்திற்கு துரோகம் செய்தேன்.”
பெரியார் என்ற மாயத்தோற்றத்தின் முன்னால் இந்தக் கழகங்கள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த மாயத்தோற்றத்தை நொறுக்க வேண்டும். ஆகவேதான், நான் உண்மையான விஷயங்களை மக்கள் முன்
வைக்கிறேன். ஆகவே, சர்ச்சை நடக்கட்டும்.

ட்விட்டரில் ஒரு பதிவு போட்டீர்கள்? பிறகு, அது உங்கள் அட்மின் போட்டதாகக் கூறி
ஏன் எடுத்துவிட்டீர்கள்?

இல்லை. அது உண்மையாகவே நான் போட்டதில்லை. உங்களுக்குப் புரிவதற்காகச்
சொல்றேன். என் குழந்தைகள் சின்னவர்களாக இருந்தபோது காரைக்குடியில் அவர்களைக் கூட்டிக்கொண்டு
வெளியே போவேன். அப்போது, ஈவெரா சிலையைக் காண்பித்து, “இது யாருப்பா?” என்று கேட்டால்,
“அம்மா, ராமனைப் பத்தி பேசும்போது ராவணன் பத்தியும் நினைவு வரும். இவர், ஹிந்து மதத்தை
அழிக்க நினைத்த ராவணன்” என்பேன். நாளை இப்படியொரு தேச விரோதி, ஹிந்து விரோதி இருந்தார்
என்பது மக்களுக்குத் தெரிவதற்காக அந்தச் சிலை இருக்கணும் என்று நினைப்பவன் நான். அந்த
ட்வீட் போட்ட அன்றைக்கு, கர்நாடகத்தில் ஒவ்வொரு நான்கு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளர்
என மொத்தம் 56 பொறுப்பாளர்கள் கலந்துகொண்ட கூட்டத்துக்காக தேசியத் தலைவர் அமித் ஷா
அழைத்திருந்தார். அதற்காக நான் விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, அந்த ட்வீட்
உண்மையிலேயே என் அட்மின் போட்டதுதான். நான் இறங்கி அதைப் பார்த்தும், உடனே எடுக்க சொல்லிவிட்டேன்.
சிலைகளை அகற்றுவதில் எனக்கு என்றுமே உடன்பாடு இல்லை. அந்த ட்வீட்டை அட்மின் போட்டார்
என்பதால், இப்போது நான் அட்மின் வைத்துக்கொள்ளவில்லை.

தமிழகத்தில் பா.ஜ.க. வளராது என்கிறார்களே?

1980ல் பாரதிய ஜனதா கட்சி தொடங்கியபோது, சிவகங்கையில் முதல்
உறுப்பினராகச் சேர்ந்து, அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்சியைத் தொடங்கியவர்களில்
நானும் ஒருவன். அப்போதிலிருந்து மக்களுடன் நெருங்கிப் பழகி வருகிறேன். குறிப்பாக,
1989லிருந்து பொதுக்கூட்டத்தில் பேசி வருகிறேன். அதை மக்கள் அப்போது காது கொடுத்து
கேட்கக்கூட மாட்டார்கள். ஆனால், அன்று நாம் பேசிய பொது சிவில் சட்டம், காஷ்மீருக்கு
370 அந்தஸ்து, ராம ஜென்ம பூமி போன்ற விஷயங்களெல்லாம் இன்று மக்களாலும் பேசப்படுகிறதா
இல்லையா?

கொள்கை ரீதியாகப் பிற்காலத்தில் பாஜகவில் இணைந்தாலும்
1971 முதல் தமிழக அரசியலை உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். அந்தத் தேர்தலில் இந்திரா
காங்கிரஸ், திமுகவோடு கூட்டணி வைத்தது. அப்போது, எம்ஜிஆர் திமுகவில் இருந்தார். பிரிக்கப்படாத
திமுகவுக்கு அந்தத் தேர்தலில் கிடைத்த வாக்குகள் 35 சதவீதம். 72ல் எம்ஜிஆர் திமுகவை
விட்டு வெளியேறுகிறார். 1977 தேர்தலில் வெற்றி பெறுகிறார். அந்தத் தேர்தலில் திமுக
பெற்ற வாக்குகள் 24 சதவீதம். எம்ஜிஆர் பிரித்த வாக்குகள் 11 சதவீதம்தான். ஆனால், அவர்
பெற்ற வாக்குகள் 35 சதவீதம். அவர்கள் தங்களை அண்ணா திமுக. என்று சொன்னாலும், மக்களைப்
பொருத்தவரை அவர்கள் Anti திமுகதான்.

அப்போது, கருணாநிதி என்ற நபர்; அவருக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும்
ஓட்டுகள் பிரிந்து கிடந்தன. இன்றைக்கு ஹிந்து சனாதன தர்மத்தை வேரறுப்பது, ஹிந்துத்
திருமணங்களைக் கொச்சையாகப் பேசுவது என ஸ்டாலின் இருப்பதைப் போலத்தான் அவரது அப்பாவும்
இருந்தார். கருணாநிதியின் மீதான வெறுப்பினால் வரும் ஓட்டுகளைப் பெறுபவராக எம்ஜிஆர்
இருந்தார். ஆனால், இன்று கொள்கை ரீதியாக இதை எதிர்க்கும் நமக்கு, வலிமையான தலைமையும்
வேண்டும். இப்போது நமக்கு மோடி கிடைத்திருக்கிறார். ஆகவே, திமுக எதிர்ப்பு ஓட்டுகள்
வருங்காலத்தில் நமக்கு விழும். அது தேர்தலிலும் பிரதிபலிக்கும்.

மோடி அரசின் திட்டங்களை தமிழக பாஜக ஏன் சரியாக பிரசாரம் செய்வதில்லை?

பாரதிய ஜனதா கட்சி இயக்க ரீதியாக தனக்கு இருக்கும் பலத்தின்
அடிப்படையில் வேலை செய்து வருகிறது. அதைத்தான் நான் சொன்னேன். இந்திய மக்கள் முதலில்
தலைவர்களைத்தான் ஏற்பார்கள், பிறகுதான் கொள்கை. குஜராத்தில் மோடியை எப்படித் தாக்கி
தாக்கி அவரை வலிமைமிக்க தலைவராக உருவாக்கினார்களோ, அதேபோல தமிழகத்திலும் ஹிந்துத்துவ,
தேசியக் கொள்கைகளுக்கு எதிராக உள்ள ஜிஹாதிஸ்ட், ஈவெஞ்சலிஸ்ட் (கிறிஸ்தவ மதமாற்றச் சக்திகள்),
தமிழ்த் தேசியவாதிகள், நகர்ப்புற நக்ஸல்கள் ஆகிய நான்கு தீய, பிரிவினைவாத சக்திகளும்
செய்த எதிர்மறைப் பிரசாரத்தின் காரணமாக, இன்று மக்களே கூர்ந்து கவனிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
பாஜக பற்றி மக்களுக்குச் சென்றடைந்திருக்கிறது. ஆகவே, அதன் பலன்கள் நிச்சயமாக பாஜகவுக்குக்
கிடைக்கும்.

இப்போது பாஜக-அதிமுக கூட்டணி வந்துவிட்டது. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாகவே
அதிமுக அரசை தமிழக பாஜக எதிர்க்கவில்லையே? பாஜகதான் அதிமுக அரசை இயக்குகிறதா?

இது குழந்தைத்தனமான பேச்சு. நம் கூட்டாட்சி அமைப்பின்படி
மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இணக்கம் அவசியம். அதுதான் இருக்கிறதே ஒழிய, பாஜக,
அதிமுக அரசை இயக்கவில்லை. இன்று ஏன் கூட்டணி வந்துள்ளது என்றால், நான் ஏற்கெனவே சொன்னது
போல இந்த நான்கு தீயசக்திகள்தான் காரணம். கருணாநிதி இருந்தபோது திமுக அவர் கட்டுப்பாட்டில்
இருந்தது. ஆனால், இன்று திமுக ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? ஸ்டாலின் யார்
கட்டுப்பாட்டில் இருக்கிறார்? வைகோ கட்டுப்பாட்டில், திருமாவளவன் கட்டுப்பாட்டில்,
சீமான் கட்டுப்பாட்டில், பாரதிராஜா கட்டுப்பாட்டில், வைரமுத்து கட்டுப்பாட்டில்! எல்லாப்
பிரிவினைவாத சக்திகளும் அவரை ஆட்டுவிக்கிறது. ஆனால், ஸ்டாலின் எடுப்பார் கைப்பிள்ளையாக
இருக்கிறார்.

அ.திமுக அரசுக்கு எதிராக நீங்கள், ஆலய மீட்பு இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறீர்களே?

நான் அதைtஹ் தொடர்ந்து செய்து வருகிறேன். அதற்கும் ஒரு குறிப்பிட்ட
அரசாங்கத்துக்கும் சம்பந்தப்படுத்த முடியாது. அதை மிகப்பெரிய சதியின் ஒரு பகுதியாகவே
பார்க்கிறேன். ஏனென்றால், இன்றைக்குக் கூட என்னிடம் வடபழனி கோயில் நிலத்தின் பத்திரத்தை
ஒருவர் காண்பித்தார். அப்படி பத்திரம் போட்டதற்காக, ஒரு அதிகாரி மீது பத்திரப்பதிவுத்
துறை துறைரீதியாக நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஆனால், அந்தப் பத்திரத்தை ரத்து செய்யச்
சொல்லி கோயில் செயல் அதிகாரி இதுபற்றி பத்திரப் பதிவுத் துறையில் புகார் கொடுத்திருக்காரா?
இல்லை. ஏனென்றால், கோயில் நிலங்கள் பற்றிய பதிவேடு அவர்களிடம் இல்லை. இந்து அறநிலைய
சட்டம் 29வது பிரிவு என்ன சொல்கிறது? கோயில் நிலங்கள், ஸ்வாமி விக்ரஹங்கள், நகைகள்,
கோயில்ல இருக்கும் பாத்திரங்கள் உட்பட மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆவணப்படுத்தப் படவேண்டும்
என்று சட்டம் சொல்கிறது. ஆனால், பதிவு செய்யப்பட்டிருக்கா? சட்டத்தை அவர்கள் மதிக்கவில்லை.
ஐந்து வருஷங்களுக்கு மேல கோயில் சொத்துக்களை லீஸுக்கு தரக்கூடாதுன்னு சட்டம் சொல்லுது.
ஆனா, அவனவன் நிரந்தரமா உட்கார்ந்திருக்கான். 34(ஏ) பிரிவுப்படி, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
சந்தை நிலவரப்படி கோயில் சொத்துக்களின் வாடகையை மறுநிர்ணயம் செய்யணும். ஆனா, வெள்ளைக்காரன்
காலத்துல போட்ட கட்டணமே இன்னும் இருக்கு. என்னோட போராட்டம் வெறும் ஊழலுக்கு எதிரான
போராட்டம் மட்டுமில்லை. பெரும்பான்மை சமுதாயத்தோட வழிபாட்டு உரிமையை மறுப்பதற்காக ஒரு
துறையா? ஏனென்று சொன்னால், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 38,606 கோயில்கள்
இருப்பதாகச் சொல்கிறார்கள். அதில், 8,500-9,000 கோயில்கள் இல்லை. திருவண்ணாமலையில இடும்பனார்
மற்றும் இளையனார் கோயில், வால்மீகி கோயில்ல கர்ப்பகிரகம் இருந்த இடத்துல கடைகள் இருக்கு.
அறநிலையத் துறை எடுத்துக்கற நிலையில அந்தக் கோயில் எப்படி இருந்தது? வழிபாடுகள் நடந்ததாலதானே
எடுத்தாங்க. குறைந்தபட்சம் அதை எடுத்த நிலையில எப்படி இருந்ததோ அப்படி அதை பராமரித்திருக்க
வேண்டாமா? இப்போ கையில் எடுத்துருக்கேன். மக்கள் மத்தியில விழிப்புணர்வு வர ஆரம்பிச்சிருக்கு.
ஆனா, எனக்குப் புரியுது. இது மிக நீண்ட போராட்டம். அதுக்கு தயாராகவே இருக்கேன்.

சமீப காலமாக இந்துத்துவவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மகாத்மா காந்தியை
சமூக வலைத்தளங்களில் அதிகமாக வசைபாடுகிறார்கள். வட இந்தியாவில் அவர் படத்தை வைத்துச்
சுடும் நிகழ்ச்சியை நடத்துகிறார்களே?

அதைச் செய்பவர்கள் ஹிந்து மகா சபாவைச் சேர்ந்தவர்கள். அது
ஆர்எஸ்எஸ் பரிவார் அமைப்புகளில் இல்லை. மேலும், அந்தச் செயல் தவறானது; ஏற்புடையதல்ல.
உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் யோகிஜி அரசாங்கம்தான் அவர்களை கைது செய்திருக்கு. இதுல
ஒரு வேடிக்கை என்னவென்றால், நாடு சுதந்திரம் பெறக்கூடாதுன்னு சொன்ன ஈவெராவின் வழியில
வந்த வைகோ கண்ணீர் விடறாராம். என்ன ஒரு போலித்தனம். இவங்க நோக்கம், காந்திஜியோட புகழைக்
காப்பாத்தறதில்லை. அதை வச்சி பாஜகவை ஒரு தட்டு தட்ட முடியாதான்னு ஒரு அல்ப புத்தி.
இந்த விஷயத்துல பாஜகவைக் குற்றம் சாட்டுவதில் உண்மையில்லை. அந்த செயல்பாட்டில் எனக்கு
உடன்பாடில்லை.

ஹிந்து வாக்கு வங்கி இன்னும் இருக்கிறதா?

ஹிந்து வாக்குகளை விட ஹிந்துத்துவ வாக்குகள் பாஜகவுக்கு வரணும்னு
சொல்றேன். 1980களில் சிவகங்கைல அரண்மனைக்கு எதிரே ஒரு சின்ன பிள்ளையார் கோயில் இருக்கு.
அதை நெடுஞ்சாலைத் துறை இடிக்க வந்தாங்க. அதை எதிர்த்து நான் ஆர்ப்பாட்டம் நடத்தினேன்.
அப்போ, என்னிடம் பேச வந்த தாசில்தார், “இதோ பாருங்க. என் பாக்கெட்டுல பிள்ளையார்பட்டி
பிள்ளையார் போட்டோ வச்சிருக்கேன். எனக்கும் சமய உணர்வு இருக்கு” என்றார். ஆனால், சமூக
உணர்வு இருந்ததா? கோயிலுக்குப் போனேன், வழிபட்டேன், திருநீறு வாங்கினேன் என்பதல்ல.
ஹிந்து என்ற சமூக உணர்வு வேண்டும். அதனாலதான், என் சமூக வலைத்தளங்களில் வெறுமென ஹிந்து
என்று நான் எழுதுவதில்லை. ஹிந்து உணர்வாளர்கள் என்றே பதிவிடுகிறேன். அனுமனைப் பற்றிய
ஸ்லோகத்தில் ‘அஜாட்யம்’ வேண்டும் என்பார்கள். அதாவது ஜடத்தன்மை அற்றது. அந்த ஜடத்தன்மை
போனால் நம்மை ஆதரிப்பார்கள்.

தேர்தலில் தமிழக பா.ஜ.க.வின் பிரசாரம் என்னவாக இருக்கும்?

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களைப் பிரசாரம் செய்வோம். கழிவறைத்
திட்டம், சமையல் எரிவாயுத் திட்டம், பிரதமரின் வீட்டுவசதித் திட்டம், விவசாயிகளுக்குப்
பயிர் காப்பீட்டுத் திட்டம், முத்ரா கடன் அல்லது பல்வேறு காப்பீட்டுத் திட்டங்களால்
பயன்பெற்றவர்களின் பட்டியல் சட்டமன்ற தொகுதி வாரியாக எடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பயனாளிகளின்
வீடுகளுக்குச் சென்று, “இந்த மாதிரி திட்டங்கள் தொடர வேண்டுமானால், மோடி நிச்சயம் பிரதமராக
வேண்டும்” என்று கேட்போம்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் பிரிவினைவாத சக்திகள் தலை தூக்கியுள்ளனவே?

இது மூலமா, கோல் எடுத்தாத்தான் குரங்காடும்னு தெரியுதா? அதாவது,
அவர்களை ஒடுக்க ஜெயலலிதா கடைப்பிடித்த அணுகுமுறையை இப்போதும் கடைப்பிடித்தால், அந்தச்
சக்திகள் ஒடுங்கும்.

மோடி தமிழகத்துக்கு எதிரானவர் என்கிறார்களே?

ஒரு மாற்றுக்கட்சி நண்பர் என்னைத் தேடி வந்தார். “ஏங்க, ஒடிஸாவுல
நீங்க ஒரு எம்.பி. தான். ஆனா, உள்ளாட்சித் தேர்தலில் 36 சதவீத வாக்குகள் வாங்கியிருக்கீங்க.
மேற்கு வங்கத்துல பிரதான கட்சியா வந்துருக்கீங்க. அசாம்ல 4 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு
ஆட்சியையே பிடிச்சீங்க. தமிழ்நாட்டுல அப்படியொரு சூழ்நிலை இருக்கான்னா, இருக்கு. நீங்க
நெடுவாசல் போய் பாருங்க” என்றார். நானும் நெடுவாசல் போனேன். ஊரே திரண்டு வரவேற்றது.
அங்க இருந்து 5 கிமீ தொலவுல வடகாட்டுல 30 பேர் கொண்ட நாம் தமிழர், மே 17 கும்பல் மட்டும்
எனக்கு எதிரா கொடி பிடித்து நின்னாங்க. ஆகவே, மோடி இருந்தால் தங்களுக்குப் பிழைப்பு
போய்விடுமென்று திமுகவின் கொள்ளைக்காரக் கும்பல், மற்ற பிரிவினைவாத சக்திகள்தான் மோடியைத்
தமிழகத்துக்கு எதிரானவாக சித்திரிக்கிறார்கள். அதை மக்கள் நம்ப மாட்டார்கள். 

Posted on Leave a comment

புல்வாமா தாக்குதல் | கேப்டன் எஸ்.பி. குட்டி


கத்தி கூர்மையானதாக மட்டும் இருந்தால் போதாது. அதைப் பயன்படுத்தத்
தெரிந்திருக்கவேண்டும். துப்பாக்கி சிறந்ததாக இருந்தால் மட்டும் போதாது. அதைக் கையாளத்
தெரிந்திருக்கவேண்டும். ஆயுதங்கள் சிறந்தவையாக மட்டும் இருந்தால் போதாது. அவற்றைப்
பயன்படுத்தும் மனத்துணிவும் வீரமும் வேண்டும். இந்த வீரமும் மனத்துணிவும் வருவதற்கு
அடிப்படைத் தேவையான தேசபக்தியும் கொள்கைப் பிடிப்பும் இருக்கவேண்டும். எல்லாவற்றிற்கும்
மேலாக வழிநடத்தும் தலைவர்களுக்குக் கூர்மையான ராணுவ அறிவு வேண்டும்.

பாரதப்போரில் அர்ஜுனன் மகாவீரன். ஆனால் போர்த் தந்திரம் அறியாதவன்.
தர்ம புத்திரன் மகா அறிவாளி. ஆனால் தினசரி உலக வாழ்வுக்குத் தகுதியில்லாதவன். எல்லோரிலும்
சிறந்தவனாக பகவான் ஸ்ரீகிருஷ்ணன் இருந்ததால் மகாபாரதப் போரில் பாண்டவர்களுக்கு வெற்றி
வந்து சேர்ந்தது. அஹிம்சை என்பது ஒரு நாட்டின் உலக வாழ்வுக்குச் செல்லுபடியாகாது. இந்த
உலக வாழ்வில் வெற்றிபெற வேண்டுமென்று முடிவெடுத்துவிட்ட பிறகு அதர்மத்தை அழித்தே தீரவேண்டும்
என்பது கண்ணனின் வாக்கு.

பிப்ரவரி 14ம் தேதி, புல்வாமாவில் 2547 சி.ஆர்.பி.எஃப் படைவீரர்கள்
78 பேருந்துகளில் ஜம்முவிலிருந்து புறப்பட்டு ஸ்ரீநகருக்குப் போகும் வழியில் அவந்திப்புரா
என்னுமிடத்தில் வைத்துத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு பேருந்தில் பயணம் செய்த
40 பேரும் ஒட்டுமொத்தமாகப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இஸ்லாமியத் தீவிரவாதிகள்
பாகிஸ்தானின் ஏவலால் இந்தியப் படைவீரர்களை ஒரே இடத்தில் 40 பேரைப் படுகொலை செய்து வெற்றி
கண்டிருக்கிறார்கள்.


தவறு எங்கே நடந்துள்ளது? வீரம் செறிந்த நம் வீர்களின் தவறா?
சரியாகத் திட்டமிடத் தெரியாத நம் தளபதிகளின் தவறா? விவேகமே இல்லாத அரசியல்வாதிகளின்
தவறா?

வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருக்கின்ற ஒரு நாட்டிலுள்ள
படை வீரன், தளபதிகள், தலைவர்கள் மற்றும் ஆன்மிகவாதிகள் ஆகிய அனைவரின் சிந்தனையும் ஒரே
குறிக்கோளை நோக்கி முனைப்புடன் செல்வதாக இருக்கவேண்டும்.

“வ்யவஸாயாத்மிகா புத்தி ஏஹேஹ குரு நந்தன
பஹுஷாகா ஹியனந்தாச்ச புத்ததயோ அவ்வியவஸாயினாம்” (கீதை
2-41)
என்பது கீதையின் வாக்கு.

தனி நபராக இருந்தாலும் ஒட்டுமொத்த நாடாக இருந்தாலும் ஒரே
சிந்தனையில்லாமல், சிந்தனை சிதறடையுமானால் வெற்றி பெறமுடியாது.
எதிரிகளைக் கொன்றுவிடு என்கிறது இஸ்லாம். மாற்று மதத்தினரை
மதம் மாற்றிவிடு என்கிறது கிறிஸ்தவம். சுயமாகக் கொள்கை எதுவுமே இல்லாமல் எல்லோருக்கும்
நண்பனாக இரு என்று இந்துமதம் சொல்வதாக இன்றுள்ள விபரமில்லாத சில ஆச்சார்யார்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
இது, அன்று பிறந்த ஆட்டுக்குட்டியை ரத்த வெறி பிடித்த ஓநாய், நாய், நரிகளுக்கு மத்தியில்
விட்டுவிடுவது போன்றதுதான்.

ஆயிரம் ஆண்டுகள் அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியா 1947ல் சுதந்திரம்
பெற்றபோது முதல் பிரதமராக வந்தவர் ஜவஹர்லால் நேரு. ‘இந்தியாவை இனிமேல் நீங்கள்தான்
பாதுகாத்துக் கொள்ளவேண்டும்’ என்று சொல்லி அதற்காக ஒரு ராணுவ பாதுகாப்புக் கொள்கையை
வகுத்துக் கொடுத்தான் ஆங்கிலேயன். ஆனால் அந்தக் கொள்கைத் திட்டத்தைப் புறக்கணித்தார்
நேரு. இந்தியாவைப் பாதுகாத்துக்கொள்ள இங்குள்ள போலிஸ்காரர்கள் மட்டுமே போதும், பெரிய
ராணுவமோ அதற்கான ராணுவக் கொள்கைகளோ தேவையில்லை என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.

யத்யத் ஆச்சரதி ச்ரேஷ்ட; தத்தத் ஏவ இதரோ ஜன (கீதை 3-24) என்பது
கீதை வாக்கு. தலைவர்கள் எதைச் செய்கிறார்களோ அதையே மற்றவர்களும் பின்பற்றுவார்கள் என்பதே
இதன் பொருள். அன்று இந்தியாவின் தலைமைப் பொறுப்பிலிருந்த ஜவஹர்லால் நேரு எடுத்த முடிவு
அவர் வாழ்ந்திருந்த 1964 வரையிலும், அதன்பிறகு காங்கிரஸ் ஆட்சியாளர்கள் ஆட்சி செய்த
அத்தனை காலம் வரையிலும் தொடர்ந்தது. இந்தியாவின் இராணுவமும், கடற்படையும் விமானப்படையும்
போலிஸும்கூட தேவையான அளவு பராமரிக்கப்படாமல் பின்னடைவைச் சந்தித்தன.

நேருவின் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்புக்குத் தேவையான படைக்கலன்கள்
வாங்கவேண்டிய வேண்டுகோள் பிரதமர் அலுவலகத்திற்கு வரும்போதெல்லாம் பிரதமரின் மனதை அறிந்துகொண்ட
உயர் அதிகாரிகள் பாதுகாப்புப் படையினரின் வேண்டுகோள்களை மூடி மறைத்தனர். இதுபோன்ற உண்மைகளையெல்லாம்
ராணுவ வரலாற்றாய்வாளர்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள். நேருவின் பலவீனமான பாதுகாப்புக்
கொள்கையின் பலனை இந்தியா 1962ல் சீன தாக்குதலின்போது அனுபவித்தது.

வல்லபாய் பட்டேல் ஆலோசனையை நேரு புறந்தள்ளியதால் திபெத் என்ற
தனி சுதந்திர நாடு சீனாவின் இரும்புப் பிடிக்குள் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நிற்கின்றது.
திபெத் சீனாவிடம் மாட்டிக்கொண்டதால் இந்தியாவின் வட எல்லை முழுவதும் சீனாவின் ஆதிக்கம்
பல மடங்கு பெருகி இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது.
ராணுவ வட்டாரத்தில் ஒரு பழமொழி உண்டு. ‘சண்டை என்று வந்துவிட்டால்
முதல் அடி உன்னுடையதாக இருக்க வேண்டும், அந்த முதல் அடியும் எதிரிக்கு மரண அடியாக இருக்க
வேண்டும்.’ இதையே கண்ணன் மகாபாரதப் போரில் செயல்படுத்திக் காட்டினான்.

சுதந்திர இந்தியாவை ஆண்ட தலைவர்களுக்கு ஆசை இருக்கின்ற அளவுக்கு
அறிவு கிடையாது. 1948ல் காஷ்மீரைக் காக்கும் போர் நடந்துகெண்டிருந்தபோது பாகிஸ்தான்
பிடித்திருந்த காஷ்மீரத்தின் மூன்றில் இரண்டு பகுதியை இந்தியா மீட்டுவிட்ட நிலையில்
நேரு பிரச்சினையை ஜ.நா. சபைக்குக் கொண்டு சென்று, போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்.

‘இன்னும் மூன்று வாரங்கள் மட்டும் அவகாசம் கொடுங்கள். அதற்குள்
பாகிஸ்தான் வசம் எஞ்சியிருக்கும் காஷ்மீரப் பகுதியையும் நாம் மீட்டெடுத்துவிடலாம்.
அதன் பிறகு நாம் ஐக்கிய நாட்டுச் சபைக்குப் போக வேண்டிய அவசியமே இருக்காது’ என்று நேருவிடம்
கெஞ்சினார் அன்று தலைசிறந்த தளபதியாக இருந்த ஜெனரல் கரியப்பா. ஆனால் நாட்டின் பாதுகாப்பைவிட
உலக அளவிலான தனது அரசியல் பார்வையே முக்கியம் என்று நினைத்துவிட்ட நேரு, கரியாப்பாவின்
வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் விளைவு, இன்றுவரையிலும் காஷ்மீர மாநிலத்தில்
ஆயிரம் ஆயிரமாக உயிர்களை இழந்து கொண்டிருக்கிறோம். கோடிகோடியாகச் செல்வத்தை இழந்து
கொண்டிருக்கிறோம். கணக்கிட முடியாத அளவுக்கு நாட்டின் முன்னேற்றம் தடைப்பட்டு நிற்கிறது.
உலக நாடுகளின் மத்தியில் இந்தியா ஒரு கோழை என்று பெயர் வாங்கிக் கொண்டிருக்கிறது.
சீனா அணுகுண்டு வெடிப்பதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே
அணுகுண்டு வெடித்துப் பரிசோதனை செய்யும் தகுதியைப் பெற்றுவிட்டிருந்த இந்தியாவுக்கு
அதற்கான அனுமதியை நேருவின் மகள் இந்திரா கொடுக்க மறுத்ததால், அந்த நேரத்தில் அணுகுண்டு
பரிசோதனை செய்த சீனா உலக அணு வல்லரசு நாடுகளின் ஒரு அங்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.
கால தாமதமாக இந்திய விஞ்ஞானிகளுக்கு அந்த அனுமதி கிடைத்ததால் இன்று வரையிலும் அணு வல்லரசு
நாடுகளின் கூட்டணியில் சீனாவைப் போல் இணைய முடியாமல் இந்தியா மிகப்பெரிய இழப்புகளைச்
சந்தித்து வருகிறது.

‘ஸமத்துவம் யோஹ உச்யதே’ என்கிறது கீதை. நாட்டின் பாதுகாப்பு
உள்ளிட்ட எல்லா அம்சத்திலும் இந்தச் சமத்துவத்தைக் கட்டிக்காக்கின்ற கடமை நாட்டின்
தலைவருக்கு மட்டுமே உண்டு. நாட்டுத் தலைமை இந்தச் சமத்துவத்தைக் கைவிடுமானால், நாட்டின்
பாதுகாப்பு படுபாதாளத்துக்குச் சென்றுவிடும்.

காந்தி போதித்த சிந்தனையை ஆளாளுக்கு ஏற்றபடி புரிந்துகொண்டதால்
இந்தியர்கள் கோழைகளாகிப் போனார்கள். இதற்கு சற்குண விக்ருதி என்று பெயர். அதாவது நல்லதை
நினைத்துக்கொண்டு தவறாகச் செயல்படுவது என்று பொருள். அஹிம்சை என்று சொல்லிக்கொண்டு
அதர்மத்தை வளர்த்து விட்டுக்கொண்டிருக்கிறோம். விளைவு, இந்தியா இன்று உலகநாடுகள் மத்தியில்
தலைகுனிந்து நிற்கிறது.

நேரு தலைவராக இருந்து காங்கிரஸ்காரர்களுக்குப் போதித்த தவறான
பாடம் அனைத்து காங்கிரஸ் ஆட்சியிலும் தொடர்ந்தது. சீனாவின் ஆயுத வளர்ச்சியையும் பாகிஸ்தானின்
கூட்டணியையும் சரியாகக் கணித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறவர்கள், இரு நாடுகளையும்
எதிர்கொள்வதற்குத் தேவையான அளவு நமது விமானப்படையை வலிமைப்படுத்த வேண்டுகோள் விடுத்தனர்.
இத்தாலிய சோனியாவின் அதிகாரத்தின் கீழ் செயல்பட்டுவந்த பிரதமர் மன்மோகன் சிங், பிரான்ஸிலிருந்து
ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கு பேச்சு வார்த்தையைத் துவங்கினார். இந்திய விமானப் படையின்
அவசர வேண்டுகோள் எதுவும் மன்மோகன் சிங் காதில் விழவேயில்லை. இதற்கிடையில் இந்தியாவின்
எல்லையோரப் பகுதியான டோக்லாமில் சீனா எல்லை தாண்டும் முயற்சியில் இறங்கியது.
சீனா திபெத் முழுவதும் இந்திய எல்லைகளைக் குறிவைத்து, இந்திய
எல்லை வரையிலும் அனைத்து ராணுவத் தளவாடங்களையும் எடுத்துச் செல்லுகின்ற வகையில், நவீன
பலம் வாய்ந்த விமானத் தளங்களைக் கட்டி முடித்துவிட்டது. ஆனால் நேரு வம்சாவழியினரின்
ஆட்சியில் இன்றுகூட நமது ராணுவ வீரர்கள் சீனாவின் தாக்குதலை எதிர்கொள்ள எல்லைப் பகுதிக்குக்
கோவேறு கழுதைகளில்தான் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது.

சீனவிமானப் படையின் தாக்குதல்களை எதிர்கொள்ளத் தகுதியான விமானத்
தளங்கள் எதுவும் கட்டப்படாமல் இருந்த அவலநிலையைப் பார்த்துப் பதறிப்போன பிரதமர் நரேந்திரமோடி
ஆக்ராவிலிருந்து லக்னோ வரையிலுள்ள சிவில் போக்குவரத்திற்கான பெருவழிச் சாலையை போர்
விமானங்கள் ஏறி இறங்குவதற்குத் தகுதியானதாக அமைத்து வைத்திருக்கிறார். இந்த ஒரு உண்மையே,
கடந்த 70 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியாளர்கள் எப்படிப்பட்ட படுகேவலமான நிலையில் நமது
நாட்டின் பாதுகாப்பை வைத்திருந்தார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது.

மிகக்குறைந்த அளவு அடிப்படைத் தேவையான 45 ஸ்குவார்டன்களாக
இருந்த நமது போர் விமானங்கள் வேகமாக 30 ஸ்குவார்டன்களாகக் குறைந்துவிட்டது. இருப்பவற்றிலும்கூட
பெருமளவு MIG21 ரகப் போர் விமானங்கள். ஒவ்வொன்றாக விழுந்து உடைந்து கொண்டிருக்கின்ற
நிலையில் இன்னும் உடையாமலிருப்பவற்றை உடனடியாகத் தரையிறக்கி ஓய்வு கொடுக்க வேண்டுமென்று,
விமானப்படை, மன்மோகன் சிங்குக்குக் கொடுத்த மிகமிக அவசரமான வேண்டுகோளின் அடிப்படையில்தான்
ரஃபேல் விமான ஒப்பந்தத்தை காங்கிரஸ் ஆட்சி 2008ல் ஆரம்பித்தது.
இவ்வளவு அவசரத்துக்கிடையிலும் ஆபத்துக்கிடையிலும் ஆரம்பிக்கப்பட்ட
விமான பேரத்தை 2014 வரையிலும் ஜவ்வுபோல் இழுத்தடித்து, கடைசியில் எந்த முடிவுக்கும்
வராமலும் ஒரே ஒரு விமானத்தைக்கூட வாங்காமலும் ஆட்சியை விட்டுவிட்டுப் போய்விட்டனர்.

அவசரத்திலும் ஆதங்கத்திலுமிருந்த விமானப்படை அதிகாரிகள் புதிய
பிரதமர் நரேந்திரமோடியை அணுகினர். அவர்களது பதட்டத்தையும் நாடு எதிர்நோக்கியுள்ள ஆபத்தையும்
புரிந்துகொண்டு அனாவசியமாக காலதாமத்துக்கு காரமாயிருந்த பல பழைய சடங்குகளை ஒதுக்கித்
தள்ளிவிட்டு இன்டெர் கவர்ண்மென்டல் அக்ரிமென்ட் முறையில் (IGA) 36 ரஃபேல் விமானங்களை
மிக அவசரமாக சப்ளை செய்யச் சொல்லி பிரான்ஸ் அரசாங்கத்தோடு ஒப்பந்தம் போட்டார்.

இம்மாதிரியான IGA ஒப்பந்தம் காங்கிரஸ் அரசாங்கத்தால் கம்யூனிஸ்ட்
ரஷ்யாவோடு பலமுறை போடப்பட்டுள்ளது. மோடியால் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி புதிய
நவீன ஆயுதங்கள் பொருத்தப்பட்ட போர் விமானங்கள் 2019க்குள் இந்தியா வந்து சேர்ந்துவிடும்.
விமானப்படையின் தேவையையும் இந்தியா எதிர்நோக்கியிருக்கும்
ஆபத்தையும் பற்றிக் கொஞ்சம் கூடக் கவலைப்படாமல், எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் மோடியின்
மீது புகார் அளிப்பதன் மூலம், இந்த விமானங்கள் இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாதென்று
போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சியினர் முன் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு
எந்த ஆதாரங்களும் இல்லையென்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புச் சொன்னபிறகும், இத்தாலியின்
வாரிசுகள் பாதுகாப்புக்கு இந்த விமானங்கள் இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாதென்று தடுப்பதிலேயே
குறியாக இருக்கின்றனர்.

காஷ்மீரத்திற்குத் தனிச்சலுகை கொடுக்க வேண்டாம் என்றும்,
இப்படிப்பட்ட சலுகையால் அந்த மாநிலம் இந்தியாவிலிருந்து பிரிந்து செல்லும் ஆசையைத்தான்
வளர்த்துவிடும் என்றும் நேருவிடம் டாக்டர் அம்பேத்கர் மற்றும் பட்டேல் அவர்களும், பல
காங்கிரஸ் பெருந்தலைவர்களும் எவ்வளவோ எடுத்துச் சொல்லிய பிறகும் கொஞ்சமும் கேட்டுக்
கொள்ளாத நேரு, தனது நண்பரான ஷேக் அப்துல்லாவுக்குத் தான் தனிப்பட்ட முறையில் கொடுத்துவிட்ட
வாக்குறுதியை நிறைவேற்றுவதிலேயே குறியாக இருந்தார். இந்தத் தனிச்சலுகை காஷ்மீர மக்களைக்
கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாற்றி இந்தியாவுடன் முழுமையாக இணைத்துவிடுமென்று வாதிட்டார்
நேரு. காஷ்மீரிகள் இந்தியாவுடன் இணைவது நடப்பதற்குப் பதிலாக, பாகிஸ்தான் அவர்களை இந்தியாவுக்கு
எதிராகத் தூண்டிவிடுவதில் வெற்றி கண்டிருக்கிறது.

மத்தியில் இந்திராவும், ராஜிவும் ஆண்டுகொண்டிருந்தபோதே இருபது
லட்சம் காஷ்மீரப் பண்டிட்டுகளை இஸ்லாமியர்கள் பாகிஸ்தானின் துணையோடு ஜம்முவுக்கும்
டெல்லிக்கும் துரத்தி அடித்துவிட்டனர். காஷ்மீரில் தீவிரவாதம் படிப்படியாக வளர்ந்து
கொண்டிருந்தபோது மத்தியிலிருந்த காங்கிரஸ் ஆட்சி காஷ்மீர இஸ்லாமியர்களின் வாக்குகளைக்
குறிவைத்தார்களே தவிர, அங்கு வளர்ந்து வந்த தீவிரவாதத்தைத் தடுத்து நிறுத்தத் தவறிவிட்டனர்.

1971 வரையிலும் கிழக்குப் பாகிஸ்தானாக இருந்த பகுதியை பாங்களாதேஷ்
என்ற புது நாடாக உருவாக்கிக்கொடுத்தவர் இந்திரா. தனது நாட்டைத் துண்டாக்கிவிட்ட இந்தியாவை
பாகிஸ்தான் பழிவாங்க நினைப்பது இயற்கை. இதை இந்திய ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டு காஷ்மீரத்தைப்
பாதுகாத்திருக்கவேண்டும்.

ஆனால் எருமை மாட்டின் மீது பெய்கின்ற மழையைப் போல இந்திய
ஆட்சியாளர்கள் நாற்காலிகளைப் பிடிப்பதில் குறியாக இருந்தார்களே தவிர இந்திய ஒருமைப்பாட்டைக்
கட்டிக்காப்பது பற்றிக் கவலைப்படவே இல்லை. பாங்களாதேஷ் விடுதலையின்போது இந்திய ராணுவத்தால்
கைது செய்யப்பட்ட 93,000 பாகிஸ்தான் படையினரை இந்தியா பாதுகாத்து, சோறுபோட்டு, சம்பளமும்
கொடுத்துக் கைதிகளாக வைத்திருந்தது.
இவர்களின் விடுதலைக்காகப் போராடிய பாகிஸ்தானிய மக்களின் நிர்ப்பந்தத்தின்
காரணமாக சிம்லாவில் வைத்து பூட்டோவுக்கும் இந்திராவுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதில் இந்தியா வைக்கும் அத்தனை கட்டுப்பாடுகளுக்கும் பணிந்து போகவேண்டிய நிலையில்தான்
பாகிஸ்தான் இருந்தது.

காஷ்மீரப் பகுதிகளிலிருந்து பாகிஸ்தானை வெளியேற்றிவிடுவார்
இந்திரா என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தோம். இந்திரா அப்படிச் செய்திருந்தால் காஷ்மீரப்
பிரச்சனை அன்றோடு முடிவுக்கு வந்திருக்கும். ஆனால் கொடுமையிலும் கொடுமையாக, பாகிஸ்தானிய
ஆக்கிரமிப்பிலிருந்த பல ஆயிரம் சதுரகிலோமீட்டர் காஷ்மீரப் பகுதிகளை 1971 போரில் இந்திய
ராணுவம் மீட்டெடுத்திருந்த நிலையில், அவற்றையெல்லாம் இந்திரா பாகிஸ்தானுக்கே திருப்பிக்
கொடுத்தார்.

இப்படிப்பட்ட வகையில்தான் சுதந்திரத்திற்குப் பிறகு 70 ஆண்டுகாலமாக
நமது நாடு ஆட்சி செய்யப்பட்டது. மறுபடியும் அப்படிப்பட்ட தேசபக்தியில்லாத, கொள்கை இல்லாத,
வீரமில்லாத அன்னிய சக்திகளின் அடிவருடிகளிடம் ஆட்சி போகாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது
அனைத்து தேசபக்தர்களின் கடமை. சந்தர்ப்பத்தைத் தவறவிட்டுவிட்டு ஒப்பாரி வைத்துப் பலனில்லை.
சுய நலத்தைத் துறந்து தியாக உணர்வோடு நாம் செயல்பட்டால் தீவிரவாதிகளின் தாக்குதலிலிருந்து
நம்மைக் காத்துக்கொள்ளலாம்.