Posted on Leave a comment

வலம் அக்டோபர் 2017 இதழ் முழுமையான படைப்புக்கள்

வலம் அக்டோபர் 2017 இதழின் படைப்புகளை முழுமையாக இங்கே வாசிக்கலாம். 
ஆன்லைனில் அச்சுப் புத்தகத்துக்கு சந்தா செலுத்த: https://www.nhm.in/shop/Valam-OneYearSubscrpition.html

இ புத்தகத்துக்கு ஓராண்டுச் சந்தா செலுத்த: http://nammabooks.com/valam-one-year-subscription?filter_name=valam%20subscription

Posted on Leave a comment

வி.எஸ்.ராமச்சந்திரன்: நரம்பியலின் ஷெர்லாக் ஹோம்ஸ் -நேர்காணல்: அரவிந்தன் நீலகண்டன் (தமிழில்: கிருஷ்ணன் சுப்ரமணியன்)

பன்னிரண்டு வயதுச் சிறுவன் ஒருவன் சிப்பிகளைப் பொறுக்கி விளையாடுவதில் எந்த வித ஆச்சரியமும் இல்லைதான். ஆனால், 12 வயதுச் சிறுவன் சிப்பிகளைச் சேகரித்து, அதன் வகைகளைக் கண்டறிந்து சரியாகக் கூறுவதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அதில் ஒரு சிப்பியின் வகையைச் சரியாகக் கண்டறிய முடியாதபோது, அமெரிக்காவில் இயற்கை வரலாற்றைப் பற்றிய அருங்காட்சியகத்தில் சங்குகளைப் பற்றி ஆய்வு செய்யும் ஒருவருக்கு அதைக் கேட்டு அவன் எழுதுகிறான். அந்த இளம் சிறுவன் வாழும் பகுதியில் காணப்படாத, அந்த அரிய வகை உயிரினத்தைக் கண்டறிய முடியாமல் அவரும் திகைக்கிறார். அதனால், இந்தப் புதிய கண்டுபிடிப்பை ‘ஆச்சரியகரமானது’ என்று அவர் கருதுகிறார். இதெல்லாம் பல பத்தாண்டுகளுக்கு முன்பு, நத்தை போலச் செல்லும் தபால்களும், இருட்டறையில் கழுவப்படும் புகைப்படங்களும் நடைமுறையில் இருந்த காலம்.

அந்த 12 வயதுச் சிறுவன்தான் டாக்டர் வி.எஸ்.ராமச்சந்திரன் என்று பரவலாக அறியப்படும், சக பணியாளர்களால் ராமா என்றழைக்கப்படும், டாக்டர் வில்லியனூர் சுப்பிரமணியன் ராமச்சந்திரன். பிரிட்டன் அறிவியலாளரும் எழுத்தாளருமான ரிச்சர்ட் டாக்கின்ஸ் அவரை நரம்பியலின் ‘பின்னாளைய மார்க்கோ போலோ’ என்று குறிப்பிடுகிறார். நோபல் விருது பெற்ற எரிக் கண்டெல் ‘மனித மனம் செயல்படும் விதத்தைப் பற்றி பல புதிய பரிமாணங்களை அளிக்கும் பாரம்பரியத்தில் ப்ரோகா, வெர்னிக் போன்ற ஜாம்பவான்களின் வரிசையில் வந்தவர்’ என்று அவரைப் பற்றிக் கூறுகிறார்.

 சிறந்த நரம்பியல் நிபுணர்களில் ஒருவரான காலஞ்சென்ற டாக்டர் ஆலிவர் சாக்ஸ், டாக்டர் ராமச்சந்திரனை ‘திறமையான மருத்துவர்களில் ஒருவர் அவர்… அவர் தொட்டதெல்லாம் துலங்கும்’ என்கிறார்.

டாக்டர் ராமச்சந்திரன் அறிவு மறுமலர்ச்சிக்காலத்தைச் சேர்ந்த அறிவியலாளர்களின் உள்ளடக்கமாக விளங்குகிறார். ஒரு சாகசக்கார யாத்திரீகரைப் போல, அறியப்படாத இடங்களில் நுழைந்து, பிரபஞ்சத்தில் நம்முடைய இடத்தைப் பற்றிய புரிதலை மேலும் தெளிவாக்குகிறார்.

அவருடைய பேச்சை முதலில் நான் சென்னையில், தமிழ் ஹெரிடேஜ் ஃபோரம் என்ற அமைப்பில் கேட்டேன். அதற்கு முன்னணிப் பதிப்பாளரான பத்ரி சேஷாத்ரிக்கு நன்றி சொல்லவேண்டும். அவர் ‘நியூரோகிருஷ்’-இல் உரையாற்றியதைக் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் கழித்து, இந்த வருடம் சென்னையில் கேட்டேன். உள்ளூர்க்காரர்களால் ‘சென்னைப் பையன்’ என்று அன்புடன் அழைக்கப்படுகிறார் அவர். பழைய தலைமுறையைச் சேர்ந்த சென்னை மருத்துவக் குழாமின் ஆசிரியர்களும் அடுத்த தலைமுறையின் மருத்துவர்களும் அவரை தங்கள் கல்லூரித் தோழராக நினைவுகூர்கின்றனர். தனது பதின்ம வயதுகளிலேயே ராமச்சந்திரன் கூர்மையானவராகவும் கடும் உழைப்பாளியாகவும் இருந்ததையும், அதனால் அவருடைய கல்லூரித் தோழர்கள் எரிச்சலடைந்ததையும் பற்றி ஒரு மருத்துவர் குறிப்பிட்டார். இருபது வயதுகூடப் பூர்த்தி அடையாத நிலையில், ஒவ்வொரு கண்ணிலும் தெரியும் இரண்டு சிறிய அளவிலான மாறுபட்ட காட்சிகளை மூளை எப்படி ஒன்றிணைக்கிறது என்பது பற்றிய ஆய்வுக்கட்டுரையை ராமச்சந்திரன் அனுப்பியபோது, மதிப்புமிக்க அறிவியல் இதழான ‘நேச்சர்’ திருத்தம் ஏதும் செய்யாமல் அதைப் பிரசுரித்தது. இப்போது, அடுத்த தலைமுறை மருத்துவர்களும், மருத்துவ ஆய்வாளர்களும் அவரிடம் வழிகாட்டுதலையும் தூண்டுதலையும் பெறுகின்றனர்.

டாக்டர் வி.எஸ்.ராமச்சந்திரன், இந்தியாவின் சட்டத்தை வடிவமைத்த இருவரில் (மற்றொருவர் டாக்டர் பி.ஆர் அம்பேத்கார்) ஒருவரான சர் அல்லாடி கிருஷ்ணஸ்வாமி ஐயரின் பேரன் ஆவார். அவர் தந்தை ஐக்கிய நாடுகள் சபையில் உயர் பதவி வகித்தவர், தாயார் கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இன்று அவர் சான்டியாகோவிலுள்ள கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தில் மூளை மற்றும் அறிவாற்றலுக்கான மையத்தில் இயக்குநராக உள்ளார். தவிர சால்க் கல்வி நிறுவனத்தில் உயிரியல் இணைப் பேராசிரியாகவும் உள்ளார்.

2003ல் அவர் பிரிட்டனில் பிபிசியின் ரெய்த் (BBC Reith lectures) தொடர் உரைகளை நிகழ்த்தினார் – உலகத்தில் மிகவும் மதிக்கப்படும் உரைகளில் ஒன்றாகும் அவை. எப்போதும் ஆர்வம் மிகுந்த சிறுவனின் மனத்தை உடைய அவர், பெர்ட்ராண்ட் ரஸ்ஸல், ஆர்னால்ட் டாய்ன்பே, ஓப்பன்ஹீமர், பீட்டர் மேடவார் போன்றவர்கள் உரை நிகழ்த்திய அந்த மேடையில் தானும் பேசுவதை எண்ணிப் பெருமை அடைந்திருப்பார். நோபல் பரிசு பெற்ற டேவிட் ஹ்யூபெல் டாக்டர் ராமச்சந்திரனின் ரெய்த் உரைகளை “துணிச்சலான, சார்பற்ற, சுயமான, புத்தறிவுடைய கருத்துக்களால் நிறந்தது” என்று குறிப்பிடுகிறார். அந்தத் துறையில் நிபுணத்துவம் இல்லாதவர்களும் அவரைப் போன்ற ‘வாழ்நாளையெல்லாம் மூளையைப் பற்றி ஆராய்வதிலேயே கழித்தவர்களும்’ அந்த உரைகளினால் கவரப்பட்டார்கள் என்றும் கூறுகிறார். டாக்டர் ராமச்சந்திரனின் இந்த உரைகள் அதிகமாக விற்பனையாகும் ‘தி எமர்ஜிங் மைண்ட்’ என்ற இதழில் தற்போது பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.

2012ல், ஸ்காட்லாண்டில் கிஃப்போர்ட் உரைகளை அவர் வழங்கினார். இந்த உரைகள் இயற்கை இறையியல் சார்ந்த தத்துவ இயக்கம் ஒன்றின் ஒரு பகுதியாகும். அறிவியல்-தத்துவ உரையாடலில் நோபலுக்கு இணையாக இது கருத்தப்படுகிறது. ஆனால், நரம்பியலை டார்வினின் ஆய்வுகளின் அடிப்படையில் அணுகும் டாக்டர் ராமச்சந்திரன், அழகியல் போன்ற அடிப்படை மனிதப் பழக்கங்கள் நம்முடைய பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதி என்று கருதுபவர். இந்த இயக்கத்தின் மீது அனுதாபம் இல்லாதவர். தனித்தனிக் கட்டங்களில் அடைபட்டுள்ள ‘மென்மையான’ சமூக மற்றும் ‘கடினமான’ பொருள் அறிவியல் ஆகியவற்றிற்கு இடையேயான இடைவெளியை இணைப்பதற்கான பாலமாக நரம்பியல் விளங்குகிறது என்பதைப் பற்றியே அவர் நிகழ்த்திய உரைகள் இருந்தன.

டாக்டர் ராமச்சந்திரன் கலைகளில் ஆர்வமுள்ளவர். சோழர்கால ஐம்பொன் சிலைகளை நேசிப்பவர். கர்நாடக இசையையும், சிற்பங்களையும், சித்திரங்களையும் விரும்புபவர். அழகியல் அனுபவம் மிக்க கலைகளில் உள்ள அவரது விருப்பம் அவரது அறிவியல் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது. அழகியல் கலை உலகில் அவர் ஈடுபட்டது இந்திய மரபில், எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த அபிநவ குப்தருக்கு அடுத்ததாக முக்கியமான அழகியல் வல்லுநராக அவரை உருவாக்கியுள்ளது. டாக்டர் ராமச்சந்திரன் அழகியல் அனுபவத்திற்கான நரம்பியல் கோட்பாட்டை (வில்லியன் ஹிர்ஸ்டைனுடன் சேர்ந்து) 1999லேயே அறிமுகப்படுத்தினார். (நரம்பழகியல் – Neuroaesthetics என்ற பிரிவு முறையான விளக்கத்தை 2002ல்தான் பெற்றது). நரம்புகளுக்கிடையேயான தொடர்புகளை ஆன்மிக அனுபவங்களோடு இணைக்கும் அவருடைய ஆய்வு அறிவியலாளர் சமூகத்தில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. அவர் மூளையின் ஜி-மாடுலை (G-Module) கண்டுபிடித்துவிட்டார் என்று கூடக் குறிப்பிடப்பட்டார்.

டாக்டர் ராமச்சந்திரன் கவனமாக, மூளையில் கடவுளோடு தொடர்புடைய ஜி-ஸ்பாட் எதுவும் இல்லை என்று விளக்குகிறார். மதம் என்பது மூளையின் பல பகுதிகளை எட்டும் பல பரிணாமங்கள் உள்ள அனுபவம் என்று கூறும் அவர், அது பற்றிய காரண-விளைவு விவாதத்தில் தாம் ஈடுபடவிரும்பவில்லை என்றும், அது ஊகம் மற்றும் தத்துவ ரீதியான பகுதிக்கு தம்மை இட்டுச்செல்லும் என்றும் கூறுகிறார். “தத்துவம் ஜுலியட்டை உருவாக்கவில்லையென்றால், தத்துவத்தை தூக்கிலிடுங்கள்” என்று புன்னகையுடன் வில்லியம் ஷேக்ஸ்பியரை அவர் மேற்கோள் காட்டுகிறார்.

அவருடைய விருப்பங்கள் மூளை அறிவியலோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. படிமங்களை ஆய்வு செய்வதில் அவருக்குப் பெருவிருப்பம். வருடாந்திர ‘டக்ஸன் ஜெம் அண்ட் மினரல் ஷோ’ என்ற நிகழ்ச்சியில் 2004ம் ஆண்டு, ஒரு டைனசாரின் மண்டையோட்டை சாதாரணமாகக் கவனித்த அவர், அது அன்க்லோஸரஸ் என்ற புதிய வகை தாவர உண்ணி டைனசாராக இருக்கலாம் என்று கருதினார். இது அவரது நண்பரும், தொல்லுயிரியாளருமான க்ளிப் மைல்ஸை அந்த மண்டையோட்டைக் கூர்ந்து ஆய்வு செய்ய வைத்தது. அதன்பின், அன்க்லோஸரஸ் ஒரு புதிய வகையாகக் கண்டறியப்பட்டது. அதற்கு ‘மினோடாரசௌரஸ் ராமச்சந்திரனி’ என்ற பெயரும் வைக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த சிப்பிகளைச் சேகரிக்கும் சிறுவன், ஒரு டைனசாருக்கு அவனுடைய பெயர் வைக்கப்படும் என்று கனவில்கூடக் கருதியிருக்கமாட்டான்.

டாக்டர் ராமச்சந்திரன் தாம் மூளையியல் நிபுணராக ஆகியிருக்காவிட்டால் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியளராக இருந்திருப்பேன் என்று கூறுகிறார். இன்னும் அவருக்குத் தொல்பொருள் துறையில் விருப்பமுள்ளது. இந்தியத் தொல்பொருள் துறையின் புதிய கண்டுபிடிப்புகள் அவருக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன. ஆனால் இந்தியத் தொல்பொருள் நிபுணர்களின் கண்டுபிடிப்புகள் பரவலாக்கப்படுவதில்லை என்ற வருத்தம் அவருக்கு உள்ளது. அந்தத் துறை வலது – இடது சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டது பற்றியும் அவர் வருந்துகிறார்.

ஹரப்பாவின் எழுத்து வடிவங்களைக் கண்டறியும் முதல் மனிதராக தாம் இருக்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார். அவருடைய பழைய மருத்துவக் கல்லூரிப் பேராசிரியரான டாக்டர் கே.வி.திருவேங்கடம், நோய்களைக் கண்டறிய நுண்ணிய அறிகுறிகளைக் கவனிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தியதை அவர் நினைவுகூர்கிறார். எளிய நிகழ்வுகள் மற்றும் நுட்பங்கள் மூலம் இயற்கையின் தீர்வு காணப்படாத மர்மங்களுக்கான தடயங்களை வெளிப்படுத்தக்கூடிய திறன், டாக்டர் ராமச்சந்திரனின் அறிவியல் பயணத்தின் வழிமுறைக்கான அடிப்படையாக உள்ளது. அவருக்கு மிகப்பிடித்த துப்பறியும் நிபுணராக ஷெர்லாக் ஹோம்ஸ் இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை.

அவருடைய தத்துவம் சார்ந்த தொடர்பு அன்பிலாலும் அதேசமயம் விலகியிருத்தலாலும் அடையாளப்படுத்தப்படுகிறது. தத்துவ சார்பு அவருடைய அறிவியலில் குறுக்கிடுவதை அவர் அனுமதித்ததில்லை. ஆனாலும், பரந்த விண்வெளியைப் பற்றியும், நேரத்தையும், ப்ரபஞ்சத்தையும் அடிப்படையாகக் கொண்டு தனிமனிதரின் வாழ்வையும், தன்னிச்சையாகச் செயல்படக்கூடிய தன்மையையும் பற்றிப் பேசும்போது, மனிதர்கள் சிவனின் நடனத்தின் ஒரு பகுதியே என்று அவர் நம்புகிறார். இது ஆல்பெர்ட் ஐன்ஸ்டீனின் ‘காட் ஆஃப் ஸ்பினோஸா’ தத்துவத்தை ஒத்துள்ளது. பரிணாம வளர்ச்சியடைந்துவரும் உயிரினங்கள், விரிவடைந்துகொண்டிருக்கும் ப்ரபஞ்சம் ஆகியவற்றை உள்ளடக்கிய, பரந்துவிரிந்த முறையின் குறியீடு ஆகும் அது. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை சிவனின் நடனத்தின் ஒரு பகுதிதான் என்பதை அறிவியலின் மூலம் அறிந்த உணர்வுகளைப் பற்றி உளவியலாளரான சூஸன் ப்ளாக்மோர் வினவியபோது, ‘அப்படி உணர்ந்தது அவரை உயர்த்தியது, தாழ்த்தவில்லை’ என்று கூறினார்.

மனம்-உடல் ஆகியவற்றிற்கு இடையேயான பிரிவு, ப்ரஞ்சு தத்துவவியலாளரான ரெனே டெஸ்கார்டெஸின் பிழை என்று கூறப்படுவது, அரிஸ்டாட்டிலின் தற்காலிக ஆத்மா பற்றிய கருத்து, அவருடைய ஹிந்துத் தத்துவ முறையின் மாயா என்ற கருத்தாக்கம் ஆகியவற்றைப் பற்றிக்கூறும்போது, டாக்டர் ராமச்சந்திரன் ஒன்றையொன்று குறுக்கிடும் அவருடைய அறிவியல் ஆய்வுகளையும் தத்துவத்தையும் சந்திக்கிறார். எனவேதான் நம்முடைய உடல் வடிவத்தை ‘தற்காலிகமான கட்டமைப்பு… உங்களுடைய மரபணுக்களை உங்கள் குழந்தைகளுக்குக் கடத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஓடு’ என்று அவர் பேசும்போது, அது டார்வினின் கருத்தாக்கத்தோடு இணைந்த மாயையின் வடிவமோ என்று நாம் சிந்திக்கிறோம். “இறையியல் என்னுடைய அறிவியலோடு கலப்பதை நான் அனுமதிப்பதில்லை – ஆனால் சொர்க்கத்திலும் பூமியிலும் உங்களுடைய தத்துவங்களினால் கற்பனை செய்ய முடியாத பொருட்கள் இருக்கின்றன என்றும் நான் நம்புகிறேன்” என்று புன்சிரிப்போடு அவர் கூறுகிறார். அதன்பின் அவரிடம் உள்ள இந்தியர் வெளிப்படுகிறார், “இந்தியத் தத்துவம் கிரேக்கத்தத்துவத்தின் பெரும் கூறுகளைப் பாதித்துள்ளது; பிதோகரஸ் இந்தியா வந்ததற்கான சான்றுகள் உள்ளன” என்றும் அவர் தெரிவிக்கிறார்.

மதிப்பு மிக்க பன்னாட்டு நிறுவனங்களான ‘ஆல் சோல்ஸ் காலேஜ் ஆக்ஸ்ஃபோர்ட் (அதன் ஃபெல்லோஷிப்களில் லாரன்ஸ் ஆஃப் அரேபியாவும் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனும் அடக்கம்) போன்றவற்றின் உறுப்பினர் பதவியும், ஃபெல்லொஷிப்களும் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. அண்மையில், ராயல் காலேஜ் ஆஃப் ஃபிஸிஷியன்ஸின கௌரவ உறுப்பினர் பதவிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். ராயல் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் லண்டன் அவருக்கு ஹென்றி டேல் பதக்கத்தை அளித்தது. பத்ம பூஷன் விருதைப் பெற்ற அவர் உலகில் தாக்கம் செலுத்தக்கூடிய 100 முக்கிய மனிதர்களில் ஒருவராக டைம் இதழால் குறிப்பிடப்பட்டிருக்கிறார்.

மூளை, நினைவாற்றல் ஆகியவற்றின் மர்மங்களைப் பற்றி ஆராயும் அறிவியலாளர், மிகவும் மர்மமான, குழப்பம் தரக்கூடிய வலியை நீக்க தன்னுடைய அறிவைப் பயன்படுத்தும் மருத்துவர், நரம்பு உயிரியலின் வேர்களைக் கண்டறிந்து அதன்மூலம் மனிதத் தன்மைகளின் பல்வேறு வெளிப்பாடுகளை ஒன்றிணைப்பவர், கார்ல் ஸேகன், ஸ்டீபன் ஜே கோல்ட், லூயிஸ் தாமஸ் போன்ற ஒரு அறிவியல் கல்வியாளர், இயற்கையைக் கூர்ந்து கவனிப்பவர், கலைகளின் ரசிகர், இந்தியக் கலாசாரத்தை நேசிப்பவர் என்ற பன்முகத்தன்மை கொண்ட டாக்டர் ராமச்சந்திரன், அறிவின் ஆழங்களை எளிதாகக் தொடக்கூடிய மனத்தைக்கொண்ட ஒரு கருணைவடிவான மனிதர்.

**********

சிறு வயதில் பல துறைகளில் உங்களுக்கு ஆர்வம் இருந்தது – தொல்பொருள் துறையிலிருந்து, சங்குகளைப் பற்றி ஆராய்வது, வேதியியல் வரை. நரம்பியலை நீங்கள் தேர்ந்தெடுக்கக் காரணமாக இருந்தது எது?

ஒரு மனிதனாக இருப்பது என்றால் என்ன என்பது பற்றிய அடிப்படைக் கேள்விகளை நேருக்கு நேர் எதிர்கொள்ளாமல் நரம்பு சம்பந்தமான நோய்வாய்ப்பட்டவர்களை அணுகுவது கடினம். தலையின் உள்ளிருக்கும் மூன்று பவுண்ட் நிறையுள்ள ஜெல்லி எப்படி ப்ரபஞ்சத்தின் அளவைப் பற்றிச் சிந்திக்கிறது அல்லது எப்படி தன்னுடைய இருத்தலின் அர்த்தத்தைப் பற்றி யோசிக்கிறது? தன்னிச்சையாகச் செயல்படக்கூடியது என்று கூறப்படும் ‘நான்’ தன்னைப் பற்றி எவ்வாறு ஆய்வு செய்கிறது? எனவே உங்கள் கேள்வி, “உங்களைப் போல் அல்லாமல், மூளையைப் பற்றிய ஆர்வம் இல்லாமல் மற்றவர்களால் எப்படி இருக்க முடியும்?” என்று இருக்கவேண்டும்.

இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த உயிரியல் நிபுணர்களில் ஒருவரான ஃப்ரான்சிஸ் க்ரிக் உங்களுடைய பார்வை தொடர்பான ஆய்வுகளை “புதுமையானது நேர்த்தியானது” என்று குறிப்பிடுகிறார். இது நரம்பியலில் நீங்கள் பணிபுரியத் தொடங்குவதற்கு நீண்ட நாட்கள் முன்னால் நடந்தது. 1971ல் எளிய ஸ்டீரியோஸ்கோப்கள் தொடங்கி  2008ல் உங்கள் மடிக்கணினியில் எளிய மாயத்தோற்றங்களை டாக்டர் வி.எஸ். ராமச்சந்திரனின் தனித்துவமான முத்திரையோடு செய்தது வரை, நீங்கள் பார்வையைப் பற்றி அத்தனை ஆர்வத்துடன் ஆராய்ச்சி செய்தீர்கள். இந்த ஆர்வம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது? இது உங்கள் மாமாவின் விருப்பத்தை ஒட்டி, அதனால் தூண்டப்பட்ட ஒன்றா?

உலகப் பிரசித்தி பெற்ற கண் சிகிச்சை நிபுணரான டாக்டர் பரமேஸ்வர ஹரிஹரன் மற்றும் சென்னையில் கணித அறிவியல் கழகத்தை நிறுவிய டாக்டர் அல்லாடி ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் என் மாமாக்கள். இவர்கள் இருவரும், மனிதர்களுடைய கண் பார்வைப்பற்றிய ஆய்வில் எனக்கிருந்த ஆர்வத்தை ஊக்குவித்தார்கள். ஷேக்ஸ்பியரைக் கரைத்துக் குடித்தவரான என்னுடைய சகோதரர் வி.எஸ்.ரவி கவிதை பாடுவதில் வல்லவர். உமர் கய்யாமின் ‘தி ரூபையத்’லிருந்து கவிதைகள் எடுத்துரைப்பார், அது என்னுடைய இந்தப் பழக்கத்திற்கு அடிகோலியது. ஒரு சிறந்த கவிஞரால் எழுதப்பட்ட கவிதைகள் ஏற்படுத்தும் தாக்கம், ஒரு அழகியல் பார்வையை, பொதுவாக வாழ்க்கையிலும் குறிப்பாகப் படிப்பிலும் உங்களுக்கு அளிக்கிறது.

உங்களுடைய ‘ஃபாண்டம் லிம்ப்’ ஆய்வு அந்தத் துறையில் ஒரு மைல்கல்லாகக் கருதப்பட்டது. ‘ஃபாண்டம் லிம்பின் முதல் துண்டித்தல்’ ஒரு பிரபலமான அறிவியல் சாதனையாக உள்ளது. அதைப் பற்றி மேலும் சொல்லமுடியுமா?

ஒரு 30 நிமிடங்கள் கொண்ட ஆய்வில் நாங்கள் முதலில் காண்பித்தது, ஒரு கை துண்டிக்கப்பட்டவரின் முகத்தை நீங்கள் தொடும்போது, அந்தத் துண்டிக்கப்பட்ட கை மூலம் உணர்ச்சிகள் வருவதாக அவர் உணர்வார் என்பதை. கரம் துண்டிக்கப்பட்டால், முகத்திலுள்ள தோலின் உணர்வுத் தூண்டல்கள் அடுத்துள்ள நீக்கப்பட்ட கரத்தின் உணர்வுகளை ஆக்கிரமிக்கின்றன. எனவே ஒரு நோயாளியின் முகத்தை நீங்கள் தொடும்போது, அவர் கரத்திலிருந்து வரும் உணர்வுகளை அவர் அறிகிறார். இந்தச் சோதனை அடிப்படையையே புரட்டிப் போட்ட ஒன்றாக இருந்தது. ஏனெனில், சில இஞ்ச்களைக் கடந்து புதிய இணைப்புகள் ஒரு முதிர்ந்த மூளையில் சாத்தியம் என்று அது காட்டியது – அதுவரை இது சாத்தியமில்லாத ஒன்று என்று கருத்தப்பட்டது.

ஆக, உடலின் பிம்பம் மீளுருவாக்கம் செய்யப்படக்கூடிய ஒன்று என்கிறீர்கள், நாம் நினைப்பதை விட விரைவாக மாறக்கூடியதான ஒன்று அது…

ஆம்.

உங்களுடைய ந்யூரோகிருஷ் உரைகளில், வலியைக் குறைக்கக்கூடிய சிகிச்சையின் பலன்களைப் பற்றிய புள்ளிவிவரங்களை அளித்தீர்கள். மிர்ரர் பாக்ஸ் தெரபி எப்படி நோயாளிகளின் வலியைக் குறைக்க / நீக்க உதவுகிறது என்பதன் ஆய்வைப் பற்றி மேலும் விவரங்கள் அளிக்க இயலுமா?

கரம் துண்டிக்கப்பட்ட ஒருவரின் மற்றொரு கரத்தை ஒரு கண்ணாடியின் வலது புறத்தில் வைத்து, அதன் பிரதிபலிக்கும் பிம்பம், வெட்டப்பட்ட இடது கரத்தின் இடத்தில் இருப்பதைப் பார்க்கச் சொன்னோம். இப்போது அந்த வலது கரம் நகர்த்தப்பட்டால், அது வெட்டப்பட்ட கரம் மீண்டும் உருவாகி நகர்வதைப் போன்ற மாயையை ஏற்படுத்துகிறது. 60 சதவிகித நோயாளிகளில் இது வலியைக் குறைக்கிறது.

இது போன்ற மிரர் ஃபீட்பாக் தெரபி மற்ற நோய்களைக் குணப்படுத்த உதவுகிறதா?

ஆமாம், துண்டிக்கப்பட்ட கரங்களில் மட்டுமன்றி, சாதாரணமான உறுப்புகளில் ஏற்படும் வலிகளைக் கூட இதனால் குறைக்கமுடியும். விரல் எலும்புகளில் ஏற்படும் ஹேர்லைன் முறிவுக்குப் பிறகு, அந்தக் கையை குணப்படுத்த, உங்களுக்கு வலி, வீக்கம், சிவப்பு நிறமாக அந்த இடம் மாறுதல், சூடு, தற்காலிகமாக செயலிழந்தது போன்ற நிலை அல்லது தன்னிச்சைச் செயல் கட்டுப்படுத்தப்படுதல் போன்ற அறிகுறிகள் தோன்றுகின்றன. ஓரிரண்டு வாரங்களுக்குப் பிறகு, அந்த முறிவு குணமாகி இந்த மாற்றங்கள் எல்லாம் சில நாட்களில் பழைய நிலைக்குத் திரும்புகின்றன. ஆனால் எலும்பு 2 முதல் 4 சதவிகிதம் வரைதான் குணமாகிறது ஆனால் வீக்கம், வலி, செயலிழத்தல் ஆகியவை தொடர்கின்றன.

இந்த வீக்கம், கை முழுவதும் பரவுகிறது. அதனால் வலி அதிகரிக்கிறது, அந்த இடம் சிவப்பாகிறது, செயலிழக்கிறது. இந்த நிலை பல ஆண்டுகளுக்குத் தொடர்கிறது. இதற்கு சிகிச்சை ஏதுமில்லை. முதுகெலும்புக்கு அருகிலுள்ள நரம்பு முடிச்சுகளை வெட்டிவிடுவதன் மூலம் சில சமயம் இதை ஓரளவுக்குக் குறைக்க முடியும். ஆச்சரியப்படத்தக்க விதத்தில், நீங்கள் கண்ணாடியிடம் செயலிழந்த கரம் இயங்குவதாகச் சொல்லி, அதன் காரணமாக அது நிஜமாகவே மேஜையில் அது இயங்குவதைப் பார்க்க முடியும். வெப்பம் குறைந்து தோலின் நிறமும் இதன் காரணமாக சில நிமிடங்களில் மாறத்தொடங்குகிறது. மனதிற்கும் உடலுக்கும் இடையே உள்ள உறவை மிகத்தெளிவாக இது விளக்குகிறது. இந்த சோதனை, கேண்டி மெக்கேப், பீட்டர் ஹாலஜென், பாட்ரிக் வால் ஆகியோரால் ஆக்ஸ்போர்டில் நடத்தப்பட்டது.

இன்னொரு உதாரணம் ‘மிர்ரர் ந்யூரான்ஸ்’களின் கண்டுபிடிப்பின் தாக்கத்தால் உருவானது. உங்கள் மூளையில் உள்ள தொடு திரையிலுள்ள பெரும்பாலான செல்கள் உங்கள் தோலைத் தொடுவதால் தூண்டப்படும்போது, நீங்கள் பார்க்க நேர்ந்தால் உங்கள் நண்பரின் தோல் தொடப்படும்போது 10% செல்கள்தான் தூண்டப்படுகின்றன. உங்கள் மூளை பார்வையின் உள்ளீட்டை வைத்து உங்கள் மூளையின் மெய்நிகர்த் தூண்டலை ஏற்படுத்துகிறது. நீங்கள் நேரடியாக அதை உணராவிட்டாலும், அவரைப் பார்ப்பதால் அந்த உணர்ச்சியோடு உங்களால் இணைய முடிகிறது. ஆனால் உங்கள் கரம் துண்டிக்கப்பட்டால், உங்களால் அவருடைய வலியை உணர இயலும் (ஆனால் கரம் இருக்கும் பட்சத்தில், இது நிகழாது ஏனெனில் அதிலிருந்து வரும் உணர்ச்சிகள் ந்யூரான் பிம்பத்தின் வெளிப்பாட்டை ரத்து செய்துவிடுகிறது). எனவே என்னுடைய மனத்தை என் நண்பனின் மனத்திலிருந்து பிரிப்பது என் தோல்தான். அதை எடுத்துவிட்டால், அவருடைய உணர்ச்சிகளை நான் உணரமுடியும்; எனக்கும் அடுத்தவருக்கும் இடையே உள்ள தடைகளை அது நீக்குகிறது. உங்களூக்கு ஒரு ஃபாண்டம் கை இருந்து உங்களுடைய நண்பரின் கை மசாஜ் செய்யப்படுவதை நீங்கள் காண நேர்ந்தால், உங்களால் ஃபாண்டம் கையில் அதை உணர முடியும். இதனால் என்ன நடக்கிறது? இந்த ஃபாண்டம் மசாஜ் அந்த ஃபாண்டம் வலியை நீக்கி சிகிச்சைக்கு உட்படுகிறது. எங்களுடைய கண்டறிதல்களின் பரவலான விளைவுகளை ஒன்றிணைப்பது, மூளை கணிணியிலிருந்து மாறுபட்ட வகையில் செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது; அது ஒரு தொடர் வரிசைப்படி ஆணைகளை நிறைவேற்றுவது அல்ல – அது ஒரு படையைப் போன்ற இயந்திரம், பல தன்னிச்சையான பிணைக்கப்பட்ட பிரிவுகளைக் கொண்டது. என்னைப் பொருத்தவரையில், மூளை, அசாதரணமான நெகிழ்வுத்தன்மையுள்ள உறுப்பு. அதனுடன் தொடர்புகொண்டவைகளோடு, ஒரு குறிப்பிட்ட தொகுதிக்குள்ளும், தொகுதிகளுக்கிடையேயும் சூழலின் தன்மைகளைப் பொருத்து மாறிக்கொண்டே இருக்கும் அது. இந்த தொகுதிகள் சூழலோடு மட்டும் மாறிக்கொண்டேயிருக்கும் தன்மையோடு இருப்பதில்லை, அவற்றிற்கு இடையேயும், (கண்ணாடியினால் வலி குறைவது போல) தோலுக்கும் எலும்புக்கும் (ரிஃப்ளெக்ஸ் ஸிம்பதெடிக் டிஸ்ட்ரோபி-இல் இருப்பதைப் போல), மற்ற மூளைகளுக்கு இடையேயும், மிர்ரர் ந்யூரான்களினால், கூட மாற்றம் அடைந்துகொண்டிருக்கின்றன. கணிணியைப் போலல்லாமல், மூளை ஒரு கரையான் புற்றை அல்லது பவழப்பாறை தொகுதியைப் போல உள்ளது. டேனியல் டென்னட் இது போன்ற கரையான் புற்று உதாரணத்தை உருவாக்கினார்.

இது போன்ற “செயல்படும்” பராலிஸிஸ் மற்றும் அதீதமான வலி ஒரு பக்கவாதத்தின் பின்னாலும் ஏற்படலாம். அப்போது இந்த மிர்ரர் செயல்முறை நல்ல பயனை அளிக்கிறது.

நீங்கள் ஆராயும் மற்றொரு விஷயம் ஸினெஸ்தீஷியாவைப் பற்றியது. இரண்டு வார்த்தைகளுக்கு இடையே உள்ள தொடர்புகளில், ஒன்றின்மேல் ஒன்று படியும் பகுதிதான் நம்மிடையே உள்ள உருவகம் என்பதன் அடிப்படை என்று கூறியிருந்தீர்கள். ஆனால் இது ஸினெஸ்தீஷியாவில் பெரியதாகவும் வலியதாகவும் உள்ளது. அதற்கு க்ராஸ்-ஆக்டிவேஷன் மரபணு காரணமாகக் கூறப்படுகிறது. ஒரு கவிஞர் உலகை நோக்கி அதிலிருந்து உருவகங்களைக் கண்டறிதல், ஸினெஸ்தேசியாவின் ‘உயர்ந்த’ வடிவம் என்று சொல்லலாமா? ஸினெஸ்தீஷியாவைப் பற்றிய ஆய்வு, இலக்கிய அழகியலின் நரம்பு-உயிரியல் பரிமாணத்தைப் பற்றிய உங்கள் அணுகுமுறையில் உதவியதா?

சுமார் 2 சதவிகித மக்கள் கறுப்பு மையினால் அச்சிடப்பட்ட எண்களை வண்ணங்களோடு சேர்த்து அறிகிறார்கள் – உதாரணமாக 3 சிவப்பாகவும், 5 மஞ்சளாகவும், 7 ஊதாவாகவும் இருக்கலாம், இது ஒவ்வொரு ஸினேஸ்தேட்ஸ்களுக்கும் வேறுபடலாம். ஆனால் அவர்கள் வாழ்வு முழுவதும் இது ஒரே நிலையில்தான் இருக்கும். இது வம்சாவளியாக வருவது. நாங்கள் சில குழுக்களுடன் சேர்ந்து, முதல்முறையாக இந்த விளைவு நிஜமானது என்றும், இது மூளையில் அடுத்தடுத்துள்ள வண்ணங்களைப் பற்றிய பகுதிகளுக்கும் எண்களைப் பற்றிய பகுதிகளுக்கும் இடையே ‘கசியும்’ அல்லது குறுக்கே செயல்படும் காரணியினால் ஏற்பட்டதாக இருக்கலாம் என்றும் நிகழ்த்திக் காட்டினோம்.

மூளையின் பகுதிகள் கருவாக இருக்கும்போது ஒன்றுக்கொன்று ‘நெருங்கிய தொடர்புகொண்டவையாக’ உள்ளது. கத்தரிக்கும் மரபணுக்களும், தடைசெய்யும் கடத்திகளும் இந்த நிலையில் இருந்து மாற்றத்தை உருவாக்க ஒரு வளர்ந்த மனிதனின் மூளையில் உள்ள தனித்தனி தொகுதிகளுக்கான காரணமாக அமைகிறது. ஆனால் இந்த மரபணுக்கள் மாற்றமடைந்தால், ஒன்றுக்கொன்று ‘பேசிக்கொள்ளாத’ தொகுதிகள் தங்களுக்குள் தொடர்பு ஏற்படுத்திக்கொள்கின்றன. உதாரணமாக எண்களைப் பற்றிய தொகுதி வண்ணங்களின் தொகுதியான வி4க்கு அருகில் உள்ளது- இதன் காரணமாக எண்கள், எண்களை அறியும் ந்யூரான்களைத் தூண்டும்போது அது வண்ணங்களை அறியும் ந்யூரான்களைச் செயல்படுத்துகிறது – எனவே எண்கள் வண்ணமயமாகத் தெரிகின்றன. இதே குறையுள்ள கத்தரித்தல் அல்லது குறையுள்ள தடைசெய்யும் மரபணுக்கள் மூளை முழுவதும் செயல்படுமானால், மூளையில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் கருத்துகள் தங்களுக்குள் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும் – அதன் விளைவாக ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத கருத்துகளை இணைக்கும் தன்மை ஏற்படும் – அதனை நாம் ‘உருவகம்’ என்கிறோம். இது ஸினெஸ்தீஷியா கவிஞர்களிடத்திலும், கலைஞர்கள் இடத்திலும், படைப்பூக்கம் கொண்ட அறிவியலாளர்களிடமும் பொது மக்களைவிட ஏழு மடங்கு அதிகமாகக் காணப்படுவது ஏன் என்பதன் விளக்கமாக உள்ளது. பயனில்லாத ஸினெஸ்தீஷியா மரபணுவின் மறைமுக நோக்கம் சில மனிதர்களைப் படைப்பூக்கம் கொண்டவர்களாக ஆக்குவதுதான். இது குழுக்களை உருவாக்குவது போல் தோன்றும் – ஆனால் நான் குறிப்பிடுவது அதையல்ல.

 இது, உங்களுடைய பிரபலமான அழகியலைப் பற்றிய எட்டு விதிகளுக்கு இட்டுச் செல்கிறது. அதைப் பற்றி விரிவாக விளக்க இயலுமா?

இங்கே கேள்வி என்னவென்றால், உலகில் பல்வேறு விதமான கலைகளின் பாணிகள் இருந்தாலும் – பொதுவான கோட்பாடுகள் அல்லது அழகியலின் ‘விதிகள்’ உள்ளதா என்பது. ஒரு கோவிலின் முகப்பில் உட்கார்ந்து யோசித்தபோது எட்டு அல்லது ஒன்பது விதிகள் எனக்குக் கிடைத்தன. சமச்சீராக எல்லாம் இருக்கவேண்டும் என்ற நமது விருப்பத்தை ஒரு எளிய உதாரணமாகக் கொள்ளலாம். இது குழந்தை கலைடாஸ்கோப்பில் விளையாடும்போதானாலும் சரி, அல்லது ஒரு பெரிய முகலாயச் சக்கரவர்த்தி அவர் மனைவியை மறக்காமலிருக்க அவருக்கு நினைவிடம் ஒன்றை அமைப்பதாக இருந்தாலும் சரி. உலகில் சமச்சீரான விஷயங்கள் நீண்ட நாள் வாழ்க்கையிலிருந்து உருவாகி வந்தது – இரை, உண்ணி, அல்லது இணை – சமச்சீர் உங்களுக்கு ‘முதலில் எச்சரிக்கும் அமைப்பாக’ இருந்து உங்களின் கவனத்தை உயிரியல் ரீதியாகத் தொடர்புடைய விஷயங்களின் மேல் ஈர்க்கிறது. ஒரு கலைக்குத் தேவையான அதமபட்ச விஷயம், அதைக் கவனிப்பது, அது மட்டும் போதுமானதில்லை என்றாலும்.

அதிகமாகச் சொல்லப்படாத உதாரணம் ‘சிகரத்தை நகர்த்துவது’. சதுரத்தைத் தவிர்த்து, செவ்வகத்தைத் தேர்வு செய்ய ஒரு பறவையைப் பயிற்றுவிற்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படித் தேர்வு செய்தால் அதற்கு ஒரு உணவுப்பொருள் பரிசாகக் கிடைக்கும். அந்தப் பறவை கற்றுக்கொண்ட செவ்வகத்திற்கும் ஒரு நீண்ட மெல்லிய செவ்வகத்திற்கும் இடையே ஒன்றைத் தேர்வு செய்யுமாறு அதனிடம் கூறினால், ஆச்சரியகரமாக அது இரண்டாவதைத் தேர்வு செய்கிறது! இது முட்டாள்தனமானதல்ல, பறவையின் மூளை செவ்வகமான ஒன்றைத்தான் தேர்வு செய்யும்படி கற்றதே தவிர, ஒரு குறிப்பிட்ட செவ்வகத்தை அல்ல. ஒரு சோழ நாட்டுக் கலைஞர் இந்தக் கோட்பாட்டைப் பயன்படுத்துகிறார். ஒரு சராசரி ஆணின் உருவத்தை சராசரி பெண்ணின் உருவத்திலிருந்து கழித்து, அந்த வித்தியாசத்தைக் கொண்டு ஒரு ‘பெரும் பெண்’, அதாவது பெண்களில் சிறந்தவர் உருவத்தைப் படைக்கிறார். எந்த அளவு ஈர்க்கக்கூடியதாக இருப்பினும், சாதாரண உருவத்தை விட ‘சிறந்த பெண்’ என்பதற்கு பல அளவுகோல்கள் பல உண்டு. தோற்றப்பாங்கு (த்ரிபங்கா), முத்திரைகள் அல்லது சைகைகளை சற்றே மிகைப்படுத்துவதன் மூலம் நிலை, நயம், வசீகரம் ஆகிய தன்மைகளை கலைஞர் உணர்த்துகிறார்- இவை எல்லாம் ஒரு பெண்ணை சிறப்பானவராகக் காட்டுகின்றன. உங்களுக்கு மோதியின் சித்திரம் வேண்டுமென்றால், நூறு ஆண்களின் முகங்களின் சராசரியை எடுத்து, அதை மோதியிலிருந்து கழித்து அந்த வித்தியாசத்தைப் பெரிதாக்குங்கள்.

சுருக்கமான கலைகளுக்காக, ‘கடற்பறவைக் குஞ்சு கோட்பாட்டை’ நான் பயன்படுத்துவேன். ஒரு கடற்பறவையின் குஞ்சு அதன் அம்மாவின் அலகைத் தேடிப்பிடித்துக் கொத்தி, அரைகுறையாக ஜீரணமான உணவை செரிப்பதற்காக அதன் வாயினுள் தள்ளுகிறது. அதற்கு “அலகு என்பது அம்மா”. அலகு நீண்ட மஞ்சள் நிறத்தில், முனையில் சிவப்புப் புள்ளியைக் கொண்டு இருக்கும் ஒரு அமைப்பு. விலங்குகளின் நடத்தைகளை ஆராயும் நிபுணரான நிக்கோலஸ் டின்பெர்ஜன் ஒரு முனையில் சிவப்பாக இருக்கும் நீண்ட கம்பு அந்தப் பறவைக் குஞ்சின் மூளையை ஏமாற்றும் என்று கண்டறிந்தார் – ந்யூரான்களின் தேவை எப்போதும் மிகச்சரியானதை நோக்கி இருப்பதில்லை என்பதால் இது சாத்தியமாகிறது. ஒரு துருப்பிடித்த சாவிகூட பூட்டைத் திறப்பதற்கு ஒப்பானது இது. இதில் குறிப்பிடத்தக்க கண்டறிதல், ஒரு நீண்ட, மெல்லிய கம்பு, மூன்று சிவப்புப் புள்ளிகளுடன் கூடியது பறவைக் குஞ்சுகளை உண்மையான அலகைவிட அதிகமாக ஈர்க்கிறது. இதற்கு ந்யூரான்கள் ஒன்றிணைக்கப்பட்டிருக்கும் விதம் காரணமாகும். இந்த மற்றொரு பொருள், அலகைப் போலில்லையென்றாலும் ந்யூரான்களை தீவிரமாகச் செயல்பட வைக்கிறது. கடற்பறவைகளுக்கு கலைக் கண்காட்சி ஒன்று இருந்திருந்தால், ஒரு நீண்ட கம்பை அங்கே வைத்து வழிபட்டு, அவற்றை கோடிக்கணக்கில் ஏலம் எடுத்திருக்கும். ஆனால் இது ஏன் என்பது அவைகளுக்கே புரியாத விஷயம். இதுவேதான் ஒரு கலைப் பொருட்களைச் சேகரிப்பவர் ஒரு பெரும் கலைப் படைப்பைச் – பிக்காஸோவையோ அல்லது சோழர்களின் வெண்கலச் சிலைகளையோ – சந்திக்க நேரும்போது நிகழ்கிறது. அது உண்மையான பொருட்களை விட உங்கள் மூளையை பார்வைமூலம் அதிகமாகச் சலனப்படுத்துகிறது.

கடந்த வருடம் இந்திய அழகியலாளரான அபினவ குப்தரின் 1000ஆவது ஆண்டுவிழா. இந்திய இலக்கிய மரபு, ‘விமர்சகர்’ என்ற கருத்தாக்கத்தைக் கொண்டிராவிட்டாலும், ஒரு தேர்ந்த வாசகரை ‘சஹ்ருதயர்’, அதாவது ‘ஒரே மாதிரியான இதயம் படைத்தவர்’ என்கிறது. அபினவ குப்தர் சஹ்ருதயர் என்ற சொல்லை ‘ஒருவருடைய மனமென்னும் கண்ணாடி (மனமுகுரா) அழுக்குகளைக் களைந்து, ஒரு கவிஞரின் இதயத்தின் ஒன்றிணையும் தன்மை கொண்டது’ என்கிறார். இது நவீன கோட்பாடான ‘ந்யூரோஸ்தெடிக்ஸ்’ உடன் ஒத்துப்போகிறதல்லவா? இந்த எட்டு விதிகளைக் கொண்டு எங்களுக்கு நீங்கள் ஒரு புதிய சாளரத்தைத் திறந்தது மட்டுமல்லாமல், அபினவ குப்தரின் மரபை சி.பி.ஸ்னோ கூறும் மூன்றாவது கலாசாரத்திற்கு எடுத்துச் செல்ல உதவி புரிந்திருக்கிறீர்கள் என்று சொல்லலாமா?

ஆம். அவர்தான் எல்லாவற்றையும் ஆரம்பித்தவர். அத்தோடு பரத முனிவரின் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாட்டிய சாஸ்திரமும் உள்ளது. ஆனால், ஒரு முக்கியமான கண்ணோட்டத்தைத் தருகிறேன். அது உயர்ந்த கலைப்படைப்புகளுக்கும் ஹோட்டல் வரவேற்பறைகளிலும், பெரிய ஷாப்பிங் ப்ளாஸாக்களிலும் பதாகைகளைப் போல் தொங்கும் கலைப் படைப்புகளுக்குமான வித்தியாசத்தைப் பற்றியது. இவ்விரண்டிற்குமான வேறுபாடு கலாசாரத்தின் அடிப்படையானதோ அல்லது ஜனநாயக முறைப்படித் தீர்மானிக்கப்பட்டதோ இல்லை. சொல்லப்போனால், பெரும்பாலானோர், உண்மையான படைப்புகளுக்கு நகரும்முன் இந்த ‘பதாகைகளையே’ அதிகமாக ரசிக்கின்றனர். ஆனால், ‘பதாகைகளாக’ இல்லாதவை ‘சிறந்தது’ என்று யார் தீர்மானிக்கிறார்கள்? என்னுடைய அளவுகோல் எதைக்கொண்டு தீர்மானிக்கப்பட்டது என்றால், நீங்கள் பதாகைகளிலிருந்து உயர் கலைகளுக்கு முன்னேற இயலும், ஆனால் உயர்கலைகளிலிருந்து, அதைச் சுவைத்த பின்னர், பதாகைகளுக்குப் பின்னோக்கிச் செல்ல இயலாது. இது கலையின் மர்மங்களை விளக்கும் குறிப்புகளை எனக்கு அளிக்கிறது. அழகியலைப் பற்றி எத்தனை விதமான விதிகளை நீங்கள் அறிந்திருந்தாலும், உங்களுக்குக் கலையைப் பற்றி எவ்வளவு தெரிந்திருந்தாலும், பதாகைகளுக்கும் உயர்கலைகளுக்குமான வேறுபாட்டை உங்களால் கண்டறிய இயலவில்லை என்றால், கலையைப் பற்றி நீங்கள் புரிந்துகொண்டிருக்கவில்லை என்றே நான் கூறுவேன்.

கலை அனுபத்தையும் மத ரீதியான அனுபவத்தையும் அளிக்கும் நரம்பியல் அனுபவங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவா? நமது மதரீதியான அனுபவங்கள் நம்முடைய பரிணாம உயிரியலை அடித்தளமாகக் கொண்டுள்ளதா?

இது இன்னும் ஆராயப்படவில்லை, ஆனால் உண்மையாக இருக்கக்கூடும். காணும் கலையாலோ அல்லது இசையாலோ உணர்ச்சிகளை நுட்பமாகத் தூண்டமுடியும். பிரிவினால் பெருங்குரலெழுப்பும் குழந்தைகளுடைய உச்சக்கட்ட உணர்ச்சியால் தூண்டப்பட்டு, கடற்பறவைக் குஞ்சு பற்றிய கோட்பாட்டின் அடிப்படையைக் கொண்டு, தர்பாரி கானடாவின் ஸ்வரவரிசை உருவாகியிருக்கலாம். பெற்றோரிடமிருந்து பிரியும்போது ஏற்படும் துயரம், ‘கடற்பறவைக் குஞ்சு விளைவின்’ வழியாக கடவுளிடமிருந்து பிரியும் நிலையாக உணரப்படுகிறது. (ஓ, என்னை ஏன் இந்த உலகிற்குக் கொண்டுவந்தாய் – துயரப்படுகுழியில் தள்ளிவிட்டு தனியாகத் தவிக்கும்படி செய்துவிட்டாய்.) ஆனால் இவை எல்லாம் நல்லபடியாக முடியும் என்று எனக்குத் தெரியும். ஆபேரி (உலகின் துயரத்தைப் பிரதிபலிப்பது) பைரவியோடும் (தனிப்பட்ட சோகத்தின் எளிமையான வடிவம்) சுபபந்துவராளி (தவம்) ஆகியவற்றோடு இதை ஒப்பிடலாம். தற்காலிகமான, உச்சரிப்பை அடிப்படையாகக் கொண்ட, எழுத்து வடிவம் இல்லாத வலது மூளையின் ‘மொழி’ உணர்ச்சிகளின் நுட்பத்தை வெளிக்காட்டுவதற்காகப் பயன்பட்டிருக்கவேண்டும். பொதுப் பள்ளியில் படித்த ஆங்கிலேயர் ஒருவர் ‘ரியலி’ என்பதை 11 முறைகளில் கூறமுடியும். ‘ஜான், சூசனைத் தள்ளிவிட்டு ஜன்னலின் ஊடே விமானத்தைப் பார்த்தான்?’ என்ற வாக்கியம் ஐந்து மாறுபட்ட பொருட்களை, எந்த இடத்தில் அழுத்தம் தரப்படுகிறது என்பதைப் பொருத்து, அளிக்க முடியும். உதாரணமாக ‘ஜான், சூசனைத் தள்ளிவிட்டு’ என்பதற்கும் ‘ஜான், சூசனை, தள்ளிவிட்டு’ என்பதற்கும் அல்லது ‘ ஜான் சூசனைத் தள்ளிவிட்டு, ஜன்னலின் ஊடே விமானத்தைப் பார்த்தான்’ என்பதற்குமான வேறுபாடுகள்.

நீங்கள் செய்வது, எல்லாவற்றையும் ‘நரம்பு உயிரியலின்’ வடிவமாக சுருக்குவது இல்லையா ?

ஒரு விஷயத்தை அதன் பகுதிகள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை விவரிப்பதன்மூலம் விளக்க இயலாது. உங்களை இணையோடு நீங்கள் உடலுறவு கொள்ளும்போது, அவரின் மூளையில் மின்கம்பிகளை வைத்து, அவரின் ந்யூக்ளியஸ் அக்யும்பென்ஸ் மற்றும் செப்டம் செயல்படுகிறது என்பதைக் காண்பிப்பதால், அவரின் உணர்ச்சிகளைக் குறைத்துக் கூறுவதாகக் கொள்ளமுடியாது, மாறாக அவர் நடிக்கவில்லை என்பதை அது நிரூபிக்கிறது.

நீங்கள் செலவுபிடிக்கக்கூடிய தொழில்நுட்பங்களை விட எளியவற்றையே விரும்புவீர்கள் என்று சொல்லப்படுகிறது. இதற்கு ஏதேனும் காரணமுண்டா?

ஏழ்மை உங்களை ‘அறிவாற்றல் மிகுந்தவராக’ ஆக்கி உங்கள் வாழ்வின் முற்பகுதியிலேயே வளங்களைச் சரியாகப் பயன்படுத்தச் சொல்லித் தருகிறது. தவிர அறிவியலின் வரலாறும் எளிமையின் முக்கியத்துவத்தைப் பற்றியே கூறுகிறது. உயர் தொழில்நுட்பத்தை நீங்கள் பயன்படுத்தத் துவங்கும் நிமிடத்திலேயே மூலப்பொருளில் இருந்து ஆய்வின் முடிவு வரை பல படிகள் உருவாகின்றன. அதனால் தரவுகளைத் தேவையில்லாமல் மாற்றக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. செயல்முறை என்பது முக்கியமானது என்றாலும் உங்கள் ஆராய்ச்சி கருத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும் – செயல்முறையினால் செலுத்தப்பட்டதாக இருக்கக்கூடாது. கடைசியாக, நவீனமான முறைகள் (குறிப்பாகக் கணிணிகளைப் பயன்படுத்தக்கூடியவை) உங்களை ‘அறிவியல்ரீதியாக’ ஏதோ சாதித்துவிட்டோம் என்று நினைக்கத் தூண்டக்கூடியவை. பீட்டர் மெடவார் கூறியதைப் போல உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது துரதிருஷ்டவசமாக அறிவுஜீவித்தனத்தின் குறியீடாக ஆகிவிட்டது.

‘மீம்’ என்ற சொல் டாக்டர் ரிச்சர்ட் டாக்கின்ஸால் 1976ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. விரைவிலேயே அது ‘மீமாட்டிக்ஸ்’ என்ற சர்ச்சைக்குரிய துறையை உருவாக்கியது, தற்போது அது சிறந்த சமூக அறிவியலாளர்களால் கைவிடப்பட்டும் விட்டது. ஆனால், இப்போது இணையத்தின் மூலம் மீம்கள் பரவலாகப் பயன்படுத்தப்படும் சொல்லாகிவிட்டது.

மீம் என்பது சிலேடைக்கும் மேலே – அது மரபணுவுடன் சேர்ந்து ஒலிப்பது. ஆனால் அடிப்படையில் அது மாறுபட்டது. மெண்டல் சித்தரித்ததுபோல, ஜீன்கள் அளவின் அடிப்படையில் பரம்பரைகளுக்குக் கடத்தப்படுகின்றன (தனிப்பட்ட வகைப்படுத்தல்). அவை பரவும்போது மாற்றமடைவதில்லை. மீம்கள் லாமார்கியன் வழியில் – நகலெடுத்தும் கற்பிக்கும் முறை மூலமும் – பக்கவாட்டிலும் (சமமானவர்களுக்கு) செங்குத்தாகவும் (பரம்பரைகளுக்கு) கடத்தப்படுகின்றன. மரபணுக்கள் கடத்தப்படுவது விதிகளுக்கு உட்பட்டு நடப்பது, பல தலைமுறைகளைக் கடந்தது; ஆனால் மீம்களின் பரவல் அப்படியல்ல. போலார் கரடி தனது கம்பளி ரோமத்தைப் பெற பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மரபணுக்களின் இயற்கைத் தேர்வு முறை மூலம் பரிணாம வளர்ச்சி பெற வேண்டியிருந்தது; ஒரு மனிதன், அவனுடைய தாயால் கொல்லப்பட்ட ஒரு போலார் கரடியின் ரோமங்களை எடுத்து அதன் பழக்க வழக்கங்களை பிரதிபலிப்பதை ஒரு மீமாக உருவாக்கலாம். இது ஒரு தலைமுறையிலேயே நிகழக்கூடியது. ஆனால் அதன் பரவல், விதிகளுக்கு முரணானது, குழப்பத்தைத் தரக்கூடியது, கணிக்க இயலாதது – சமூகவியலில் மெண்டலியன் மரபணுவியலைப் போன்ற தெளிவான விதிகள் இல்லை.

தொழில்நுட்பம் பற்றிய நிறைவான உரையாடலில் இருந்து மீண்டும் உங்களுடைய ஆராய்ச்சிக்குத் திரும்புவோம். உங்களுடைய புதிய ஆராய்ச்சி ஆர்வமான – காலண்டர் அக்னோஸியாவைப் பற்றிப் பேசினீர்கள். அது என்ன என்பதை வாசகர்களுக்குக் கூற முடியுமா?

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ப்ரான்ஸிஸ் கால்டன், நூற்றுக்கணக்கானவர்களை அவர்களுக்கு முன்னால் ஒரு வருடாந்தர காலண்டர் இருப்பதாக கற்பனை செய்துக்கொள்ளச்சொன்னார். நம்மில் பெரும்பாலானோர் ஒரு மங்கிய செவ்வகவடிவமான ஒன்றை நம்முடைய முகத்திற்கு நேரெதிராக இருப்பதாக கற்பனை செய்வோம். ஆனால், 50ல் ஒருவர் அவருக்கே உரிய, விசித்திரமான வடிவம் உடைய மிகவும் தெளிவான காலண்டர் ஒன்றை மனதில் கண்டார்கள். உதாரணமாக ஒரு L வடிவமாகவோ அல்லது மார்பின் குறுக்கே செல்லும் ஒரு ஹூலா-ஹூப் போலவோ – இடதுபுறம் டிசம்பரும் வலது புறம்ஜூலையும் இருக்கக்கண்டார்கள்.

வலதுகைப் பழக்கம் உடையவர்களுக்கு மாதங்கள் கடிகாரச் சுழற்சி முறையிலும் இடது கைப்பழக்கம் உடையவர்களுக்கு அவை கடிகாரத்தின் எதிர்ப்பக்க சுழற்சி முறையிலும் இருந்தன. இப்படி ஒரு நோய்க்கூறு இருப்பதையோ அதன் காரணத்தையோ யாரும் நம்பவில்லை. என்னுடைய குழு – என் பட்டதாரி மாணவர்களான டேவிட் ப்ராங், சாய்பட் சுன்ஹரஸ், ஸீவ் மார்க்கஸ், எட் ஹுப்பார்ட் உட்பட – நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விஷயத்தின் மீதான ஆர்வத்தை மீட்டெடுத்தது (ஷான்னா கோல்ஸன், ஸ்டான் டிஹைய்ன், ப்ரைன் பட்டர்வொர்த் ஆகியோரும் கூட). ஒருவர் நிஜமாகவே காலண்டரைப் பார்க்கிறாரா அல்லது மனதின் கண்களால் அதைக் காண்கிறாரா – அதாவது நீங்கள் இப்போது உங்கள் பட்லரின் உருவத்தை மனதில் ஒரு தெளிவில்லாத உருவமாகப் பார்ப்பதுபோல் – என்பதை அறியாமல் பல தசாப்தங்களாக பலர் குழம்பிக்கொண்டிருந்தனர். மூளையின் பிம்பத்தை ஆராயும் பல முயற்சிகள் தெளிவான முடிவெதையும் அளிக்கவில்லை. காலண்டரைப் பார்ப்பது போல் நினைத்துக்கொள்ளுமாறும் மாதங்களின் பெயர்களை தலைகீழாக ஒன்று விட்டு ஒன்றாக, அதாவது அக்டோபர், ஆகஸ்ட், ஜூன் என்று கூறுமாறு நாங்கள் பலரிடம் தெரிவித்தோம். சாதாரணமான மக்கள் இதற்கு 40 விநாடிகள் எடுத்துக்கொண்டனர். ஆனால் காலண்டரைத் தெளிவாகப் பார்ப்பவர்கள் எளிதாக மாதங்களை தலைகீழாக 15 விநாடிகளில் கூறிவிட்டனர்.

பல தசாப்தங்களாக தீர்வுகாணப்படாதது 30 நிமிடங்களில் சித்தரிக்கப்பட்டுவிட்டது. ஆனால், மேலும் பலரை ஆராய்ச்சிக்கு உட்படுத்திய பிறகே இதைப்பற்றி உறுதி செய்ய முடியும். இது எதேச்சையாக நிகழ்ந்ததாகக்கூட இருக்கலாம் – தலைகீழாகக் கூறுவதில் பங்கேற்றவர்களுடைய திறன் வேறுபட்டிருக்கலாம், காலண்டரைத் தெளிவாகப் பார்ப்பவர்கள் என்று நாம் கருதிய இருவர், மற்ற எட்டு பேருடன் ஒப்பிட்டுப்பார்க்கும்போது மிகுந்த திறன் பெற்றவர்களாக இருக்கலாம். நம்முடைய மனதிலுள்ள காலண்டரை அதிகமாக நாம் பொருட்படுத்துவதில்லை என்றாலும் எதிர்காலத்தைத் திட்டமிட அதை நாம் பயன்படுத்துகிறோம். இடது ஆங்குலர் ஜைரஸ் என்பது ஒரு சிறிய கட்டமைப்பு, அது மனிதர்களின் தனிப்பட்ட திறன்களைக் கொண்டிருக்கிறது – கணக்கிடுதல், விரல்களைப் பெயர் சூட்டி அழைத்தல், இடது / வலது வேறுபாடுகள் போன்றவை. வரிசை என்ற கருத்தாக்கம், அது காலத்தைப் பற்றியதாக இருந்தாலும் கூட, மூளையில் இடம்விட்டு நிரப்பப்பட்டிருக்கிறது என்று எனக்குத் தோன்றியது. ஏனெனில், எண்களுக்கும் வரிசைகளுக்குமான ஒரு அட்டவணையை உருவாக்க மூளைக்கு நேரம் இருப்பதில்லை. எனவே காலத்தை இடங்களாக அது பிரதிபலிக்கிறது. ஆங்குலர் ஜைரஸை மூளையின் மற்ற ஒரு கட்டமைப்பான ஹிப்போகாம்பஸ் உடன் ஐ.எல்.எஃப் (inferior longitudinal fasciculus) என்ற இழைகளால் ஆன தொகுதி இணைக்கிறது என்பதைக் கண்டு நான் வியந்தேன். இந்த ஹிப்போகாம்பஸ் மூளையின் ஜிபிஎஸ் சிஸ்டம் போலச் செயல்பட்டு இடம் சம்பத்தப்பட்ட ந்யூரான்களையும், அட்டவணை சம்பந்தப்பட்ட ந்யூரான்களையும் தன்னகத்தே கொண்டு, இடம், காலம் ஆகியவற்றிற்கான சிக்னல்களை அளிக்கிறது. எனவே இந்த ஆங்குலர் ஜைரஸ்-ஐஎல்எஃப்-ஹிப்போகாம்பஸ் சிஸ்டம் மூளையின் காலண்டர் என்று நாங்கள் தெரிவித்தோம். இந்த ஆங்குலர் ஜைரஸிற்கோ அல்லது ஐஎல்எஃபிற்கோ ஏற்படும் சேதம், ஒரு புதிய நோய்க்கூறுக்கு, நாம் ‘காலண்டர் அக்னோசியா’ என்ற அழைக்கும் பிரச்சினைக்கு இட்டுச்செல்லும். இது எதையும், காலண்டர் உட்பட, வரிசைப்படுத்த சிரமப்படும் நிலையைக் குறிக்கிறது. அண்மையில், ஆங்குலர் ஜைரஸில் சிறு குறையுள்ள, டிஸ்லெக்ஸிக் குறைபாடுள்ள குழந்தைகள் காலண்டர் அக்னோஸியாவின் கூறுகளைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்தோம்.

இங்கு நாம் காலத்தை ஒரு சுழற்சியாகக் காண்கிறோம், மேற்கத்தியர்கள் அதை நேர்கோடாகக் காண்கிறார்கள். இது போன்றுதான் கலாசாரத் தாக்கம் மூளையில் காலண்டரின் உருவாக்கத்தை நிர்ணயிக்கிறதா?

ஆமாம்; ஜெர்மனியர்களுக்கிடையே இது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது, இத்தாலியர்களுடையது தெளிவில்லாமல் உள்ளது. ஆய்வுக்கு உட்பட்ட ஒருவர் வலதுபக்கம் அவரது தலையைத் திருப்பியபோது, ஹூலா ஹூப் காலண்டர் அவரது மார்பின் முன்பாக நிலையாக நின்றது. ஆனால், அவரது இடதுபக்கக் காலண்டர் குழப்பமாக, தனித்தன்மையோடு இல்லாமல் இருந்தது. அந்தப் பக்கமிருந்த சில மாதங்களின் நினைவுகளும் தெளிவில்லாமல் இருந்தன; அவரது நினைவுகளை எட்டும் ஆற்றல், எந்தப் பக்கம் அவர் நோக்குகிறார் என்பதைப் பொருத்துத் தடைசெய்யப்பட்டிருந்தது. அவர் முன்னால் தொங்கும் ஒரு உண்மையான காலண்டரை அவர் பார்ப்பதற்கு இணையாக அது இருந்தது – ‘எம்பாடீட் காக்னிஷன்’ என்று நாம் அழைக்கும் நிலைக்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

நீங்கள் நரம்பியல் நிபுணராக ஆகியிராவிட்டால், என்னவாகியிருப்பீர்கள்?

சந்தேகமில்லாமல் ஒரு தொல்பொருள் ஆய்வாளராக – அதைப்பற்றி ஒரு உயர்வு நவிற்சியிலான வடிவம் எனக்கு உண்டு.

மூளையைப் பற்றிய ஆய்வில் ஆழமாக இறங்கும்போது ஒரு தொல்பொருள் ஆய்வாளராகவோ அல்லது தொல்லுயிரியாளராகவோ உணர்ந்திருக்கிறீர்களா?

நிச்சயமாக! பரிணாம வளர்ச்சியை தொடர்ந்து ஒன்றன்மேல் ஒன்றாக மூளை பதிவுசெய்து வந்துகொண்டிருக்கிறது – தொல்பொருள் ஆய்வாளர் பானைகள், ஆயுதங்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி செய்து எடுப்பது போல் மூளையும் ஒரு படிமச் சுரங்கம்.

உங்களுடைய தொல்பொருள் ஆர்வத்தைப் பற்றிப் பேசும்போது, தொல்பொருள் அகழ்வாய்வு இடங்களை மிகுதியாகக் கொண்டிருந்தும், இந்தியா அறிவார்ந்த முறையில் தனது கலாசார மரபைப் பேணாமல் இருப்பதை நாம் காண்கிறோம். இதை எப்படி சரிசெய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?

இந்தியத் தொல்பொருள் துறையின் சிறப்பையும், அது தரும் மகிழ்ச்சியையும் பற்றி நம் குழந்தைகளுக்கு பள்ளியில் கற்றுத்தரவேண்டும்; அவர்களில் பலர் ட்ராயைப் பற்றி அறிந்திருப்பார்கள். இல்லாவிட்டால் எட்டாம் ஹென்றியின் எட்டு மனைவிகளைப் பற்றியாவது (பிரிட்டிஷ் காலனி ஆட்சி- மெக்காலே திட்டத்தின் காரணமாக) அறிந்திருப்பார்கள். ஆனால் கிருஷ்ணர் ஆட்சி செய்த பழமையான நகரமான துவாரகையை எஸ்.ஆர்.ராவ் கண்டறிந்ததைப் பற்றி அவர்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். துரதிருஷ்டவசமாக, நிதி வசதிகள் இல்லாத காரணத்தாலும் மத ரீதியாகத் தவறாகப் பயன்படுத்தப்படும் என்ற காரணத்தாலும் – இந்தியாவில் வெகு சிலரே புதிய அகழ்வாராய்சிகள் தரக்கூடிய விரிவான சாத்தியங்களைப் பற்றி அறிந்திருக்கிறார்கள். இதைச் சொல்ல நான் தயங்குகிறேன்; நான் காவிமயமாகிவிட்டேன் என்று என்னைத் தூற்றக்கூடும். ஆனால் நமது நாகரிகத்தைப் பற்றிப் பெருமை கொள்வதையும் மத அடிப்படைவாதத்தையும் நாம் குழப்பிக்கொள்ளக்கூடாது. மேற்கத்திய நாடுகளில் – பைபிள் அடிப்படையிலான தொல்பொருள் துறை ஒரு வளர்ந்துவரும் துறையாகும் – அது கிறித்துவ அடிப்படைவாதத்தோடு கூட்டும் சேரவில்லை, அதை வெறுத்தும் ஒதுக்கவில்லை.

பழங்காலத்தில் ‘ஏழு பகோடாக்களை’க் குறித்த ஐதீகங்கள் இருக்கின்றன. சுனாமி இரண்டு புதிய பழங்கால இடிபாடுகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. ஆனால் இதை வைத்துக்கொண்டு மாமல்லபுரம் கடலடியில் ஏதோ மர்ம நகரம் இருப்பதாக கருதிவிட முடியாது. கடலின் கீழ் கோவில்கள் இருக்கக்கூடிய சாத்தியங்கள் இல்லை என்றாலும், இன்னும் தீவிரமாக கடல் அகழ்வாராய்ச்சி அங்கு நடத்தப்படவேண்டும்.

இதற்கு உதாரணங்கள் ஏதும் உண்டா?

பூம்புகாரில் கடலுக்கடியில் பல அகழ்வாராய்ச்சிகள் நடந்தன. அதில் ஒரு பழமையான நகரம் புதைந்து கிடந்ததற்கான அறிகுறிகள் கிடைத்தன. ஆனால் அது பழங்கதை என்று ஒதுக்கப்பட்டது (ட்ராய் நகரைப் போல). துரதிருஷ்டவசமாக, அதீதமானவற்றோடு வாழவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். நமது புராணங்களில் சொல்லப்பட்ட எதுவும் உண்மையில்லை என்று நம்பும், ஆங்கிலேயர் சொல்வதே சரி என்று வாதிடும் கூட்டம் ஒரு புறம். இதற்கு நேர்மாறாக, நமது புராணங்களை கேள்வி கேட்காமல் அப்படியே ஏற்றுக்கொள்வோர் மற்றொரு புறம். நமது முன்னோர்கள் ஆடம்பரமான விமானங்களில் பறந்தார்கள், அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். உண்மையான விவாதம் – அதாவது துவாரகாவும் பூம்புகாரும் இருந்ததா என்பது அங்கே மேலும் அகழ்வாராய்ச்சி செய்வதன் மூலமே தீர்வு காணக்கூடிய விஷயம். அதற்கு தனியார் தொழில்முனைவோர்களின் நிதி அவசியம். இது தென்கடற்கரைக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள பாலத்திற்கும் பொருந்தும். இந்தத் தலைப்பு அரசியல் ரீதியாக உஷ்ணத்தைக் கிளப்பிவிடக்கூடியது என்பதால், கல்வியாளர்கள் இதைத் தவிர்க்கிறார்கள். ஆனால் அருகிலுள்ள சுரங்கங்களில் நீரில் மிதக்கக்கூடிய எரிகற்கள் கிடைப்பது இந்தப் புராணம் உண்மையானது என்று என்னை நினைக்கத் தூண்டுகிறது. இந்தவகைக் கற்கள் ஒரு பாலத்தை நீரில் அமைக்க உதவக்கூடும் என்பது கோட்பாட்டளவில் சரியாகப் பொருந்துகிறது. ஆனால், எனக்கு இந்தியப் புவியியல் பற்றி எதுவும் தெரியாது என்பதையும், நான் இங்கு தவறு செய்யக்கூடிய சாத்தியம் உண்டு என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும். மரியாதைக்குரிய கல்வியாளர்களான பிபி லால், பத்ரி நாராயணன் போன்றோர் (முறையே இந்தியத் தொல்பொருள் துறை மற்றும் புவியியல் துறையின் தலைமை இயக்குநர்கள்) இந்தக் கருத்தை ஆதரிக்கின்றனர் (எச்சரிக்கையுடன்). என்னுடைய கவலை எல்லாம் இந்தியாவில் இது போன்ற விஷயங்களைப் பற்றிய ஆர்வம் அதிகம் இல்லை என்பதுதான். இந்தியாவில் பயணம் செய்யும்போதெல்லாம் இதைப் பற்றிக் குறிப்பிடுவேன், ஆனால் எனக்குக் கிடைப்பது ஒரு சங்கடத்தோடு கூடிய புன்முறுவல்தான், ஆச்சரியமும் உண்மையை அறிந்துகொள்ளும் பேரார்வமும் அல்ல. (இது முன்னாள் முதலமைச்சர் ஒருவரின் அந்தரங்க வாழ்வை அறிந்துகொள்ளும் ஆர்வத்திற்கு நேரெதிரானதாக இருக்கிறது.)

புராணங்களில் ஹனுமான் பிறந்ததாகக் கூறப்படும், ஹம்பியின் அருகில் உள்ள கிஷ்கிந்தா நல்லதொரு உதாரணமாக இருக்கக்கூடும். ஹனுமான், வாலி, சுக்ரீவன் ஆகியோரைப் பற்றிய கதைகள் ஹம்பியில் கொட்டிக்கிடக்கின்றன. ராமாயணத்தில் கூறப்படும் பல இடங்கள், அவற்றிற்கான தொலைவுகளோடு இவற்றை நாம் ஒப்பிட்டுப்பார்க்கலாம். இவை தூரதேசங்களிலிருந்தும் உள்ளூர்க் கதைகளிலிருந்தும் உருவானதாக நாம் எடுத்துக்கொண்டால், அவை கச்சிதமாகப் பொருந்துவதற்கான காரணம் எதுவும் புலப்படவில்லை. நீண்ட தூரத்தில் உள்ள கிராமங்களில் கூறப்படும் கதைகளில் வேறுபட்ட வடிவங்கள் பொருந்தி வருவதையும் நாம் காணலாம். உதாரணமாக, சித்திரக்கூடத்திலிருந்து கிஷ்கிந்தா உள்ள தூரம் சரியானதாக உள்ளதா? ராமாயணத்தில் பல குறிப்புகள் காணப்பட்ட போதிலும் அதன் பின்புலத்தில் இலங்கை அதிகமாக ஆராயப்படவில்லை என்றே சொல்லலாம்.

உங்களுடைய துறைக்குத் திரும்புவோம். பெரும்பாலானோர் உங்களை நரம்பியலோடு சம்பந்தப்படுத்துகிறார்கள். ஆனால் உங்களுடைய ஆராய்ச்சியின் முதல் பத்துவருடங்கள் பார்வையைப் பற்றியது அல்லவா? டிஎன்ஏ துறையில் புகழ்பெற்ற ஃப்ரான்ஸிஸ் க்ரிக் உங்களுடைய சோதனைகள் எளியவை ஆனால் அறிவார்ந்தவை என்று குறிப்பிட்டார். நோபல் விருது பெற்ற டேவிட் ஹூபெல் உங்களுடைய ஆராய்ச்சியை “துணிச்சலான, சார்பற்ற, அசலான, அறிவார்ந்த ஒன்று, நிபுணர்களாக இல்லாதவர்களும் அதேசமயம் என்னைப் போல மூளையை ஆராய்வதில் ஆயுளைக் கழித்தவர்களும் இதில் ஈர்க்கப்படுவார்கள்.” என்று குறிப்பிடுகிறார். ஏன் உங்கள் துறையை மாற்றிக்கொண்டீர்கள்?

ஏனென்றால் பார்வை பற்றிய ஆராய்ச்சியில் ஏகப்பட்ட நபர்கள் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்கள். அவ்வளவுதான்.

உங்களுடைய எந்த ஆராய்ச்சியாவது சர்ச்சைக்குள்ளானதா?

ஐன்ஸ்டீன் – போர் இடையேயான வாதம் அவர்களுடைய ஆய்வுகளை சர்ச்சைக்குள்ளானது என்றா நம்மை முடிவெடுக்க வைக்கின்றது. பல ஆண்டுகளாக இந்தத் துறையில் உள்ள அறிவியலாளர் ஒருவர் அவருடைய சகாவால், நிரூபிக்கப்படாதது என்று சொல்லக்கூடிய ஒன்றிரண்டு விஷயங்களைச் செய்திருப்பார். என்னுடைய துறையில், நோவம் சோம்ஸ்கி போன்றவர்கள் சர்ச்சைக்குள்ளானவர்கள் என்று கருதப்பட்டாலும் அவர்களுடைய ஆரம்பகால ஆய்வுகளையும், அறிவையும் கேள்விக்குள்ளாக்க முடியாது. நோபல் பரிசு பெற்ற ஃப்ரான்ஸிஸ் க்ரிக் போன்றவர்களுடைய கோட்பாடுகள் கூட பல முறை விமரிசிக்கப்பட்டிருக்கின்றன (நினைவைப் பற்றிய அவரது கோட்பாடுகள் போன்று). ஹெச்ஐவி எய்ட்ஸ் நோயை ஏற்படுத்துகிறது அல்லது உலகம் வெப்பமயமாகிறது போன்றவற்றைக் கூட விமரிசிப்பவர்கள் உள்ளனர். எங்களுடைய அதிபர்கூட வெப்பமயமாதல் கோட்பாட்டை விமரிசிக்கிறார்.

வலுவான பங்களிப்பை நீங்கள் அளித்து உங்களுக்கான உரிய இடத்தையும் நம்பகத்தன்மையையும் நிலைநிறுத்திக்கொண்டால், அவ்வப்போது நீங்கள் மேற்கொள்ளும் ஊகத்திலான முயற்சிகளை மக்கள் பொருட்படுத்துவதில்லை. என்னுடைய ஸ்டீரியோபோஸிஸ், மோஷன் பெர்ஸப்ஷன், ஷேடிங், ப்ளைண்ட் ஸ்பாட்ஸ், ஸினெஸ்தேஷியா, ஃபாண்டம் லிம்ப்ஸ் போன்றவை காலங்கடந்து நிலைத்து நிற்கின்றன, அந்தந்தத் துறைகளின் வளர்ச்சிக்கு ஓரளவு பங்காற்றியுள்ளன. ஆனால், மனிதர்களின் பரிணாம வளர்ச்சியிலும் ஆட்டிசத்திலும் மிர்ரர் ந்யூரான் அமைப்பு ஆற்றும் பங்கு பற்றிய என்னுடைய ஊகங்கள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. சிலசமயம் ஒரு கருத்து, அது தவறாக இருப்பினும், புதிய ஆராய்ச்சிகளுக்கு வித்திட்டு அதன் மூலமாக பயனளிக்கக்கூடியது என்பதையும் நாம் நிலைவில் வைத்திருக்கவேண்டும். ஷெர்லாக் ஹோம்ஸ் வாட்சனிடம் கூறியது போல “மை டியர் வாட்சன், உங்களுடைய எழுத்துக்களைக் கவனமாக நான் படிக்கிறேன். உங்களுடைய வாதங்களிலுள்ள குறைகள் புதிய தீர்வுகளைக் கண்டறிய எனக்குப் பயன்படுகிறது.”

முன்னாள் பட்டதாரி மாணவரான லாரா கேஸ் உடன் நான் ஈடுபட்டுள்ள புதிய ஆய்வு இதைப் போன்றது. ஏ.ஜி.ஐ. என்று அழைக்கப்படும் தனது பாலை மாறி மாறி உணரும் நிலை பற்றிய ஆய்வு இது. இதனால் பாதிக்கப்பட்ட ஒருவர் உடல்ரீதியாகப் பெண்ணாக இருந்தாலும் மனதளவில் ஒரு ஆணாக ஒவ்வொரு வாரமும் தன்னை மாற்றிக்கொண்டு, இல்லாத உறுப்புகளைக் கற்பனை செய்துகொண்டு, ஆணைப் போல் உடை அணிய விரும்புவார். இது வெறுமனே ‘தனது பாத்திரத்தை மாற்றிக்கொள்வது’ மட்டும் அல்ல, மூளையின் ஒரு பாதியிலிருந்து மற்றொரு பாதிக்கு மாறும் ஒரு தன்மை என்பதை நாங்கள் ஆய்வு செய்திருக்கிறோம். நம் எல்லாரிடமும் கூட பாலினம் நிலையாக இல்லாமல் மாறிக்கொண்டே இருக்கலாம்; நம் எல்லோரிடமும் ஒரு அர்த்த நாரீஸ்வரர் உள்ளார். இருந்தாலும் மூளைத் தூண்டல், மூளையைப் படமெடுத்தல் போன்ற ஆய்வுகள் மேலும் நடத்தப்படவேண்டும். இப்போதைய சான்றுகள் கோடிட்டுக்காட்டுகின்றனவே தவிர இறுதியானது அல்ல. திடீரென்று மூளையின் ஒரு பாதியை டிஎம்எஸ் (transcranial magnetic stimulator) தாக்குவது ஒரு மனிதரை பாலினத்தை மாற்றுவதற்கான காரணமாக உள்ளது என்று நாங்கள் ஊகிக்கிறோம்.

உயிரியலுக்கு டிஎன்ஏ ஆற்றிய பங்கைப்போல மிர்ரர் ந்யூரான்கள் மனநலவியலுக்கு பங்காற்றும் – ஒரு ஒருங்கிணைந்த கட்டமைப்பை அளிக்கும் என்று உங்களுடைய பிரபலமான கண்டுபிடிப்பைப் பற்றி கூறியிருந்தீர்கள். உங்களுடைய டெல்-டேல் ப்ரெயின் என்ற புத்தகத்தில் ஒரு அத்தியாயம் முழுவதும் நாகரிகத்தை செம்மைப்படுத்திய மிர்ரர் ந்யூரான்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதைப் பற்றி விளக்க முடியுமா?

அவை கண்டறியப்பட்ட உடன், பிரதி மூலம் கற்கும் திறனில் அவற்றின் பங்கு இருக்கலாம் என்று நான் கூறியிருந்தேன். இந்த முறையில் கற்பது உடனடியானது, சோதனை செய்து வெற்றி/ தோல்விகளின் மூலம் கற்கும் திறனிலிருந்து மாறுபட்டது (இயற்கைத் தேர்வு மூலமான கற்கும் முறை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பிடிக்கும்). எளிய முறையில் கூறுவதென்றால் இது பரிணாம வளர்ச்சியை டார்வின் முறையிலிருந்து லமார்க்கியன் முறைக்கு மாற்றுகிறது. வேறு எதற்காக இல்லாவிட்டாலும் இயங்கும் திறனைக் கற்பதற்காகவாவது இது பயன்படுகிறது. தவிர பச்சதாபம் என்ற மற்றவரின் பார்வையிலிருந்து பார்க்கும் தன்மையையும் இது அளிக்கிறது. “மனதைப் பற்றிய கோட்பாடு” – என்பதற்கு ஒரு வடிவம் அளிக்கிறது – இது சர்ச்சைக்குள்ளானது என்றாலும் கூட.

மிர்ரர் ந்யூரான்கள் பொன் விதி (golden rule) போன்ற பிரபஞ்ச அறங்களுக்கு அடிப்படையாக உள்ளது என்பது பற்றி…

நம்முடைய மூளைகள் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டுள்ளன – ஒட்டுண்ணி போல.

தொல்பொருள் பற்றிய உங்கள் ஆர்வத்திற்குத் திரும்புவோம். உங்களுடைய மற்ற விருப்பங்கள் என்ன?

எனக்கு சிந்துவெளி எழுத்துருவிலும் ஆர்வம் உண்டு. நரம்பியல் நிபுணர் எரிக் ஆல்ட்ஷூலரும் நானும் சிந்துவெளி எழுத்துருவுக்கும் ஈஸ்டர் தீவுகளிலுள்ள ரோன்கோரோன்கோ எழுத்துருவுக்கும் உள்ள ஒற்றுமையைப் பற்றி வியந்திருக்கிறோம். கிட்டத்தட்ட 20 குறியீடுகள் ஒன்று போல உள்ளன – ஆனால் இது தற்செயலானது என்று கல்வியாளர்களால் ஒதுக்கப்பட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் இவற்றின் பொருளைக் கண்டறிவதற்கான முறையைப் பற்றிய கட்டுரை ஒன்றை நான் எழுதினேன். ஒரு கணிணியைப் பயன்படுத்தி இந்த எழுத்துருக்களில் இரண்டு குறியீடுகள் அடுத்தடுத்து வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இயலும். புவியின் இரண்டு முனைகளில், நான்கு ஆயிரம் ஆண்டுகள் இடைவெளியில் இருந்தாலும் இந்த எழுத்துருக்களுக்கு இடையே ஏதேனும் தொடர்பு இருக்கவேண்டும். இதை யாரேனும் ஆராயவேண்டும்.

உங்களுடைய மற்ற ஆர்வங்களுக்கு வருவோம். உங்களுடைய அறிவியல் ஆய்வுகளின் ஒரு பகுதியாக காண் கலைகளைப் பற்றிய ஆர்வம் உங்களுக்கு உண்டு. ‘ஒரு சென்னைப் பையனாக’ இசையில் உங்களுக்கு ஆர்வம் உண்டா?

ஆமாம். கர்நாடக இசையில் உண்டு; என்னுடைய மனநிலையைப் பொருத்தது அது – செம்மங்குடி சீனிவாச ஐயர் அல்லது எம்டிஆர் அல்லது பீம்சென் ஜோஷியை நான் கேட்பதுண்டு. ஒருமுறை செம்மங்குடி சீனிவாச ஐயருடன் நான் நடத்திய உரையாடல் ஹிந்துப் பத்திரிகையில் பிரசுரமானது.

உரைகளை நிகழ்த்தும் போதோ அல்லது படைப்பூக்கச் செயல்களில் ஈடுபடும் போதோ நான் இசை கேட்பது வழக்கம். அவர்களுடைய கற்பனை ஸ்வரங்கள் மனதில் எதிரொலித்து உங்களைத் தூண்டுகிறது – இது அறிவியல் பூர்வமாக ஆராயப்படவில்லை என்றபோதும். மேற்கத்திய இசையைப் பொருத்த வரை அவர்களுடைய சாஸ்திரிய இசையையும் ஜாஸ் இசையையும் கேட்பதுண்டு. அண்மையில் கரோகே கூட எனக்கு அறிமுகமானது.

உங்களை அடிக்கடி ஷெர்லாக் ஹோம்ஸின் விசிறியாகக் கூறுவது உண்டு. சிலர் உங்கள் முறையை அவரது முறையோடு ஒப்பிட்டிருக்கிறார்கள். ஏன்?

பலர் அற்பமானது அல்லது தேவையில்லாதது என்று கருதுபவற்றைக் கொண்டு திருப்பம் தரக்கூடிய முடிவுகளை எடுக்கும் அவரது திறனை வைத்து இருக்கலாம்.

இப்போது ‘டாக்டர் வி.எஸ்.ராமச்சந்திரனின் நறுக்கு தெரித்தாற் போன்ற கருத்து மொழிகள்’ என பிரத்யேகமாக புகழ் பெற்றுவிட்ட சிலவற்றை வாசகர்களுக்காக சொல்லுங்களேன்.

All philosophy consists of exhuming, unlocking and recanting, what has been done before; and getting surly and riled up about it. (Readers can appreciate the pun: Hume, Locke, Kant, Searle and Ryle are famous philosophers.)

அறிவியல் நாம் அனைவரும் விலங்குகள் என்றே கூறுகிறது. ஆனால் நாம் அப்படிக் கருதுவதில்லை. விலங்குகளின் உடலில் சிறைவைக்கப்பட்ட தேவதைகளாக நாம் உணருகிறோம். நம்முடைய இறக்கைகளை விரித்துப் பறக்க விழைகிறோம். இது மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய சாதாரணமான இக்கட்டு.

எந்த ஒரு குரங்கும் வாழைப்பழத்தைப் பறிக்க முடியும், ஆனால் மனித இனம்தான் நட்சத்திரங்களை எட்டி, அதற்கு என்ன அர்த்தம் என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.

ஒரு நாடு நாகரிகமானதா இல்லையா என்பதை அதன் செல்வம் படைத்த 10 சதவிகித மக்களிலிருந்து அல்லாமல், கீழான நிலையிலுள்ள 10 சதவிகித மக்களை அவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதை வைத்தே தீர்மானிக்க இயலும்.

உங்களைப் பாதித்த சில மனிதர்கள் யார்?

பாங்காகிலுள்ள சுகும்விட் சாலைக்கு என்னுடைய பெற்றோர்கள் என்னை அடிக்கடி அழைத்துச் செல்வது வழக்கம். அங்கு தாய், கம்போடியன், இந்திய கலைப் பொருட்களைக் கண்டதால் என்னுடைய தொல்பொருள் மற்றும் நரம்பு-அழகியல் தொடர்பான ஆர்வம் தூண்டப்பட்டது. என்னுடைய தாயார் இந்தியாவைப் பற்றிய பாஷம்மின் புத்தகத்தை அளித்தார். இந்தியக் கணிதத்தைப் பற்றிய என்னுடைய ஆர்வத்தை அது கிளறிவிட்டது.

பொ.மு. முதல் ஆயிரமாண்டில் இந்தியாதான் பூஜ்யத்தைக் கண்டுபிடித்தது என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. ஆனால் அதிகம் அறியப்படாதது, இட மதிப்பு என்பதையும் அறிமுகப்படுத்தியது நாம்தான் என்பதை. உதாரணமாக 507 என்ற எண் 5 ஐ 100 ஆல் பெருக்கி, 0 வை 10 ஆல் பெருக்கி, 7ஐ 1 ஆல் பெருக்கி வருவது. தவிர இந்தியர்கள் 10 என்ற அடிப்படையைக் கண்டுபிடித்தது (சுமேரியர்கள் கண்டுபிடித்த 60 அடிப்படையைப் போல் அல்லாமல்), பூஜ்யம் என்ற இடமதிப்பு, ஒன்பது தனிப்பட்ட வடிவங்களைப் பயன்படுத்தியது போன்றவற்றைச் சேர்த்தால் கணிதத்தின் பிறப்பினை அறியலாம். ஐன்ஸ்டீன் இந்திய எண் முறையை ‘மனித மனத்தின் ஆகப்பெரிய கண்டுபிடிப்பு’ என்று வர்ணித்தார். மதிப்புமிக்க மருத்துவர்களான டாக்டர் ரமாமணி மற்றும் டாக்டர் சீதாராம் நாயுடு ஆகியோர்கள் என்னை மருத்துவப் படிப்பை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார்கள். பிரிட்டனில், ரிச்சர்ட் க்ரிகோரி, ஹோரஸ் பார்லோ, ஆல் ப்ராடிக் மற்றும் காலின் ப்ளாக்மோர். கால்டெக்கில் ஜான் பெட்டிக்ரூ. இந்தப் பட்டியலில் சேத்தன் ஷா மற்றும் சீதாராம் நாயுடு ஆகியோரையும் நான் சேர்க்கவேண்டும். எனது சென்னை வருகைகளின் போது இந்த இருவருடனும் நீண்ட தத்துவ விவாதங்களில் ஈடுபடுவேன்.

உங்களைப் பெருமைப்படவைத்த விருதுகள் என்னென்ன?

விருதுகளும் கௌரவங்களும் வரவேற்கப்படவேண்டியவையே. ஆனால் அவை கேக்கின் மேல் வைக்கப்படும் ஐஸ் போன்றது. அவை என்னாளும் கேக் ஆகாது; கேக் என்பது கண்டுபிடிப்பு. ஒரு நோயாளி மாதக்கணக்கில் அவதிப்படும் வலியை நீக்க ஒரு முறையை நான் கண்டுபிடித்து அது அவரின் வலியை நீக்கும் போது அவரது முகத்தில் தோன்றும் சிரிப்பு 10 விருதுகளுக்கும் ஈடாகாது. உங்களுக்கு ஒரு புதிய வழிமுறை திடீரென்று தோன்றி அது ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி துறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும்போது தோன்றும் உணர்ச்சியும் அப்படித்தான்.

பல பெரிய அறிவியலாளர்கள், அவர்களைப் பிரம்மரிஷி என்று அழைக்கவேண்டிய வசிஷ்டர்களுக்காக இன்னும் காத்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். என்னுடைய சிறுவயது ஹீரோக்களான ரஸ்ஸல், டாய்ன்பீ, மெடவார் போன்றவர்கள் உரையாற்றிய ரெய்த் உரைகளுக்கான அழைப்பு; லண்டனிலுள்ள ராயல் இன்ஸ்டிட்யூஷன் அளித்த ஹென்றி டேல் பதக்கம் ஆகியவை முக்கியமானவை. ராயல் இன்ஸ்டிட்யூஷனின் கௌரவ உறுப்பினராக நான் தேர்வு செய்யப்பட்டேன், லண்டனில் உள்ள அதனீயம் க்ளப்பின் வழக்கமான உறுப்பினராகவும் நான் இருக்கிறேன்.

அறிவியலின் மர்மங்களைப் பற்றி அறிய உங்களைத் தூண்டிய புத்தகங்களைப் பற்றி…

உங்களுக்கு ஒரு பட்டியலையே அளிக்க முடியும் – டார்வினின் எக்ஸ்ப்ரஷன் ஆஃப் எமோஷன்ஸ்; கானன் டாயிலின் ஹவுண்ட் ஆஃப் பாஸ்கர்வில்ஸ், டாக்கின்ஸின் எழுத்துகள், பீட்டர் மெடவார், ரிச்சர்ட் க்ரிகோரி, ஆலிவர் சாக்ஸ் மற்றும் பலர்.

உங்களுடைய ஃபாண்டம்ஸ் ஆஃப் த ப்ரெயின் மற்றும் த டெல்-டேல் பிரெயின் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கும் சாதாரணமானவர்களுக்கும் உந்துதலாக உள்ளது. பிரபலமான அறிவியல் எழுத்தாளர்களுக்கு- இந்தியாவைப் போன்ற காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு – என்ன சொல்ல விரும்புகிறீர்கள்.

ஒரு துப்பறிவாளரைப் போன்ற (ஷெர்லாக் ஹோம்ஸ்) அறிவியலின் தன்மைக்கு முக்கியத்துவம் அளியுங்கள். ஆர்வத்துடன் எழுதுங்கள். ஏனெனில் ஆர்வம் எளிதில் தெற்றிக்கொள்ளக்கூடியது. அறிவியலின் அழகியலைப் பற்றி விளக்குங்கள்- அறிவியலால் உருவாக்கப்பட்ட பொம்மைகளைப் பற்றிக் கவனம் கொள்ளாதீர்கள். இந்தியக் கல்லூரிகளும் பள்ளிகளும் திறமையான பொறியாளர்களையும் (வன்பொருள் மற்றும் மென்பொருள்) மருத்துவர்களையும் உருவாக்குகிறது. ஆனால் ஒரு நாகரிகம் அடைந்த நாடு என்பதாகத் தன்னை அறிவித்துக்கொள்ள அதற்கு தூய்மையான அறிவியல், கவிதை, கலை மற்றும் கணிதம் தேவை. பொறியியலாளர்களும் மருத்துவர்களும் மட்டுமல்ல. தினப்பத்திரிகை ஆசிரியர்கள் இதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.

இளம் அறிவியலாளர்களுக்கு என்ன அறிவுரை வழங்க விரும்புகிறீர்கள்?

அறிவியலின் வரலாறு பற்றிப் பரவலாக வாசியுங்கள்; ஆர்வம் மிக்கோருடன் தொடர்பில் இருங்கள்; எதிர்மறையானவர்களையும் மொண்ணையானவர்களையும் தவிர்த்துவிடுங்கள். அல்டௌஸ் ஹக்ஸ்லி “மொண்ணைகள் நாகரிகத்தின் ஆகப்பெரிய எதிரிகள்; கல்வித்துறையில் உள்ள அத்தகையோர் மிக மோசமானவர்கள்” என்றார். டெட் உரைகளைக் கேளுங்கள். எட்ஜ் இணையதளத்தையும் வோர்ல்ட் வெப் ஆஃப் ஸ்டோரீஸையும் வாசியுங்கள்

வரலாற்றை ஏன் கற்கவேண்டும் என்று உங்களிடம் கேட்கப்பட்டால் உங்களது பதில் என்னவாக இருக்கும்?

உங்களது ஆராய்ச்சியை சரியான வரலாற்றுப் பின்னணியில் பொருத்த அது உதவியாக இருக்கும். நீங்கள் தற்போது மேற்கொள்ளும் சிறிய சோதனை நூறாண்டுகளாக நடக்கும் நிகழ்வுகளின் ஒரு கண்ணி என்பதை நீங்கள் காணலாம். ஒரு பெரும் பயணத்தின் பகுதி நீங்கள் என்பதை உங்களால் உணரமுடியும். இரண்டாவது, நீங்கள் நிபுணர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம், வரலாற்றில் பதிக்கப்பட்ட அவர்களுடைய பாணி மற்றும் அவர்கள் சிந்தனை, செயல் ஆகியவற்றை அவதானிக்கலாம்.

UCSD இல் பணிபுரிவது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா?

நரம்பியலுக்கான மெக்கா அது. அமெரிக்க தேசிய ஆராய்ச்சி கவுன்ஸிலினால் அளிக்கப்படும் நரம்பியலுக்கான முதல் இடத்தை அது பெற்றுள்ளது. இது UCSD மட்டுமே, சால்க் அண்ட் ஸ்க்ரிப்ஸையும் நீங்கள் சேர்த்துக்கொண்டால் உலகிலுள்ள மதிப்புமிக்க நரம்பியலாளர்களின் எண்ணிக்கை இங்குதான் அதிகம் உள்ளது என்பதைக் காணலாம். அறிவியல் அறிவுக்கு இணை இல்லை, ஆனால் லா ஜொல்லா மற்றும் சான் டியாகோவில் கிடைக்காதது, இந்தியாவில் உள்ளது போன்ற (குறிப்பாக மயிலாப்பூரில்) பழமையும் கலாசார நுட்பங்களும்தான்.

அமெரிக்க கல்வி முறையிலிருந்து நாம் எதைக் கற்றுக்கொள்ளலாம் எதைத் தவிர்க்கலாம்?

நான் இரண்டு உலகங்களில் பயணிக்கிறேன். மருத்துவப் படிப்பு முடிந்தவுடன் கேம்ப்ரிட்ஜ் சென்றுவிட்டேன். இந்தியப் பல்கலைக் கழகங்களில் ஐஐடிக்கள், என்சிபிஐஆர், புனேயிலுள்ள டிஐஎஃப்ஆர், சிசிஎம்பி போன்ற சில பெரிய கல்விநிறுவனங்களைத் தவிர்த்து ஆராய்ச்சிகள் ஊக்குவிக்கப்படுவதில்லை. மாறாக மேற்கில் புனிதத்தன்மையும் தன்னிறைவு அடையும் தன்மையும் காணப்படுவதில்லை. இங்கே நான் இயற்கைக்கு மீறிய எதையும் குறிப்பிடவில்லை. எளிமையான விஷயங்களான, ஒரு புத்தகத்தை தெரியாமல் மிதித்தவுடன் அதை கண்களில் தொட்டு ஒற்றிக்கொள்வது போன்றவற்றை, மேற்கில் உள்ளோர் மூடநம்பிக்கை என்று கருதுவதை, நாம் சரஸ்வதியிடம் கேட்கும் மன்னிப்பு என்று சொல்வதைப் பற்றிக் கூறுகிறேன்.

எட்வார்ட் செட், கிழக்கைப் பற்றி புளகாங்கிதமடைந்த விக்டோரிய கால வழக்கத்தைக் குறிக்க ‘ஓரியண்டலிஸம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். இருந்தாலும் இந்தியா ஒரு கனவுகளின் நிலம். சொல்லப்போனால், மதத்தைப் பயன்படுத்தாமல் உலகை மகிழ்ச்சியுறச் செய்ய இந்தியா தேவை என்றே நான் கூறுவேன். இரண்டுவிதமான ஓரியண்டலிஸம் இருக்கலாம் – முதலாவது சுற்றுலா வகை (கறி, புனிதப் பசுக்கள், பாம்புப்பிடாரன்கள்) இது மேலோட்டமானது ஆனால் விளையாட்டாகச் செய்யப்பட்டால் ஆபத்தில்லாதது. இரண்டாவது தீவிரமான வகை (இது கிப்ளிங்கின் இந்தியா அல்ல, வில்லியம் ஜோன்ஸின் இந்தியா என்று சிலர் கூறலாம்). காளிதாசரின் சகுந்தலம் அளிக்கும் மனவெழுச்சி, ரவீந்திரநாத் தாகூர் மற்றும் தியாகராஜரின் பாடல்கள் அளிக்கும் ஆன்மிகம் இந்திய மனங்களில் எதிரொலித்துக்கொண்டே இருக்கும். இப்போது இந்தியாவின் தேவை வில்லியம் ஜோன்ஸ், தாகூர் போன்றவர்களின் மறுபிறப்புதான். அல்லது இந்திய எழுத்துருக்களைக் கண்டறிந்த பிரின்ஸெப், ஹென்ரிக் ஸிம்மர் (புராணங்கள்) மாக்ஸ்முல்லர் அல்லது ஆனந்த குமாரஸ்வாமி மற்றும் கபில வாத்ஸ்யாயனா (கலை) போன்றோர்தான். பேராசிரியர் எஸ் ஸ்வாமிநாதன், ஆர் கோபு, பத்ரி அடங்கிய எங்கள் குழு ஒன்று ஜோன்ஸின் ஆசியாடிக் சொசைட்டி ஆஃப் இந்தியாவை வேறு ஒரு பெயரில் மீண்டும் எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. ஏற்கெனவே நாங்கள் சில கூட்டங்களை நடத்தியிருக்கிறோம்.

நமக்குத் தேவையற்றது புகைப்பிடிப்போர் நிறைந்த, ஆங்கில மோகமுள்ளவர்களைக் கொண்ட காபி ஷாப்கள் – இந்திய கலாசாரத்தையும் மரபையும் அவமதிக்கும் அறிவுஜீவிகளைக் கொண்ட இடங்கள். அவர்கள் அதைப்பற்றிய அபிப்பிராயம் இல்லாதவர்களாகக்கூட இருக்கலாம். அல்லது சில அரசியல் இயக்கங்களுடன் சேர்த்துக் குழப்பிக்கொண்டிருக்கலாம். நமது ‘மோசமான எதிரிகளாக’ நாமே இருக்கக்கூடாது. ஒரு இந்திய மேல்நிலைப் பள்ளி அல்லது இளங்கலைப் பட்டதாரி மாணவர் காளிதாசனிலிருந்து ஒரு வரியைக்கூட சொல்ல முடியாதவராக, ஆனால் மனித நாகரிகத்திற்கு எந்த விதப் பங்களிப்பையும் அளிக்காத சர்ச்சில் போன்றவர்களைக் குறிப்பிடுபவராக இருப்பது ஒரு பெரிய ஆச்சரியம்.

பண்டைய நாகரிகங்களில் இந்தியா இரண்டு வகைகளில் தனித்தன்மை வாய்ந்தது; அவ்விரண்டும் கொண்டாடப்படவேண்டியவை, வரும் நாட்களுக்காக போற்றிப் பாதுகாக்கப்படவேண்டியவை. முதலாவதாக, அதன் தற்போதைய பழக்கங்கள், அறங்கள், மதக் கோட்பாடுகள் நேரடியான, விடுபடாத, தொடர்ச்சியான நான்காயிரம் ஆண்டுப் பழைமை வாய்ந்தவையாக இருக்கும் ஒரே நாடு இந்தியா. மேற்கிலும் புராணங்கள் உண்டு, க்ரீக் புராணங்களும் எகிப்திய புராணங்களும் உண்டு. ஆனால் ஸீயஸை இப்போது எவரும் வழிபடுவதில்லை, ஏதெனாவில் கோவில்கள் இல்லை. (ரா தேவதையை எகிப்தியர்கள் வழிபடுவதில்லை). ஏன் இவை முக்கியத்துவம் வாய்ந்தவை? நம்முடைய மரபுகளும் கலாசாரமும் நாம் ‘மனித இயல்பு’ என்று கருதுபவற்றில் 90 சதவிகிதம் கலந்துள்ளது; அவைதான் உலகில் மனிதர்களை வெற்றிகரமானவர்களாக உருவாக்குகிறது. அவை இல்லாவிட்டால் நம்முடைய குணங்கள் ஹோமோ எரக்டஸை விட சிறிதளவே மாறுபட்டிருக்கும். இங்கு நான் ஏற்கெனவே கூறிய ‘மிர்ரர் ந்யூரான்களைப்’ பற்றிச் சொல்ல விரும்புகிறேன். மிர்ரர் ந்யூரான்கள் மூளையில் தனித்தன்மையோடு இடம்பிடித்துள்ளன. கணக்கிடும் தன்மையில் நுட்பமானவைகளாகவும், குரங்குகளை விட மனிதர்களில் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருப்பவையாகவும் உள்ளன. இது புதிய திறன்களை பிரதி எடுப்பதன் மூலம் கற்றுக்கொள்ள உதவுகிறது. இது கலாசாரத்திற்கு முக்கியமான திறன்களை போதிப்பதற்கும் உதவுகிறது. மனிதர்களின் பரிணாம வளர்ச்சிக்குக் காரணமான வேகமாக மாற்றமடையக்கூடிய மரபணுக் கலாசாரத்திற்கு இதுவும் ஒரு காரணமாகும்

இரண்டாவது, மேற்கில் நாகரிகத்தின் இழைகளான இசை, காண் கலை, புராணம், மதம் ஆகியவை நன்கு வளர்ச்சியடைந்தவையாக இருந்தாலும் ஒன்றுக்கொன்று இணையாமல் தனித்தனியாக உள்ளன. சென்னையில் உள்ள என் வீட்டிலிருந்து வெளியேறி இரண்டு மைல் தொலைவில் உள்ள காபாலீஸ்வரர் கோவிலுக்குச் செல்கிறேன். அதன் அஸ்திவாரம் 2,000 ஆண்டுகளுக்கு முன் இடப்பட்டது. டாக்ஸி ஓட்டுநரின் பெயர் கணபத். கோவிலில் நுழையும்போது 4,000 ஆண்டுகள் பழமையான வேதங்களை சிறுவர்களின் குழு ஒன்று ஓதிக்கொண்டிருப்பதைக் காணலம்.

கருவறையின் உள்ளே சிவனின் சிற்பங்கள் உள்ளன- ஹரப்பாவின் முத்திரைகளில் உள்ள தெய்வம் இது (பொமு 3,000) – அதைச் சுற்றி வழிபடுபவர்கள் சமஸ்கிருத மந்திரங்களை ஓதுகின்றனர். லத்தீன், கிரேக்கத்தைப் போன்ற பழமையான மொழி அது – அதன் இலக்கணம் பாணிணியால் கிறிஸ்து பிறப்பதற்கு மூன்று நூற்றாண்டுகள் முன்னால் வகுக்கப்பட்டது. சில நூறு அடிகள் தொலைவில், ஒரு மனிதர் கணபதியின் சகோதரரான ஸ்கந்தனின் புகழைப் பாடி நடனமாடுகிறார். இந்த நடன வடிவம் – பரத நாட்டியம் பரத முனிவரால் பொமு 3ம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டது.

மேற்கைப் போல அல்லாமல், வாழ்வு மற்றும் கலாசாரத்தின் இந்த இழைகள் அனைத்தும் ஒத்திசைவோடு இயங்குகின்றன. ஒருவருடைய தினசரி வாழ்க்கையில் ஒரு அங்கமாக இவை விளங்குகின்றன.

*********

நாங்கள் கோவிலை விட்டு வெளியேறும் போது மல்லிகை, ரோஜா மாலைகளையும் விபூதியையும் விற்பனை செய்யும் கடைவீதிகளைத் தாண்டிச்செல்கிறோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இதை அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். டாக்டர் ராமச்சந்திரன் ஒரு சிறுவனைப் போல ஆர்வத்தை வெளிக்காட்டுகிறார். அவருடைய கழுத்தில் ஒரு கிருஷ்ணரின் டாலர் இருப்பதைக் காண முடிகிறது. கிருஷ்ணர் ஒரு விளையாட்டுப் பிள்ளையும் அதேசமயம் அறிவாளியும் கூட.

ஒரு மூலையில் நாங்கள் திரும்புகிறோம், அங்கே குச்சி (Gucci) கைப்பைகளும் கைக்கடிகாரங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. பழமையான மற்றும் நவீனமான இந்தியாவிற்கு இடையேயான வேறுபாட்டை இவை எடுத்துக்காட்டுகின்றன. எங்களைக் கடந்து பலர் செல்கிறார்கள். அவர்களிடம், குறிப்பாக குழந்தைகளிடம் நான் சொல்ல விரும்புவது, அங்குள்ள பழமையான கோவில் குளத்தையும் கடைக்காரர்களையும் வியப்புடன் கவனித்துக்கொண்டிருக்கும் அவர் ஒரு தொலைநோக்குப் பார்வையுள்ள, உண்மையைத் தேடி அலையும் ஒரு பெரிய மனிதர் என்பதைத்தான். ஒரு நாள் அவர் பெயர் இந்தியாவெங்கும் அறியப்பட்டு, வரும் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் ஒன்றாக அறிவியலையும் கலையையும் கண்டறியத் தூண்டுவதாக, மனித இனத்தை மூன்றாவது கலாசாரத்திற்கு – ஏன் நான்காவது கலாசாரத்திற்கு இட்டுச்செல்வதாக விளங்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது அறிவியலையும் கலையையும் இணைக்கும் பாலமாக மட்டுமல்லாமல், ஆன்மிகத்தையும் இணைக்கவேண்டும்.

(ஸ்வராஜ்யா ஆங்கில இதழில் வெளியான நேர்காணலின் தமிழ்வடிவம்.)

Posted on Leave a comment

கோயில் அறிவோம் – வல்லபா ஸ்ரீனிவாசன்

கோயில் என்பது கடவுள் வழிபாட்டுக்காக வகுக்கப்பட்ட இடம் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால் கோயில் என்பது இந்த ஒரு விளக்கத்திற்குள் மட்டும் அடங்கும் ஒன்றல்ல. கடவுள் கோயிலுக்கு வெளியிலும் இருக்கிறார். வழிபாடும் கோயிலுக்கு வெளியிலும் இருக்கிறது.

ஊர் மக்கள் புழங்குவதற்கு, சந்திப்பதற்கு ஒரு விஸ்ராந்தியான இடம். மனக்கவலைகளை சற்றே இறக்கி வைக்க ஒரு இடம். பாட்டு, நடனம், கதாகாலட்சேபம் எனக் கலைகள் முகிழும் இடம். சிற்பங்கள், கோபுரங்கள் எனக் கட்டுவித்து அக்கால அரசர்கள் கலையை உயர்வித்த இடம். அவர்கள் காலத்தில் ஒரு பாதுகாப்பிடம். செல்வங்கள் வைக்கப்படும் இடம். ஒரு ஊரின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஒரு முக்கியக் காரணி. வியாபாரிகளுக்கு ஒரு சந்தை. ஊரின் தண்ணீர்த் தேவைக்கும், ஊரைக் குளிர்விக்கவும், வெள்ளத்தை ஓரளவு உள்வாங்கிக் கொள்ளவும், சூழலை அழகுபடுத்தும் குளங்கள் அமைந்த ஓரிடம்.

திருவிழாக்கள் மூலம் மக்கள் ஒன்று கூடவும், ஒருங்கிணைந்து செயல்படக் கற்பதற்கும் ஒரு இடம். டீம் ஒர்க், ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் இப்படிப்பல அனுபவங்கள் கிடைக்கும் இடம். நிறைய சமைப்பது, விநியோகிப்பது, கூட்டத்தைச் சமாளிப்பது இவற்றுக்கு ஒருவிதமான பயிற்சி கிடைக்கும். மழை, வெள்ளம், பூகம்பம் என இயற்கையால் ஊர் ஆபத்துக்கு உள்ளாகும்போது இத்தகைய பயிற்சிகள் எப்படி உதவும் என்று யோசித்துப் பாருங்கள். விதவிதமான மக்களை ஒருவிதத்தில் ஒழுங்குபடுத்தும் இடம். திருப்பணிகளில் ஓரளவு உடற்பயிற்சியும், மனபலமும் உண்டாகிறது.

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். டாக்டர் நாகசாமி அவர்கள் லண்டன் கோர்ட்டில் நம் ஊர் நடராஜர் சிலைக்காக வாதாடியபோது, இந்தியக் கலை, ஆகமங்கள், சாஸ்திரங்கள் பற்றி நான்கு நாட்கள் தொடர்ந்து பேசியிருக்கிறார். கோயில் என்பதை விளக்கும்படி நீதிபதி கேட்க, அவர் நிதானமாக அனைத்தையும் கூறி, எப்படி ஒரு கல் மட்டுமே இருப்பினும் அது கோயிலே என்று புரிய வைத்திருக்கிறார்.

பல்லவர் காலத்தில் செம்மையாக்கப்பட்டு பின்னர் தொடர்ந்து சோழர், நாயக்கர் என்று கலையிலும், பிரமாண்டத்திலும் மேம்பட்டுக்கொண்டே சென்று இன்று கோயில்களின் நாடாகத் தமிழ்நாடு விளங்குகிறது.

இக்காலத்தில் இந்தக் கோயில் வழிபாடு சற்றே குழம்பிக் கிடக்கிறது. நசுங்கி கூட்டத்தில் தரிசனம் என்று ஏதோ பார்த்துவிட்டு பிரசாதத்துடன் வருவதுடன், நம் குழந்தைகளுக்கும் ஆர்வம் ஏற்படவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.  குழந்தைகளின் கவனத்தைத் தக்கவைத்துக் கொள்வது ஆசிரியர்களுக்கே பெரும்பாடாக இருக்கும் காலத்தில் காட்சி (விஷுவல்) மூலம் சொல்லிக் கொடுப்பதே சிறந்தது எனக் கருதப்படுகிறது. இந்த விஷுவல் என்பதின் சிறப்பை அறிந்து பல்வேறு விதமான சிற்பங்களையும், கடவுள் வடிவங்களையும், அவற்றின் சிறப்பைக் கூறுமாறு கலை வண்ணத்துடன் படைத்திருக்கின்றனர் நம் முன்னோர். நாமும் கொஞ்சம் முயற்சி செய்தோமானால் இவை நமக்குப் பல அரிய விஷயங்களைச் சொல்வதோடு ஒரு உயர்ந்த அனுபவத்தைத் தரும்.

சிலைகளை, கடவுள் வடிவங்களை நிதானமாகப் பாருங்கள். ஆராதியுங்கள், அதைப் பாடுங்கள், பாடிக் கேளுங்கள், கேட்டுக்கொண்டே அவற்றை ரசியுங்கள். ஒரு அனுபவத் தருணமாக அதை நம்மால் ஆக்க முடியும். எப்படி ஒரு மல்லிகைப்பூ வாசனையும் நாதஸ்வரமும் கல்யாண வீட்டை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறதோ அதைப்போல.

நம்முடைய வழிபாடுகளோ, விளக்கின் ஒளி, ஊதுபத்தி, பூக்களின் மணம், பலகாரங்களின் மணம், மாவிலையின் மங்கலம், கோலங்களின் அழகு, மணியின் ஓசை – இப்படி அனைத்து உணர்தல்களும் ஒன்று சேருவதாக இருக்கிறது. கோயில் என்பதில் ஒரு பேரானுபவம் பெறலாம். இதற்கு நாம் கோயில்களைப் பற்றியும், சிற்பங்களைப் பற்றியும் அறிந்து கொள்ளுதல் அவசியம். பல சிற்பிகளும், அரசர்களும், மக்களும் இணைந்து உருவாக்கிய இந்த அற்புதமான கோயில்களைப் பற்றி அறிந்து கொள்ளும்போதுதான், நமக்கு நம் நாட்டின், கலாசாரத்தின் உயர்வைப் பற்றிய பெருமை உண்டாகும்.

சிற்ப சாஸ்திரம் கோயிலின் பல பாகங்களையும் நுணுக்கமாகப் பெயரிட்டு விளக்குகிறது. நாம் பார்க்கப் போவது இதில் ஒரு துளி மட்டுமே. சில கலைச் சொற்களை அறிவது இதில் முதல் பாடம் என வைத்துக் கொள்ளலாம்.

கர்ப்ப க்ரகம்: இது நீங்கள் அறிந்ததே. மூலவர் எனப்படும் ஒரு கோயிலின் முக்கிய கடவுள் வடிவம் இருக்கும் இடம். இது பொதுவாக ஜன்னல்கள் ஏதுமின்றி அமைக்கப்பட்டிருக்கும்.

விமானம்: இந்த கர்ப்ப க்ரகத்தின் நேர் மேலே இருப்பது விமானம் எனப்படும். இதில் திராவிட, நகரி, கஜப்பருஷ்ட எனப் பல்வேறு விதங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் கலை வடிவில் வேறுபட்டவை. இந்த விமானத்தின்மீது சிகரம் இருக்கும். இந்த சிகரத்திலும் கலை வேறுபாடு உண்டு.

அதிஷ்டானம்: சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டிருக்கும் பீடம் போன்ற கீழ்ப்பகுதி அதிஷ்டானம் எனப்படும். இதில் நீங்கள் தாமரை இதழ்கள் போன்ற அமைந்த பத்மம் பகுதி; குமுதம் எனப்படும் வளைந்து காணப்படும் பகுதி இவற்றைப் பார்ககலாம். இவை ஒவ்வொன்றுக்கும் சிறப்புப் பெயர்கள் உண்டு.

கோஷ்டம்: கர்ப்பக்ரக சுற்றுச் சுவரின் மூன்று பக்கமும் அமைக்கப்பட்டிருக்கும் ஜன்னல் போன்ற அமைப்பே கோஷ்டம் எனப்படும். இந்த கோஷ்டத்தில் சிலை வடிவங்கள் இருக்கும். சிவன் கோயிலென்றால் துர்க்கை, நேர் பின்னால் லிங்கோத்பவர், தெற்கு நோக்கி தக்‌ஷிணாமூர்த்தி. இந்த கோஷ்டச் சிற்பங்கள் பெரும்பாலும் உள்ளிருக்கும் தெய்வத்தின் பிற வடிவங்களாக இருக்கும். பெருமாள் கோயில் எனில் நரசிம்மர், வராகர் உருவங்களை கோஷ்டத்தில் காணலாம்.

கொடுங்கை: சுற்றுச்சுவரின் மீது சன்ஷேட் போன்ற மழையிலிருந்து மறைவு, பாதுகாப்பு தரும் அமைப்பே கொடுங்கை எனப்படும். பல கோயில்களில் மிக அழகான வேலைப்பாடமைந்த கொடுங்கைகளைக் காணலாம்.

பிராகாரம்: கர்ப்பக்ரகத்தை வலம் வருவதற்கான வழி பிராகாரம். ப்ராகாரத்தில் பல உபதேவதா ஸ்வருபங்கள் இருக்கும்.

அர்த்த மண்டபம்: கர்ப்ப க்ரகத்தின் முன்னால் காணப்படும் மண்டபம். இதைப்போல மகாமண்டபம், நந்தி மண்டபம் எனப் பல மண்டபங்கள் உண்டு. இதற்கு வெளியே கோயிலின் வெளிப் ப்ராகாரம். எல்லா இடங்களிலும் சிற்பங்களையும், பல்வேறு கலை வேலைப்பாடுகளையும் காணலாம்.

கோபுரம்: வெளி நுழைவாயில் மேலே உயர்ந்து தோன்றுவதே கோபுரம். சோழர் காலத்திற்குப் பின்வந்த நாயக்கர் காலத்தில்தான் தற்போது காணப்படும் பிரம்மாண்டமான கோபுரங்கள் கட்டப்பட்டன. தஞ்சாவூர் பெரிய கோயிலில் உயர்ந்து காணப்படுவது கரப்ப க்ரகத்தின் மீதமைந்த விமானமே. கோபுரம் அல்ல. நாயக்கர்கள் கோயில்களில் பல மண்டபங்களை எழுப்பியும், கோபுரங்களைக் கட்டியும் கோயில் கலையை மேலும் வளர்த்தனர்.

சிற்பங்கள்: பல்வேறு விதமான சிற்பங்களை நாம் கோயில்களில் காண்கிறோம். அதில் சிலவற்றை அறிந்து கொள்வோம்.

இதை நாம் இரண்டு பகுதிகளாகப் பார்க்கலாம். ஒன்று, தனிச் சிற்பங்கள். கதை சொல்லும் சிற்பத் தொகுதிகள்.

தனிச் சிற்பங்கள் என்பது பல வகைகளில் காண்கிறோம். கடவுளின் அவதார வடிவங்களாக சித்தரிக்கப்பட்ட இவை பொருள் பொதிந்து ஒரு புராணக் கதையுடன் இணைந்து செதுக்கப்பட்டவை. e.g. தசாவதாரங்கள், சிவ மூர்த்தங்கள். இவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

சிற்பத் தொகுதிகள்[1] : இந்த சிற்பத் தொகுதிகள் புராணக் கதைகளில் வரும் காட்சிகளை சித்தரிப்பதாக இருக்கும். ராமாயணத்தின் ஒரு காட்சியாகவோ, பாகவதத்தின் ஒரு காட்சியாகவோ அவை இருக்கும். பல்வேறு நுணுக்கங்களை அதில் காட்ட சிற்பிகள் முயற்சித்திருப்பது நமக்கு ஆச்சர்யம் அளிக்கும்.

தனிச் சிற்பங்களில் தெய்வ ஸ்வரூபங்கள், பெண் வடிவங்கள், மிதுனச் சிற்பங்கள், யாளிகள், விலங்கு வடிவங்கள் எனப் பலவற்றை கோயில்களில் காண்கிறோம்.

சில தெய்வ ஸ்வருபங்களை முதலில் பார்ப்போம்.

 மகிஷாசுரமர்த்தினி: கொடூரச் செயல்களைப் புரிந்த மகிஷனை அழிப்பதற்காக சிவன், விஷ்ணு, ப்ரம்மா அனைவரும் தங்களது சக்தியை ஒன்று கூட்டி, தங்கள் ஆயுதங்களை வழங்கி உருவாக்கியதே மகிஷாசுரமர்த்தினி ஸ்வருபம். இதனால் இவள் கைகளில் சக்ராயுதம், சங்கு, சூலம், வில், மணி எல்லாம் இருப்பதைப் பார்க்கலாம். பல இடங்களில் மகிஷனைக் கொல்வது போலவும், கொன்ற தலை மீது நிற்பது போலவும் இந்த வடிவத்தைக் காண்கிறோம்.

தக்‌ஷிணாமூர்த்தி: சிவஸ்வரூபம். குருவாக சிவபெருமான் ஞானத்தை போதிக்கும் வடிவம். அறியாமை எனும் அசுரனைக் காலடியில் மிதித்தவாறு, யோக நிலையிலோ, முனிவர்களுக்கு போதிக்கும் நிலையிலோ காணப்படும் வடிவம். ஆலமரத்தின் கீழ் அமர்ந்தபடி தெற்கு நோக்கிய கோஷ்டத்தில் காணப்படும் வடிவம். இதற்கும் நவக்ரகத்தில் உள்ள குருவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நவக்ரகத்தில் ஒன்றான (வியாழன்) குருவுக்குச் செய்வதாகப் பலரும் தட்சிணாமூர்த்திக்கு பரிகார பூஜைகள் செய்வது போன்ற அஞ்ஞானம் இருக்க முடியாது. ஞான ஸ்வரூபருக்கு அஞ்ஞானிகளின் படையல்.

லிங்கோத்பவர்: இந்த வடிவம் கர்ப்ப க்ரகத்தின் நேர்பின்னால் உள்ள கோஷ்டச் சிற்பம். ப்ரம்மாவும் விஷ்ணுவும் உயர்ந்து நிற்கும் சிவபெருமானின் தலையையும் காலையும் காணும் பொருட்டு அன்னமாகவும் வராகமாகவும் உருவெடுத்து மேலும் கீழும் பயணிப்பது போன்ற ஒரு சிற்பம். இருவருமே காண முடியாமல் போவதை உருவகமாக இச்சிற்பம் காட்டும். அதாவது சிவனின் தலைப்பாகமும், காலும் இந்த வடிவில் லிங்கத்தின் உள் ஒளிந்திருப்பது போல வடிக்கப்பட்டிருக்கும்.

பிட்சாடனர்: ரிஷிகள் யாகங்களில் ஈடுபட்டு சிவபெருமானை வழிபடாமலிருக்கும்போது அவர்கள் கர்வத்தை அடக்கும்பொருட்டு எடுத்த அவதாரமே பிட்சாடனர். இச்சிற்பத்தில் சிவபெருமான் மிகுந்த எழிலோடு பிச்சை எடுப்பது போலவும், ரிஷி பத்தினிகள் அவர் அழகில் மயங்கிக் கிடப்பது போலவும் சித்தரிக்கப்பட்டிருக்கும். சுற்றுப் ப்ராகாரத்திலும், கோபுரங்களிலும் இச்சிற்பம் பல இடங்களில் காணப்படும்.

இதைப்போல கஜசம்ஹாரமூர்த்தி, த்ரிபுராந்தகர், ஊர்த்வ தாண்டவர், நடராஜர், கங்காதரமூர்த்தி, காலாரி மூர்த்தி, சதாசிவர் எனப் பலவகை மூர்த்தங்களை சிவன் கோயில்களில் காணலாம். கர்ப்ப க்ரகத்தில் லிங்கம் மட்டுமே இருப்பதால் இம்மூர்த்திகளை கோஷ்டச் சிற்பங்களாகவே காண்கிறோம்.

இதைப் போலவே விஷ்ணு கோயில்களில் அவரது தசாவதார வடிவங்கள் செதுக்கப்பட்டிருக்கும். கர்ப்பக்ரகத்தில் அனந்த சயனப் பெருமாள், வராகர், ராமர், கிருஷ்ணர், நரசிம்மர் என பல விஷ்ணு வடிவங்களைப் பார்க்கிறோம்.

வராகமூர்த்தி: இரண்யாட்சகன் பூமியை ஒளித்து வைத்தபோது வராக வடிவமெடுத்து அவனை அழித்து கடலடியிலிருந்து பூமாதேவியைக் காத்தருளுவதாக புராணக்கதை. கீழிருந்து மேல் நோக்கிச் செல்வது போலவும், பூமாதேவியைக் கையில் ஏந்தியவாறும் காணப்படும் இவ்வடிவம்.

த்ரிவிக்ரமன்: வாமனாவதாரம் எடுத்து மஹாபலியிடம் மூன்றடி நிலம் கேட்டு உலகளந்த புராணக் கதை. ஒரு கால் மேலே தூக்கியபடியும், நெடிதுயர்ந்து நிற்பது போலவும் இச்சிற்பம் வடிக்கப் பட்டிருக்கும்.

நரசிம்மர்: பிராகாரங்களில் சிற்பிகளால் பலவகையாகப் படைக்கப்பட்ட ஒரு உருவம் நரசிம்மர். குடலைக் கிழிப்பது போலவும், இரண்யனைத் தூக்கிப் பிடிப்பது போலவும் பல்வேறு விதமாக வடிக்கப்பட்ட சிலைகளைப் பல இடங்களில் காண்கிறோம்.

சிவ விஷ்ணு வடிவங்கள் இவ்வாறிருக்க பல்வகையான பெண் உருவங்களைக் கோயில்களில் காண்கிறோம். சிலவற்றைப் பார்ப்போம்.

சாலபஞ்சிகா: கொடியைத் தாங்கிப் பிடித்தவாறு நிற்கும் பெண். அழகான இவளைப் பல இடங்களில் காணலாம்.

கங்கா, யமுனா: கோயில் கோபுர வாயிலின் இரு புறமும் இரு பெண் உருவங்கள் இருக்கும். இவை கங்கை, யமுனை நதிகளை உருவகப்படுத்திய வடிவங்கள். கங்கை மகரம் எனப்படும் முதலையின் மீது நிற்பது போலவும், யமுனை கூர்மம் என்ற ஆமையின் மீது நிற்பது போலவும் சித்தரிக்கப்பட்டிருக்கும். கங்கையில் முதலை இருப்பதையும், யமுனையில் ஆமை இருப்பதையும் குறிப்பிடுவதாக இருக்கின்றன இச்சிற்பங்கள்.

அடுத்த முறை கோயில் செல்லும் போது இவற்றை கவனித்துப் பாருங்கள். சிற்பத் தொகுதிகளை பின்னர் பார்க்கலாம்.

Posted on Leave a comment

மின்சாரமும் ஜடத்துவமும் – ஹாலாஸ்யன்

மாலை ஆறு மணிக்கு அலுவலகம் விட்டுக் கிளம்பி, போக்குவரத்து நெரிசலில் ஆய்ந்து ஓய்ந்து, சாலையில் நாலுபேரிடம் திட்டு வாங்கி, நாலுபேரின் சந்ததியைத் தோண்டி எடுத்துத் திட்டி, நசநசப்பில் வீட்டுக்கு வந்து ஏஸியைத் தட்டி விடுகிறீர்கள். முகம் கழுவப் போனால் குழாயில் தண்ணீர் சன்னமாக வருகிறது. சமாளித்து வெளியே வந்து மோட்டாரைப் போட்டுவிட்டு, ஃப்ரிட்ஜைத் திறந்து தண்ணீர் எடுத்துக் குடித்துவிட்டு தொலைக்காட்சியை உயிர்ப்பித்து அமர்கிறீர்கள். நீங்கள் ஒருவர் மட்டும் செயல்படாமல் இருந்த ஐந்தாறு மின் உபகரணங்களை ஓட வைத்திருக்கிறீர்கள். நீங்கள் இருக்கின்ற அடுக்குமாடி வளாகத்தில் உங்களைப் போலவே ஏஸி, மோட்டார், ஃப்ரிட்ஜ், தொலைக்காட்சி என எல்லாவற்றையும் தொடக்கியிருப்பார்கள்தானே. உங்கள் குடியிருப்பைப் போலவே எத்தனை குடியிருப்புகள்? எவ்வளவு மக்கள்? அரை மணி நேர இடைவெளியில் மின்சாரப் பயன்பாடு சட்டென உச்சத்தைத் தொடும். இதைப்போலவே காலையில் கிளம்புகையிலும் எல்லா உபகரணங்களும் ஓடும். மதியம் ஒரு நான்கு மணி நேரம் குடியிருப்புகளின் மின்சாரத் தேவை கொஞ்சம் குறையும். இதையெல்லாம் யார் சரிசெய்கிறார்கள்? யார் நிர்வகிக்கிறார்கள்?

மின்பகிர்மான அமைப்பு (electricity supply grid) என்ற ஒரு அமைப்பு தொடர்ச்சியாக மின் உற்பத்தி, மின்தேவை இரண்டுக்குமான வேறுபாட்டைத் தொடர்ந்து கவனித்து உற்பத்தியைக் கூட்டவோ குறைக்கவோ செய்யும். மின் உற்பத்திக்கு நாம் ஆற்றல் மூலங்களை நம்பியிருக்கிறோம்.

பள்ளிப்பாடங்களைக் கொஞ்சம் நினைவு கூர்ந்தால், எட்டாங்கிளாஸ் பாடத்தின்படி ஆற்றல் இரண்டு வகைப்படும். மரபு சார் ஆற்றல் (conventional), மரபு சாரா ஆற்றல் (non-conventional). இன்றைய தேதிக்கு பெரும்பான்மை மின் உற்பத்தி நமக்கு மரபு சார் ஆற்றல் மூலமாகக் கிடைக்கிறது. அனல், புனல், அணு இதைத்தவிர இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்கள் நமது பெரும்பான்மை ஆற்றல் தேவையைப் பூர்த்தி செய்கின்றன. காற்றாலைகள், சூரிய சக்தி மூலம் மின்சாரம், புவிவெப்ப ஆற்றல் (geothermal) ஆகியவை மரபு சாரா ஆற்றல் மூலங்கள்.

இந்த மரபு சார் ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிப்பதன் அடிப்படை ஒன்றுதான். அது ராட்சத டர்பைன்களை இயக்குதல். அணுக்கருச் சிதைவின் மூலம் கிடைக்கும் வெப்பம், நிலக்கரி, எரிவாயு ஆகியற்றை எரித்துக் கிடைக்கும் வெப்பம் இவற்றைக் கொண்டு நீரை நீராவியாக்கி அதனைக் கொண்டு ராட்சத டர்பைன்களை இயக்குவார்கள். புனல் மின்சாரத்தின் நீராவிக்குப் பதிலாக நீரே டர்பைன்களைச் சுழற்றும். அந்த டர்பைன்கள் மிகப் பிரம்மாண்டமாக இருக்கும். அவற்றைச் சுழற்ற ஆரம்பிப்பது மிகக் கடினம் என்றாலும், அந்த ராட்சத அளவுகளில் நமக்கு ஒரு நன்மை இருக்கிறது. அதுதான் ஜடத்துவம் அல்லது நிலைமம். ஆங்கிலத்தில் inertia. மூன்றாம் விதி அளவுக்கு நம்மிடையே அதிகம் பிரபலமாகாத ஐன்ஸ்டைனின் முதல் விதி. இயக்கத்தில் இருக்கும் ஒரு பொருள் இன்னொரு விசை வந்து நிறுத்தும் வரை இயங்கிக்கொண்டே இருக்கும். அதனால் இந்த மின் நிலையங்கள் ஏதேனும் பெரிய சிக்கலால் முடங்கினாலோ, உயர் அழுத்த மின் கம்பிகள் அறுந்துபோய் மின்சாரம் தடைப்பட்டாலோ டர்பைன்கள் நின்று விடாது. அதன் பெரும் நிறையால், மாதக்கணக்கில் வருடக் கணக்கில் சுழன்றுகொண்டிருந்த காரணத்தால், சுற்றிக்கொண்டிருந்த வேகத்தில் சற்று நேரம் சுற்றிவிட்டுத்தான் அடங்கும். இதற்கு மின் பகிர்மான அமைப்பின் ஜடத்துவம் system inertia என்று பெயர். இப்படி ஒன்று இருப்பதால்தான் அந்த நேரத்தைப் பயன்படுத்தி மற்றொரு மின் நிலையத்தை முடுக்கிவிட்டு தேவையை ஈடுகட்டுவார்கள்.
இது மின்நிலையம் செயலிழந்தால் மட்டுமல்ல, நாம் தொடக்கத்தில் பார்த்த காலை மாலை அதிகத் தேவைகளை ஈடுகட்ட, கூடுதல் மின்நிலையங்களில் இருந்து மின்சாரத்தை வாங்கி அளிக்க வேண்டிவரும். இந்த சிஸ்டம் இனர்ஷியாதான் நமக்குச் சமாளிக்கும் நேரத்தைத் தருகிறது. இதனை மின் பகிர்மான வட்ட எதிர்வினை நேரம் grid response time என்கிறார்கள். (இங்கு நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. திடீர்த் தேவைகளைச் சமாளிக்க வெகு சில மின்நிலையங்களைத் தவிர மீதி அனைத்தையும் அதன் முழுத் திறனோடு இயங்கச் செய்ய மாட்டார்கள். இதுபற்றி பின்னால் விரிவாய்ப் பார்ப்போம்.)

மேலும் நமக்கு வரும் மின்சாரத்திற்கு, மின்னழுத்தம் (voltage), மின்னோட்டம் (current) என்ற இரண்டையும் தவிர அதிர்வெண் என்று ஒரு அளவும் இருக்கிறது. ஒரு நொடிக்கு எத்தனை அலைச்சுழல்கள் என்பதுதான் அந்த அதிர்வெண். பெரும்பான்மை நாடுகளில் இது 60 ஹெர்ட்ஸ். வினாடிக்கு அறுபது அலைச்சுழல்கள். அமெரிக்கா வழக்கம்போல விதிவிலக்கு, 50 ஹெர்ட்ஸ். இந்த அதிர்வெண் சரியில்லையெனில் நமது பெரும்பான்மை மின் உபகரணங்கள் சரிவர இயங்காது. முக்கியமாக விளக்குகள். சரியான அதிர்வெண் இல்லாமல் போனால் மினுக்கி மினுக்கி எரியும். இந்த அதிர்வெண் ஒழுங்கிற்கும் அந்த மின்பகிர்மான வட்டம் முழுதும் இருக்கும் மின்நிலையங்களின் ஜடத்துவம் முக்கியம். இத்தனை நாள் இதெல்லாம் பெரிய ராட்சத டர்பைன்களால் ஒழுங்காக ஓடிக்கொண்டிருந்தது. நாம் மரபு சாரா ஆற்றலைப் பயன்படுத்த ஆரம்பித்தது முதல் இதில் சில சிக்கல்கள்.

சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையில் நகரும் பாகங்களே கிடையாது. அதனால் அதில் ஜடத்துவம் கிடையவே கிடையாது. காற்றாலை மின்சார உற்பத்தி முறையில், காற்றாலைகளுக்கு ராட்சத இறக்கைகள் இருந்தாலும் ஒரு டர்பைன் தரும் ஜடத்துவத்தை அவற்றால் தந்துவிட முடியாது. மேலும் ஒவ்வொரு காற்றாலையும் ஒவ்வொரு வேகத்தில் சுழலக் கூடும். சூரிய ஒளி, காற்றாலை மின் உற்பத்தி இரண்டும் நிச்சயமில்லா அடிப்படைதான். மேகம் மூடினாலோ அல்லது காற்று நின்றாலே உற்பத்தி நின்றுவிடும்.

மரபு சாரா ஆற்றலை நாம் மின்பகிர்மான வட்டத்தில் இணைக்கையில் இந்த நிச்சமின்மையை நிச்சயமாகக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டி வரும். எவ்வளவுக்கெவ்வளவு மரபு சாரா மின்சாரம் நோக்கி நகர்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நாம் நிச்சயமின்மையையையும் ஏற்கிறோம் என்பது தெளிவு. தீர்வுகள் மின் உற்பத்தி அல்லது மின் பயன்பாடு என்று இருமுனைகளில் இருந்தும் செய்யலாம். மின் பயன்பாடு என்பது நாமெல்லாம் இப்போது இருக்கிற அதிர்வெண் சார்ந்து இயங்கும் மின் உபகரணங்களைக் கடாசிவிட்டு, அதிர்வெண் சாரா உபகரணங்களாகப் பயன்படுத்தலாம். இது நடைமுறையில் சாத்தியமற்றது. காரணம் 60 ஹெர்ட்ஸுக்குப் பழகித் தொலைத்துவிட்டோம். மின் உற்பத்தி முனையில் இது கொஞ்சம் எளிது. (நம் கண்ணோட்டத்தில் இருந்துதான். மின் நிலையப் பொறியாளரிடம் கேட்டால் மாற்றிச் சொல்ல வாய்ப்பிருக்கிறது).

எதற்கும் இருக்கட்டும் என்று சில மின்நிலையங்களை தேமேயென்று சும்மா ஓடச்செய்யலாம். தேவைப்படுகையில் மின்சாரம் தயாரித்துப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் பாருங்கள், இந்த அனல், அணு, புனல் மின் நிலையங்கள் கொஞ்சம் மந்தம். “ந்தா வரேன்” என்று மெல்ல மந்தமாய் வேகமெடுப்பதற்குள் இங்கு எதிர்வினை நேரம் முடிந்தே போயிருக்கும். இயற்கை எரிவாயு மின் நிலையங்கள் நம் அவசரத்துக்குக் தோதானவை. ஆனால் கற்பனை செய்து பாருங்கள். எந்த இயற்கை அழிவில் இருந்து பாதுகாக்க நாம் சூரிய, காற்றாலை மின்சாரத்தைக் கொண்டு வருகிறோமோ, அந்த சூரிய காற்றாலை மின் உற்பத்தியில் பின்னடைவை அதே அழிவு ஏற்படுத்தும் அமைப்புகள்தாம் ஈடுகட்டுகின்றன. இதற்கு முன்னராவது அவை முழு நேரமும் மின் உற்பத்தியில் ஈடுபட்டிருந்தன. இப்போது எப்போது வேண்டுமானாலும் தேவைப்படும் என்று வெற்றாய் ஓடவைக்கப்பட வேண்டும். மேலும் திடீர் திடீரென இயங்கும் வேகத்தை மாற்றுதல் என்பது பராமரிப்புச் செலவு எனும் தேரை இழுத்துத் தெருவில் விட்டுவிடும். கொஞ்சம் ஒதுங்கி ஒரு சின்ன கணக்கு பார்ப்போம்.

படத்தில் பார்ப்பது வருட வாரியாக அமெரிக்கா கலிஃபோர்னியாவின் , சராசரியாக ஒரு நாளின் மின்தேவை (மெகாவாட் அளவுகளில்). மேலே இருக்கும் படத்தில் காலை 6-9, மாலை 6-9 ஒட்டகத் திமில் போல இருக்கிறதா? இந்த வரைபடத்திற்கு ஒட்டக வளைவு (camel curve) என்று பெயரிட்டிருக்கிறார்கள். இடையில் இருக்கும் பள்ளம் மின் பயன்பாடு குறைவதையும் சூரிய மின்சாரம் முழு அளவில் இயங்குவதால் மைய மின் உற்பத்தியில் தேவை குறைவையும் சுட்டுகிறது. அப்படியே கீழ் படத்திற்குப் போகலாம். அடுத்தடுத்த படங்களில் மரபு சாரா மின்சாரம் குறிப்பாக சூரிய மின்சாரம் அதிகளவில் நிறுவப்பட்டு, நாளின் மத்தியில் மைய மின் உற்பத்தில் இருந்து குறைந்த அளவே தேவைப்படுகிறது. நல்ல விஷயம் தானே என்று நினைக்கலாம். காலை, உச்சபட்சப் பயன்பாட்டில் இருந்து குறுகிய நேரத்தில் கடனுக்கே என்று இயக்கப்படும் நிலைக்குச் செல்லும் மின் நிலையங்கள், மாலை அதிக மின் தேவைக்காக அதே குறுகிய நேரத்தில் முழு திறனுடன் செயல்பட வேண்டிய நிலைக்குத் தள்ளபடுகின்றன. இது மின் நிலையங்களில் தேய்மானத்தை ஏற்படுத்துகிறது. அதுதான் நடுவில் ஒரு பெரிய பள்ளம். இதனை வாத்து வளைவு (duck curve) என்று பெயரிட்டிருக்கிறார்கள். இன்னும் அதிகம் மரபு சாரா ஆற்றல் உள்ளே சேர்க்கப்படுகையில் சூரிய ஒளியால் தேவைக்கு மேலே மின்சாரம் உருவாகும். மேலை நாடுகளில் இது சார்ந்து தொடர்ச்சியாய் விவாதிக்கிறார்கள். இங்கும் அந்த நிலை வரத்தான் போகிறது. ஆனால் அப்போதும் நாம் இப்போது இருக்கிற தொழில்நுட்பம் போல சில ராட்சத டர்பைன்களை சும்மா ஓடவிடப்போகிறோமா? அல்லது மாற்றுகளை நோக்கி நகர்ந்து தயாராக இருக்கப்போகிறோமா?

மாற்றுகள் எல்லாமே தற்போதைக்கு பிரசவ வார்டில் கடைசி மாத செக்கப்பிற்குத்தான் போயிருக்கின்றன. தற்போதைக்கு காற்றாலைகளில் இந்த ஜடத்துவத்தைக் கொண்டு வரும் முயற்சி தொடங்கி இருக்கிறது. ராட்சத டர்பைன்கள் சுழன்று தருகிற ஜடத்துவத்தை, செயற்கையாக மின்னணு சாதனங்கள், குறிப்பாக மாறுதிசையாக்கிகள் (inverters) கொண்டு செய்யும் இதற்கு செயற்கை ஜடத்துவம் (synthetic inertia) என்று பெயர். அந்த வசதி கொண்ட காற்றாலைகள் சிக்கலான நேரத்தில் அதிர்வெண் சரிவதைத் தாங்கிப் பிடிக்க முயல்கின்றன. ஆம் ‘முயல்கின்றன’தான். சரிசெய்ய நாம்தான் வேறு இடங்களில் இருந்து மின்சாரம் கொணர்ந்தாக வேண்டும். 2016ன் இறுதியில் GE போன்ற இந்தத் துறை ஜாம்பவான்கள் இந்த செயற்கை ஜடத்துவத்தில் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். இதைத் தவிர காற்றாலைகளில் தயாராகும் உபரி மின்சாரத்தைக் கொண்டு மலைக்குகைகளில் அல்லது மலையைக் குடைந்து செய்யப்படும் குகைகளில், ராட்சத கம்ப்ரஸர்கள் மூலம் காற்றை அழுத்தி வைத்து தேவைப்படுகையில் அழுத்தப்பட்ட காற்றில் இருக்கும் ஆற்றலை மீட்டு எடுத்துப் பயன்படுத்துவது. நம்மூரில் அது எந்தளவு தோதுப்படும் என்று தெரியவில்லை. குன்றெல்லாம் கோயிலோ, இயேசு அழைக்கிறார் ஜெபவீடுகளோ இருக்கின்றன. அப்படி இல்லையென்றாலும் குவாரிக்காரர்கள் இருக்கிறார்கள். இது கொஞ்சம் கடினமாகத் தெரிந்தால் கொஞ்சம் எளிமையாய் ஒரு சமாசாரம் இருக்கிறது. அதே உபரி மின்சாரம் கொண்டு, நீரை ஹைட்ரஜனாகவும், ஆக்ஸிஜனாகவும் பிரித்து தனித்தனியே சேமித்துவைத்து, தேவைப்படுகையில் இரண்டையும் மீண்டும் சேரவிட்டு ஆற்றல் பெறுவது. கிட்டத்தட்ட பேட்டரிதான். ஆனால் கிடைப்பது நீர் என்பதால் சூழலுக்குப் ‘பெரிய’ அளவில் பாதிப்பில்லை.

சூரிய சக்திக்கும் இதையே செய்யலாம். சூரியனின் சூட்டையும் வைத்து ஏதாவது செய்ய முடியுமா என்றும் யோசிக்கிறார்கள். வெப்பத்தைப் பாறையிலே தேக்கும் திட்டம்கூட இருக்கிறது. இரவானால் சேமித்து வைத்த சூட்டைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பது.

செயல்முறையில் இப்படி முயன்று கொண்டிருக்க, கோட்பாட்டு ரீதியாக இன்னமும் துல்லியமான காற்றின் நகர்வு, மேகங்களின் நகர்வு, பருவகாலங்களின் மாறுதல் பற்றிய ஆய்வுகளும் முக்கியம். அவை, அடுத்த சில மணி நேரங்களில் வானிலை எப்படி இருக்கும் என்பதற்கான கணித மாதிரிகள் மூலம் திட்டமிட உதவுகின்றன. மரபு சாரா உற்பத்தி பெரும்பாலும் மையத்தன்மை அற்றதாக இருப்பதால் (decentralized) ஏதேனும் ஒரு இடத்தில் உபரி உற்பத்தி இருக்கும். ஏனெனில் ஒட்டுமொத்த தமிழகமும் மழையாலோ, மேகத்தாலே மூடிவிடப் போவதில்லை. திருவிளையாடல் சிவாஜி கைகாட்டினாற்போல் காற்று அசைவின்றி நின்றுவிடப் போவதும் இல்லை. அதனால் உபரி உற்பத்தியைக் கொண்டு திட்டமிட இயலும்.

இப்போதுவரை மின் உற்பத்தியும், மின் பயன்பாடும் ஒருவழிப்பாதைதான். காரணம் காற்றாலைகளும், சூரிய ஆற்றலும் இன்னமும் நம்மை முழுதாய் ஊடுருவவில்லை. அப்படி ஊடுருவும் காலத்தில் இது இருவழிப்பாதை ஆகும். நாம் மைய மின் பகிர்மான வட்டத்திற்கு மின்சாரம் அனுப்பி வைப்போம். நாம் இதுவரை பார்த்தவை எல்லாமே இந்தக் கட்டுரை எழுதப்படுகிற நாளில் மின் இலாகாவின் தலைவலியாக இருக்கலாம். ஆனால் அது நம் தலைவலியாகவும் மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை. முழுக்க முழுக்க மரபு சாரா மின்சாரத்துக்கு நகர வேண்டும் என்று நினைக்கையில் இதையெல்லாம் முட்டுக்கட்டைகளாகப் பார்க்காமல் முறியடிக்கப்பட வேண்டிய சவாலாகப் பார்த்தால் இந்த மாற்றம் நமக்குக் கொஞ்சம் எளிதாய் இருக்கும்

Posted on Leave a comment

நேதாஜி மர்ம மரணம்: ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை – ஹரன் பிரசன்னா

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மரணம் குறித்த கதைகள் இன்னும் நம்மிடையே உயிர்ப்புடன் உலவிக்கொண்டிருக்கின்றன. சிறு வயதில் காற்றில் வரும் செய்திகள் பலவற்றில் நாம் மயிர்க்கூச்செரிய கேட்டவற்றுள் ஒன்று, சுபாஷ் உயிருடன் இருக்கிறார் என்பதும், அவரை யாரோ நேரில் பார்த்தார்கள் என்பதும். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சுபாஷ் எப்படி உயிருடன் இருக்கமுடியும் என்கிற உண்மையை எல்லாம் தாண்டி அவர் குறித்த கதைகள் தந்த பரபரப்பு கொஞ்ச நஞ்சமல்ல. அந்த பரபரப்பை அப்படியே தக்க வைத்திருக்கிறது ‘நேதாஜி மர்ம மரணம் – ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை’ புத்தகம். ரமணன் எழுதிய இப்புத்தகத்தை, கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

சுபாஷ் மரணம் குறித்துக் கேள்விப்பட்ட கதைகளையெல்லாம் ஒட்டுமொத்தமாகத் தொகுத்திருக்கிறது இந்நூல். ஆதாரம் உள்ளவை, ஆதாரம் அற்றவை என அனைத்தும். சுபாஷைச் சுற்றி இத்தனை கதைகளா என்கிற ஆச்சரியம் ஒரு பக்கம், சுபாஷ் எப்படித்தான் செத்தார் என்கிற குழப்பம் மீண்டும் நம்மை அசரடிப்பது ஒரு பக்கம். மொத்தத்தில் அட்டகாசமான திரில்லரைப் படித்தது போன்ற அனுபவம்.

நிஜ வாழ்க்கையில் நடக்கும் இதுபோன்ற சம்பவங்கள், திரைப்படங்களில் வரும் புனைவுகளுக்கும் மேலானவை. நிஜம் என்கிற எண்ணம் நம் உள்ளத்தில் இருந்துகொண்டே இருக்கும்போது, அதன் பின்னணி என்ன, அதன் வரலாறு என்ன, ஆதாரம் என்ன என்று யோசித்துக்கொண்டே இருப்போம். வரலாறு எதையும் மிகக் கவனமாகத் தீர்த்து வைப்பதில்லை. வரலாற்றில் நிரப்பப்படாத இடைவெளிகளே நம் கவனத்தை ஈர்ப்பவை. சுபாஷின் மரணத்தில் கிடைக்கும் நிரப்பப்படாத இடைவெளிகளை ஒட்டி உருவாக்கப்பட்டிருக்கும் கதைகளுக்கு அவரவர் பார்வையில் தரும் ஆதாரங்கள் அபாரம். ஒவ்வொன்றையும் படிக்கும்தோறும் இதுதான் சரி என்கிற முடிவுக்குள் அமிழ்கிறோம்.

நேருவுக்கு சுபாஷ் மரணம் அடையவில்லை என்கிற எண்ணம் உள்ளூர இருந்தது என்பதற்கான ஆதாரங்களை ஆசிரியர் பற்பல இடங்களில் கொடுக்கிறார். அப்படி ஒரு எண்ணம் நேருவுக்கு இருந்திருக்கக்கூடும். ஆனால் ஆதாரங்களின் அடிப்படையில் நிச்சயம் சுபாஷ் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்பதை நாடாளுமன்றத்தில் நேரு அறிவிக்கிறார். அந்த நேருவும் உண்மைதான். சுபாஷின் உடலைப் பார்க்காத அவரது உறவினர்கள் இறுதிவரை, இன்றுவரை கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பிய வண்ணம் இருக்கிறார்கள். சுபாஷ் இறந்ததும் மௌண்ட்பேட்டன் அமைக்கும் ஒரு கமிஷன் அதன் முடிவைச் சில மாதங்களில் (1946ல்) சொல்கிறது. பின்னர் மேற்கு வங்கத்தின் அழுத்தத்தை அடுத்து நேரு ஒரு கமிஷனை அறிவிக்கிறார். கமிஷன் திட்டவட்டமாக சுபாஷ் இறந்துவிட்டார் என முடிவைச் சொல்கிறது. இந்திரா பிரதமரானபோது இன்னுமொரு கமிஷன். அந்த கமிஷனில் தங்கள் கருத்துகளில் பலவற்றை மாற்றியும் முரண்பட்டும் பதிவு செய்கிறார்கள் முந்தைய கமிஷனில் கருத்துச் சொன்னவர்கள். ஆனால் இந்த கமிஷனும் சுபாஷ் இறந்ததை உறுதி செய்கிறது. வாஜ்பாய் காலத்தில் இன்னுமொரு கமிஷன்! இந்த கமிஷனும் சுபாஷ் இறந்ததை உறுதி செய்தாலும் டோக்கியோவில் புத்தக் கோவிலில் உள்ளது அவரது அஸ்திதானா என்பதை உறுதி செய்யமுடியாது என்றும் சொல்கிறது. இவற்றையெல்லாம் மிகச் சரியாகவும் துல்லியமாகவும் தெரிந்துகொள்ள இந்நூலைப் படியுங்கள்.

நூலின் முதல் சில பக்கங்களில் சுபாஷின் வாழ்க்கை வரலாறு விவரிக்கப்படுகிறது. சுபாஷின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான வரலாற்று நிகழ்வுகளை மிக அழகாக விவரிக்கிறார் ரமணன். இந்த வரலாற்றைப் பதிவது இந்தப் புத்தகத்தின் மூல நோக்கம் அல்ல என்றாலும், இதை வாசித்துவிட்டு, சுபாஷின் மரணத்தில் உள்ள மர்மக் கதைகளை வாசிக்கும்போது ஒரு நிறைவு ஏற்படுகிறது உண்மைதான். இந்நூலில் ஆங்காங்கே சொல்லப்படும் சிறிய நுணுக்கமான விவரங்கள் மிக முக்கியமானவை. உதாரணமாக, ப்ளாக் ஹோல் ட்ராஜடி. இந்திய வரலாற்றில் நாம் மறந்து போனவை எத்தனை எத்தனையோ என்கிற எண்ணத்தைக் கொண்டு வந்தது இந்தக் குறிப்பு. இன்னொரு குறிப்பு, நம் தேசிய கீதமான ஜனகனமன முதன்முதலில் இசையாக இசைக்கப்பட்டது சுபாஷின் முயற்சியால்தான் என்கிற குறிப்பு. ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் ஜனகனமன பியானோ இசையில் ஒலிக்கப்படுகிறது.

ஹிட்லரின் உதவிக்காக சுபாஷ் காத்திருப்பதும் ஹிட்லர் தன்னைப் பயன்படுத்தப் பார்க்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளும் சுபாஷ் மனம் நொந்து போவதுமான அத்தியாயம் சுபாஷின் தொடக்ககால அரசியலையும் அதன்வழியே அவரது அசைக்கமுடியாத நாட்டுப்பற்றையும் பறைசாற்றுகிறது. ஸ்டாலின், ஹிட்லர் எனத் தொடர்ச்சியாக ஏமாற்றத்துக்கு உள்ளாகிறார் சுபாஷ். எப்படி எப்படியோ திட்டங்கள் தீட்டுகிறார். அத்தனையும் ஹிட்லர் அரசால் மறுக்கப்படுகின்றன. ஹிட்லர் மெயின் காம்ஃபில் இந்தியா பற்றிய எழுதி இருக்கும் குறிப்பில் திருத்தம் கேட்கிறார். அதுவும் ஹிட்லரால் மறுக்கப்படுகிறது. பின்பு ரஷ்யாவுக்குச் செல்ல உதவி கேட்கிறார். ஏன் ரஷ்யாவுக்கு என்பதும் இந்நூலில் விவரிக்கப்படுகிறது. சில கேள்விகளுக்கு பதில் கிடைப்பதில்லை. அது அப்படித்தான் என்பதே வரலாற்றில் பதில்.

மாறுவேடத்தில் சுபாஷ் இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தான் செல்லும் காட்சிகள் இன்றளவும் ஆச்சரியத்தை வரவழைக்கக்கூடியவை. காங்கிரஸ் தலைவராக சுபாஷ் வென்றதும், காந்தியுடனான கருத்து வேறுபாட்டால் அவர் ராஜினாமா செய்வதும், அதைத் தொடர்ந்த நீண்ட அரசியல் பயணத்தில் வெளிநாடுகளுக்குச் செல்வதும் நிகழ்கின்றன. தொடர்ச்சியாக, ஜப்பானுக்குச் செல்லும் விமான விபத்தில் சுபாஷ் மரணமடைந்ததாக அறிவிக்கப்படுகிறார். பின்னர் கதைகள், கற்பிதங்கள், யூகங்கள், கமிஷன்கள்.

சுபாஷைப் பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிடச் சொல்லி நடந்த நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு அண்மையில் (2016) அவற்றுள் சில வெளியிடப்பட்டன. அதில் உள்ள தகவல்கள் தரும் பின்னணி என்ன என்பதை ஆராய்வதே இந்த நூலின் முக்கிய நோக்கம். அதிலுள்ள தகவல்களைப் படிக்கும்போது சுபாஷின் மரணம் குறித்த முடிவுகள் இன்னும் அதிகக் குழப்பத்துக்குள்ளாகின்றனவே தவிர எவ்வித வெளிச்சமும் கிடைக்கவில்லை என்பதுவே உண்மை.

தற்போது வெளியான ஆவணங்களில் முக்கியமான செய்திகள் என்று ஆசிரியர் ரமணன் ஐந்து குறிப்புகளைச் சொல்கிறார். அவற்றைத் தொகுத்து, 1968 வரை நேதாஜியின் உறவினர்கள் கண்காணிக்கப்பட்டார்கள் என்று சொல்லலாம். சுபாஷ் இறந்ததை அறிவித்த நேருவின் அரசு ஏன் கண்காணிக்கவேண்டும் என்று தொடங்குகிறது ஐயம். அப்படியென்றால் எங்கோ உள்ளூர நேருவுக்கு சுபாஷ் உயிருடன் இருக்கிறார் என்ற எண்ணம் இருந்ததா என்கிற கேள்வி எழுகிறது.

சுபாஷின் நிதியும் தங்கமும் என்னவாயின என்பது குறித்தும் கதைகள் உலவுகின்றன. ‘ஷா நாவாஸின் அறிக்கை சொன்னதும் சொல்லாததும்’ என்கிற முக்கியமான அத்தியாயத்தில் இவை விவரிக்கப்படுகின்றன. சுபாஷின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்படும் கமிஷனால் கடைசி வரை அவர் இறந்த இடத்துக்குச் (தைவான் அல்லது ஃபர்மோஸா தீவு) சென்று ஆராயமுடியவில்லை. ஒவ்வொரு அரசும் (பாஜக உட்பட) இதைச் செய்யமுடியாது என்று அறிவிக்கிறது. அதேபோல் ரஷ்யாவின் ஆவணங்கிடங்குக்குச் செல்லவே முடிவதில்லை. ஷா நாவாஸின் கமிட்டியில் ஒருவரான சுபாஷின் சகோதரர் சுரேஷ் போஸ் இந்த கமிட்டியின் அறிக்கையை ஏற்காமல் தன் கருத்துகளைத் தனியே வெளியிடுகிறார். மீண்டும் தொடங்குகின்றன குழப்பங்களும் யூகங்களும்.

போர்க்கைதியாக சுபாஷ் அறிவிக்கப்பட்டிருப்பதால்தான் அவர் உயிருடன் இருந்தும் தன்னை அறிவித்துக்கொண்டு வெளிவரத் தயங்குகிறார் என்றொரு தியரி. இதை நானும் சிறுவயதில் கேட்டிருக்கிறேன். ஆனால் அப்படி ஒரு ஒப்பந்தம் தனக்குத் தெரிந்து இல்லை என்றும் அப்படி ஒருவேளை இருந்தாலும் அது இந்தியாவைக் கட்டுப்படுத்தாது என்றும் இதை சுபாஷ் ஒருவேளை உயிருடன் இருந்தால் அவரிடம் தெரிவிக்கலாம் என்ற ரீதியிலும் நேரு அறிவிக்கிறார். சுபாஷ் மரணம் குறித்து அமைக்கப்பட்ட கமிஷன்களுக்கே இதுதொடர்பான தெளிவில்லை. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இதுகுறித்து கேள்வி எழுப்புகிறார். மிகச் சமீபத்தில்தான் (2002) சுபாஷின் பெயர் போர்க்கைதிகள் பட்டியலில் இல்லை என்றும் அதற்கான காரணங்கள் என்ன என்றும் வெளியாகிறது.

1961ல், ஸ்வாமி சாரதானந்த் தான் சுபாஷ் என்கிற புரளி எழுகிறது. ஒரு கட்டத்தில் ஆசிரமமே தங்களுக்கும் சுபாஷுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று அறிவிக்கிறது. நேரு தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இதை விசாரிக்கும் எம்பி ஒருவர், இவருக்கும் சுபாஷும் தொடர்பில்லை என்று நேருவிடம் சொல்கிறார்.  மீண்டும் கமிஷன் அமைக்க கோரிக்கை வைக்கப்படுகிறது. வேறு வழியின்றி ஒருநபர் கமிஷன் அறிவிக்கப்படுகிறது. கோஸ்லா கமிஷன். கோஸ்கா கமிஷனில் சாட்சியங்கள் அடிக்கும் பல்டிகள், முன்பின் முரணான தகவல்கள் தலை சுற்ற வைக்கின்றன. இந்நூலின் மிக முக்கியமான அத்தியாயம் இதுவே. அதில் ஒரு சாட்சி (ஷைபுயா) சொல்வது: “நான் இப்போது சொல்வதிலும் முன்பு சொன்னதிலும் ஏதாவது மாற்றங்கள் இருந்தால், முன்பு சொன்னதையே எடுத்துக்கொள்ளுங்கள்.”

சுபாஷ் மரணக் கதைகளின் உச்சம் அடுத்து 1988ல் துவங்குகிறது, கும்நாமி பாபாவின் (பெயரற்ற பாபா) வருகையுடன். இந்நூலின் ஆசிரியருக்கே இவர்தான் சுபாஷாக இருக்குமோ என்கிற சந்தேகம் உண்டோ என்கிற ஐயம் வாசிப்பவருக்கு ஏற்படும் வண்ணம் இந்த அத்தியாயம் அமைந்துள்ளது. படிக்கும் எனக்கும் அந்த சந்தேகம் வந்தது. அந்த அளவுக்குப் பல கதைகள். நிராகரிக்கமுடியாத கதைகள். சுபாஷின் உறவினர்களில் சிலர் இந்த பாபாதான் சுபாஷ் என்று நம்பி இருக்கிறார்கள். இவர் இறந்தபோது இவரிடம் இருந்த ஆவணங்களில் சிலவும் பயன்படுத்திய பொருள்களுள் சிலவும் சுபாஷினுடையவை என்று நம்பி இருக்கிறார்கள்.

அடுத்த சுற்றுக் கதைகள், சுபாஷுக்கு பாரத் ரத்னா விருது வழங்க முடிவெடுக்கப்பட்டபோது (1990) தொடங்குகின்றன. இறந்ததற்குப் பிறகு வழங்கப்படும் விருது என்று அரசு அறிவிக்க, அதை எதிர்த்துப் போராட்டங்கள், கேள்விகள். அரசு (1997) பின்வாங்குகிறது. டோக்கியோவில் ரெங்கோஜி கோவிலில் இருக்கும் அஸ்திக் கலயத்தை இந்தியா கொண்டு வர ஐக்கிய முன்னணி அரசு முயற்சிக்க, அவர் இறந்ததே உறுதியாகாத நிலையில் எப்படி அஸ்தியைக் கொண்டு வரலாம் என்கிற ரிட் மனு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் வரும் தீர்ப்பைத் (1998) தொடர்ந்து இன்னுமொரு விசாரணை கமிஷன். ‘அதாவது 50 ஆண்டுகளுக்கு முன் நேதாஜி காணாமல் போன மர்மத்தைக் கண்டுபிடிக்க, ஏற்கெனவே போடப்பட்ட கமிஷன்கள் மரணம் என்று உறுதி செய்த விஷயத்தை ஆராய மீண்டும் ஒரு கமிஷன்” என்று எழுதுகிறார் ரமணன். இந்த முகர்ஜி கமிஷன் பல விஷயங்களைப் பதிவு செய்திருக்கிறது. இந்த கமிஷனில் கர்னல் லக்ஷ்மியின் முன்பின் முரணான பதிவுகள் இன்னுமொரு குழப்பம். முகர்ஜி கமிஷனின் அறிக்கை, சந்தேகங்களை சந்தேகங்களாகவே விட்டிருக்கிறது. இப்படி விடுவதற்காகவா இத்தனை செலவழித்து ஒரு கமிஷன் என்று நாடாளுமன்றத்தில் அமளி.

இந்நூலின் கடைசி அத்தியாயம் பாஜகவைக் குறை சொல்கிறது. மேற்கு வங்கத்தில் பாஜக கால்பதிக்கவே இந்த விஷயத்தைக் கையில் எடுத்தது என்ற தொனியில் எழுதப்பட்டிருக்கிறது. சுபாஷின் உறவினர்களை தன் அரசியலுக்கு மோடி பயன்படுத்திக்கொண்டுவிட்டார் என்கிறது இந்த அத்தியாயம். ரகசிய ஆவணங்களை மோடி அரசு வெளியிடத் தயங்கக் காரணம் என்ன என்று பட்டியலிடுகிறார் ஆசிரியர். ஆனால் மோடி அரசு ஆவணங்களை வெளியிட்டுவிட்டது. இந்த அத்தியாயம் முன்பே எழுதப்பட்டு, மோடி அரசு ஆவணங்களை வெளியிட்ட பின்பு திருத்திச் சேர்க்கப்பட்டது போன்று வாசகனான எனக்குத் தோன்றியது.

இறுதியாக – மிகச் சொற்பமாக வரும், சுபாஷின் மனைவி எமிலியைக் குறித்த வரிகள் கண்களில் நீரை வரவழைத்துவிட்டன. அவர், சுபாஷின் சகோதரருக்கு எழுதிய கடிதத்தில் உள்ளவையாக இந்நூலில் சொல்லப்பட்டிருப்பதைப் படித்தபோது கண்களில் நீர் திரையிட்டது. தன் சிறு குழந்தை அனிதா நடக்கத் துவங்கியது, பள்ளிக்குப் போனது எனச் சிலவற்றை எமிலி கடிதத்தில் எழுதி இருக்கிறார். நம் சுதந்திரப் போராட்ட தியாகிகளை எப்படிப் போற்றினாலும் தகும்.

Posted on Leave a comment

சில பயணங்கள், சில பதிவுகள் – 2: சுப்பிரமணியும் சுயமரியாதையும் – சுப்பு


மாரியம்மன் திருவிழாவில் நாங்கள் காவடி எடுப்போம். மழையை வேண்டித்தான் திருவிழா. மாரியம்மன் மனது குளிர்வதற்காக ஒவ்வொரு வீட்டுவாசலிலும் அண்டா அண்டாவாகத் தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கும். தெருவெல்லாம் தண்ணீர் தெளிக்கப்பட்டிருக்கும். காவடிக்காரர்கள் ஆடிக்கொண்டே வந்து வீட்டுவாசலில் காலை மடித்து அமர்வார்கள். பெண்கள் அவர்கள்மீது குடம்குடமாய் நீரைக் கொட்டுவார்கள். குடிப்பதற்கு பானகமும் நீர்மோரும். கடைசிக் கட்டத்தில் இவற்றையே தலையில் ஊற்றிக் கொள்வதும் உண்டு. அம்மனுக்கு வேண்டிக் கொண்டவர்கள் நாக்கில் வேலைக் குத்திக் கொண்டும், முதுகில் குத்திய கொக்கியில் இளநீர்க் குலையைத் தொங்கவிட்டுக்கொண்டும் வருவார்கள். சிலர் முதுகில் இருக்கும் கொக்கியில் கயிற்றைக் கட்டி ஒரு சப்பரத்தை இழுத்துக்கொண்டே நடப்பார்கள். சிலருக்கு உடம்பெங்கும் ஊசிகள்.

முதலியார்கள் துளைபோட்ட இடுப்புச் சதையில் குடைக்கம்பிகளைக் கோத்துக்கொண்டு வரிசை வரிசையாக நடப்பார்கள். குடைக்கம்பியில் எலுமிச்சம்பழம் செருகப்பட்டிருக்கும். இரண்டு கைகளாலும் குடைக்கம்பிகளைப் பிடித்து முன்னும் பின்னுமாக அசைத்து ராணுவ வீரர்களைப் போல அவர்கள் விரைப்பாய் நடைபோடுவார்கள். ஒருவர் ‘காரணமாகவே வீராணத்தேரியில் கம்பமொன்று நாட்டிவைத்தான்’ என்றதும், அனைவரும் ஒரே குரலில் ‘ஆல்ரபாய், ஆல்ரபாய்’ என்றபடி குடைக்கம்பிகளை சரக்சரக்கென்று அசைத்துக்கொண்டே முன்னேறுவார்கள். முதலியார்கள் பெருமை விளங்க ஒட்டக்கூத்தர் பாடிய ‘ஈட்டி எழுபது’ பாடல்களைத்தான் அவர்கள் இவ்வாறு பாடுவார்கள்.

குஞ்சம்மா பாட்டி ஒரு வகையில் எனக்கு அப்பாவின் தமக்கை; இன்னொரு வகையில் அம்மாவின் அம்மா. இளம் வயதிலேயே கணவனை இழந்துவிட்டு ஒரே மகளுடன் பிறந்த வீட்டிற்கு வந்துவிட்டார். பெண்ணைத் தம்பிக்கே மணம் முடித்தார். எங்கள் வீட்டிலேயே இருந்தார். பத்து வயது வரை எனக்கு குஞ்சம்மா பாட்டியின் செல்லம் குறைவின்றிக் கிடைத்தது.

என்னுடைய சகலவிதமான ஆர்ப்பாட்டங்களுக்கும் பாட்டியின் ஒத்துழைப்பு உண்டு. பேரன் சர்க்கரையில்தான் பல் தேய்ப்பேன் என்றாலும், வண்டிமசியை வெள்ளை ஜிப்பாவில் பூசிக்கொண்டாலும், பாட்டியின் நிபந்தனையற்ற ஆதரவு நிச்சயம் உண்டு. அந்த வீட்டில் என் அம்மாவே ஒரு குழந்தையாகக் கருதப்பட்டதால் எனக்குத் தாயின் அரவணைப்பு, கண்காணிப்பு ஆகியவற்றை அறிய அதிக வாய்ப்பில்லாமல் போயிற்று. அம்மா எனக்கு ஒரு தோழியாகத்தான் இருந்தார்.

குடும்பப் பிரச்சனைகளின் இன்னொரு பரிமாணத்திற்கும் இந்த வயதில் நான் காரணமானேன். நயினாவின் இன்னொரு தங்கையும் தன் கணவர் குழந்தைகளுடன் எங்கள் ஊரிலேயே பக்கத்துத் தெருவில் குடியிருந்தார். தேச சேவை, கைத்தறி அபிவிருத்தி ஆகியவற்றில் நயினா முழு நேரமாக ஈடுபட்டு விட்டதால் பரம்பரை பாத்யதையான கிராமத்தின் வைதீகத் தொழிலுக்கு அத்தையின் கணவர் நியமனம். அந்த வீட்டாருக்கும் நயினாவின் ஆதரவில்தான் ஜீவனம். இரண்டு வீட்டுக்கும் இடையே இடைவிடாத பனிப்போர் இருக்கும். என்னை முன்னிட்டு சமயத்தில் இது வலுத்துப் பெரிதாக வெடிப்பதும் உண்டு. எந்த வீட்டில், எவ்வளவு நேரம் இருக்கிறேன், எங்கே என்ன சாப்பிடுகிறேன் என்பவையெல்லாம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டன. சிறு வயதிலிருந்தே இந்தச் சூழலில் எனக்குக் குடும்பச் சண்டையின் நெளிவு சுளிவுகள் அத்துப்படி ஆயின.

 இவ்வளவு செல்லமாய் வளர்க்கப்பட்ட எனக்கு சில பிரத்யேகப் பிரச்சினைகளிருந்தன. எனக்கு நண்பர்கள் அமைவதற்கு ஜாதியும் மரியாதையும் தடையாய் அமைந்தன. சக மாணவர்களின் விளையாட்டில் நான் பங்கு பெற முடியாது. மைதானத்தில் பையன்கள் கூடி ‘ஆலிகாலி” என்ற பெயரில் ஒரு பந்தை வைத்துக்கொண்டு முதுகில் அடித்து விளையாடுவார்கள். என்னை மட்டும் எவனும் சீந்தமாட்டான். “டேய், என்னை அடிங்கடா, என்னை அடிங்கடா” என்று கத்திக்கொண்டே நான் சுற்றிச் சுற்றி வரவேண்டியதுதான். நான் எல்லோரையும் அடிக்கலாம், என்னை எவனும் அடிக்கக்கூடாது என்பதுதான் சட்டம். அபூர்வமாக யாராவது என்னுடைய குடுமியைப் பற்றிக் கேலி செய்வதுண்டு.
 
சுப்ரமணி மட்டும் இதற்கு விதிவிலக்கு. அவன் கையில் பந்து கிடைத்துவிட்டால் போதும், அவன் என்னைத்தான் குறிவைப்பான். இந்த மாதிரி நடவடிக்கைகளால் என்னைக் கவர்ந்து நாளடைவில் சுப்ரமணி என் நெருங்கிய சகா ஆகிவிட்டான். என் வீட்டாரின் கட்டுப்பாடுகளால் என்னை நெருங்க முடியாதிருந்த சில விஷயங்களை எனக்கு சுப்ரமணிதான் அறிமுகம் செய்தான். அவனோடுதான் நான் முதன்முதலில் சேரிக்குப் போனேன். அவனோடு பழகிய பிறகுதான் நான் நயினாவுக்குத் தெரியாமல் மதன காமராஜன் கதை படித்தேன். என் ஜாதிக்கெல்லாம் துளியும் அவன் சலுகை தரமாட்டான். அவனைப் பொருத்தவரை சவரத் தொழில், அய்யர் தொழிலைவிட ஒஸ்தி. அவனுடைய தொழில் சவரத் தொழில் என்பதை இங்கே குறித்துக்கொள்ள வேண்டும். சுப்ரமணி என்னை என்னதான் மட்டம் தட்டினாலும் எனக்கு அவன் மீதிருந்த பிடிப்பு தளரவில்லை. சுப்ரமணியின் பாட்டி செத்துப் பிழைத்த கதையையும், மரணத்திற்கும் மீண்டு வந்ததிற்கும் இடையிலுள்ள பிரதேசங்களைப் பற்றியும் அவ்வளவு விவரமாகச் சொல்ல அவனால்தான் முடியும். முந்திரித் தோட்டத்தில் பழம் திருடவும், பருப்பைச் சுட்டுத் தின்பதற்கும் அவனிடம்தான் கற்றுக் கொண்டேன். பழத்தைத் திருட வேண்டிய அவசியமே இல்லை, கேட்டாலே யாரும் கொடுத்து விடுவார்கள் என்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை.

இந்த முந்திரிக் கொல்லைத் திருட்டுதான் நாங்கள் பிரிவதற்கும் காரணமாய் அமைந்தது. ஒருமுறை பழம் பறிக்கும்போது கிழவி ஒருத்தி எங்களைப் பிடித்துவிட்டாள். நான் யாரென்றறியாமல் என்னை ஏசிவிட்டாள். சில நாட்களில் அந்தக் கிழவி கீழே விழுந்து காலெலும்பு முறிந்துவிட்டது. அவள் என்னைத் திட்டியதால் நான் மந்திரம் போட்டு அவள் காலை முறித்துவிட்டதாக சுப்ரமணி பையன்களிடம் கதை பரப்பிவிட்டான். இத்தனை நாள் அவன்மீது நான் வைத்திருந்த மதிப்பு இதனால் பாழானது. பொய் பேசுபவனை சுயமரியாதைக்காரனாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!
 
வகுப்பறையில் ஞாபகமறதியாகப் புத்தகத்தை விட்டுவிட்டு வருதல், செருப்பைத் தொலைத்தல் போன்ற தவறுகளை நான் அடிக்கடிச் செய்வேன். ஒருமுறை செருப்பை விட்டுவிட்டு வந்தபோது வகுப்பு ஆசிரியர் “இதற்கு அபராதமாக நீ எட்டணா செலுத்த வேண்டும்” என்றார். நான் கேட்ட பொருளை நயினா வாங்கிக் கொடுத்து விடுவாரே தவிர, நான் கடைக்குப் போனதும் கிடையாது; காசு பணத்தைத் தொட்டதும் கிடையாது.

எட்டணாவுக்கு என்ன செய்வது என்ற கவலை என்னைப் பிடித்துக் கொண்டது. நயினாவிடம் கேட்கவும் தைரியமில்லை, பள்ளிக்கூடத்திற்குப் போகும் நேரம் நெருங்கிவிட்டதால் கலவரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் காசு டப்பாவில் கையை விட்டுக் காசை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டேன். வெளியே போய்ப் பார்த்தால் அவசரத்தில் இரண்டு எட்டணாக்களை எடுத்து விட்டிருக்கிறேன். பள்ளிக்குச் சென்று ஆசிரியரிடம் அபராதத்தைச் செலுத்தினேன். மீதி எட்டணாவை என்ன செய்வதென்று தெரியவில்லை. எங்கே ஒளித்து வைப்பதென்றும் விளங்கவில்லை. நாள் பூராவும் கலங்கி கடைசியில் வீதியோரமாய் ஓரிடத்தில் புதைத்து வைத்துவிட்டேன்.

என் வீட்டார் காசு தரமாட்டார்கள் என்பது ஆசிரியருக்குத் தெரிந்திருந்தது. அவர் நயினாவுக்குத் தகவல் சொல்லி அனுப்பிவிட்டார். நான் நயினாவால் விசாரிக்கப்பட்டேன். நாணயத்தைத் திருடியதையும், என்ன செய்வதென்று தெரியாமல் புதைத்து வைத்துவிட்டதையும் தெரிவித்துவிட்டு தண்டனைக்குக் காத்திருந்தேன். நயினா அடிக்கவில்லை. சிரித்தார் என்பது மட்டும் நன்றாக நினைவிருக்கிறது.

என்றாவது ஒருநாள் அபூர்வமாக வில்வண்டி கட்டிக்கொண்டு வீட்டாரோடு ஜெயங்கொண்டத்திற்கு சினிமா பார்க்கப் போவதுண்டு. அப்படிப் போகும்போது ஜனங்கள் ஒழுங்காய்ப் படத்தைப் பார்க்கவிட மாட்டார்கள். தியேட்டர்காரன் ரொம்ப உஷாராக, ஜனங்கள் தங்களை மறந்து படத்தில் இழைந்த நேரம் பார்த்து மின்விசிறிகளை அணைத்து விடுவான். ஜனங்கள் திடீரென்று எழுந்து நின்றுகொண்டு “காத்தாடி போடுயோவ், காத்தாடி போடுயோவ்” என்று கூச்சலிடுவார்கள். மின்விசிறிகள் சுழலத் தொடங்கும். மீண்டும் கதாநாயகி கடத்தப்படுவது போன்ற முக்கியமான கட்டத்தில் மின்விசிறிகள் அணைக்கப்பட்டு, மீண்டும் “காத்தாடி போடுயோவ்…”

நான் பார்த்த முதல் சினிமா ‘ஒளவையார்.’ யானைகள் தண்ணீரைக் கடக்கும் காட்சி மட்டும் நினைவிலிருக்கிறது. இரண்டாவது ‘வணங்காமுடி.’ அப்போது எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் வித்தியாசம் தெரிவதற்காக ஒரு குறிப்பு வைத்திருந்தேன். சண்டை போட்டால் எம்.ஜி.ஆர்., சத்தம் போட்டால் சிவாஜி என்பதுதான் குறிப்பு. வணங்காமுடியில் சிவாஜி சண்டை போட, அது தெரியாமல் நான் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். என்று கத்த எல்லோருமாய்ச் சேர்ந்து என்னை ஒரே அமுக்காய் அமுக்கினார்கள்.

பள்ளிக்கூடத்திற்கு ஒரு அரசு அதிகாரி வந்து மாணவர்களுக்குத் தடுப்பு ஊசி போட்டார். எனக்கும் தடுப்பு ஊசி போடப்பட்டது. உடனே காய்ச்சலும், அதன் விளைவாய் நயினாவுக்குக் கோபமும் வந்தது. ஊசி போட்ட அதிகாரிக்கு நயினா வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். நயினாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் அதிகாரி ஆறு மாதம் படாத பாடுபட்டார். வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே அந்த அதிகாரி இறந்துவிட்டார். ஏற்கெனவே அய்யர் மீது ஜனங்களுக்கிருந்த மூடபக்தி இந்த அசம்பாவிதத்தால் இன்னும் பெருகியது.

கிராமத்திற்கு ஒரு நாளைக்கு இரண்டு முறைதான் பஸ் வரும். குறிப்பிட்ட பஸ்ஸில்தான் பால் சங்கத்தின் பால் கேன்களை ஏற்ற வேண்டும். ஏதாவது காரணத்தால் பஸ் தவறிவிட்டால், பாலை வீணாக்காமல் வீதியில் வரிசையாக அடுப்பு மூட்டி அய்யரின் மேற்பார்வையில் பால் கோவா தயாரிப்பு. திண்ணையிலிருந்து இந்தக் காட்சியைப் பார்த்தபடியே கண்கள் சொக்கி, நாசியில் கோவா வாசனை நிரம்பி வழிய நான் தூங்கிப் போவேன். பிறகு நடுஇரவில் என்னை எழுப்பி சுடச்சுடப் பால்கோவா தருவார்கள். காலையில் யோசிக்கும்போது இரவில் நடந்தது கனவா நிஜமா என்று விளங்காமல் கலக்கமாக இருக்கும்.

அச்சு வெல்லம் எனக்கு முக்கிய அளவை. என்னிடமிருந்து பாட்டியோ, அம்மாவோ எதை எதிர்பார்த்தாலும் பேரத்தில் அச்சு வெல்லத்திற்கு முக்கியப் பங்குண்டு. எந்த அழுகையையும் அச்சு வெல்லத்தால் நிறுத்திவிடலாம். எந்த வீம்பையும் அச்சு வெல்லத்தால் முறித்துவிடலாம். அச்சு வெல்லத்தைப் பத்திரப்படுத்தியதன் பலனாக எல்லா டவுசர் பாக்கெட்டிலும் ஒரு பிசுக்கு உண்டு. அதே காரணத்தால் எறும்பு கடித்து தொடை சிவப்பதும் உண்டு.

ஏழு வயதில், பரிக்கல் என்ற நரசிம்மர் கோவில் திருவிழாவிற்குப் போனேன். கோயிலில் சாப்பாடு போட்டார்கள். ரயில் பயணம், வெகு ஜனங்களின் ஆரவாரம், இவற்றோடு வரிசை வரிசையாய் வாழை இலை, கூடைச்சோறு, வாளிச் சாம்பார் எல்லாம் சேர்ந்து என்னை உற்சாக பூபதி ஆக்கிவிட, காய்கறிகளோடு கூடிய சமையலை முதன்முறையாக விரும்பிச் சாப்பிட்டேன். மேற்குறிப்பிட்ட வைபவம் எல்லாத் தரப்பினராலும் வரவேற்கப்பட்டாலும், பரிக்கல் அத்தைஊர் என்பதால் அம்மா தரப்பினர் இதை ரசிக்கவில்லை.

நான்காம் வகுப்பு படித்தபோது மாணவர்கள் ராஜா தேசிங்கு நாடகம் போட்டார்கள். நான் எந்த வேடத்தில் நடிக்க விரும்புகிறேன் என்று முதலில் என்னைக் கேட்டார்கள். நான் நவாபாக நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். கிடைத்த வாய்ப்பைக் கெடுத்துக் கொண்டேனே என்று நண்பர்களுக்கு வருத்தம். ராஜா தேசிங்கு, அரை டவுசர் மேல் கலர்த்துணியைச் சுற்றிக்கொண்டு நிழல் குதிரைமேல் லொங்கு லொங்கு என்ற சவாரி செய்ய வேண்டும். நவாப்புக்குத்தான் ஜிகினா வேலைப்பாடுடைய ராஜா உடை, சிங்காசனம் எல்லாம் உண்டு என்கிறதாக எனக்குத் தெரிந்திருந்ததால் நான் நவாபைத் தேர்ந்தெடுத்தேன்.

… தொடரும்

Posted on Leave a comment

பிரிவினைவாதிகளின் பிடியில் அமர்நாத் யாத்திரை – தமிழ்ச்செல்வன்


கடந்த ஜுலை மாதம் 10ம் தேதி திங்கட்கிழமை இரவு சுமார் 8 மணியளவில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்று கொண்டிருந்த ஒரு பேருந்து மீது லஷ்கர்-இ-தைபா பயங்கவராதிகள் சரமாரியாகச் சுட்டதில் 7 யாத்ரீகர்கள் கொல்லப்பட்டார்கள்; 32 பேர் காயமுற்றனர்.

பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான துப்பாக்கிச் சூட்டில் இந்தப் பேருந்து அகப்பட்டுக்கொண்டதாக ஒரு செய்திக்குறிப்பு கூறுகின்றது. பதுகாப்புப் படையினரிடம் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒன்றும் செய்ய முடியாமல் போன வெறுப்பில், யாத்ரீகர்கள் சென்று கொண்டிருந்த பேருந்து மீது சரமாரியாக பயங்கரவாதிகள் சுட்டதாகவும் சொல்லப்படுகின்றது. மேலும், குறிப்பிட்ட பேருந்து அரசாங்கத்தின் அதிகாரபூர்வ யாத்திரையின் வண்டித்தொடரில் பங்குபெறவில்லை என்றும், அந்தப் பேருந்தில் இருந்த யாத்ரீகர்கள் அமர்நாத் கோவில் தேவஸ்தானத்தில் பதிவு செய்யவில்லை என்றும் கூறப்படுகின்றது.

 அமர்நாத் கோவில் தேவஸ்தானத்தில் பதிவு செய்து, அரசின் அதிகாரபூர்வ யாத்திரையில் பங்கு பெற்றுள்ள பேருந்துகள் தக்க பாதுகாப்புடன் அனுப்பப்படுகின்றன. வழியெங்கும் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளும், காஷ்மீர் பிரிவினைவாத அமைப்புகளும், பாகிஸ்தான் ஆதரவு பெற்றுள்ள காஷ்மீர் பயங்கரவாத அமைப்புகளும், அமர்நாத் யாத்திரையைக் குலைக்க வேண்டும் என்று தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் மிரட்டல் விடுவதாலும், தாக்குதல் நடத்த முயல்வதாலும், அமர்நாத் யாத்திரையை அரசும், அமர்நாத் தேவஸ்தானமும் இணைந்து நடத்தி வருகின்றன. தேவஸ்தானத்தில் பதிவு செய்து, அரசு வழங்கும் பாதுகாப்புடன்தான் யாத்திரை மேற்கொள்ள முடியும். தனியார் அமைப்புகள் யாத்திரை நடத்த அனுமதியில்லை. இருப்பினும் ஒரு சிலர் தாங்களாக யாத்திரைகள் மேற்கொள்வதும் நடக்கிறது. அவ்வாறு தெரிய வரும்போது, அரசு அவர்களுக்கும் பாதுகாப்பு வழங்கி, அரசு அங்கீகாரம் பெற்ற வண்டித்தொடருடன் சேர்த்து விடுவதும் உண்டு.

இவ்வாறாக அரசும் அமர்நாத் கோவில் தேவஸ்தானமும் இணைந்து பலத்த பாதுகாப்புடன் யாத்திரையை நடத்தினாலும், பயங்கரவாத அச்சுறுத்தலும் தொடர்ந்து இருந்துகொண்டுதான் வருகிறது.

அமர்நாத் யாத்திரையின் புனிதத்துவம்1

சிந்து சரஸ்வதி நதி தீரங்களில் தோன்றி வளர்ந்த வேத நகரீகத்தை அடிப்படையாகக் கொண்ட கலாசார ஆன்மிகப் பாரம்பரிய வாழ்வை வாழ்ந்து வருபவர்கள் பாரத தேசத்து மக்களான ஹிந்துக்கள். தீர்த்த யாத்திரைகள் மேற்கொள்வது, மலைக்கோவில்களுக்குச் செல்வது, குலதெய்வ வழிபாடுகள், நீத்தார் வழிபாடுகள் ஆகியவை ஹிந்துக்களுக்கு மிகவும் இன்றியமையாதவை. அவற்றுள் மிகவும் முக்கியமாக அவர்கள் கருதுபவை, கயிலாய யாத்திரை, காசி-ராமேஸ்வரம் யாத்திரை போன்றவை. அமர்நாத் யாத்திரையும் அவற்றுக்குச் சமமான யாத்திரையாகும்.

புராணத்திலும், ஹிந்து நூல்களிலும் அமர்நாத் தலம் பற்றிய வரலாற்றுச் செய்திகள் காணப்படுகின்றன.

ஒருமுறை பார்வதி தேவி சிவபெருமானிடம், “நீங்கள் என்றிலிருந்து இந்த மண்டையோடு மாலையை அணிய ஆரம்பித்தீர்கள்? ஏன் அதை அணிகின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்குச் சிவபெருமான், “நீ ஒவ்வொரு முறை பிறக்கும்போதும் நான் ஒவ்வொரு தலையைச் சேர்த்துக்கொள்கிறேன்” என்று பதிலளிக்க, பார்வதி தேவி, “நான் அடிக்கடி இறந்து பிறக்கிறேன். ஆனால் நீங்கள் இறப்பே இல்லாமல் நிரந்தரமாக இருக்கிறீர்கள். இதற்கான காரணம் யாது?” என்று கேட்டார். சிவபெருமான், “இறவா நிலை பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் நீ ‘அமரத்துவக் கதை’ அறிந்துகொள்ள வேண்டும்” என்று கூறி, எந்த உயிரினமும் கேட்க முடியாத, எந்த உயிரினமும் இல்லாத ஒரு இடத்தைத் தேர்ந்தெடுக்க விரும்பி, அமர்நாத் குகைக்கு பார்வதியைக் கூட்டிச் செல்கிறார்.

போகும் வழியில், பஹல்கம் என்கிற இடத்தில் நந்தியையும், சந்தன்வாரி என்கிற இடத்தில் தன் முடியில் சூட்டியிருந்த சந்திரனையும், சேஷ்நாக் ஏரியில் தான் அணிந்திருந்த சர்ப்பங்களையும் (பாம்புகள்), மஹாகுண பர்வதத்தில் தன் பிள்ளை விநாயகரையும், பஞ்சதாரணி என்கிற இடத்தில் பஞ்ச பூதங்களையும் விட்டுவிட்டு, பார்வதி தேவியுடன் அமர்நாத் குகைக்குச் சென்று அமர்கின்றார். தான் பார்வதிக்குச் சொல்வதை வேறு உயிரினங்கள் எதுவும் கேட்கக்கூடாது என்பதை உறுதி செய்துகொள்வதற்காக, காலாக்னியை மூட்டி, குகையைச் சுற்றிப் பாதுகாப்பாக நெருப்பு வளையத்தை உண்டாக்குகிறார். அதன் பிறகு இறவாத்தன்மையின் ரகசியத்தை பார்வதி தேவிக்குச் சொல்கிறார். அத்தகைய புனிதத்துவம் மிகுந்த குகைக்கோவில் அமர்நாத். (இவ்வளவு பாதுகாப்புடன் சிவபெருமான் பார்வதி தேவிக்குச் சொல்லியும், அதை ஒரு ஜோடிப்புறாக்கள் கேட்டுவிட்டு, அவையும் இறவாத்தன்மை பெற்றதாகவும், இப்போதும், சில யாத்ரீகர்கள் அந்தப் புறாக்களைக் கண்டதாகவும் நம்பப்படுகிறது.)

சைவம் தோன்றி வளர்ந்த புண்ணிய பூமியான காஷ்மீரம் காஷ்யப மஹரிஷியின் பெயரினாலேயே அந்தப் பெயரைப் பெற்றது. அவருடைய காலத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ஒரு மிகப்பெரிய ஏரியில் மூழ்கியிருந்தது. அதை உடைத்துப் பல்வேறு ஆறுகளாகவும், ஓடைகளாகவும் பிரித்தவர் காஷ்யப மஹரிஷி. அதன் பிறகுதான் காஷ்மீர் பள்ளத்தாக்கு வெளியே வந்தது. அந்தச் சமயத்தில் கயிலாயத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த பிருகு மஹரிஷி, அங்கே வந்து அமர்நாத் குகையைக் கண்டறிந்து பனி லிங்கத்தையும் தரிசனம் செய்தார். அமர்நாத் பனி லிங்கத்தை முதன் முதல் தரிசனம் செய்தவர் என்கிற பெருமையையும் பெற்றார். அதனைத் தொடர்ந்து மக்கள் வழிபடும் தலமாக அமர்நாத் இன்றுவரைத் திகழ்கிறது. பனி லிங்கத்தின் அருகே மேலும் இரண்டு சிறிய பனி லிங்கங்கள் தோன்றுகின்றன. அவை பார்வதியாகவும், விநாயகராகவும் வழிபடப்படுகின்றன. ஆடி-ஆவணி மாதங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் நாடெங்கிலுமிருந்து அமர்நாத் யாத்திரை மேற்கொண்டு சிவபெருமானைத் தரிசனம் செய்து வருகின்றனர்.

பஹல்காம் என்கிற இடத்திலிருந்து 46 கிலோமீட்டர் தூரத்தில், லிட்டர் பள்ளத்தாக்கில் பூமியிலிருந்து 3,888 மீட்டர் உயரத்தில் உள்ளது அமர்நாத் குகை. பஹல்கம் ஸ்ரீநகரிலிருந்து 96 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இந்தக் குகையில் அமர்நாத் பனி லிங்கமாகக் காட்சி தந்து அருள்பாலிக்கிறார். அமர்நாத் ஜி என்று அன்பும் மரியாதையும் பக்தியும் கலந்து மக்கள் அவரை வழிபடுகின்றார்கள்.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையைப் பிறகு, பாகிஸ்தான் காஷ்மீரைத் தன்னுடைய பகுதியாக உரிமை கோரியது. தொடர்ந்து அங்கே பயங்கரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் வளர்த்து வருகின்றது. சுதந்திரத்துக்குப் பிறகு தொடர்ச்சியாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ் பிரதம மந்திரிகள் செய்த தவறுகளினால் காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் இன்றுவரை ஆக்கிரமித்து வருவதுடன், இந்தியப் பகுதியிலும் பயங்கரவாதத்தை வளர்த்து வருகின்றது. இதன் விளைவாக 1990ம் ஆண்டு காஷ்மிர் ஹிந்துக்களான பண்டிட் சமுதாயத்தினர் லட்சக்கணக்கில் அடித்துத் துரத்தப்பட்டனர். வெளியேற மறுத்தவர்கள் கொல்லப்பட்டனர். ஹிந்துப் பெண்கள் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். குழந்தைகளும் கூடக் கொல்லப்பட்டனர். அவர்களுடைய வீடுகளும் வியாபாரத் தலங்களும் சூறையாடப்பட்டன. நூற்றுக்கணக்கான கோவில்கள் அழிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதுமாக முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. அப்போதிலிருந்து, அமர்நாத் யாத்திரையும் பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு உள்ளானது.2

2 ஆகஸ்டு 2000: பயங்கரவாதிகள் ஐந்து இடங்களில் தாக்குதல் நடத்தியதில் 21 யாத்ரீகர்கள் உட்பட 89 பேர் இறந்தனர்.

20 ஜூலை 2001: அமர்நாத் குகை அருகிலேயே பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பக்தர்கள் கொல்லப்பட்டனர்.

30 ஜூலை 2002: ஸ்ரீநகரில் அமர்நாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் மீது பயங்கரவாதி கிரேனைட் குண்டு வீசியதில் காரில் பயணித்த யாத்ரீகர்களில் 2 பேர் உயிரிழந்தனர்; 3 பேர் படுகாயமுற்றனர்.

6 ஆகஸ்டு 2002: பஹல்காமில் அமர்நாத் யாத்ரீகர்களுக்கான முகாம் மீது லஷ்கர்-இ-தைபா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டு 27 பேர் படுகாயமுற்றனர்.

21 ஜூன் 2006: யாத்ரீகர்கள் சென்று கொண்டிருந்த ஒரு பேருந்தின் மீது கிரேனைட் குண்டுகளைப் பயங்கரவாதிகள் வீசியதில் 5 பேர் படுகாயமுற்றனர்.

26 மே 20083: மத்திய அரசும் மாநில அரசும் முடிவுசெய்து அமர்நாத் யாத்ரீகர்களின் வசதிக்காக 100 ஏக்கர் நிலத்தை அமர்நாத் கோவில் தேவஸ்தானத்துக்கு அளித்தன. அதை காஷ்மீர் பிரிவினைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். பல்வேறு போராட்டங்களை காஷ்மீரில் நடத்தினர். அப்போதைய மாநில அரசு தன்னுடைய முடிவிலிருந்து பின்வாங்கியது. மத்திய காங்கிரஸ் அரசும் மௌனம் சாதித்தது. அதனைத் தொடர்ந்து, முடிவை மாநில அரசு வாபஸ் வாங்கியதை எதிர்த்து ஜம்முவில் உள்ள ஹிந்துக்கள் போராட்டங்கள் நடத்தினர். அப்படியும் மாநில அரசு பின்வாங்கும் தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

2010: மாநில அரசு அமர்நாத் யாத்திரையில் செல்லும் வாகனங்களுக்கு 7 நாட்களுக்கு ரூ 2,000 வரி விதித்தது. 7 நாட்களுக்குப் பிறகு அம்மாநிலத்தில் ஓடும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ 2,000/- வரி என்றும் அறிவித்தது. அப்போதைய எதிர்க்கட்சியான பா.ஜ.க எதிர்த்தும் அந்த வரி விதிப்பை வாபஸ் பெறவில்லை.

காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும், பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கும், பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது என்பது உலகறிந்த ரகசியம். பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ (ISI – Inter Services Intelligence) மற்றும் பாகிஸ்தான் ராணுவம் ஆகிய அமைப்புகள் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளான லஷ்கர்-இ-தைபா, ஜெயிஷ்-இ-முகம்மது போன்றவற்றிற்குத் தொடர்ந்து ஆதரவு கொடுப்பதோடு மட்டுமல்லாமல், அவ்வமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள் எல்லையைத் தாண்டி இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்கும் உதவி வருகின்றன. நிதியுதவியும் செய்கின்றன.

கடந்த ஜூலை மாதம் 10ம் தேதி திங்கட்கிழமை நடந்த தாக்குதலைக்கூட பாகிஸ்தான் லஷ்கர்-இ-தைபா பயங்கரவாதியான இஸ்மாயில் என்பவர்தான் திட்டமிட்டுள்ளார் என்கிற தகவல் கிடைத்துள்ளது. இந்த பயங்கரவாதி இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரைத் தேடிப்பிடிக்கச் சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறை இந்தியாவில் அப்பாவி மக்கள் மீது இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நடத்தும்போதும், நம் நாட்டு அரசியல் தலைவர்கள் கண்டன அறிக்கைகளை விடுப்பது ஒரு சம்பிரதாயமாகவே ஆகிவிட்டது. அந்தச் சம்பிரதாயம் இம்முறையும் கடைப்பிடிக்கப்பட்டது. ஜனாதிபதி, பிரதமர் ஆரம்பித்து, அமைச்சர்கள், கட்சித்தலைவர்கள் என்று பலரும் கண்டன அறிக்கைகள் விடுத்துள்ளனர். பயங்கரவாதிகள் கோழைகள் என்றும், அப்பாவி யாத்ரீகர்கள் மீதான தாக்குதல் கோழைத்தனமான செயல் என்றும், இம்மாதிரியான செயல்களால் இந்தியாவின் இறையாண்மையையும் மக்களின் ஒற்றுமையையும் குலைத்துவிட முடியாது என்றும் அவ்வறிக்கைகள் கூறின.

ஆனால் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய மத்திய அரசு முந்தைய அரசுகள் போல் இல்லாமல் பயங்கரவாத அமைப்புகள் மீதும், அவற்றுக்கு உதவுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. தேச விரோதச் செயல்களில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான அரசு சாரா அமைப்புகளின் (NGOs) உரிமத்தை ரத்து செய்து அவற்றைத் தடை செய்துள்ளது. காஷ்மீர் பிரிவினைவாதிகள் மற்றும் தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறிபவர்கள் ஆகியோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. 500 மற்றும் 1000 ரூபாய்களை முடக்கிய நடவடிக்கையினால் காஷ்மீரில் பிரிவினைவாதிகள் போராட்டங்கள் நடத்துவதும், கல்லெறிதல் நடத்துவதும் வெகுவாகக் குறைந்து போனது. சமீப காலமாக போராட்டங்களும் கல்லெறிதலும் மீண்டும் ஆரம்பித்திருந்தாலும், மத்தியக் காவல் படையினரின் பதிலடி கடுமையாக இருந்து வருகிறது. பல பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் எல்லையோர ராணுவ முகாம்களும் Surgical Operations என்கிற ராணுவ நடவடிக்கையினால் அழிக்கப்பட்டு வருகின்றன.

ஆயினும், கடந்த ஜூலை 10-ம் தேதி நடத்தப்பட்டுள்ள தாக்குதல், நேரம் பார்த்து நடத்தப்பட்ட தாக்குதல் என்றே சொல்ல வேண்டும். பிரதமரின் இஸ்ரேல் விஜயத்தைத் தொடர்ந்தும், பூட்டான் எல்லையில் சீனாவின் எல்லை மீறலைத் தொடர்ந்தும், அமர்நாத் யாத்திரை தொடங்கிய சமயத்திலும் இந்தத் தாக்குதல் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவினால் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் மூலம், நாங்கள் பயங்கரவாதத்தைக் கைவிட மாட்டோம்; அமர்நாத் யாத்திரையைக் குலைக்கத் தொடர்ந்து முயற்சி செய்வோம்; காஷ்மீர் மீதான எங்கள் உரிமையைக் கைவிட மாட்டோம் என்கிற செய்தியைத்தான் சொல்கிறது பாகிஸ்தான். ஆகவே, இந்த மாதிரியான தாக்குதல்களுக்கும், காஷ்மீர் பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டுமென்றால் பின்வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தாக வேண்டும்.

· அரசியல் அமைப்புச் சட்டத்தில் மற்ற மாநிலங்களுடன் ஒன்றிணைக்கப்படாமல் காஷ்மீருக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து தரும் க்ஷரத்து 370 ரத்து செய்யப்பட வேண்டும்.

· காஷ்மீர் மாநிலத்திற்காக மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருக்கும் சிறப்புச் செலவினங்கள் அனைத்தையும் நிறுத்த வேண்டும்.

· காஷ்மீர் பிரிவினைவாதிகளின் பாதுகாப்புச் செலவுகளை மத்திய அரசு இனி ஏற்கக்கூடாது. அவர்கள் இத்தனை வருடங்களாக ஈடுபட்டுக்கொண்டிருந்த தேச விரோத, பிரிவினைவாத செயல்களுக்காகக் கைது செய்யப்பட்டு மீதியிருக்கும் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.

· தங்களுடைய சொந்த நிலங்களும், வீடுகளும், சொத்துக்களும் பிடுங்கப்பட்டு, அவற்றை விட்டுத் துரத்தப்பட்டு, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் காஷ்மீர் ஹிந்துக்களான பண்டிட்டுகளை மீண்டும் காஷ்மீரில் குடியமர்த்த வேண்டும்.

· மீண்டும் குடியமர்த்தப்பட்டுள்ள பண்டிட் சமூகத்தினரின் பாதுகாப்புக்காக முன்னாள் ராணுவ வீரர்கள் குடும்பத்தினரையும் காஷ்மீரில் குடியேற்ற வேண்டும்.

· ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைநகராக ஜம்முவே நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும். சட்டமன்றம், தலைமைச் செயலகம், உயர் நீதிமன்றம் என்று ஆட்சியின் அனைத்துத் தலைமையகங்களும் ஜம்முவிலேயே இயங்கவேண்டும்.

· பரப்பளவு மற்றும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு சட்டமன்றத் தொகுதிகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

· முஸ்லிம்களுக்குத் தற்போது கொடுக்கப்பட்டு வரும் சிறுபான்மையினச் சலுகைகள் நிறுத்தப்பட வேண்டும்.

· பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும், பாதுகாப்புப் படையினர் மீது கல் எறிதலில் ஈடுபடுபவர்களுக்கும் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

· ராணுவப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA – Armed Forces Special Powers Act) தொடர்ந்து நடைமுறையில் இருக்க வேண்டும்.

· இந்திய அரசியல் அமைப்பில் மற்ற மாநிலங்கள் எப்படி நடத்தப்படுகின்றனவோ, அப்படியே ஜம்மு காஷ்மீர் மாநிலமும் நடத்தப்பட வேண்டும்.

மேற்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக அமுல்படுத்தினால், காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பும். தேசிய இறையாண்மையும் ஒருமைப்பாடும் தொடர்ந்து காப்பாற்றப்படும்.

ஆதாரங்கள்:

1.   (http://www.shriamarnathjishrine.com/the-holy-shrine.html)
2.   http://www.firstpost.com/india/amarnath-yatra-devotees-have-faced-repeated-terror-attacks-heres-the-blood-soaked-history-of-pilgrimage-3799091.html
3.   (https://en.wikipedia.org/wiki/Amarnath_Temple )

Posted on Leave a comment

ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் – ஜெயராமன் ரகுநாதன்


“கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? கொடுத்த வேலயச் செய்யாம இப்படி இருந்தா என்ன ஆறது?”

இப்படித் திட்டு வாங்குவது சாதாரணமாக மாணவர்களாகத்தானே இருக்கும். ஆனால் நமது உயர்நீதி மன்றம் தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களைக் கிட்டத்தட்ட இந்த அளவுக்குக் கேள்வி கேட்டிருக்கிறது.

“நீட் தேர்வில் ஐந்தே ஐந்து மாணவர்களே அரசுப் பள்ளிகளிலிருந்து தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அவமானப்படவேண்டிய விஷயம் இது. இவர்கள் தம் பொறுப்பை உணர்ந்து இந்த மாதிரி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதைக் கைவிடவேண்டும்” என்று நீதிபதி கிருபாகரன் சொல்லியிருக்கிறார்.

‘நீட்’ போன்ற போட்டித் தேர்வுகளில் தமிழக அரசுப்பள்ளி மாணவர்களின் மகா மோசமான செயல்பாட்டுக்கு ஒரு முக்கியக் காரணம் அப்பள்ளிகளின் ஆசிரியர்களும்தான் என்பதை மறுக்கவே முடியாது. எதற்கெடுத்தாலும் பாடத்திட்டத்தை மட்டுமே காரணம் சொல்லித் தப்பித்துவிட முடியாது. ஆசிரியர்களின் பயிற்றுவிக்கும் முறையும் அவர்களின் ஈடுபாடும் உழைப்புமே கேள்விக்குரியவைதான்.

கடந்த காலங்களில் அரசு ஊழியர்கள் மிகப்பெரும் அளவில் வேலை நிறுத்தம் செய்வது பற்றிய செய்திகள் வருகின்றன. கேட்டால் எங்களின் பல கோரிக்கைகளை இந்த அரசு கண்டுகொள்ளவே இல்லை என்று பதில் வருகிறது.

“ஸ்டிரைக்தான் அரசின் கவனத்தை எங்கள் பக்கம் திருப்ப ஒரே வழி!”

மற்ற அரசு ஊழியர்கள் போல ஆசிரியர்களும் கோரிக்கை வைத்திருக்கின்றனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற்று, பழைய திட்டத்தையே கொண்டு வரவேண்டும், ஏழாவது பே கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட வேண்டும். மொத்தத்தில் இன்னும் அதிகம் சம்பளம் தொடர்பான கோரிக்கைகள்.

“போன எலக்ஷன் சமயத்துல வாக்குறுதி குடுத்தாங்களே? அதான் நாங்க கேட்கறோம். ஜெயிச்சு வந்தவுடனே எங்களை மறந்துட்டா எப்படீங்க?”

“ஆனா நீங்க ஸ்டிரைக் பண்ணறது சரியா? பாதிக்கப்படுவது மாணவர்களாச்சே!”

“வேறென்ன செஞ்சாலும் அரசு எங்களைக் கண்டு கொள்ளறதில்லியே!”

என்ன பதில் சொல்லுவது?

ஆனாலும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்வது சரியல்ல. முக்கியமாக இன்றைய அதீதப் போட்டிகள் நிலவும் காலகட்டத்தில் ஒவ்வொரு மாணவனும் நேரவிரயமின்றிப் படித்து, தேர்வுகள் எழுதி, நல்ல மேற்படிப்புக்குச் சென்று தன் எதிர்காலத்தை நிலைநிறுத்திக்கொள்ளவேண்டியது கட்டாயம். முன்பிருந்ததைவிட மாணவனுக்கு ஆசிரியர்களின் ஆதரவும் கற்பித்தலும் ஆலோசனைகளும் அதிகமாகத் தேவையாக இருக்கின்றன. பாதிக்கு மேற்பட்ட பெற்றோர்கள் பிள்ளைகளுக்குச் சரியான ஆலோசனை வழங்கும் நிலையில் இல்லை. தான் கூலித் தொழிலாளியாகவோ ஆட்டோ டாக்ஸி ஓட்டுபவராகவோ இருந்தாலும் தன் மகனோ மகளோ பட்டப்படிப்பு முடிக்கவேண்டும், நல்ல வேலைக்குப் போகவேண்டும் என்று எண்ணும் பெற்றோரால் தகுந்த ஆலோசனைகள் வழங்க இயலாத நிலையில் ஆசிரியரின் பங்கு மிக முக்கியத்துவம் பெறுகிறது.
ஆசிரியர் என்பவர் தொழில்முறை வல்லுநர். எஞ்சினீயர், அக்கவுண்டண்ட் ஆர்க்கிடெக்ட் போலத்தான் இவரும். ஒரு தொழில்முறை வல்லுநர் வேலை நிறுத்தம் செய்யக்கூடாது. அவருக்கு இஷ்டம் இல்லையென்றால், அதற்கு என்ன காரணம் வேண்டுமானாலும் இருக்கட்டும், அவர் தன் வேலையைவிட்டு விலகி வேறொரு வேலை தேடிக்கொள்ளவேண்டுமே தவிர, கூட்டம் கூட்டி வேலை நிறுத்தம் செய்வது தகாது.

“யார் சொன்னது? இது என்ன வேதமா இல்லை சட்டமா? ஆசிரியர்கள் மிக முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள். அவர்களின் பணி மிகக் கடுமையானது. பலதரப்பட்ட மாணவர்களுடன் பழகி, அவர்களின் தன்மைக்கேற்ப பாடம் கற்பித்தல் வேண்டும். இந்தக் கடின உழைப்பாளர்கள் நிச்சயம் தங்களின் நிலையை உயர்த்திக் கொள்ளவோ அல்லது அதிக சம்பளத்துக்காகவோ வேலைநிறுத்தம் செய்வதில் என்ன தவறு காணமுடியும்?”

இரண்டு பார்வைகளும் இருக்கின்றன.

“அதெல்லாம் பாவ்லா பேச்சு! ஒரு தொழிற்சாலையில் ஸ்டிரைக் நடந்தால் அதன் மானேஜ்மெண்ட் மட்டுமே பாதிக்கப்படும். ஆனால் டீச்சர்கள் ஸ்டிரைக் செய்தால் குழந்தைகள், பெற்றோர், குடும்பம் மற்றும் அந்தச் சமூகச்சூழலே பாதிக்கப்படும். அதனால டீச்சர் ஸ்டிரைக்கையும் மற்ற தொழிலாளர் ஸ்டிரைக்கையும் ஒப்பிடக்கூடாது!”

“அதெப்படி? டீச்சர்களின் பங்கு மிக முக்கியமானது என்று சொல்கிறீர்கள். ஆனால் அவர்களுக்குத் தேவையான ஊதியம் வழங்கித்தானே ஆகவேண்டும்? நம்முடைய வரிப்பணம் இதற்கில்லாமல் வேறெதற்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும்! வரிப்பணத்தை வைத்துக்கொண்டு இலவசத்திட்டங்கள் வழங்கிவிட்டு ஆசிரியர்களுக்கென்று வரும்போது அரசு கை விரிப்பது என்ன நியாயம்!”

ஆகஸ்ட் மாதம் அரசு ஊழியர்களோடு சேர்ந்து ஆசிரியர்கள் ஸ்டிரைக் செய்தபோது JACTO-GEO வோடு ‘கோட்டை நோக்கிப் புறப்படுவோம்’ என்று சென்றார்கள்.

“முதலில் 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்குங்கள். கூடிய விரைவில் எங்கள் கோரிக்கைகளை முழுமையாகப் பரிசீலிக்க உத்தரவு தாருங்கள்” என்று கேட்டவர்கள், “அரசு எங்களை அழைத்துப் பேசாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தம்” என்றும் எச்சரித்தார்கள்.

ஆனால் இந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கேட்பது கொஞ்சங்கூட நியாயம் இல்லை என்று வாதிடுபவர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்களின் மாதச் சம்பளத்தோடு ஒப்பிட்டுச்சொல்கிறார்கள். அரசுப்பள்ளியில் ஒரு சீனியர் ஆசிரியர் ரூ 40,000 முதல் ரூ 60,000 வரையும் ஜூனியர் ஆசிரியர் ரூ 20,000 முதல் ரூ 40,000 வரையும் மாதச் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் இதே சம்பளம் தனியார் பள்ளி என்று வரும்போது சீனியர்களுக்கு ரூ 20,000 முதல் ரூ 40,000 மற்றும் ஜூனியர்களுக்கு ரூ 15,000 முதல் ரூ 35,000 மட்டுமே கிடைக்கின்றது. வசதி குறைந்த தனியார்ப் பள்ளிகளில் சம்பளம் இன்னும் குறைவே. ஆனால் தனியார்ப் பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர்களின் உழைப்போ பல மடங்கு அதிகமாக உள்ளது. நிலைமை இப்படி இருக்க மாணவர்களைப் பெரும் சங்கடத்துக்குள்ளாகும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இந்த வேலை நிறுத்தம் இப்போது தேவைதானா என்னும் கேள்வி தவிர்க்கமுடியாததே. அரசுப் பள்ளிகளில் உள்ள அரசு ஆசிரியர்களின் மீதான பொதுமக்களின் மதிப்பீடு என்ன என்பதை வேலை நிறுத்தம் செய்யும் ஆசிரியர்கள் உணர்ந்துகொள்வது நல்லது. மக்களின் ஆதரவின்றி நடைபெறும் எப்போராட்டமும் பிசுபிசுத்துப் போகும்.

இன்று தமிழக அரசுப்பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 1,16,84. இவர்களில் செப்டம்பர் 15 தேதி வரை வேலை நிறுத்தம் செய்தவர்களின் எண்ணிக்கை 33,487. அதாவது கிட்டத்தட்ட 30 சதவீதம் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்திருக்கிறார்கள். நிச்சயம் இதன் பாதிப்பு கணிசமாக இருக்கும். ஆனால் அரசும் நீதிமன்றமும் கடுமையைக் காட்டியிருப்பது நல்ல விஷயமே. ஆசிரியர்களின் பொறுப்புணர்ச்சி பற்றிய நீதிபதியின் கேள்விக்கு சில ஆசிரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்து நீதிபதியின் நேர்மை குறித்தும் சாடியிருப்பது சட்டப்படியும் தார்மிகப்படியும் சரியல்ல.

சமீபகாலமாக தமிழ்நாட்டில் எந்தத் திட்டத்துக்கும் எதிர்ப்பும் போராட்டமும் கிளம்பியிருப்பது வருந்தத்தக்க விஷயம். ஒரு சில பிரிவினைவாதிகளும் அதில் குளிர்காய முற்படும் அரசியல்வாதிகளும் ஏற்படுத்தும் இந்தப் போராட்டங்களினால் இழப்பு தமிழ்நாட்டுக்குத்தான் என்பதைப் பெருவாரியான மக்கள் உணர வேண்டும். ஒன்றிரண்டு நாள் தொலைக்காட்சியின் ஆர்க் லைட்டுக்கு மயங்கி எதை வேண்டுமானாலும் பேசுவது என்றிருக்கும் வெத்துவேட்டு அரசியல் மற்றும் வாய்ச்சவடால் வீரர்களின் வார்த்தைக்கு மயங்காமல் அவர்களை ஒதுக்கி, தமிழக முன்னேற்றத்துக்கான செயல்பாடுகளை மத்திய அரசிடம் கேட்டுப்பெறுவது மிக முக்கியம். அடிப்படையாக நமது கல்வித்திட்டமும் செயல்படுத்தும் முறைகளும் இன்னும் பல படிகள் மேலே போகவேண்டும்.

ஆசிரியர்கள் என்றாலே சமுதாயத்தில் பெரும் மதிப்பும் மரியாதையும் இருந்த ஒரு காலகட்டம் உண்டு. ஆசிரியர்களும் அப்போது அந்த அளவுக்கு அர்ப்பணிப்பும் உழைப்பும் கொண்டு மாணவர்களின் மேம்பாட்டில் கவனம் செலுத்தினார்கள். யாரும் கேட்காமலே, தியாகம் என்னும் உணர்வே இல்லாமல் தம் வாழ்க்கையைப் பள்ளிகளில் முழு ஈடுபாட்டோடு, இது ஆசிரியராகத் தம் கடமை என்று எண்ணிச் செலவழித்த ஆசிரியர்கள் இருந்திருக்கின்றனர். இன்னும்கூட சொற்ப அளவில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். உலகெங்கிலும் இருக்கும் பல வெற்றியாளர்கள் தம் கிராமத்துப் பள்ளிகளில் கல்வி கற்பித்த ஆசிரியர்களே தம் வெற்றிக்குக் காரணம் என்று கொண்டாடுவதை நாம் இன்றும் பார்க்கலாம். அப்படிப்பட்ட பொற்காலத்தை நோக்கிச்செல்ல வேண்டும் என்னும் ஆசையையே நீதிபதி கிருபாகரனும் எதிரொலித்திருக்கின்றார்.

ஏற்கெனவே தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து ஐஐடிக்களிலும் மற்ற நாடு தழுவிய கல்விக்கூடங்களிலும் தமிழ் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருகிறது. வெறும் மனப்பாடம் செய்தாலே மிக அதிக மதிப்பெண்கள் பெற்றுவிடும் தரத்தில் இருக்கும் மாநிலப் பாடத்திட்டம் மேம்படுத்தப்பட வேண்டும் என்னும் கோரிகை பலமாக எழுந்திருக்கிறது. அடுத்த வருடம் நீட் தேர்வு நிச்சயம். இதற்கெல்லாம் மாணவர்கள் தயாராக வேண்டும் என்றால் ஆசிரியர்களின் தொடர்ந்த ஒத்துழைப்பும் ஆலோசனையும் மிக மிக அவசியம். இந்த நிலையில் அவர்கள் வேலை நிறுத்தம் என்று போய்விட்டால் பாதிக்கப்படப்போவது தமிழக மாணவர்களே! இந்த வழக்கில் நீதித்துறை தடாலடியாக ஆசிரியர்களை வேலை நீக்கவும் முடியும் என்று ஒரு குண்டைத்தூக்கிப்போட்டு வேலை நிறுத்தத்திற்கு ஒரு முடிவைக்கொண்டு வந்திருப்பதைப் பலரும் வரவேற்கிறார்கள். நீதித்துறை தன் கரங்களை அளவுக்கதிகமாக நீட்டிவிட்டது என்று புலம்புவோரும் உண்டு.

இந்தப்பிரச்சினைக்கு அரசு வெகு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆசிரியர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படவேண்டும் என்பதில் தயக்கம் இல்லாவிட்டாலும், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்வது தடை செய்யப்படவேண்டும் என்பதில் தவறில்லையோ என்றே படுகிறது.

Posted on Leave a comment

யோக ஆசான் ஸ்ரீ கிருஷ்ணமாச்சார்யா – சுஜாதா தேசிகன்


ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியரிடம் கேட்கப்பட்ட, ‘இந்தச் சமுதாயத்துக்கு உங்களது செய்தி என்ன?’ என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் – ஓம்!

முன்பு ‘மாரல் சைன்ஸ்’ என்றொரு வகுப்பு இருந்தது. அதில் பெரும்பாலும் ஆசிரியர், “சத்தம் போடாமல் ஏதாவது செய்யுங்க” என்ற அறிவுரையுடன் நோட்டுப் புத்தகங்களைத் திருத்திக்கொண்டு இருப்பார். எப்பொழுதாவது நீதிக் கதைகள் சொல்லுவார். மற்றபடி அது ‘ஓபி’ வகுப்பு. மூக்குக்குக் கீழே மீசை எட்டிப்பார்க்கும் காலத்தில் அறிவியல் பாடம் ஃபிஸிக்ஸ், கெமிஸ்டரி, பையாலஜி என்று பிரிக்கப்பட்டு, ‘மாரல் சைன்ஸ்’ மறைந்து போனது.

ஹார்மோன்களின் அட்டகாசத்தால் பல சிக்கல்கள் வரும் பருவத்தில் ‘மாரல் சைன்ஸ்’ வகுப்பைப் புறக்கணித்துவிட்டு, எல்லோரும் என்ஜினியர்களாகவோ அல்லது டாக்டராகவோ புறப்படுகிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் மாரல் சைன்ஸ் என்ற வகுப்பு ‘வேல்யூ எஜுகேஷன்’ என்று உருமாறி, லீடர் ஷிப், கம்யூனிகேஷன், கமிட்மெண்ட், ரெலேஷன்ஷிப், பர்சனாலிட்டி டெவலப்மென்ட் என்று கார்பரேட் சமாசாரமாகிவிட்டது.

பத்து வயதுப் பையன் ஒருவனுக்கு ‘மௌஸ்’ உபயோகிக்க முடிகிறது என்பது விஞ்ஞானம் இல்லை, ‘வீண்’ஞானம். இந்த வயதில் அறிவியலுடன் தேவை ‘மாரல் சைன்ஸ்’. நம் பாரத தேசத்தில் ஸ்ரீராமாயணம், ஸ்ரீமஹாபாரதம் போன்ற காப்பியங்களையும், தென்திசை முதல் வடதிசை வரை உள்ள மஹான்களின் சரித்திரங்களையும் சொல்லிக்கொடுக்க வேண்டும். இதுவே அவனுக்குச் சிறந்த மருந்தாக அமையும்.

நச்சுப் பொருள் நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். விஷம் மட்டும் நச்சு என்று என்று நினைக்கவேண்டாம். கடையில் வாங்கும் சீரியல் (Cereal, தானியம்) முதல் டிவியில் பார்க்கும் சீரியல் வரை எல்லாமே நச்சுத்தன்மை உடையவை. டிவி சீரியலா என்று உங்கள் மனது கேட்கிறது அல்லவா? அதற்குக் காரணம் உடலையும் மனதையும் நாம் பிரித்து பார்ப்பதால்தான்.

இன்று இருக்கும் டயபட்டீஸ் (நீரிழிவு), ஹைப்பர் டென்ஷன், உடல் பருமன், அல்சைமர் போன்ற கோளாறுகளுக்கும் மனதிற்கும் சம்பந்தம் உண்டு. இதற்கு மருந்து மாத்திரைகள் கிடையாது. உணவுக் கட்டுப்பாடும் யோகாவும்தான் சிறந்த வழி.

“எதுக்கும் நீங்க யோகா ட்ரை பண்ணுங்க” என்ற அறிவுரை, மன அழுத்தம், முதுகு, முழங்கால் வலி வந்தால் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. யோகாவை ஏதோ ‘ஜிம்மிக்கி கம்மல்’ ரேஞ்சுக்கு பாட்டு போட்டு ஆடுவது எல்லாம் பாவம்.

இருபதாம் நூற்றாண்டின் யோகாச்சார்யா ஸ்ரீ கிருஷ்ணமாச்சார்யா அவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் (தமிழில்) வாங்கி, படிக்காமல் பில்லுடன் வைத்திருந்தேன். பெரிய யோகி என்று அப்பா இவரைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு சில வாரங்கள் முன் கிடைத்தது. முன்பே படித்திருக்கலாமே என்று வருத்தப்பட வைத்த புத்தகம்.

யோகா கற்றுக்கொள் என்று என் அப்பா என்னிடம் சொல்லியிருக்கிறார். மாடிக்கு அழைத்துச் சென்று என் அப்பா எனக்குப் பல ஆசனங்களைச் செய்து காண்பித்தது இன்றும் நினைவிருக்கிறது. கோலிக்குண்டு அளவு இருந்த சிறுநீரகக் கல்லை, ஆபரேஷன் செய்துக்கொள்ளாமல் தினமும் வாழைத்தண்டு சாறு குடித்தும் யோகாசனம் செய்தும் வெளியே கொண்டுவந்து டாக்டரையும் எங்களையும் ஆச்சரியப்படுத்தினார்.

நான் படித்த ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார் வாழ்க்கைக் குறிப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுமுன் சுருக்கமாகச் சில ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியர்கள் பற்றிச் சொல்கிறேன். அப்போதுதான் ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியாரின் வாழ்கை வரலாறு எவ்வளவு மதிப்பு மிக்கது என்று நமக்குத் தெரியும்.

நாதமுனிகள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை நம்மாழ்வாரிடமிருந்து பெற்றுத் தந்தவர். ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ என்ற 11 பாசுரங்களை ஆழ்வார் திருநகரியில் உள்ள புளியமரத்துக்கு அடியில் ஆஷ்டாங்க யோகத்தில் நம்மாழ்வாரைத் தியானித்துப் பெற்றார்.

நாதமுனிகள் அருளிச் செய்தவற்றுள் யோக ரஹஸ்யம் அடங்கும். அதை குருகைக் காவலப்பன் என்ற தன்னுடைய சிஷ்யருக்குச் சொல்லிக் கொடுத்தார். அவர் காலத்துக்குப் பிறகு, அதை தன் பேரனான ஆளவந்தாரிடம் சொல்லித் தரும்படி நியமித்தார்.

ஆளவந்தார் யோக ரஹஸ்யத்தை கற்றுக்கொள்ள குருகைக் காவலப்பன் தியானிக்கும் இடம் வந்தடைந்த போது, குருகைக் காவலப்பன் தியானத்தில் இருந்தார். அவரைத் தொந்தரவு செய்ய விரும்பாமல், ஒரு மதிலின் பின் மறைந்து அவர் முடிக்கும் வரை காத்துக்கொண்டிருக்க, திடீர் என்று குருகைக் காவலப்பன் கண் விழித்து “இங்கே சொட்டை குலத்தைச் சேர்ந்தவர் யார்?” என்று கேட்க, ஆளவந்தார் வெளிப்பட்டு தன்னை நாதமுனிகளின் பேரன் என்று அறிமுகம் செய்து கொண்டார். (நாதமுனிகள் சொட்டை குலத்தைச் சேர்ந்தவர்.)

ஆளவந்தார் ஆச்சரியப்பட்டு “எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?” என்று கேட்க, “யோகத்தில் இருந்தபோது பெருமாள் தன் தோளை அழுத்தி எட்டிப்பார்த்தார், சரி, நாதமுனிகளின் சொட்டை குலத்திலிருந்து ஒருவர் வந்துள்ளார் என்பதை யூகித்தேன்” என்றார். ஆனால் ஆளவந்தாருக்கு யோக ரஹஸ்யம் கிடைக்கவில்லை. பிறகு அது அழிந்து போயிற்று. ஆளவந்தார் காலம் பொ.பி. 976 – 1006.

ஆளவந்தாருக்குப் பிறகு 800 ஆண்டுகளுக்குப்பின் 1888ம் வருடம் நவம்பர் மாதம் 18ம் நாள் கர்நாடகாவில் உள்ள சித்ரதுர்கா மாவட்டத்தில் பிறந்தார் ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார். இவர் நாதமுனிகள் வம்சத்தவர். அவரது வாழ்க்கை வரலாற்று நூலின் முன்னுரையில் அவரது மகன் டி.கே.வி. தேசிகாச்சார் இப்படி எழுதுகிறார்.

“எங்கள் குரு ஸ்ரீ கிருஷ்ணமாச்சார்யா நூறு வருடங்கள் மேல் வாழ்ந்தும், தன் வாழ்க்கை வரலாறு பற்றிச் சில தகவல்களே விட்டுச் சென்றுள்ளார். பல துறைகளில் நிபுணராக இருந்த இவருடைய பின்னணி எல்லோருடைய ஆர்வத்தையும் தூண்டும். பல முறை முயற்சி செய்தும் இவரைப்பற்றி செய்தி அதிக அளவில் சேர்க்க முடியவில்லை. பல முறைகள் வற்புறுத்தியபின் ஒரிரு முறைகள், தன் வாழ்க்கையில் முக்கியமான சில நிகழ்ச்சிகளைச் சொன்னார். இதுவும் சுவாரஸ்யமாக தொடரும்பொழுது, ‘இது அஹங்காரத்தைத் தூண்டும் பயணம்’ என்று சொல்வதை நிறுத்திவிடுவார்.”

இளம் வயதில் வேதத்தை சந்தை முறையில் தன் தந்தையிடம் கற்றார். இவருக்குப் பத்து வயது இருக்கும்போது துரதிர்ஷ்டவசமாக தந்தையை இழந்தார். பாட்டனார் மைசூரில் இருக்க, 12 வயதில் அங்கே சென்று பரகால மடத்தில் மாணவராகச் சேர்ந்தார். 16ம் வயதில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. கனவில் நாதமுனிகள் தோன்றி தெற்கே உள்ள அழ்வார் திருநகரிக்கு வருமாறு கட்டளையிட்டார். பணத்தைச் சேர்த்துக்கொண்டு ஆழ்வார் திருநகரிக்குப் புறப்பட்டார். .

ஆழ்வார் திருநகரியில் புளியமரத்தடியில் ஒரு பெரியவரை அணுகி “நாதமுனிகளை எங்கு தரிசிக்கலாம்?” என்று கேட்க, அவர் தனது கையால் காட்டிய திசையை நோக்கிச் சென்றார். அது தாமிரபரணி நதிக்கரையில் ஒரு மாமரத்தடி. உணவருந்தாமல் மிகவும் களைத்திருந்த இவர் அங்கு மயக்கமாக விழுந்தார். அங்கு இவருக்கு ஓர் அனுபவம் ஏற்பட்டது. மூன்று மாமுனிவர்கள் மத்தியில் அவர் இருந்தார். அவர்களை நமஸ்கரித்து, நாதமுனிகள் இயற்றிய யோக ரஹஸ்யத்தைத் தனக்கு போதிக்கும்படியாகக் கேட்டுக்கொண்டர். நடுவில் இருந்த நாதமுனிகள் தனது இனிமையான குரலில் யோக ரஹஸ்யத்தை செய்யுளாகக் கூற, அதைக் கேட்டுக்கொண்டார். சில மணி நேரம் சென்று ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார் தன் சுயநினைவு வந்தபோது முனிவர்கள் மறைந்தனர். மாமரத்தடியையும் காணவில்லை.

மீண்டும் கோயிலுக்குத் திரும்பினார். அங்கு அந்தப் பெரியவர் இவரைப் பார்த்தவுடன் “என்ன, நாதமுனிகளிடமிருந்து யோக ரஹஸ்யம் உபதேசமாயிற்றா? கோயிலுக்குப் போய்ப் பெருமாளைச் சேவி” என்று கூற, கோயிலுக்குச் சென்று திரும்பி வந்ததும் அந்தப் பெரியவரையும் காணவில்லை. அப்போதுதான் அந்தப் பெரியவர் தனது கனவில் தோன்றிய, மூன்று மாமுனிவர்கள் நடுவில் காட்சி தந்த நாதமுனிகள் தோற்றமாய் இருந்தது தெரிந்தது.

இவ்வகையில், காலத்தால் அழிந்திருந்த ‘யோக ரஹஸ்யம்’ என்ற அரிய நூல் இவருக்குக் கிடைத்தது. இதன் அடிப்படையில்தான் தன் யோக தத்துவங்களை வகுத்துக்கொண்டார். மீண்டும் மைசூர் திரும்பி மேலும் படித்து ‘வித்வானாக’ தேறி, சம்ஸ்கிருத மேற்படிப்புக்கு வாரணாசிக்கு தன் 18ம் வயதில் புறப்பட்டார். அங்கும் ஓர் ஆச்சரியம் நடந்தது.

அங்கே சிவகுமார சாஸ்திரியிடம் மாணவரானார். ஒரே இரவில் தனது குருவிடமிருந்து சம்ஸ்கிருத மொழியிலிருந்து நுண்ணிய அரிய விஷயங்களைக் கேட்டறிந்தார். மறுநாள், இவரது குரு தன் பேசும் சக்தியை இழந்தார்! இவருக்காகக் காத்துக்கொண்டு இருந்தது போல இருந்தது இச்சம்பவம். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மைசூர் வந்த பிறகு வீணை, மீமாம்ஸம், பகவத் கீதை, ஸ்ரீவேதாந்த தேசிகரின் ரஹஸ்யத்ரயசாரம், ஸ்ரீராமானுஜரின் ஸ்ரீபாஷ்யம், ஆகியவற்றைக் கற்றார்.

காசி அவரைக் கவர்ந்திழுத்தது, மீண்டும் கற்க வாரணாசி பயணமானார்.

உஞ்சவிருத்தி எடுத்துப் பெற்ற மாவிலிருந்து தேவையான ரொட்டியைச் செய்துகொண்டு படித்து, படிப்பில் சிறந்து விளங்கிப் பல பட்டங்களைப் பெற்றார். ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் (மூன்று மாதங்கள்) இமய மலைச்சாரலுக்கு அருகில் உள்ள கோயில்களுக்கும் புண்ணியத் தலங்களுக்கும் சென்று வருவார். மலைப்பிரதேசத்தில் நெடுந்தூரம் ஏறிச்செல்வதிலும் இயற்கையைக் கண்டு களிப்பதிலும் தன் பொழுதைப் போக்குவார். இவரது பூகோள அறிவு வியக்கத்தக்கது. ஒருவன் நிறைய இடங்கள் செல்வதின் மூலமே நல்ல அறிவைப் பெறுகிறான் என்று வலியுறுத்துவார்.

வாரணாசியில் படிக்கும்போது தந்தையாரிடம் கற்றிருந்த ஆசனப் ப்ராணாயாமங்களைச் செய்து வந்தார். இதைக் கவனித்து வந்த ஒரு சாது இவரை யோக நிபுணர் ஸ்ரீபாபு பகவன் தாஸிடம் அனுப்பினார். அவர் இவரை பாட்னா பல்கலைக்கழகத்தில் மணவனாக அனுமதித்தார்.

பாட்னா பல்கலைக்கழகத்தில் இவரது யோகா ஆசிரியர் ஸ்ரீ கங்காநாத்ஜா என்பவர் ‘யோகாச்சார்யா’ பட்டம் பெற்றவர். அவரிடம் யோகா பயின்று அதில் மேலும் தேர்ச்சி பெற விருப்பம் தெரிவித்தார்.

அதற்கு அவர் “யோகத்தை முறையே பயில வேண்டுமானால் நேபாளம் தாண்டி திபெத்தில் யோகிவர்யர் ஸ்ரீ ராமமோஹன ப்ரம்மச்சாரியிடம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று சொல்ல ஸ்ரீ கிருஷ்ணமாச்சார்யார் தனது குறிக்கோளை அடைய முடிவு செய்தார்.

அந்தக் காலத்தில் நாடுவிட்டு வெளியே செல்வது அவ்வளவு எளிதல்ல. சிம்லாவில் இருந்த வைஸ்ராயிடம் இவரது ஆசிரியர் சிபாரிசுக் கடிதம் கொடுத்தார். துரதிஷ்டவசமாக வைஸ்ராய் சர்க்கரை வியாதியால் உடல்நலம் குன்றி இருந்தார்.

ஒருநாள் வைஸ்ராயிடமிருந்து அழைப்பு வர, அவருக்கு ஆறு மாதம் யோகப் பயிற்சி அளிக்க, சர்க்கரை நோய் கட்டுக்குள் வந்தது. வைஸ்ராய் சந்தோஷமாக இவர் ஹிமாலயத்தைக் கடந்து இந்தியாவுக்கு வெளியே நோபாளம் திபெத் செல்ல உதவி செய்தார். ஆனால் மூன்று மாதத்துக்கு ஒருமுறை சிம்லா வந்து இவருக்கு யோகா கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையும் இட்டார்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் நடந்தே  மானஸரோவர் சென்று ஸ்ரீ ராமமோஹன ப்ரம்மச்சாரியைத் தேடி, ஒரு குகையில் அவரைக் கண்டுபிடித்தார். வணங்கி சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். சில நாளில் ஸ்ரீராம மோஹன ப்ரம்மச்சாரியின் குடும்பத்தில் ஒருவரானார். பதஞ்சலி யோக சூத்திரத்தில் விவரிக்கப்பட்ட பல யோக நிலைகளை நேபாள மொழியில் உள்ள யோக கூரண்டத்தைக் கொண்டு அறிந்துகொண்டார்.

முதல் மூன்று வருடங்கள் யோக சூத்திரம் கற்றார். அடுத்த மூன்று வருடங்கள் யோகாப்யாஸ்யம் செய்வதில் கழித்தார். அதை அடுத்து ஒன்றரை வருடங்கள் சிஷ்ண க்ரமம், சிகிச்சா க்ரமம் என்ற யோகாபியாசத்தை மொத்தம் ஏழரை வருடங்கள் கற்றார். நடுவில் மூன்று மாதத்துக்கு ஒரு முறை சிம்லா சென்று வைஸ்ராய்க்கு யோகா பயிற்சி அளித்தார்.

ஏழரை வருடங்கள் குருவுடன் தன் வாழ்க்கையை ஆனந்தமாகக் கழித்தார். அங்கேயே ஆனந்தமாக இருந்திருக்கலாம். ஆனால் இவர் குருவோ இவரை திரும்ப இந்தியா சென்று, குடும்ப வாழ்க்கை நடத்தி, யோக விஷயங்களை மக்கள் சேவைக்காக உபயோகப்படுத்துமாறு கட்டளையிட்டார்.

1922 திபெத்திலிருந்து திரும்பினார். மீண்டும் கல்கத்தா, அலகாபாத், பாட்னா, பரோடா ஆகிய பல்கலைக்கழங்களில் பல பட்டப்படிப்புகள் படித்தார். பிறகு மைசூர் ராஜகுடும்பத்தில் யோககுருவாக இருந்தார். அங்கே பலருக்கு நாடி பிடித்து உடல்நலக் குறைவானவர்களுக்கு உதவி செய்தார். இவர் ஆயுர்வேதத்திலும் மிகத் தேர்ச்சி பெற்றவர்.

ஸ்ரீகிருஷ்ணமாச்சரி ஆசனப்பயிற்சி முறையில், உடல், மூச்சு, மனது மூன்றும் சேர்ந்து இயங்கும். இவர் சொல்லிக்கொடுத்த முறை பதஞ்சலி யோக சூத்திரத்தில் கூறிய தத்துவங்களைத் தழுவியது.

ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியாரின் யோகா முறை இது – உடலை ஆசனம் செய்வதன் மூலம் தயார் படுத்திக்கொள்ளவேண்டும். ஆசனம் செய்யும்போது உடலுடன் மனமும் மூச்சும் ஓரளவு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படவேண்டும். பிறகு ப்ராணாயாமம் (மூச்சைக் கவனமாக கையாள்வது) செய்யவேண்டும். ப்ராணாயாமம் என்பது ஏதோ மூச்சை இழுத்து, அடக்கி விடுவது என்று நினைப்பார்கள். ஆனால் ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார் சொல்லிக்கொடுப்பது வேறு – மூச்சை உள்ளே இழுக்கும் போது உள்ளுக்குள் ஓர் அரிய சக்தி, நம்மைக் காக்கும் சக்தி போன்ற நிலை வர வேண்டும். அடக்கும்போது அந்த சக்தி நம்மைச் சுத்தம் செய்வதாக உணர வேண்டும். வெளிவிடும்போது மனதால் ‘எதுவும் என்னுடையது அல்ல, எல்லாம் உனக்கே சொந்தம்’ என்ற உணர்வுடன் வர வேண்டும். அடுத்த நிலை ஆசன ப்ராணாயாமம் செய்வது.

உடல் ஊனமுற்றோருக்கும் மன வளர்ச்சி குன்றியவர்களுக்கும் இவர் காட்டிய வழி மிக உயர்ந்தது. மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு மூளை செவ்வனே வேலை செய்ய பல வழிகளைக் கையாண்டார். இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காகச் சில கருவிகளை உருவாக்கினார்.

இவர் யோகத்தை ஒரு உடற்பயிற்சியாகக் கொள்ளாமல் கடவுளை அடையும் மார்க்கமாகக் கருதினார். மற்ற கலாசார, மதம் சம்பந்தப்பட்டவரகளுக்கு அவர்கள் கடைப்பிடிக்கும் புனிதமான பெயர்கள் இருந்தால் அதை உபயோகப்படுத்துங்கள் என்று சொல்லிவிடுவார். தன் நம்பிக்கையை ஒருபோதும் அவர்களிடம் திணிக்கமாட்டார்.

யோகாவில் மக்களை ஈர்க்க, யோகத்தால் இதயத் துடிப்பு, நாடி எல்லாவற்றையும் சில நிமிஷங்கள் நிறுத்தினார். இவரைப் பரிசோதித்த வெளிநாட்டு மருத்துவர்கள் ஆச்சரியப்பட்டனர் “I would have pronounced him dead” என்றார் ஒரு ஜெர்மானிய மருத்துவர். இந்த உத்தியைத் தனக்குச் சொல்லித் தரவேண்டும் என்று அவரது மகன் தேசிகாச்சார் கேட்க, “இது ஈகோவைத்தான் வளர்க்கும், இதனால் சமுதாயத்துக்கு ஓர் உபயோகமும் இல்லை” என்று மறுத்துவிட்டார்.

ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியருக்கு நன்றாகச் சமைக்கத் தெரியும். கவிதை எழுதுவார், தோட்ட வேலை செய்வார். சங்கீதத்தைக் கேட்டுத் துல்லியமாக ராக, தாள தவறுகளைச் சுட்டிக் காட்டுவார். சங்கீத வித்வான்கள் இவரிடம் தங்கள் உடல் உபாதைகளுக்குத் தீர்வு கேட்கும்போது சங்கீத நுணுக்கங்களைக் கொண்டே தீர்வுகளை எடுத்துரைப்பார். வீட்டிலேயே ஆயூர்வேத மூலிகைகள் வளர்த்தார். நாட்டியத்தில் முன்னணியில் இருந்த பலர் இவரிடம் சந்தேகம் தீர்த்துக்கொள்வார்கள். ஜோதிடம் அவருக்குப் பிடித்த பிரிவு.

தனது அறையில் உள்ள நாற்காலி மேசைகளைக் காலத்துக்குத் தகுந்தவாறு மாற்றிப் போடுவது இவர் வழக்கம். ஒருமுறை முதல்நாள் மாற்றி போட்டது நினைவில்லாமல் அதிகாலை சூரிய உதயத்துக்குமுன் எழுந்து இருட்டில் நாற்காலி இல்லாத இடத்தில் நாற்காலி இருப்பதாக எண்ணி அமரப்போய், 1984ல் கீழே விழுந்து, இடுப்பு எலும்பு முறிந்தது. அப்போது அவருக்கு வயது 96! படுத்த படுக்கையான இவர் அறுவைசிகிச்சை செய்துகொள்ள மறுத்துவிட்டார். படுக்கையிலேயே தனக்குத்தானே மருத்துவம் பார்த்துக்கொண்டார். அதற்குத் தகுந்த ஆசனங்கள் செய்தார். இரண்டே மாதங்களில் இவர் எழுந்து உட்கார முடிந்தது. இதன் வீடியோ தொகுப்பை யூ ட்யூபில் காணலாம்.

கலிகாலத்தில் இறைவனை அடைய ‘சரணாகதி’ ஒன்றே வழி என்று திண்ணமாக நம்பினார். அதையே பலருக்கு உபதேசமும் செய்தார். 1988ல் நூறாவது வயதை அடைந்தார். விழாவை இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்யுமாறு பணித்தார். அந்த விழாவின்போது, ஸ்ரீகிருஷ்ணமாச்சாரியார் ஓம் என்று மூச்சு விடாமல் 55நொடிகள் ஓதினார். அதைத் தவிர மூன்று மணி நேரம் சம்ஸ்கிருதத்தில் உரை நிகழ்த்தினார்.

யோகா உடலையும் மனதையும் பிரித்துப் பார்ப்பதில்லை. யோகா ஒரு வித உடற்பயிற்சி இல்லை. உடற்பயிற்சி செய்த பிறகு உடம்பு சோர்வாக வியர்த்துக்கொட்டும். ஆனால் யோகா செய்த பிறகு உடல் புத்துணர்ச்சி அடையும். கடவுளை நம் மனம் நினைக்க, உடல் ஒத்துழைக்க வேண்டும். உடல் மட்டும் ஒத்துழைத்தால் போதாது, மனதும் ஒத்துழைக்க யோகா உதவுகிறது.

பிரதமர் நரேந்திர மோதி 2015ல் யோகா நாள் அறிவித்து யோகா பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு வந்துள்ளது மிகவும் பாராட்டத்தக்க ஒன்று. யோகா நாதமுனிகள் காலத்திலேயே, ஏன் அதற்கு முன்பும் இருந்திருக்கக்கூடும். சில வருடங்கள்முன் யான்.ஓய் தயான்ஸ்கி என்ற ரஷ்ய அறிஞர் சிந்துச் சமவெளி நாகரிகக் காலத்தில் யோகாசனம் இருந்ததை உறுதிப்படுத்தினார். அந்த ஆசனத்துக்குப் பெயர் மூலபந்தாசனம்.

இந்த மாதிரி ஆசனத்தில் யாராவது இருக்கிறார்களா என்று ஆராய்ச்சியாளர் தேடியபோது, இந்தியாவில் ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார் செய்கிறார் என்று கேள்விப்பட்டு, அவர் வீடு தேடி வந்து பார்த்தார்கள். அது கச்சிதமாகப் பொருந்துகிறது என்று ஆச்சரியப்பட்டார்கள்.

யோகா ஏதோ ஹிந்து சமாசாரம், மோடி அரசின் அரசியல் நகர்வு என்று நினைக்காமல், யோகா பற்றி நம் இளைய சமுதாயத்துக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமை. ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார் பற்றி நாம் எந்த ஆவணப்படமும் எடுக்கவில்லை, வெளிநாட்டவர்கள்தான் எடுத்துள்ளார்கள் என்பது வருத்தமான விஷயம்.

உடம்பு ரஜோ குணத்தை படிப்படியாகக் குறைத்து, ‘லெத்தார்ஜி’யாக இருக்கிறது என்கிறோமே, அதை முற்றிலும் நீக்கி சுறுசுறுப்பு தருகிறது யோகா. குழந்தைகளை லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டி படிப்பைச் சொல்லித் தருவதைவிடவும் முக்கியமானது, அவர்கள் காலை நீட்டி மடக்கி யோகா செய்யச் சொல்லித் தருவது. இதனால் அவர்கள் எதிர்காலம் ஆரோக்கியமாக அமையும்.
 
ஸ்ரீகிருஷ்ணமாச்சாரியார் பற்றிய நூல்: ஒரு யோகியின் சரிதம் – யோகாச்சார்யா ஸ்ரீ கிருஷ்ணமாச்சார்யா. 

Posted on Leave a comment

அஹிம்ஸா பரமோ தர்மஹ – லாலா லஜ்பத் ராய், தமிழில்: கிருஷ்ணன் சுப்ரமணியன்

(1917ம் ஆண்டு காந்தியின் அகிம்சை கொள்கைகளை விமர்சித்து இந்தியன் ரிவ்யூ பத்திரிகையில் லாலா லாஜ்பத் ராய் எழுதிய கட்டுரை இது)

உண்மையைத் தவிர உயர்வான மதம் இல்லை, அஹிம்ஸா பரமோ தர்மஹ என்ற வாக்கியத்தைத் தவிர சிறந்த நடத்தை விதி இல்லை என்று சொல்வதுண்டு. மேற்சொன்ன வாக்கியத்தில் இரண்டாம் பகுதியைச் சரியான முறையில் புரிந்துகொண்டு வாழ்வில் நடைமுறைப்படுத்தினால், ஒரு மனிதன் துறவியாகவும் நாயகனாகவும் உருவாக முடியும். தவறான புரிதலும் நடைமுறைப்படுத்தலும் ஒருமனிதனைக் கோழையாக, பயந்தாங்கொள்ளியாக, முட்டாளாக ஆக்கிவிடும். ஒரு காலத்தில் இந்தியர்கள் இதைச் சரியாகப் புரிந்துகொண்டு சரியான முறையில் பயன்படுத்தினார்கள். அதனால் உண்மையான, நேர்மையான, தைரியமான மனிதர்கள் இங்கே இருந்தனர். அதன்பின் சில நல்ல மனிதர்கள், நல்ல நோக்கமுடையவர்கள், துறவு மனப்பான்மை கொண்டவர்கள், மேற்சொன்ன குணங்களை எல்லாவற்றிற்கும் மேலே வைத்து, உண்மை வாழ்க்கையின் இலட்சியமே அதுதான் என்று நிறுவ முயன்றனர். இப்படித் தங்கள் வாழ்க்கையில் மட்டுமில்லாமல், உலகில் உள்ள அனைத்தையும்விட சிறந்ததாக அஹிம்ஸையை மாற்றி, தேவைக்கு அதிகமாக அதை அவர்கள் உயர்த்தினர்.

மனிதர்களையும் நாடுகளையும் மேம்படுத்தும் மற்ற நல்லொழுக்கங்கள் எல்லாம் பின்னால் தள்ளப்பட்டுக் கீழிறக்கப்பட்டன. அவர்களைப் பொருத்தவரை, நன்னடத்தை, துணிச்சல், தைரியம், சாகசம் எல்லாம் தேவையற்றவையாகப் போயின. கௌரவமும் சுயமரியாதையும் மறக்கடிக்கப்பட்டன. நாட்டுப்பற்று, நாட்டின் மேலான காதல், குடும்பத்தின் மீதான அன்பு, இனத்தின் கௌரவம் எல்லாம் காணாமல் போய்விட்டன. இப்படி அஹிம்ஸை (கொல்லாமை) என்னும் கருத்தாக்கத்தை, தவறாக, குயுக்தியாகப் பயன்படுத்தியதும், மற்றெல்லாவற்றையும்விட அதற்கு அதிக முக்கியத்துத்தைக் கொடுத்ததும், ஹிந்துக்களின் சமூக, அரசியல், தார்மீக வாழ்வில் வீழ்ச்சியை ஏற்படுத்தின. ஆண்மை என்பது அஹிம்ஸையைப் போன்றே ஒரு நல்லொழுக்கமாகும் என்பதை அவர்கள் மறந்துபோயினர். சொல்லப்போனால், சரியாகப் பயன்படுத்தும்போது இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதல்ல. தனிமனித மற்றும் நாட்டின் விருப்பம், பலவீனமானவர்களை வலிமையானவர்களிடமிருந்தும், ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்தும், திருடர்களிடமிருந்தும், அயோக்கியர்களிடமிருந்தும், காமாந்தக்காரர்களிடமிருந்தும், பெண்களின் மானத்தை அழிக்க முயல்பவர்களிடமிருந்தும், துஷ்டர்களிடமிருந்தும், ஏமாற்றுக்காரர்களிடமிருந்தும் காப்பாற்றி, அவர்களுக்குத் தீங்கிழைப்பதைத் தடுத்து நீதியை நிலைநாட்டுவதில் உள்ளது. தீயவர்கள் அப்பாவிகளைத் துன்புறுத்துவது, அவர்களின் தூய்மையைக் குலைப்பது, மற்றவர்களின் உரிமையைப் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் நியாயமான கண்டனங்களுக்கு உள்ளாகி, அதன் பின்விளைவுகளை அனுபவிக்க வேண்டி வரும் என்ற அச்சத்தை ஏற்படுத்துவதே மனித இனத்தின் தேவை என்பதை அவர்கள் புறக்கணித்தனர். எவரொருவர், தீயவர்கள், கொடுங்கோலர்கள் ஆகியோரது ஆதிக்கத்தைப் பொருத்து, அவர்களின் எல்லை மீறிய செயல்களை அனுமதிக்கிறாரோ, அவர் ஒரு வகையில் அதற்குத் துணைபோகிறார் என்பதையும், அதை ஊக்கப்படுத்துகிறார் என்பதையும், அந்தத் தீயவர்களில் வளமான வாழ்வுக்கும் வலிமைக்கும் அவரே பொறுப்பு என்ற உண்மையின் முக்கியத்துவத்தையும் அவர்கள் உணர மறந்தனர். அளவுக்கு அதிகமான, தவறாகப் பயன்படுத்துப்படும் அஹிம்ஸை, சமூக அமைப்பில் விஷம்போலக் கலந்து, அதைப் பலவீனப்படுத்தி, ஆண்களையும் பெண்களையும் அரைக்கிறுக்கர்களாகவும், வெறி பிடித்தவர்கள் போலவும், எதைப் பார்த்தாலும் நடுங்குபவர்களாகவும் மாற்றி, செயலூக்கத்திற்குத் தேவையான நல்ல குணங்களைக் குலைத்துவிடுகிறது. ஆண்களைக் குழப்பவாதிகளாகவும் கோழைகளாகவும் உருவாக்கிவிடுகிறது அது.

ஜைன மதத்தின் நிறுவனர்கள் துறவிகளாகவும், எல்லாவற்றையும் நீத்தவர்களாகவும், மான அவமானங்களைக் கருதாதவர்களாகவும் இருந்தனர். அவர்களுடைய சீடர்கள், ஜைன சாதுக்கள், ஆசைகளைக் கொன்று புலன்களையும் மனதையும் அடக்குவதில் பெருவெற்றி கண்ட ஞானிகளாக இருந்தனர். டால்ஸ்டாயின் அஹிம்ஸை கிட்டத்தட்ட மூன்றாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் நடைமுறையில் இருந்தது. உலகில் எந்த ஒரு நாட்டிலும் இந்தியாவைப் போல இத்தனை அஹிம்ஸாவாதிகள் இத்தனை நூற்றாண்டுகள் இருந்ததில்லை. அதே சமயம் உலகில் எந்த ஒரு நாட்டிலும் இல்லாத வகையில் வீரமில்லாத, கீழ்க்குணங்கள் உடையவர்கள் இந்தியாவில் கடந்த பதினைந்து நூற்றாண்டுகளாக இருந்தனர் என்பதையும் நாம் நினைவுகூரவேண்டியுள்ளது. சிலர் இதற்கு அஹிம்ஸை காரணம் இல்லையென்றும், மற்ற நல்லொழுக்கங்களைத் துறந்ததுதான் காரணம் என்றும் கூறுவர். ஆனால், அஹிம்ஸையைத் தவறாகப் பயன்படுத்தியது, இந்தியா தனது கௌரவத்தையும், ஆண்மையையும், உயர்வையும் இழந்ததற்கான காரணங்களில் ஒன்று என்று கூறுவேன். இதைக் கடுமையாகப் பின்பற்ற முனைந்தவர்கள், தாங்கள் அஹிம்ஸையை நடைமுறைப்படுத்திய விதத்திலிருந்து, தங்கள் வாழ்க்கையை, போலியான, ஆண்மையில்லாத, கொடுமையான விதத்தில் அமைத்துக்கொண்டதையே இதற்கான நிரூபணமாகக் கொள்ளலாம்.

நான் ஒரு ஜைன குடும்பத்தில் பிறந்தவன். என்னுடைய பாட்டனார் அஹிம்ஸையில் பெரும் நம்பிக்கை கொண்டவர். ஒரு பாம்பைக் கொல்வதைவிட அதனால் கடிக்கப்படுவதை விரும்புபவர். ஒரு கொசுவுக்குக்கூடத் துன்பம் நினையாதவர். மத சம்பந்தமான விஷயங்களில் மணிக்கணக்காக ஈடுபடுபவர். எல்லா விதமாகவும், அவர் ஒரு நல்லொழுக்கம் நிரம்பியவராகவும், குடும்பத்தில் உயர்ந்தநிலையை வகித்தவராகவும், எல்லோராலும் மதிக்கப்படுபவராகவும் இருந்தார். அவருடைய சகோதர்களில் ஒருவர் துறவியாக இருந்தார். ஒரு மதகுருவாக உயர்ந்த இடத்தில் இருந்தார் அவர். நான் சந்தித்தவர்களிலேயே சிறந்த குணமுடையவராக அவரை நான் சொல்வேன். அவருடைய கொள்கையின்படியே வாழ்ந்து, புலன்களின் இச்சைக்கு இரையாகாமல், ஆசைகளையும் விருப்பங்களையும் அடக்கி வாழ்ந்தவர் அவர். ஆனால் சிறந்த நடைமுறை விதிகளின்படி, அவருடைய வாழ்க்கை வறண்டதாகவும் இயற்கைக்கு மாறானதாகவும் இருந்தது. நான் அவர்மீது அன்பு செலுத்தி மதித்த போதிலும், அவருடைய வழியைப் பின்பற்ற முடியவில்லை, அவரும் என்னை அவர் வழிக்குக் கொண்டுசெல்ல முயலவில்லை. அவருடைய சகோதரரான என்னுடைய பாட்டனார், மாறுபட்ட மனிதர். அவர் அஹிம்ஸையை நம்பினார். அதாவது குயுக்தியான, எந்த ஒரு உயிருக்கும் தீங்கிழைக்காத அஹிம்ஸையை. ஆனால் அவருடைய வணிகத்தில் எல்லா விதமான மோசடி வேலைகளையும் செய்வது சரியானது என்றும் அவர் கருதினார். அவருடைய வணிக விதிகளின்படி அவை சரியான வழிமுறைகளே. ஒருபுறம் சிறியவர்கள், விதவைகள் போன்றவர்களைத் தங்களது வியாபார விஷயங்களில் ஏமாற்றிக்கொண்டே, மறுபுறம் பூச்சிகளையும் மற்ற மிருகங்களையும் காப்பதில் ஆயிரக்கணக்கான ரூபாய்களைச் செலவிடும் இந்த மதத்தவர்கள் பலரை நான் கண்டிருக்கிறேன். இங்கு நான் இந்தியாவில் உள்ள ஜைனர்கள், ஹிந்துக்களைவிட மோசமானவர்கள் என்றும், அஹிம்ஸையைப் பின்பற்றுவது மோசமான காரியம் என்றும் சொல்லவரவில்லை. இப்படிப்பட்ட குற்றத்தை என்னால் சாட்டவும் இயலாது. ஜைனர்கள், வள்ளல்தன்மையுள்ள, விருந்தினரை உபசரிக்கும் விருப்பமுள்ள, புத்திக்கூர்மையுள்ள, வணிகத்தில் திறமையுள்ள ஒரு சமூகம் என்பதில் சந்தேகமில்லை. அதுபோன்றே ஹிந்துக்களிலும் பல சமூகங்கள் உண்டு.

நான் சொல்லவருவது, அஹிம்ஸையைப் பின்பற்றுவது மட்டுமே ஒரு சமூகத்தை மற்ற சமூகங்களிடமிருந்து உயர்ந்ததாக, தார்மீக ரீதியில் சிறந்ததாக ஆக்கிவிடமுடியாது. சொல்லப்போனால், துன்புறுத்தப்படுவதை விரும்பாத, அதன்மேல் அச்சம்கொண்டுள்ள அவர்கள்தான், தங்கள் கையாலாகதத்தனத்தினால், வன்முறையையும் துன்பத்தையும் அதிகமாகச் சந்திக்கின்றனர். தங்களையும், தங்கள் அன்புக்குரியவர்களையும் அவர்களால் பாதுகாக்க முடியாது. ஆக்கிரமிப்பின் அடையாளமாக உலகில் இன்று யூரோப் இருக்கிறது. டால்ட்ஸ்டாய் அங்கே பிறந்தது யூரோப்பிற்கு ஒரு நன்மை. ஆனால் இந்தியாவின் நிலை வேறு. இந்தியாவில் ஆக்கிரமிப்பிற்காகவும், அடக்குமுறைக்காகவும் வன்முறையையும் நம்முடைய வலிமையை மற்றவர்மேல் செலுத்துவதையும் நாம் செய்வதில்லை. அந்த நிலைக்கு இந்தியா என்றும் செல்லாது என்பது என்னுடைய நம்பிக்கை. ஆனால், தற்காத்துக்கொள்ளவும், நம்முடைய பாதுகாப்பு மற்றும் நம் மனைவி, சகோதரிகள், புதல்விகள், தாய்மார்கள் ஆகியோரின் பாதுகாப்பிற்காகவும் போரிடுவதைப் பாவச்செயல் என்று போதிப்பதை ஏற்க இயலாது. இதுபோன்று போதிப்பது இயற்கைக்கு முரணானது, தவறானது. சட்டபூர்வமான நோக்கத்தை அடைவதற்காக சட்டவிரோதமான, அநீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதை நாம் கண்டிக்கிறோம். ஆனால், பெரிதும் மதிக்கப்படும் மனிதர் ஒருவர் இளைஞர்களிடம் ‘நமது பொறுப்பில் இருப்பவர்களின் கௌரவத்தைக் காப்பதற்காக அவர்களின் புனிதத்தைக் குலைக்க முயல்வோரின் கைகளில் நம்மை ஒப்புவிப்பதே சிறந்தது’ என்றும் ‘அவர்களோடு சண்டையிடுவதைவிட இதற்கு அதிக மன உறுதியும் உடல் வலிமையும் தேவை’ என்று கூறும்போது, நாம் அமைதியாக அதைக் கடந்துசெல்ல முடியாது. ஒருவேளை ஓர் அயோக்கியன் நம் பெண்ணைப் பலவந்தப்படுத்துகிறான் என்று வைத்துக்கொள்வோம். திரு.காந்தி சொல்வது, அவருடைய கருத்தாக்கமான அஹிம்ஸையின் அடிப்படையில், பெண்ணின் மானத்தைக் காக்க அவளுக்கும் அந்த அயோக்கியனுக்கும் இடையில் நிற்பதுதான் ஒரே வழி என்பது. ஆனால் அவன் நம்மை வீழ்த்திவிட்டு அதன்பின் தன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள முனைந்தால் பெண்ணின் கதி என்ன? காந்தியைப் பொருத்தவரை அவனைத் தடுத்து நிறுத்தி அவனோடு பொருதுவதைவிட, அப்படியே நின்று அவனை அந்த மோசமான செயலைச் செய்ய விடுவதற்கு அதிக மனத்திண்மையும் தைரியமும் வேண்டும். காந்தியின்மீது மிகுந்த மரியாதை இருந்த போதிலும், எனக்கு இந்தக் கருத்து சரியானதாகத் தெரியவில்லை. திரு.காந்தியின் ஆளுமை மேல் எனக்கு அதிக மரியாதை உண்டு. அவரை ஒரு முன்னோடியாகக் கருதுகிறேன். அவருடைய நேர்மைமேல் எனக்குச் சந்தேகமே இல்லை.

அவருடைய நோக்கங்களை நான் சந்தேகிக்கவில்லை. ஆனால் அவர் கூறும் இந்த மெல்லக் கொல்லும் கோட்பாட்டை எதிர்த்துப் போராடுவதை என் கடமையாகக் கருதுகிறேன். காந்தியைப் போன்ற ஒருவர் இளம் இந்தியர்களின் மனதில் விஷத்தைக் கலப்பதை நாம் அனுமதிக்கக்கூடாது. தேசத்தின் உயிர்மையின் ஊற்றுக்கண்ணாக விளங்குபவற்றுள் மாசு கலக்க யாருக்கும் சுதந்திரம் இருக்கக்கூடாது புத்தரோ, ஏசுவோ, இப்படியெல்லாம் நடக்குமாறு போதிக்கவில்லை. ஜைனர்கள்கூட அவ்வளவு தூரம் செல்லத் துணிவார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. ஏன்? அந்தச் சூழ்நிலையில் கௌரவமாக வாழச் சாத்தியமே இல்லை. தன் விருப்பம் போலச் செயல்படும் எவரையும் இதுபோன்ற கொள்கையுள்ள ஒரு மனிதன் தடுக்க இயலாது. அப்படியானால் தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களை அந்நாட்டிலிருந்து விலக்கி வைக்கும் வெள்ளையர்களின் முயற்சிக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி, அவர்களுடைய உணர்வுகளை ஏன் காந்தி புண்படுத்தினார். தர்க்கரீதியாகப் பார்த்தால் தென்னாப்பிரிக்கர்கள் இந்தியர்களை வெளியேற்றும் விருப்பத்தை வெளிப்படுத்திய உடனேயே அவர் அந்த நாட்டைவிட்டு வெளியேறி தன் நாட்டவர்களையும் வெளியேறுமாறு வலியுறுத்தியிருக்கவேண்டும். அப்படிப் பார்த்தால், எந்த ஒரு எதிர்ப்பையும் ஹிம்ஸையாகவே கருதலாம். உடல் ரீதியான ஹிம்ஸை என்பது மன ரீதியான ஹிம்ஸையின் வெளிப்பாடே. ஒரு திருடனோடும் கொள்ளையனோடும் எதிரியோடும் மோதுவது பாவம் என்றால், அவனை எதிர்ப்பது அதனைவிடப் பெரிய பாவச்செயல். இந்தக் கருத்து இவ்வளவு அபத்தமாக இருப்பதால் திரு.காந்தி இப்படிப் பேசினார் என்ற செய்தியையே நான் சந்தேகித்தேன். ஆனால் ஊடகங்கள் அவருடைய பேச்சைப் பற்றிக் கருத்துகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. திரு.காந்தியும் மறுப்பேதும் வெளியிடவில்லை, எப்படியிருந்தாலும் அமைதியாக இருந்துகொண்டு இந்தக் கோட்பாடு கேட்பாரில்லாமல் ஒரு விழுமியமாக உருவெடுப்பதையும் அதனால் இளைய பாரதம் பாதிப்புக்குள்ளாவதையும் நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. திரு.காந்தியால் இந்தப் பேச்சு மறுக்கப்பட்டு அல்லது விளக்கப்படாத வரையிலும் அவர் ஒரு கற்பனை உலகத்தை உருவாக்க முயல்வதாகவே நான் கருதுவேன். அதைச் செயல்படுத்தவும் மற்றவர்களை அதில் ஈடுபடும்படி வலியுறுத்தவும் அவருக்குச் சுதந்தரம் இருப்பதென்னவோ உண்மைதான். அதேபோன்று அவருடைய இந்தத் தவறைச் சுட்டிக்காட்டுவதை என் கடமையாகக் கருதுகிறேன்.