Posted on 1 Comment

இமயத்தின் விளிம்பில் – 2 (ஆதி கைலாஷ் யாத்திரை) | வித்யா சுப்ரமணியம்


பகுதி 2

குஞ்சி நோக்கி செல்லும்
வழியெங்கும் தேவதாரு மரங்களும் பைன் மரங்களும் தென்படுகின்றன. தவிர காற்றோடு ஏதோ ஒரு
நறுமணம் பரவுகிறது. வாசனை மரங்கள் பலவும் இங்கிருப்பதாக அறிந்தோம். தவிர இங்கு போஜ்பத்ரா
மரங்களும் அதிகம். இந்த மரத்தின் பட்டையில்தான் விநாயகர் பாரதம் எழுதினாராம். போஜ்பத்ரா
மரப்பட்டைகளை இங்கு விற்கிறார்கள். இது வீட்டில் இருப்பது நல்ல அதிர்வுகளைத் தரும்
என்றார்கள். அதில் ஏதேனும் படம் வரையலாமென்று நானும் கொஞ்சம் மரப்பட்டைகள் வாங்கிக்
கொண்டேன்.
நம் பயணத்தில் பல
இடங்களில் பாலங்களின் மூலம் நதியைக் கடந்து நேபாள பகுதியிலும் கூட பயணிக்கிறோம். புத்தியிலிருந்து
குஞ்சி செல்லும் பயணப்பாதையும் கடுமையாகவே இருக்கிறது. மலையின் விளிம்பில்தான் பயணம்
தொடர்கிறது. குதிரைகள் நம்மைப் பயமுறுத்துவது போல மிகவும் விளிம்பில்தான் செல்லும்.
கீழே பார்த்தால் தலைசுற்றும். குதிரை சற்று தடுமாறினாலும் நம்கதி அதோகதிதான். சிலநேரம்
குதிரைக்காரர் குதிரையைப் பிடித்துக் கொள்ளக்கூட மாட்டார். எனக்கோ இந்தி தெரியாது.
பயமாக இருக்கிறது என்று சொல்லத் தெரியாமல் டர்ர் டர்ர் என்பேன். அவர் சிரித்தபடி என்னிடம்
ஏதோ சொல்ல, எனக்குப் புரியவில்லை. ஹிந்தி தெரிந்த ஒருவர் அதை மொழி பெயர்த்தார். குதிரை
மீது நம்பிக்கை வைக்கச் சொல்கிறார். அது பத்திரமாகவே அழைத்துச் செல்லுமாம். உண்மைதான்
மூன்றாம் நாள் குதிரைப் பயணம் பழகி விட்டது.
தினமும் காலையில்
ஓட்ஸ் கஞ்சி, ரொட்டி போன்ற எளிய சிற்றுண்டி நமக்கு அளிக்கப்படும். பின்னர் பயணத்தின்
நடுவழியில்தான் ஏதேனும் ஓரிடத்தில் கிராமவாசிகளிடம் நமக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.
சிறிய தகரம் வேய்ந்த உணவகம் இருக்கும். இரண்டு மூன்று மர பெஞ்சுகளும், நீண்ட மேசைகளும்
இருக்கும். அங்கே யாரேனும் இருவர் நமக்கு சிரித்த முகத்தோடு உணவு தருவார்கள். சிலநேரம்
இளம் பெண்களும் சிறுவர்களும் கூட உணவளிப்பார்கள்..
படிக்கிற வயதில்
அவர்கள் இவ்வேலையைச் செய்கிறார்களே என்று நினைத்தபோது உடன் வந்தவர் அவர்களிடம் பள்ளிக்கு
செல்ல மாட்டீர்களா என்று கேட்டார். இன்று பள்ளி விடுமுறை என்றான் அச்சிறுவன். ஒரு கால்
ஊனமான மாற்றுத் திறனாளியாகவும் இருந்தான். பள்ளி எங்கே இருக்கிறது என்று கேட்க அவன்
சொன்ன பதில் வியக்க வைத்தது. டார்ச்சுலா வரை அவர்கள் தினமும் இதே மலைப்பாதையில் நடந்து
பள்ளிக்குச் செல்கிறார்கள் என்றதும் எனக்கு மயக்கமே வந்தது. கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு
போகவர நாற்பது கி.மீ தூரம். அப்படியென்றால் எப்போது கிளம்புவார்கள், எப்போது பள்ளி
முடிந்து வருவார்கள் என்று யோசித்தால் தலை சுற்றியது. அதுவும் அந்தப் பையன் கால் வேறு
சரியில்லாதவன். ஆனால் அவர்கள் இதுகுறித்து அலட்டிக் கொள்ளவேயில்லை. எங்களுக்கு மலைப்பாதையில்
நடந்து பழகிவிட்டது. என்ன… நிலச்சரிவு ஏதும் ஏற்படாத வரை கவலையில்லை என்று சர்வசாதாரணமாக
அவன் சொன்னதும் எனக்கு சாப்பிடக்கூட முடியவில்லை. உள்ளே குறையொன்றுமில்லை என்று எம்.எஸ்.ஸின்.
குரல் கேட்டது. வாழ்கிற இடத்திற்குத் தேவையானவாறு அவர்களது உடலமைப்பும், உள்ளுறுப்புகளும்
பலமாகவே இருக்கும் போலும். இதுதான் வாழ்க்கை என்றாகி விட்டால் அதை எதிர்கொள்வதற்கான
சக்தியும் தானாகக் கிடைத்து விடுமோ?
சியாலேக்கிலிருந்து
குஞ்சி செல்லும் கடுமையான வழியில் கர்பியாங் என்ற கிராமம் இருக்கிறது. கடுமையான மலையேற்றத்தில்
இந்த கிராமத்தைக் கடக்கிறோம். வீடுகள் வரிசையாக இருக்கின்றன. பல வீடுகள் இரண்டடுக்கு
மாடிகளோடு கூட இருக்கின்றன. வேலைப்பாட்டுடன் கூடிய அழகிய கதவுகள், ஜன்னல்கள் என்று
பார்க்கவே அழகாக இருக்கிறது. மிஞ்சிப்போனால் மொத்த மக்கள்தொகையே அறுநூறு பேர்களுக்குள்தான்.
உருளைக்கிழங்கு, வெங்காயம், கோஸ் போன்றவற்றைப் பயிரிடுகிறார்கள். ஆண்கள் குதிரைக்காரர்களாகவும்
இருந்து யாத்ரிகர்களை அழைத்துச் செல்கிறார்கள். பெண்கள் கம்பளி ஆடைகள் பின்னி விற்கிறார்கள்.
மக்கள்தொகை குறைவாக இருந்தாலும் இங்கு படித்தவர்களின் எண்ணிக்கை தொண்ணூறு சதம் என்கிறது
சென்சஸ் கணக்கு. கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. வீட்டின் மாடிகளுக்கு செல்ல, தடித்த மூங்கில்
மரங்களைக் குடைந்து அதனுள் படிக்கட்டுகள் போல செய்து ஏணி மாதிரி சார்த்தி வைத்திருக்கிறார்கள்.
குழந்தைகள் ரோஜாப்பூ போல சிவந்த கன்னங்களோடு, கம்பளி குல்லாவும், காலில் கிழிந்த ஷூவும்
அணிந்து அழகிய சிரிப்புடன் நம்மைப் பார்க்கிறார்கள். குழந்தைகளைக்கூட இரண்டு மூன்று
வயதிலேயே மலைப்பாதையில் நடந்து செல்ல பழக்கி விடுவார்களாம்.
ஆனால் இந்த கிராமத்தை
மூழ்கும் கிராமம் என்கிறார்கள். ஏனெனில் பெருகி ஓடும் காளி நதி இந்த கிராமத்தின் நிலப்பரப்பை
அரித்துச் செல்வதாகவும், ஆண்டுக்கு ஒன்றிரண்டு சென்டிமீட்டர் இந்த கிராமம் பூமிக்குள்
அழுந்தி வருவதாகவும் கூறுகிறார்கள். எப்போது வேண்டுமானாலும் ஏற்படும் நிலச்சரிவு, எப்போதும்
பெய்யும் மழை, மண் அரிப்பு என்ற ஆபத்தான சூழலில் வறுமை இவர்களை அன்போடு தழுவிக் கொண்டிருக்கிறது.
அத்யாவசியப் பொருட்களுக்காக கர்பியாங், குட்டி, குஞ்சி, நாபிடாங் போன்ற ஏழு எல்லையோர
கிராமங்கள் நேபாளம் மூலம் வரும் சீன உணவுப் பொருட்களைத்தான் நம்பியிருக்கின்றன. அல்லது
மலைப்பாதையில் ஐம்பது கி.மீ தூரம் நடந்து சென்று டார்ச்சுலாவிலிருந்து வாங்கி வரவேண்டும்.
அதைவிட நேபாளம் சென்று சீனப் பொருட்களை வாங்கி வருவது அத்தனை கடினமல்ல என்று நினைக்கிறார்கள்.
மூன்று நாடுகளின் எல்லையோரத்தில் இருப்பதால் சொந்த நாட்டிலேயே அனாதைகள் போல தாங்கள்
வாழ்ந்து வருவதாக இங்குள்ள கிராமத்து முதியவர் ஒருவர் வருத்தப்படுகிறார். இந்திய அரசு
தங்களுக்கு ரேஷன் பொருட்களை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
இத்தனைக்கும் கர்பியாங்
சந்தை மிகவும் புகழ் பெற்றது. மிகச்சிறந்த முறையில் இவர்கள் வியாபராம் செய்து வாழ்ந்திருக்கிறார்கள்.
இவர்களது பொருட்களை நேபாளம் சீனா போன்ற நாட்டினர் வாங்கிச் சென்றிருக்கிறார்கள்.
1962ல் நடந்த இந்திய சீனப் போருக்குப் பிறகு இந்நிலை தலைகீழாக மாறி விட்டது. இத்தனை
கஷ்டத்திலும் வெகுதூரம் சென்று இங்குள்ள குழந்தைகள் கல்வி கற்பதை நிறுத்தவில்லையென்பது
எத்தனை பெருமையான விஷயம்! எல்லா வசதிகள் இருந்தும்கூட நாம் சுற்றி இருப்பவர்களையும்,
அரசையும் எத்தனை குறைகள் கூறுகிறோம்!
குஞ்சியை அடைவதற்கு
முன்னமே ஓரிடத்திலிருந்து ஆதிகயிலாயத்தின் சிகரம் தெரியும். அதைப்பார்த்தபடி, நாங்கள்
அனைவரும் அரைமணி ஓய்வெடுத்துக் கொண்டோம். பிறகு ஒருவழியாக் குஞ்சி முகாமை அடைந்தோம்.
எல்லைக்காவல் படையினர் தேநீர் கொடுத்து வரவேற்றார்கள். அரைவட்டமாக ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகளை
கவிழ்த்து தங்குமிடங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. உள்ளே தரை முழுவதும் மெத்தைகளும் தலையணைகளும்
ரஜாய்களும் இருந்தன. தங்குமிடத்திற்கு அருகிலேயே உணவுக் கூடம். அங்கேயே பிரார்த்தனைகள்
செய்யவும் வசதி உண்டு.
குஞ்சி முகாமிலிருந்து
இரவு பகல் எந்நேரமும் அன்னபூர்ணா மலைத் தொடரை ரசிக்கலாம். சுற்றிலும் பசுமை போர்த்திய
மலைகள் சூழ, குஞ்சி முகாம் இந்த யாத்திரையில் ஒரு முக்கிய இடம். ராணுவ முகாமும் கூட
அது. தவிர, குஞ்சியிலிருந்து இரண்டு பயணப் பாதைகள் பிரிகின்றன. ஆங்கிலத்தில் Y என்று
எழுதினால் அதில் இடப்பக்கம் மேல்நோக்கி செல்வது ஆதிகயிலாயம் நோக்கியும், வலப்புறம்
மேல்நோக்கி செல்வது ஓம் பர்வதம் அமைந்திருக்கும் நாபிடாங் நோக்கியும் செல்கிறது.
இந்திய வழிமூலம்
கயிலாயம் செல்பவர்கள் நடுவழியிலேயே தென்படும் ஆதிகயிலாயக் காட்சியை தரிசித்துவிட்டு
குஞ்சியிலிருந்து காலாபானி வழியாக நாபிடாங் சென்று அங்கிருந்து லிப்புலேக் கணவாய் வழியாக
இந்திய எல்லை கடந்து சீன ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தின் தக்ளகோட் வழியே கயிலை மானசரோவர்
செல்வார்கள். உத்தர்கான்ட் மாநில அரசு மூலம் ஓம் பர்வதம் செல்லும் நமக்கு எல்லை தாண்ட
அனுமதியில்லை.
நாங்கள் குஞ்சியிலிருந்து
காலாபானி நோக்கி சென்றோம். காலாபானி (கருப்பு நதி) என்னும் இடத்தில்தான் நாம் வழியெங்கும்
கண்ட ஆக்ரோஷமான, பெயருக்கேற்றாற்போல் பிரவாகமாக ஓடும் காளி நதி உற்பத்தியாகிறது. காவேரி
நதி போலதான் காளி நதியும் ஒரு சிறிய தொட்டி போன்ற இடத்தில் உற்பத்தியாகிறது. அந்த இடத்தையே
ஒரு கோவிலாகக் கட்டியிருக்கிறார்கள். கோவிலுக்கு வெளியே இரு பெரிய தொட்டி போன்ற இடத்திலும்
காளி நதி நிரம்பியிருக்கிறது.
இந்தக் கோவிலின்
எதிர்ப்புறமிருக்கும் ஓங்கி உயர்ந்ததொரு மலைத்தொடரின் மேற்புறம் சிறிய வட்டவடிவ துவாரம்
தெரிகிறது. இதை வியாச குகை என்றார்கள். அதனுள் கொடி மரம் போல சிறிய குச்சி தெரிகிறது.
இந்த குகையில்தான் வியாசர் சொல்ல விநாயகர் மகாபாரதம் எழுதியாக நம்பப்படுகிறது. யாருமே
அந்த இடத்திற்கு செல்லமுடியாது. ஆனால் ராணுவ வீரர் ஒருவர் ஹெலிகாப்டர் உதவியோடு அதன்
மேற்புறம் சென்று, நூலேணியின் உதவியோடு அந்த குகைக்கு சென்றதாகவும் அவர்தான் அங்கே
அடையாளமாக ஒரு கழியை நட்டு வைத்திருப்பதாகவும் ஒரு இராணுவ வீரர் தெரிவித்தார்.
காலாபானியில் நாங்கள்
தங்கியிருந்த முகாமிலிருந்து சூர்யோதயத்தில் தகதகவென இரண்டு மலைச் சிகரங்களைக் கண்டோம்.
விண்ணில் இரண்டு பாம்புகள் படமெடுத்தாற்போல் தெரியும் அம்மலைகளை நாக பர்வதங்கள் என்றே
அழைக்கிறார்கள். ஒன்று நாக் பரவத். மற்றொன்று நாகினி. வியக்க வைக்கிறது இதன் அழகு.
காலாபானியில் வெந்நீர் ஊற்றுகளும் உள்ளன.
காலாபானியிலிருந்து
நாபிடாங் நோக்கி செல்லும் வழி சற்று சமவெளிதான் என்றாலும், வெயில் கொளுத்தியது. பாதை
முழுவதும் சிறிதும் பெரிதுமாகப் பாறைக் கற்கள் குவிந்திருந்தன. இவற்றின் மீதுதான் குதிரைகள்
செல்ல வேண்டும்.
சரி, நாபிடாங் என்ற
பெயருக்கு என்ன அர்த்தம்? இங்குள்ள ஒரு மலையின் பனிபடிந்த வடிவம் பார்வதி தேவியின்
தொப்புளாக கருதப்படுகிறது. இதன் காரணமாகவே நாபிடாங் எனப்படுகிறது. கடல்மட்டத்திலிருந்து
11,000 அடி உயரம். இரண்டு மூன்று அடுக்கு உடை, ஜெர்க்கின் என அனைத்தையும் தாண்டி உடல்
குளிரில் விரைக்கிறது..
எங்கள் முகாமிற்கு
எதிர்ப்புறமாகத்தான் ஓம் பர்வதம் இருந்தது. சரிந்தவாக்கில் பலகை மாதிரி இருக்கும் ஒரு
மலைமீது இயற்கையாகவே தேவநாகரி வடிவில் ஓம் என்று எழுதியது போல பனி படர்ந்திருக்கிறது.
நமக்கு இடப்புறமாக இரண்டு மிகச்சிறிய கோவில்களும் இருக்கின்றன.
சற்று தூரத்தில்
உடைந்து கிடந்த ஒரு சிறிய விமானம் அல்லது ஹெலிகாப்டர் எங்கள் கண்ணில்பட, அதன் அருகே
சென்றோம். எண்பதுகளின் இறுதியில் இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று இந்த இடத்தில் விபத்துக்குள்ளான
போது இங்கு சுற்றிலும் பனி மூடியிருந்திருக்கிறது. அதிலிருந்த மூன்று இராணுவ வீரர்கள்
எந்த உதவியும் கிடைக்காத நிலையில் ஈசனைத் தஞ்சமடைந்து பிரார்த்தித்திருக்கிறார்கள்.
பின்னர் உயிர் பிழைத்திருக்கிறார்கள். அது ஈசனின் அருளால் என எண்ணியவர்கள் அதற்கு நன்றி
தெரிவிக்கும் விதமாக இங்கே சிவனுக்கு இரண்டு சிறிய கோவில்களைக் கட்டியுள்ளார்கள். அதனுள்
இருக்கும் சிவன் அத்தனை அழகு. மனதைக் கொள்ளை கொள்கிறார். ஒருபக்கம் இக்கோவில்கள், அதற்கு
எதிரே பார்வதியின் தொப்புளாக கருதப்படும் நாபிடாங் சிகரம், மறுபக்கம் ஓம் பர்வதம் என்று
இந்த இடத்தின் அழகும், அமைதியும், தெய்வீகமும் சொல்லி மாளாது. இந்திய எல்லைப் பகுதி
என்பதால் இங்கு இராணுவ கெடுபிடிகள் அதிகம் என்றாலும் யாத்ரிகர்களிடம் மிகவும் அன்பாக
பேசுகிறார்கள்.
அடுத்த நாள் மீண்டும்
குஞ்சி நோக்கிப் பயணம். அதற்கு மறுநாள் எங்கள் பயணம் ஆதி கயிலாயம் நோக்கி. குஞ்சியிலிருந்து
இரண்டாவது பாதை மூலம் நாங்கள் சென்றது குட்டி என்ற இடத்தை நோக்கி. பாண்டவர்களின் தாயான
குந்திதேவி பிறந்த இடம் இது. குந்தி என்ற பெயர் நாளடைவில் மருவி குட்டி என்றாகிவிட்டது.
மிகவும் கடுமையாக இருந்தது பயணம். பல நதிகளைக் கடந்து குறுகிய பாதையில் செல்ல வேண்டியிருந்தது.
நதிகளைக் கடக்க சில இடங்களில் வெறும் மர ஏணி மாதிரி குறுக்கே வைக்கப்பட்டிருக்கிறது.
நாம் நடந்துதான் இந்த இடங்களைக் கடக்க முடியும். உதவியாளர் வெகு பத்திரமாக நம் கரம்பற்றி
அழைத்துச் செல்வதால் கவலையுமில்லை,
எங்கேயோ இமயத்தில்
ஒரு மூலையில் இருந்தாலும் குட்டியில் உள்ள கிராம வீடுகள் வியக்க வைத்தன. இரண்டடுக்கு
மாடி வீடுகள் கூட இருந்தன. அவற்றின், கதவு மற்றும் ஜன்னல்களின் வேலைப்பாடுகள் கலையம்சத்துடன்
இருந்தன. குந்தி பிறந்த இடத்தில் தாங்களும் பிறந்திருப்பதில் அந்த கிராமவாசிகளுக்கு
அத்தனை பெருமிதம். நதிக்கு இக்கரையிலும் அக்கரையிலுமாக இரண்டு இடங்களில் எங்களுக்கான
தங்குமிடங்கள் அமைந்திருந்ததால் நாங்கள் இங்குமங்கும் நடமாடிக் கொண்டிருந்தோம். மாலை
நேரம் அங்கு கிராமத் திருவிழா ஆரம்பித்திருந்தது. எங்களையும் கலந்து கொள்ளச் சொன்னார்கள்.
கிராமத் தலைவர் ஒருவரது
வீட்டின் முன்புதான் விழா நடந்தது. யாரோ ஒருவர் வெள்ளைத் துணிகள் போர்த்தப்பட்ட ஒரு
பெரிய மூட்டையை எடுத்து வந்து அங்கிருந்த திண்ணை போன்ற அமைப்பின் மீது வைத்தார். பிறகு
சிறுசிறு மண் விளக்குகள் இதர சமாசாரங்கள் எல்லாம் வர, கிராமவாசிகள் கைதட்டியவாறு பிரார்த்தனை
பாடல்கள் பாட ஆரம்பிக்க, நாங்களும் அவர்களோடு அமர்ந்து உற்சாகமாக கை தட்ட ஆரம்பித்தோம்.
எங்களோடு எங்கள் குதிரைக்காரர்கள், உதவியாளர்கள் எல்லோருமே அமர்ந்து உற்சாகமாய்ப் பாடினார்கள்.
மொழி புரியாவிட்டாலும் செவிக்கு இனிமையாக இருந்தன அவர்களது நாட்டுப்புறப் பாடல்கள்.
“உங்களுக்கு அதிர்ஷ்டம் உள்ளது. ஆண்டுக்கொருமுறை நடக்கும் கிராமத் திருவிழாவில் நீங்கள்
கலந்து கொள்கிறீர்கள்” என்றார் ஒரு குதிரைக்காரர். அந்த வெள்ளைத்துணி போர்த்திய மூட்டைக்குள்
இருப்பது சிவன் உருவமாம். ஆண்டுக்கொரு முறை அதன் மீதுள்ள துணிகளை மாற்றுவதைத்தான் விழாவாகக்
கொண்டாடுவார்களாம். சிவனைக் காணமுடியவில்லை.
விழாவின் முடிவில்
எங்கள் அனைவருக்கும் மண் குடுவையில் ஏதோ ஊற்றி பிரசாதமாகக் கொடுத்தார்கள். நாங்கள்
தயங்கினோம். குடிக்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். எங்கள் குழுவில் சிலர் வாங்கிக்கொள்ள,
அதற்குள் உதவியாளர் ஒருவர் ஹிந்தியில் ஏதோ சொல்ல, ஒருவர் மொழி பெயர்த்தார். குடுவையில்
இருப்பது நாட்டு மதுவாம். அதுதான் பிரசாதமாம். அப்பாடா பிழைத்தோம் என்று எல்லோரும்
சிரித்தோம்.
குட்டியில் பாழடைந்த
ஒரு கோட்டையும் அதன் மீது சிதிலமடைந்த ஒரு கட்டடமும் இருக்கின்றன. அதுதான் குந்தியின்
அரண்மனையாம். அந்த இடத்திற்கு யாரும் செல்லமாட்டார்களாம். அங்கிருந்து ஒரு கல்லை எடுத்தால்கூட
குட்டி கிராமப்பகுதியின் சீதோஷ்ண நிலை மாறி பெரும் ஆபத்தேற்படும் என்று நம்புகிறார்கள்.
தூரத்திலிருந்தே அந்த கோட்டையைப் பார்த்தபடி சென்றோம் நாங்கள்.
மறுநாள் நாங்கள்
சென்றது ஆதிகயிலாயம் நோக்கி. உத்தர்காண்டின் பிதாரகர் மாவட்டத்தின் ஜோலிங்காங் என்ற
இடத்தில்தான் ஆதிகயிலாயம் அமைந்துள்ளது. இந்திய பகுதியாக இருந்த திபெத்தில் இருந்த
ஆதிகயிலாயம், சீன ஆக்கிரமிப்பிற்கு மாறிய பிறகு, எல்லை கடந்து சென்று கயிலாயம் மானசரோவரை
தரிசிக்க முடியாதவர்களுக்கு, நம் எல்லைக்குள்ளேயே இருக்கும் ஆதிகயிலாயம் ஒரு வரம்.
திபெத்தில் இருக்கும் கயிலாயம் போலவேதான் இதுவும் பனி போர்த்திய பிரமீடு வடிவில் இருக்கும்.
அங்கு மானசரோவர் ஏரி உள்ளது போலவே இங்கும் பார்வதி சரோவரம் உள்ளது. அங்குள்ளது போலவே
இங்கும் கயிலை மலையை ஒட்டி கௌரி குண்டம் என்ற ஏரியும் இருக்கிறது. மிகமிக புனிதமான
இடம் இது. இங்கிருக்கும் புனித அதிர்வுகளும், அமைதியும் நம்மை என்னவோ செய்கின்றன. சலனமற்றிருக்கிறது
பார்வதி சரோவரம். நல்ல காலநிலை இருந்தால் ஆதிகயிலையின் பிம்பத்தை இதில் காணலாம். சரோவரத்தின்
அருகில் ஈசனுக்கு கோவிலும் கட்டப்பட்டிருக்கிறது. திபெத்தில் இருக்கும் கயிலையை படா
கைலாஷ் என்றும் இதனை சோட்டா (சிறிய) கைலாஷ் என்றும் அழைக்கிறார்கள்.
நாங்கள் எங்கள் தங்குமிடத்தை
அடைந்ததுமே அங்கிருந்து சற்று தொலைவு நடந்து சென்று ஆதிகயிலாயத்தை தரிசிக்கும்போது
வானம் சற்று தெளிவாகவே இருந்தது. இந்த அழகையும், தெய்வீகத்தையும் கான்பதற்காகத்தானே
இத்தனை சிரமப்பட்டு வந்திருக்கிறோம் அவனருளால் என்று நினைத்தபடி அங்கே வெகுநேரம் அமைதியாக
அமர்ந்திருந்தேன். ஆதிகயிலாயத்திற்கு எதிர்ப்புறம் பார்வதி சரோவரம் செல்லும் வழியில்
ஒரு மலைமுகடு உள்ளது. ஒரு கிரீடம் போல இருக்கும் இதனை பார்வதி தேவியின் கிரீடம் என்ற
பொருளில் பார்வதி முகுட் என்கிறார்கள்.
ஜோலிங்காங்கிலிருந்து
ஆதி கயிலை நோக்கி ஐந்தாறு கி.மீ தூரம் உட்புறமாக மலையேறிச் சென்றால் கௌரி குண்டத்தைக்
அடையமுடியும். அமைதியான கௌரி குண்டத்தில் பனிப்பாறைகள் மிதந்து கொண்டிருக்க தேவலோகம்
போலிருக்கிறது அந்த இடம். செல்லும் வழியில் நிலச்சரிவுகள் ஏற்பட்டிருக்க, உதவியாளர்களின்
உதவியுடன் அவற்றைக் கடந்து சென்றோம்.
மீண்டும் அதே கடினமான
மலைப்பாதை, குதிரைப்பயணம், என பதினான்காம் நாள் டார்ச்சுலாவை அடைந்ததுடன் எங்கள் பயணம்
முற்றுப்பெற்றது.
யாத்திரை என்பது
பக்தியை மட்டுமல்ல, பக்குவத்தையும், பரந்துபட்ட பார்வையையும் அளிப்பதாக எண்ணுகிறேன்.
இமயத்தின் விளிம்பில், ஆபத்து சூழ வாழும் மக்களின் வாழ்வையும், அவர்களது தன்னம்பிக்கையும்
சிரிப்பையும் காணும்போது நம் கர்வம் அழிகிறது. அவர்களைக் காட்டிலும் நாம் எவ்வளவு நல்ல
நிலையில் இருக்கிறோம் என்று புரிகிறது.
(நாபிடங் சிகரம்)
(ஓம் பர்வதம்) 
(வியாசர் குகை) 
(காளிநதியின் பிறப்பிடம்) 
 

(நிறைவு)

1 thought on “இமயத்தின் விளிம்பில் – 2 (ஆதி கைலாஷ் யாத்திரை) | வித்யா சுப்ரமணியம்

  1. படிக்கும் போதே மெய்சிலிர்க்குது… என்னனு தெரியுல இப்பலாம் சிவசக்தி மீது பத்தியும் பாசமும் அதிகரிக்கின்றது… அதை முழுமையாக தெறிந்து கொள்ள இப்பகுதியில் சில விஷயங்களை படிக்கின்றேன். படிக்கும் போதே இதயம் மென்மையாகியது. கைலைக்கு செல்ல மனம் துடிக்கிறது… எப்பொழுது அந்த பாக்கியம் எனக்கு கிடைக்கும் என்று தெரியவில்லை .. அங்கு செல்ல அதிக பணம் தேவை போல.இனி அதுக்காகவே நல்ல மனம் உள்ள மனிதனாய் வாழ்ந்து பணம் சேமித்து வாழ்வில் என்றாவது ஒருநாள் கைலை செல்ல வேண்டும்…
    சிறப்பான தகவல் அளித்ததற்கு மிக்க நன்றி..

Leave a Reply