Posted on Leave a comment

வலம் அக்டோபர் 2018 இதழ் – முழுமையான படைப்புகள்

வலம் அக்டோபர் 2018 இதழின் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.

சிலைத் திருட்டு – பதற வைக்கும் ஆவணம் | ஆமருவி தேவநாதன்

சிலைத் திருட்டு – கடந்த காலத்தைக் கடத்துபவர்கள் | சுஜாதா தேசிகன்

சிலைத் திருட்டு – தனியொருவனின் போராட்டம் | அரவிந்தன் நீலகண்டன்

நரசிம்மராவ் என்னும் பாதி சிங்கம் – புத்தக விமர்சனம் | ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன்

சில பயணங்கள் சில பதிவுகள் – 13 | சுப்பு

தங்கத் தேடல் | ஜெயராமன் ரகுநாதன்

ஹொய்சாளர் ஆட்சிக்காலத்து ஆலய-சிற்ப-கட்டட எழில் | அரவக்கோன்

இந்திய அறிவுசார் சொத்துரிமைப் பதிவுகளும் இந்திய கலாசாரமும் – 1 | ஹன்ஸா ஹன்ஸா (வழக்கறிஞர்)

நேஷனல் ஹெரால்ட் முறைகேடு வழக்கு | லக்ஷ்மணப் பெருமாள்

படைப்புகளும் நம்பகத்தன்மையும் | சுதாகர் கஸ்தூரி

அஸதோமா ஸத்கமயா! –  (ம.வெங்கடேசனின் இந்துத்துவ அம்பேத்கர் நூலை முன்வைத்து) | கோ.இ. பச்சையப்பன்

Posted on Leave a comment

அஸதோமா ஸத்கமயா! – (ம.வெங்கடேசனின் இந்துத்துவ அம்பேத்கர் நூலை முன்வைத்து) | கோ.இ. பச்சையப்பன்

சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்ம விபாக:!
தஸ்ய கர்த்தாரமபி மாம் வித் விர்த்யகர்த்தாரமவ்யயம்!!

– ஸ்ரீமத் பகவத்கீதை – 4வது அத்தியாயம், 13 வது ஸ்லோகம்.

“குணங்கள், கருமங்கள் என்ற இவற்றின் பாகுபாட்டை ஒட்டி வர்ணங்களை சிருஷ்டி செய்திருக்கிறேன்!”

– கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர்.

என்னுடைய முகநூல் பக்கத்தின் பதிவொன்றில் அண்மையில் ஒரு கேள்வியைப் பதிவு செய்திருந்தேன். கீதை ஸ்லோகங்களை – அதன் கருத்துக்களை இந்து நண்பர்களில் எத்தனை பேர் வாசித்துள்ளீர்கள் என்பதே வினா. பின்னூட்டமிட்டிருந்த 32 பேர்களில் வெறும் இரண்டு பேர்களே வாசித்துள்ளதாகத் தெரிவித்திருந்தனர். எழுபதிற்கும் அதிகமான விருப்பக்குறிகள்! முகநூல் நண்பர்களின் பொய்யாமையைப் போற்றும் அதே தருணத்தில் இஸ்லாமியர்கள் குரானை வாசிப்பது போன்றோ, கிறித்துவர்கள் பைபிளை ‘சுவாசிப்பது’ போன்றோ – இந்துக்கள் கீதையை அணுகுவதில்லை என்பது வருத்தம் தரும் உண்மை.

கீதை மட்டுமே இந்து மதத்தின் பிரமாணமல்ல என்பதும் உண்மை. மற்ற மதங்களுக்கு ஆதாரம் ஒற்றை நூல் என்றால் – நமக்கு ஒரு நூலகமே உள்ளது. வேதங்கள், புராணங்கள், தத்துவங்கள்… என. பிற மதங்களைத் தோற்றுவித்தவர் ‘ஒருவர்’ என உண்டு. இந்து மதத்தில் அவ்விதம் இல்லை. இந்து மதத்தின் பலமே அதன் பலவீனமாகிவிட்டது துரதிஷ்டவசமானது. விளைவாக இந்துமதம் சாதியத்தைத் தூக்கிப்பிடிக்கிறது என்று விமர்சனம் (அது பல சமயங்களில் அவதூறு என்ற நிலையை அடைந்துவிட்ட பின்பும்) வைக்கப்படும்போது அதனை எதிர்கொள்ள இயலாமல் விழிக்கிறோம். எனவேதான் அம்பேத்கர் அவர்கள் பௌத்தத்தை தழுவினார் எனக் கூறப்படும்போதும் விமர்சனத்திற்கு உட்படுத்தாமல் ஏற்கிறோம். “உண்மையில் அம்பேத்கர் ஜாதி ஒழியவேண்டும் என்று எழுதினாரா அல்லது இந்து மதம் ஒழிய வேண்டும் என்று எழுதினாரா? என்ற கேள்வியை முன்வைத்துத் தொடங்குகிறது ம.வெங்கடேசன் எழுதியுள்ள இந்துத்துவ அம்பேத்கர் என்ற அரிய புத்தகம்.

புராணங்களும் இதிகாசங்களும் சாதியை முன்னிறுத்துகின்றன என்ற குற்றச்சாட்டிற்கு முகத்தில் அறையும் பதில்களைத் தருகிறார் ம.வெ.

ஐந்தாம் வேதம் எனப்படும் மகாபாரதத்தை எழுதியவர் மீனவ குலத்தில் பிறந்த வியாஸர். ராமாயணத்தை வடமொழியில் எழுதியவர் வேடர் குலத்தைச் சேர்ந்த ‘ரத்னாகர்’ என்ற இயற்பெயரைக் கொண்ட வால்மீகி. பாகவதம் பாடிய பகவான் புகழ் போதாது என பாரதம் பாடி பகவான் கிருஷ்ணரை வியாசர் போற்றுகின்றார். கடவுளெனக் கொண்டாடப்படும் கிருஷ்ணர் பிறப்பால் யாதவர். கடவுளின் அவதாரமான ராமபிரான் சத்ரியர். போற்றுபவரும் பிராமணர் அல்லர். போற்றப்படுபவரும் பிராமணர் அல்லர்! இந்தப் புள்ளியிலிருந்து 22 அத்தியாயங்களில் அண்ணல் அம்பேத்கர் பற்றிய உண்மையான பரிமாணத்தை இப்புத்தகம் முன்வைக்கிறது.

சமஸ்கிருதத்தினை பாரதத்தின் அதிகாரபூர்வ மொழியாகக் கொண்டுவரப்பட்ட மசோதா மீதான விவாதத்தில் அதனை ஆதரித்துக் கையொப்பமும் இட்டவர் அம்பேத்கர். மேலும், இந்தியாவில் இருந்த – இருக்கிற ஒவ்வொரு ஜாதியும் ஒரு இனக்குழு எனப் பிரிவினை ஏற்படுத்த ஆங்கிலேயர்கள் வரையறுத்ததைக் கடுமையாக எதிர்த்தவர்களில் ஒருவர் அவர். மற்றொருவர் குருஜி எனப் பணிவுடன் விளிக்கப்படும் கோல்வல்கர்… ஆர்.எஸ்.எஸ்!

ம.வெ.வின் வாதம் மேற்கூறிய இரு பெருமக்களின் எழுத்துக்களின் அடிப்படையிலேயே அமைகிறது.

விடுதலைக்காகச் சிறைப்பட்ட வேறெந்தத் தலைவரையும் விட ஒப்பீட்டளவில் பெரும் கொடுமையை அந்தமான் சிறையில் அனுபவித்த வீர்சாவர்க்கருடன் தீண்டாமை ஒழிப்பில் இணைந்து அம்பேத்கர் செயல்பட்டதை நூல் பதிவு செய்கிறது. தேசியக் கொடியில் அசோகச்சக்கரத்தை, சாவர்க்கரும் ஆதரித்ததை ம.வெ.விளக்குகிறார். காந்தி கொலை வழக்கில் (தனிப்பட்ட வன்மத்தினைத் தீர்த்துக்கொள்ளும் பொருட்டு) சாவர்க்கர் கைதுசெய்யப்பட்டார். சாவர்க்கரின் வழக்கறிஞரான போபட்கருக்கு, ‘சாவர்க்கர் மீதான குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை, ஜோடிக்கப்பட்ட வெற்று வழக்கு’ என எடுத்துக்கூறியவர் அம்பேத்கர்.

குருஜி கோல்வல்க்கர், வீர்சாவர்க்கர் ஆகியோருடன் மட்டுமல்ல, இந்து மகாசபையைச் சேர்ந்த டாக்டர் மூஞ்சேவுடன் கூட அம்பேத்கருக்கு இருந்த நெருங்கியத் தொடர்பை விளக்கும் புத்தகத்தின் 12வது அத்தியாயம் முக்கியமானது.

“நம் நூற்றாண்டின் மாபெரும் இந்தியர் விவேகானந்தரே. அவரிலிருந்து நவ இந்தியா ஆரம்பிக்கிறது!’ சொன்னவர் அம்பேத்கர். ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆதர்ஸம் சுவாமி விவேகானந்தர் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

வெறும் புள்ளி விவரங்களும் – தேதிகளும் – அடிக்குறிப்புகளும் கொண்டதல்ல இந்நூல். தான் முன்வைக்கும் கருத்துக்கு அசைக்க முடியாத ஆதாரங்களை முன்வைப்பதோடு அதற்கான வரலாற்றுப் பின்னணியையும் கூறுகிறார் ம.வெங்கடேசன். அம்பேத்கர் இந்துத்துவாவை எவ்விதம் அணுகினார் என்பதைப் பதிவுசெய்வதோடல்லாமல் அக்காலத்துடன் தொடர்புடைய வரலாற்று நிகழ்வுகளையும் பதிவு செய்திருக்கிறார்.

1952ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பாம்பே வடகிழக்குத் தொகுதியில் அம்பேத்கர் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தியது நேருவின் காங்கிரஸ். ஆனால் பணி ஆற்றியவர் ஆர்எஸ்எஸ். பிரசாரகர் தத்தோபந்த் தெங்கடி என்ற பிரசாரக்.

இடதுசாரிகளின் எளிய இலக்காகவும், கற்பிதங்களின் அடிப்படையில் விமர்சிக்க ஏதுவாகவும் இருப்பது இந்துத்துவம். அவர்கள் இன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் வாதத்தைத் தமது புரட்டுகளுக்கு வலுச் சேர்க்க துணைக்கழைத்துக்கொள்வர். ஆனால், கம்யூனிஸம் மற்றும் ‘மக்கள் (?) சீனம்’ பற்றி அம்பேத்கர் என்ன கருத்துக்கொண்டிருந்தார் என்பதை ம.வெங்கடேசன் பதிவு செய்கிறார்.

“அவர்கள் (கம்யூனிஸ்டுகள்) எப்போதுமே எந்தப் பிரச்சினைக்கும் செயல்பூர்வமான அணுகுமுறையை மேற்கொண்டதில்லை.”

“இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே மோதல் ஏற்படும் வாய்ப்பு எப்போதும் இருக்கவே செய்கிறது.”

“கம்யூனிச நாடுகளில் ஒழுக்க நெறி என்ற ஒன்றே இருக்காது. இன்று ஒழுக்கநெறியாகக் கருதப்படுவது அடுத்த நாளே ஒழுக்க நெறிக்குரியதாக இல்லாமல் ஆகிவிடும்.”

– மேற்கூறிய விமர்சனத்தை முன்வைத்த அம்பேத்கரை கம்யூனிஸ்டுகள் எவ்விதம் எதிர்கொண்டார்கள் தெரியுமா?

‘பெட்டி பூர்ஷ்வா மிஸ்லீடர்’ என்று கேலி செய்தனர். மேலும், 1952 தேர்தலில் ‘காம்ரேட்’ எஸ்.ஏ.டாங்கே ‘ஒதுக்கப்பட்ட இடத்துக்குப்’ போட்டியிடுபவர்களில் யாருக்கும் வாக்களிக்காதீர்கள்’ என்றார். அம்பேத்கர் 14000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனதை ம.வெங்கடேசன் பதிவு செய்கையில் இடதுசாரிகளின் ‘நுட்பமான அரசியல் சுத்திகரிப்பு’ பற்றி வயிறெறிவதைத் தவிர வேறென்ன செய்வது?

சீனாவைப் பற்றி கோல்வல்கரின் கருத்தென்ன? அது – ரத்தினச் சுருக்கமானது – ‘கள் குடித்த குரங்கைத் தேள் கொட்டியதுபோல்!’

புத்தகத்தில் 18வது அத்தியாயம் தேசிய அபாயமாக நூற்றாண்டுகளாக இந்தியாவைப் பீடித்திருக்கும் மதமாற்றம் – அம்பேத்கர் ஏன் இஸ்லாம் – கிறுத்துவமதம் போன்றவற்றிற்கு மாறவில்லை என்பதை நுணுக்கமாக அலசுகிறது. ம.வெங்கடேசனின் மொழிநடை மற்றும் வாதத்திறன் உச்சம் பெறுவது இப்பகுதியில்தான்.

பெரும் திரளான மக்களுக்குத் தலைவராக கருதப்பட்ட அம்பேத்கர் மதமாற்றச் சக்திகளின் விருப்பத்திற்குரிய தேர்வாகவே எப்போதும் இருந்திருக்கிறார். அவரை முன்னிநிறுத்தி பல்லாயிரம் பேரை ஈர்க்கலாம் என்ற பெரும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள மதமாற்றச் சக்திகள் விரும்பியது இயல்பே.

1935ல் அம்பேத்கர் மதம் மாற முடிவெடுத்தபோது தீண்டத்தகாதவர்கள் இஸ்லாம் மதத்தினைத் தழுவ 5 கோடி ரூபாயை ஒதுக்கினார் ஹைதராபாத் நிஜாம். அந்த ஆண்டே பதுவானில் நடைபெற்ற முஸ்லிம் மாநாட்டிற்கு அழைப்பு வந்தும் அம்பேத்கர் செல்லவில்லை. அவர் இஸ்லாமிற்கு மாறிவிட்டார் என வதந்தியைப் பல முறை மறுத்துள்ளார். அம்பேத்கர் கூறினார்: ‘நான் இஸ்லாம் தழுவியிருந்தால் கோடானுகோடி பணம் என் காலடியில் கொட்டப்பட்டிருக்கும். ஆனால் அடுத்த 5 ஆண்டுகளில் நாடு சீரழிந்திருக்கும்.”

மதம் மாற்றத்தை தம்மைப் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லும் பாதையைச் செம்மைப்படுத்தும் கருவி எனக் கருதும் கிறித்துவம் குறித்து அம்பேத்கர் கூறுவது: ‘இந்தியக் கிறித்துவர்கள் சமூக அநீதிகளை அகற்றுவதற்காக எப்போதும் போராடியது இல்லை.’

மற்றும் கிறித்துவத்துக்கு மதமாற்றத்தை மேற்கொள்வது தேசிய நலனுக்கு எதிரானது என்ற பார்வையே அம்பேத்கருக்கு இருந்துள்ளது என்பதை ம.வெங்கடேசன் வெளிப்படுத்துவதோடு அம்பேத்கர் பௌத்தத்தினை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதை விளக்குகிறார். 1956 அக்டோபர் 14 அன்று பௌத்த மதத்திற்கு மாறுகிறார் அண்ணல். அவரே எழுதிய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, இந்துக்கள் என்பதை வரையறுக்கும்போது அது பௌத்தர்களையும், சீக்கியர்களையும், ஜைனர்களையும் உள்ளடக்கியது என்கிறார். இந்துமதம் மதம் அல்ல வாழ்வியல் முறை என்பதோடு இந்துத்துவம் என்பது மதம், தேசம், கலாசாரம், பண்பாடு, மொழி, சமூகம், வரலாறு என எல்லாவற்றையும் உள்ளடக்கியது. இவற்றின் அடிப்படையில் அம்பேத்கர் இந்துவாகவே இந்திருக்கிறார் என்ற கருத்தை ம.வெங்கடேசன் நிறுவுகிறார்.

மேலும் இந்துத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் அம்பேத்கருக்கும் பொது சிவில் சட்டம், இந்தியப் பிரிவினை, இந்து சட்ட மசோதா, தேசிய மொழிகள் போன்றவற்றில் ஒத்திசைவான கருத்து இருந்ததை இந்தப் புத்தகம் படம்பிடிக்கிறது.

அம்பேத்கர் இந்து மத்தை விமர்சனம் செய்துள்ளார். உண்மை. ‘தந்திரம் மிக்க இந்து கிழட்டு நரி’ என ஜின்னாவால் வர்ணிக்கப்பட்ட காந்திகூட விமர்சனம் செய்துள்ளார். சுவாமி விவேகானந்தர் கூட விமர்சித்துள்ளார். நோக்கம் ஒன்றுதான், சீர்திருத்தம்! விமர்சனத்திற்கு முகம் கொடுப்பதாகவும், நாத்திகவாதத்தினையும் பரிசீலிப்பதாகவும் காலந்தோறும் இந்து மதம் இருந்து வருகிறது.

தேசத்தின் இருபெரும் தலைவர்களின் எழுத்துக்கள் அனைத்தும் முறையாகத் தொகுக்கப்பட்டு இன்றும் அச்சில் கிடைப்பது நல்லூழ். காந்தியின் நூல்கள் அனைத்தும் நவஜீவன் ட்ரஸ்ட்டால் பராமரிக்கப்படுகிறது. பக்தவச்சலம் முதல்வராக இருந்தபோது அவற்றுள் சுமார் 15 பாகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சிடப்பட்டன. அதற்கென சிறப்பு அச்சுரு (Font) உருவாக்கப்பட்டது. அம்பேத்கர் அவர்களுடைய எழுத்துக்களும் டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. ம.வெங்கடேசனின் ‘இந்துத்துவ அம்பேத்கர்’ நூல் அண்ணலின் எழுத்துக்களையும், குருஜி கோல்வல்க்கரின் சிந்தனைகளையும் ஒப்பிட்டுக் கடும் உழைப்பில் மிளிரும் ஆவணமாக விரிகிறது.

அஸதோமா ஸத்கமயா
தமஸோமா ஜ்யோதிர் கமயா
ம்ருத்யோர்மா அம்ருதம் கமயா

என பிரஹதரண்ய உபநிஷத் போதிக்கும் பவமான மந்திரம். இதன் பொருள் பொய்யிலிருந்து நிஜத்திற்கும், இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கும், மரணத்திலிருந்து அமரத்துவத்திற்கும் அழைத்துச் செல் என்பதாகும். இந்துத்துவ அம்பேத்கர் வரலாற்றில் பதியப்பட்ட பொய்யானவற்றில் இருந்து நம்மை உண்மையை நோக்கி அழைத்துச் செல்கிறது என்பது நிச்சயம்.

Posted on Leave a comment

படைப்புகளும் நம்பகத்தன்மையும் | சுதாகர் கஸ்தூரி

அண்மையில் சி.ஐ.டி (CID) என்ற தொலைக்காட்சித் தொடரின் சில அத்தியாயங்களைக் காண நேர்ந்தது. அமெரிக்காவில் புகழ்பெற்ற டாக்டர் ஹவுஸ் (Dr.House), சி.எஸ்.ஐ (CSI) போன்ற தொடர்களில் அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், தடயவியல் மற்றும் எளிதான தருக்கம் கொண்டு எப்படிக் குற்றங்களைக் கண்டுபிடிக்கிறார்கள் என்று காட்டியிருப்பார்கள். இதனை அடிப்படையாகக் கொண்டு இந்தியில் இந்தியர்களுக்காக எடுக்கப்பட்ட தொடர் சிஐடி. பத்து வருடங்களுக்கும் மேலாக ஓடிக்கொண்டிருக்கின்ற புகழ்பெற்ற தொடர் இது.

தொடர், மசாலாத்தனம் நிறைந்து இருக்கும் என்றால் அது தவறில்லை. ‘காண்கின்றவர்கள் விரும்புவதைக் காட்டுகிறோம்’ என்று சொல்லிவிடலாம். ‘எங்களது ரசிகர்கள் அறிவியல் அதிகம் விரும்பமாட்டார்கள்; அவர்களுக்குத் தெரியாது, எனவே எங்களுக்கு எது தெரியுமோ, வசதிப்படுமோ அதுதான் அறிவியல் எனக் கொண்டுவருவோம்’ என்ற மனநிலையை இத்தொடரில் பார்க்கலாம். இது கவலைக்குரியது.

எரிக்கப்பட்ட உடலின் சாம்பலை ஆராய்ந்து, அதன் அறிக்கை எனக் காட்டுகிறார்கள். அதில் மெல்லக் கொல்லும் விஷமாக ஆர்சனைடு கண்டறியப்படுவதாகச் சொல்கிறார் ஒரு வல்லுநர். சாம்பலில் ஆர்சனிக் என்ற தனிமம் கண்டறியப்படலாம். ஆர்சனைடு?

இதைவிட ஒருபடி மேலே போய், சாம்பலில், இறந்தவரின் ரத்தவகை ஏ பாசிடிவ் என்று கண்டறிகிறார்கள்.

நாம் நகைத்துப் போகலாம். அல்லது ‘ஆர்சனிக்,- ஆர்சனைடு – என்ன பிரச்சனை உங்களுக்கு? ஏதோ கொல்ற விஷம், உடம்புல இருந்திருக்கு. எப்படித் துப்புக் கண்டுபிடிக்கறாங்கன்னு பாருங்க’ என்று சொல்லிப்போகலாம். இழப்பு ஒன்றுதான். நம்பகத்தன்மை.

இந்த நம்பகத்தன்மை செய்தியில் வேண்டும். ஆனால் கதையில் வேண்டாமெனச் சொல்வது சரியானதா? கதை என்றால் எப்படி வேண்டுமானாலும் வடிவமைக்கப்படலாமா? அறிவியல் என்றால் என்ன என்று தெரியாதவர்களுக்கு எப்படி அதனைச் சொல்ல என்ற காரணத்தாலா? அல்லது, இந்த அறிவியல் செய்திகளெல்லாம் படித்த சிலருக்கு மட்டுமே என்னும் மேன்மட்டச் செருக்கின் விளைவு என்ற கருத்தினாலா?

நம்பகத்தன்மை என்பது எதிலும் காணப்படவேண்டிய ஒன்று. Traceability and validation என்பது நம்பகத்தன்மையின் அடிப்படைக் கூறுகள். ஒரு நம்பத்தகுந்த இடத்திலிருந்து (Reliable source) செய்தி கேட்கிறீர்கள். அதை அப்படியே போட்டுவிடுவதால் அது நம்பத்தகுந்ததாக ஆகிவிடுவதில்லை. செய்தி மற்றொன்றுடன் சரிபார்க்கப் படவேண்டும் (Validated) அல்லது உறுதிப்படுத்தப்பட வேண்டும் (Verified). தோற்றுவாய்கள், மூலங்கள் தெரிவிக்கப்பட்டு ஆதாரங்கள் (Proof), உசாத்துணைகள் (References) கொடுக்கப்படவேண்டும்.

இதெல்லாம் கதைக்கு எதற்கு? ‘விஷம் கொடுத்தார்கள். செத்துப்போனார். முடிந்தது கதை (அல்லது தொடங்கியது)’. இதில் பாதிப்பு ரசிகர்களுக்கே. அவர்கள் காண்பது வெறும் பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே. அதில் அவர்களது ரசிகத்தன்மையை வளர்க்கவோ, மேலும் அறிவினைச் செம்மைப்படுத்துவதோ இயலாமல் போகிறது. ஒரு சமூகத்தின் பொது அறிவின் விழுக்காடு குறைவதுடன், பொதுச்சமூக உணர்வு மழுங்கிப்போகிறது.

60களில் தொடங்கி இன்றுவரை தமிழ் சினிமாவில் அறிவுசார்ந்த தருக்கம் சார்ந்த உணர்வுக் காட்சி வெளிப்பட்டதாகத் தெரியவில்லை. கல்லூரிகளில் இலக்கிய வகுப்பில் ஷேக்ஸ்பியரின் காதல் நாடகங்கள் மட்டுமே சொல்லித் தருவார்கள். சிவாஜி திருக்குறள் பற்றிப் பேசுவதை ரேடியோவில் கேட்கும்போது, தங்கவேலு நோட்ஸ் எடுப்பார். எத்தனை வீடுகளில் அப்படி நோட்ஸ் எடுத்திருக்கிறார்கள்? புத்தகம் விரும்பியான கதாபாத்திரத்தின் வாசிப்பு நிலை, எந்த வகையான புத்தகங்கள் என்று ஒரு கதாபாத்திர உருவாக்கம் (characterization) மருந்துக்கும் இருக்காது. மலையாளம் இதில் சற்றே வேறுபட்டிருந்தது. மணிச்சித்ரத்தாழ் திரைப்படத்தில், மனப்பிளவு, Multiple personality disorder என்றெல்லாம் கொண்டுவந்தாலும், அதனைச் சரியாக விவரித்துக் கையாண்டிருப்பார்கள்.

இந்த நம்பகத்தன்மையின் விளைவாகப் பலரும் இன்று multiple personality disorder, psychosis என்றெல்லாம் அறியத் தொடங்கினார்கள். மனநோய் பற்றிய ஒரு பொது விழிப்புணர்வு ஏற்பட, பொழுதுபோக்குக் காரணிகள், ஊடகங்கள் காரணமாக இருந்தன என்றே சொல்லாம். அதிகம் அறியாதிருந்த, இருளடர்ந்த மன நோய்கள் சற்றே வெளிச்சம் கண்ட ஆரோக்கியமான தருணம் மணிச்சித்ரத்தாழின் பின்னே சாத்தியமானது.

 டாக்டர் ஹவுஸ் தொடரில், ஒரு யூதன், நிர்வாணமாகக் கிடத்தப்பட்டிருக்கும் தன் மனைவியைப் பார்க்க மறுத்து டாக்டரிடம், “உங்களுக்கு வேண்டுமானால், அவள் மற்றுமொரு நோயாளியின் உடலாக இருக்கலாம். எனக்கு மனைவி. எனது கலாசாரத்தில், மனைவியின் உடல் மதிப்பிற்குரியது. பார்க்கவேண்டிய தருணமன்றிப் பிற வேளையில் பிறந்தமேனியாகப் பார்க்கமாட்டேன்” என்கிறபோது, மருத்துவம், தொழில் தருமம் இவற்றைத் தாண்டி, மனிதம், கொள்கை, பற்று, மரியாதை, கலாசாரம் என்பதன் எல்லை தெரிகிறது. கோடு எங்கே கிழிக்கப்படவேண்டுமென ஒரு ஆரோக்கியச் சிந்தனையோ அல்லது அது குறித்த ஆரோக்கியமான விவாதமோ எழும் சாத்தியத்தை அத்தொடர் வழங்கியது. என் வீட்டில் இந்த நிகழ்ச்சி கண்டபின் நடந்த விவாதம் பதின்ம வயதினனாக இருந்த என் மகனுக்குப் பல கோணங்களில் வாழ்வைக் குறித்த சிந்தனையை வளர்த்தது.

சிஐடி போன்ற தொலைக்காட்சித் தொடர்கள் இந்த நம்பகத்தன்மையைக் கொண்டிருந்தால், பலர் பேசத் தயங்கிக் கொண்டிருந்த, அதிகம் அறியாதிருந்த, தவறாக அறிந்திருந்த செய்திகள் பல, மக்களிடையே வலுவாகச் சென்று சேர்ந்திருக்கும். சில தயக்கங்களுக்குத் தெளிவும் கிடைத்திருக்கும். கட்டுப்பாடற்று, தடைபடும் இயக்கம் உள்ள (Spastic ஆக உள்ள) சிறுவனை அடைத்து வைக்காமல், யதார்த்தமாகப் பழகுங்கள் என்ற செய்தியை அவர்கள் சொல்லியிருக்கலாம். தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவத்தினைச் சொல்லியிருக்கலாம். இரத்த தானம், கண் தானம் பற்றிப் பேசியிருக்கலாம். இது மிகையான எதிர்பார்ப்பல்ல. சிஎஸ்ஐ தொடரில் கார் விபத்தில் பிழைத்திருக்கும் ஒருவனது கழுத்தில் இருக்கும் கீறல் கொண்டு, அவன் சீட் பெல்ட் அணிந்திருந்தான் என அறிவதோடு, அதனால்தான் அவன் பிழைத்தான், அணியாத பிறர் மண்டை உடைந்து இறந்தார்கள் எனவும் காட்டுவார்கள். இருக்கைப் பட்டையின் முக்கியத்துவத்தைப் பலமாக, மறைமுகமாக உணர்த்தும் காட்சி அது.

அறிவியல் கருவிகளாகட்டும், செய்முறைப் படிகளாகட்டும், அவற்றைக் காட்டுவதில் உள்ள அலட்சியம் நம்மூர்த் தொடர்களைக் காணத் தவிர்க்க வைக்கிறது. எந்த அளவு இதில் நம்பகத்தன்மை வேண்டும்? கெமிக்கல் என்னவென்றே தெரியாத ஒருவருக்கு அதன் பெயர் சரியாக இருந்தாலென்ன தவறாக இருந்தாலென்ன என்ற கேள்வி ஆரோக்கியமானதல்ல. பார்ப்பவர்கள் அறியமாட்டார்கள் என்ற அலட்சியம், பொதுவில் எடுத்தவனுக்கு அறிவில்லை என்ற நகைப்பையே மக்களிடம் வலுப்படுத்தும்.

 நான் பணியாற்றிய இரு பெரும் அறிவியல் கருவி தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வுச்சாலைகளில் சிஎஸ்ஐ தொடரின் படப்பிடிப்புகள் நிகழ்ந்தன என்பதால், ஒவ்வொரு படியிலும், எத்தனை கவனம் எடுத்துக்கொண்டார்கள் என்பதை அறிய முடிந்தது. எந்தக் கருவி எதற்குப் பயன்படுத்துவார்கள், எப்படிப் பயன்படுத்துவார்கள் என்பதிலிருந்து, எந்த வேதிப் பொருள் பெயரைச் சொல்லவேண்டும் என்பது வரை தெளிவாக அறிந்தபின்னே, படப்பிடிப்பு நடந்தது. அறிவியல், வரலாறு, தொல்லியல் சார்ந்த கதைகள் எழுதுபவர்கள் அத்துறை வல்லுநர்களிடம் நடையாய் நடந்து செய்தி சேகரித்து எழுதிய நிகழ்வுகள் பல உள்ளன. நமது நாட்டில் ‘அறிவியல்கதை எழுதறது என்ன பெரிய விஷயம்? ஒரு வாரம் நெட்டுல தேடி, அத வைச்சு எழுதிரலாம்’ என்ற பேட்டிகள் வருவதைக் கேட்கிறோம். இணையத்தளத்தில் தேடினால் செய்தி கிடைக்கும். அதன் நம்பகத்தன்மை, உறுதிப்படுத்துதல், துறை அறிவு இல்லாதோர்க்குக் கேள்விக்குறிதான்.

ஒரு காணொளியைக் காண்பதும், கதை வாசிப்பதும், அத்துடன் முடிந்தால் அது பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே கொண்டதாக இருக்கும். வாசித்தவர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று, புத்தகங்களை ஆராய்ந்து, இணையத்தில் மேய்ந்து மேலும் அறியத் தூண்டினால், அப்படைப்பு முழுமை பெற்ற ஒன்று. டாவின்சி கோடு புத்தகம் வந்தபின், பாரிஸ் லூஅர் (Louvre) அருங்காட்சியகத்தில், அப்புத்தகமும் கையுமாக நின்று ஒவ்வொரு இடமும் பார்த்த சிலரை நேரிலே கண்டிருக்கிறேன். உழைப்பின் பின், உண்மையினை நோக்கி நடக்கும் படைப்புகளுக்கு மதிப்பு தனி.

சாம்பலில் எப்படி இரத்த வகை காண முடியாதோ, அதே போல்தான் மைக்ராஸ்கோப்பில் டிஎன்ஏ மரபணுவின் வடிவம் காண்பதும். பிளாஸ்டிக் சர்ஜரி என்றால் பிளாஸ்டிக் பையை வைத்து சர்ஜரி செய்வதைக் காட்டும் காணொளிகள் நிறைந்தது பாரதம். ரசிகர்கள் இதுபோன்ற ‘எம் ரசிகர்களுக்கு இதெல்லாம் தெரியாது. கண்டுக்க மாட்டாங்க’ என்ற சிந்தனை தோய்ந்த படைப்புகளை நிராகரிப்பதுடன், அவை பற்றிக் கடுமையாக விமர்சிப்பதன் மூலம், ஒரு பொறுப்புணர்வைப் படைப்பாளிகளிடையே கொண்டு வர வேண்டும்.

அதுவரை, ‘பாஸ் இது கடும் விஷம். சோடியம் க்ளோரைடு’ என்றபடி கலர் கலரான திரவங்கள் நிறைந்த குடுவைளைக் குலுக்கி, வெள்ளைக் கோட்டு அணிந்து பேசுபவர் அறிவியலாளர் என்ற அபத்தங்கள் உலா வருவதைப் பொறுக்கத்தான் வேண்டும்.

Posted on Leave a comment

நேஷனல் ஹெரால்ட் முறைகேடு வழக்கு | லக்ஷ்மணப் பெருமாள்

நேஷனல் ஹெரால்ட் என்பது ஓர் ஆங்கிலப் பத்திரிகை. 1938ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு மற்றும் 1000க்கும் மேற்பட்டோரைப் பங்குதாரர்களாக உள்ளடக்கித் துவங்கப்பட்ட நிறுவனத்தின் பெயர் அசோஸியேட்டட் ஜெர்னல்ஸ் லிமிட்டட் (Associated Journals Limited). சுதந்திர வேட்கையை மக்களிடம் உருவாக்க இந்தி (நவ ஜீவன்), உருது (குவாமி ஆவாஸ்) மற்றும் ஆங்கில மொழிகளில் (நேஷனல் ஹெரால்ட்) வெவ்வேறு பெயர்களைக் கொண்ட பத்திரிகைகளாக இவை வெளிவந்தன. சுதந்திரத்திற்குப் பின்பு அது காங்கிரசின் கொள்கைகளைப் பரப்பும் பத்திரிகையாக மட்டுமே வெளிவந்ததும், போட்டிக்குப் பல பத்திரிகைகள் நாட்டுநடப்புகளை வெளிப்படுத்த, நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை நட்டத்தைச் சந்திக்க ஆரம்பித்தது. இதன் விளைவாக 2008ல் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை மூடப்பட்டது. அது மூடப்பட்டபோது AJLன் கடன் மதிப்பு 90கோடி ரூபாயாகவும் அதன் சொத்து மதிப்பு 1600 கோடி முதல் 2000 கோடி பெறும் என்றும் சொல்கிறார்கள். சொத்து மதிப்பு விபரம் சந்தை மதிப்பில் இதைக் காட்டிலும் அதிகமென்றும் அரசு மதிப்பில் குறைவு என்ற விவாதங்கள் இருந்தாலும் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்து அந்நிறுவனத்திற்குள்ளது.

நேரு துவங்கிய நிறுவனத்தின் மூடுவிழா காங்கிரசுக்கு மிக உணர்வுபூர்வமான ஒன்று என்பதால், தொழிலாளிகளின் சம்பளப் பாக்கியை அடைக்க 90 கோடியை (90 கோடியே 20 லட்சத்துக்கும் கூடுதல்) காங்கிரஸ் வட்டியில்லாக் கடனாக AJL க்குக் கொடுக்கிறது. இதன் மூலமாகத் தொழிலாளிகளின் சம்பளப் பிரச்சினை பிரச்சினை முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் 2008ம் ஆண்டு AJL நிறுவனம் வெறும் ரியல் எஸ்டேட் போல ஆகிவிடுகிறது.

யங் இந்தியா பிரைவேட் லிமிட்டட் (YI)

2010ம் ஆண்டு நவம்பர் மாதம் யங் இந்தியா பிரைவேட் லிமிட்டட் என்ற லாபமீட்டா நிறுவனம் (Non Profit Organization) 5 லட்சம் முதலீட்டுடன் ஆரம்பிக்கப்படுகிறது. அதன் பெரும்பான்மைப் பங்குதாரர்களாக சோனியா (38%), ராகுல் (38%) என 76% பங்குகளைக் கொண்டவர்களாகவும் மீதமுள்ள 24% க்குப் பங்குதாரர்களாக மோதிலால் வோரா, (காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் & 2008 ல் AJL கடனில் இருந்த போது அதன் இயக்குநர்), காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஆஸ்கர் பெர்னாண்டஸ், பத்திரிகையாளர் சுமன் துபே மற்றும் தொழில்நுட்பவாதி பைட்ராடோ ஆகியோர் அடங்குவர்.

காங்கிரஸ், அசோஸியேட்டட் ஜெர்னல்ஸ் (நேஷனல் ஹெரால்ட்) மற்றும் யங் இந்தியா மூவரும் செய்த குளறுபடிகள் என்ன? இதில் உள்ள முறைகேடு சம்பந்தமாக விசாரிக்கக் கோரிய மனுவை சுப்பிரமணியன் சுவாமி டெல்லி பாட்டியாலா நீதி மன்றத்தில் 2012ல் தொடுத்தார். அந்த வழக்கின் சாராம்சம் என்ன என்பதைப் பார்க்கலாம்.

AJL ன் 90+ கோடி கடனை அடைக்க யங் இந்தியா நிறுவனம் முன்வருகிறது. AJL நிறுவனம் இதை ஏற்கிறது. அதாவது இக்கடனை அடைக்கும் பட்சத்தில் ஒரு பங்குக்கு 10 ரூபாய் வீதமாக 90+ கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளின் பங்குதாரராக யங் இந்தியா மாறி விடும். இப்போது யங் இந்தியா 50 லட்சம் ரூபாயைக் கடனாகச் செலுத்துகிறது. யங் இந்தியா நிறுவனம் காங்கிரசிடம் கருத்துச் சுதந்திரத்தை ஏற்படுத்தவும் மதச்சார்பின்மையைப் பேணும் வகையில் மீண்டும் பத்திரிகை நடத்துவதாகத் தெரிவிக்கிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு 89 கோடியே 50 லட்சம் ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்கிறது காங்கிரஸ். வெறும் 50 லட்சத்தைக் கடனாகச் செலுத்திவிட்டு, AJL ன் 99% பங்குகளைக் கொண்ட நிறுவனமாக யங் இந்தியா மாறி விடுகிறது. அதாவது AJL நிறுவனத்தையே ஏறத்தாழ விலைக்கு வாங்கிவிட்டது. ஆனால் சட்ட ரீதியாகப் பார்த்தால் இரண்டும் தனித்தனி நிறுவனங்களே!

AJLன் பல சொத்துகள் டெல்லி, மும்பை மற்றும் லக்னோவில் உள்ளது. பத்திரிகை வெளியிடப்படாமல் AJLன் இடங்கள் பல கம்பெனிகளுக்கு, அரசு நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்படுகிறது. இதன் மூலமாக மாதம் 60 லட்சம் ரூபாய் வாடகையாகப் பெறப்படுகிறது. இந்நிலையில்தான் சுப்பிரமணியன் சுவாமி நேஷனல் ஹெரால்ட் வழக்கை 2012ம் ஆண்டு காங்கிரஸ் மத்தியில் பதவியிலிருக்கும் போதே தொடர்கிறார். இவ்வழக்கில் அவரது முக்கியக் குற்றச்சாட்டுகள் AJL நிறுவனத்தின் பங்குதாரர்கள் அனைவரையும் அழைத்து நம்பிக்கையைப் பெறாமல் போர்ட் மீட்டிங் மூலமாக அனைத்து முடிவுகளையும் எடுத்துத் தவறுகள் நடந்துள்ளது. நம்பிக்கை மீறுதல், லாபமீட்டா நிறுவனம் என்று சொல்லிவிட்டு வாடகைக்கு விடுதல் மற்றும் முழுக் கடனையும் அடைக்காமல் AJL நிறுவனத்தின் பெரும் சொத்துக்களை அபகரிக்கவே யங் இந்தியா என்ற நிறுவனம் குறிப்பிட்ட தனி நபர்களைக் கொண்டு தோற்றுவிக்கப்பட்டுள்ளது; அதன் சாட்சியாகவே தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி கடனையும் தள்ளுபடி செய்து AJL நிறுவனத்தின் சொத்துகளை அபகரிக்கத் திட்டமிடல்; காங்கிரஸ் கட்சி மக்களிடம் மற்றும் நிறுவனங்களிடம் திரட்டிய நிதியை ஒரு நிறுவனத்திற்குக் கடனாக வழங்குதல் சரியில்லை
எனப் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்கை நீதி மன்றத்திற்குக் கொண்டு செல்கிறார்.

காங்கிரசின் வாதம்

AJLன் பங்குதாரர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்காரர்கள். மேலும் காங்கிரஸ் கட்சி கடனை அளிப்பதும் அதைத் தள்ளுபடி செய்வதும் முறைப்படியே நடந்துள்ளது. AJLன் இடங்கள் அரசிடமிருந்து லீசுக்குப் பெறப்பட்ட இடங்கள் என்பதால் அதை விற்க இயலாது. எனவே இதை யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர்கள் அனுபவிக்க முயன்றார்கள் என்ற சுவாமியின் குற்றச்சாட்டு அரசியல் ரீதியானது. இதில் சுப்பிரமணியன் சுவாமி என்ற தனி நபர் தலையிட இயலாது. மேலும் யங் இந்தியா நிறுவனம் லாபம் ஈட்ட இயலாத நிறுவனம். அதன் இயக்குநர்கள் எந்த லாபத்தையும் அனுபவிக்கவில்லை. இப்போதும் AJL மற்றும் YI இரண்டும் தனித்தனி நிறுவனங்களாகவே இயங்கி வருகின்றன. அது லாபமீட்டா நிறுவனமாகவே தொடங்கப்பட்டுள்ளது. மேலும் மதச்சார்பின்மை மற்றும் கருத்துச் சுதந்திரம் பேண யங் இந்தியா முன் வந்துள்ளதால் காங்கிரஸ் கட்சி அதை ஏற்றுத்தான் கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறது என்பதே காங்கிரசின் வாதம். காங்கிரஸ் கட்சி ஒரு நிறுவனத்திற்குக் கடன் அளித்துள்ளதால் அக்கட்சியைத் தேர்தலில் பங்குபெற அனுமதிக்கக் கூடாது என்ற சுவாமியின் கருத்தைத் தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துள்ளது என்பதும், கட்சி எந்த நிறுவனத்திற்கும் கடனாக அளிக்கக் கூடாது என்று சட்டமேதுமில்லை என்றும் வாதிடுகிறது.

2011ம் ஆண்டில் கூட நேஷனல் ஹெரால்டின் 231 பங்குதாரர்களின் பங்குகள் உட்பட்ட விஷயங்கள் வெளியிடப்பட்டது. யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என காங்கிரஸ் தமது கருத்துகளை முன்வைக்கிறது.

வழக்கின் போக்கு என்னவாக உள்ளது?

சுப்ரமணிய சுவாமியின் கோரிக்கை மனுவை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஏற்கக்கூடாது என்ற காங்கிரசின் கோரிக்கையை பாட்டியாலா மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் நிராகரித்தது. சுப்பிரமணியன் சுவாமி அளித்த விபரங்களின் படி நேஷனல் ஹெரால்டில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்பதற்கான அடிப்படை முகாந்திரம் உள்ளது எனக் கருதிய மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர்களான சோனியா, ராகுல் மற்றும் இதர நால்வரையும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற சம்மனை அனுப்பியது.

காங்கிரஸ் ஆரம்பத்தில் இதைக் கௌரவப் பிரச்சினையாகக் கருதி டெல்லி உயர்நீதி மன்றத்தை அணுகியது. இவ்வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும், மேலும் இதில் அவர்கள் நேரில் ஆஜராக வேண்டியதில்லை என்ற கோரிக்கை மனுவையும் முன்வைத்தது. நீண்ட விசாரணைக்குப் பின் 2015 டிசம்பர் 19 அன்று ஆறு பேரையும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

காங்கிரஸ் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமா என்று பலரும் கேள்விகள் எழுப்பினார்கள். ஆனால் சட்ட ரீதியாக இரண்டு கீழ்க் கோர்ட்களும் ஆஜராகச் சொன்ன வழக்கில் உச்சநீதிமன்றம் தலையிடாது என்பதால் நேரில் ஆஜராக வேண்டிய கட்டாயம் சோனியாவிற்கும் ராகுலுக்கும் ஏற்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகி பெயில் எடுத்து வெளியே வந்தனர்.

இதன் மற்றொரு பகுதியாக நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை வாங்கியதில் கட்சி நிதியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் துணைத் தலைவர் ராஹுல் காந்தியும் தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் ஆரம்ப கட்ட விசாரணை நடத்த அமலாக்கத்துறை வழக்கு ஒன்றை ஆகஸ்ட் 2014ம் ஆண்டு பதிவு செய்துள்ளது. மேலும் 2011-12ம் ஆண்டில் யங் இந்தியா நிறுவனத்தின் வருமான வரிக் கணக்கை மறு மதிப்பீடு செய்ய வருமான வரித்துறை தொடுத்த வழக்கில் மறு மதிப்பீடு செய்ய அனுமதிக்கக் கூடாது என்று காங்கிரஸ் வாதிட்டது. ஆனால் செப்டம்பர் 11, 2018 அன்று வருமான வரித்துறை மறு மதிப்பீடு செய்வதைத் தடை செய்ய இயலாது என்று தெரிவித்தது. மேலும் இதில் ராகுலை விடுவிக்கக் கோரி காங்கிரஸ் வைத்த கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் Pgurus என்ற பத்திரிகைச் செய்தி பின்வரும் செய்தியை வெளியிட்டுள்ளது. “2011ம் ஆண்டில் ராகுலுக்குக் கிடைத்திருக்கும் 414கோடி ரூபாய் வருமானத்தை மறைத்ததற்காக யங் இண்டியா நிறுவனத்தின் சோனியாவுக்கும் ராகுலுக்கும் 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் வருமானவரித் துறை ரூ.250 கோடி அபராதம் விதித்திருந்தது. வருமான வரித்துறை யங் இண்டியா நிறுவனத்தின் இயக்குநராக ராகுல் காந்தி இருந்ததை மறைத்து விட்டார் என்ற உண்மையை அம்பலப்படுத்தியுள்ளது.

2011 – 12 ஆண்டுகளில் வருமான வரிக் கணக்கை தாங்கள் மறுமதிப்பீடு செய்யப் போவதாக ராகுலுக்கு 2018ம் ஆண்டு மார்ச் மாதம் வருமானவரித்துறை ஒரு கடிதம் அனுப்பியது. இக்கடிதம் கண்டவுடன் ராகுல் டில்லி உயர் நீதிமன்றத்தை அணுகி வருமானவரித்துறை தன் மீது அபாண்டமாகப் பழி சுமத்துவதாக வழக்குத் தொடுத்தார். ஆனால் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அவரை வழக்கிலிருந்து விடுவிக்கவில்லை. மேலும் ராகுல் ஊடகங்கள் தன்னைப்பற்றி அவதூறாகச் செய்தி பரப்புவதைத் தடை செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் ஒரு கோரிக்கை மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கும் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.”

சாமானியனின் பார்வை:

சில அடிப்படைக் கேள்விகள் நமக்கு எழுகின்றன. சட்ட ரீதியாக இந்த வழக்கு எப்படிச் செல்லும் என்பதெல்லாம் நம்மால் சொல்ல இயலாது. ஆனால் நடந்துள்ள செயல்களை வைத்துப் பார்க்கும் போது இது திட்டமிட்ட ரீதியில் நடத்தப்பட்டுள்ள ஒன்று என்பது தெளிவாகிறது.

1. AJL க்கு அளிக்கப்பட்ட கடனில் 50 லட்சத்தை யங் இந்தியா நிறுவனம் அடைத்தபோது மீதித் தொகையை அளிக்க இயலாது என்று யங் இந்தியா நிறுவனமோ AJL நிறுவனமோ தெரிவிக்காத பட்சத்தில் கடனைத் தள்ளுபடி செய்தது எதனால்? காங்கிரசின் முடிவு என்று கொண்டால் கூட யங் இந்தியா நிறுவனம் கடனை அடைக்காமலேயே எப்படி 90+ கோடி பங்குகளின் அதாவது 99% பங்குகளின் பங்குதாரராக மாறியது என்ற எளிய கேள்வி முக்கியமானது.

2. காங்கிரசின் வாதப்படி AJL இடத்தை விற்க இயலாது என்பது உண்மையாக இருந்தாலும், யங் இந்தியா லாபமீட்டா நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் AJL வாடகைக்கு விட்டு வரும் மாத வருமானமான 60 லட்சம் ரூபாய் இப்போது எங்கு செல்கிறது? அதன் பங்குதாரர்களுக்குத் தானே சென்று சேரும். அவ்வகையில் 99% பங்குதாரர்களாக உள்ள சோனியா, ராகுலுக்கு மட்டுமே இதில் 76% பங்கு சென்று சேரும் என்பதுதானே அர்த்தம்.

3. AJL Vs காங்கிரஸ் என்று இருந்தால் அதன் பங்குதாரர்களின் மதிப்பு, இப்போது யங் இந்தியா துவக்கப்படாமல் இருந்தால், இப்போது இருப்பதைக் காட்டிலும் அதிக அளவில் மற்ற பங்குதாரர்களுக்குச் சென்று சேரும் என்பதுதானே உண்மை. அதை மடைமாற்றி AJLன் பெரும் பங்குகளைத் தங்களுக்கு மட்டுமே வரும் வகையில் செயல்பட்ட ராகுலும் சோனியாவும் எப்பேர்ப்பட்டவர்கள்!

4. AJL நேருவால் தொடங்கப்பட்ட ஒன்று என்பதால் அது காங்கிரசின் உணர்வுப் பூர்வமான ஒன்று. எனவே காங்கிரஸ் அதன் நஷ்டத்தை அடைக்க முன்வந்தது என்று இப்போது சொல்கிறது. AJL புத்துணர்வுடன் செயல்பட வேண்டும், பத்திரிகை மீண்டும் வெளியிடப்பட வேண்டும் என்று ஆரம்பத்தில் சொன்ன காங்கிரஸ், மேலும் யங் இந்தியா நிறுவனம் தொடங்கப்பட்டதும் அதன் நோக்கமே என்று சொன்ன காங்கிரஸ் தற்போது கடனை அடைக்க மட்டுமே காங்கிரஸ் உதவியது என்று இன்று மாற்றிப் பேசுவது எதனால்?

5. வருமான வரித்துறை மறு மதிப்பீடு செய்யக்கூடாது என்று காங்கிரஸ் ஏன் சொல்கிறது. தவறு இழைக்கவில்லை எனில் அதை எதிர்கொள்வதில் என்ன தயக்கம்?

6. இன்றைய நிலையில் AJL நிறுவனத்திற்கு வரும் வருமானத்தின் பெரும் பங்கு யங் இந்தியாவின் இயக்குநர்களுக்குத்தானே சென்று சேரும். லாபமீட்டா நிறுவனமாக யங் இந்தியா சொல்லிக் கொள்கிறது. அவ்வாறு சொல்லும் யங் இந்தியா நிறுவனம் வழக்கில் தங்களை நோக்கிக் கிடுக்கிப்பிடிவர 2016 ஆகஸ்டில் மீண்டும் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை இணையப் பத்திரிகையாக மட்டும் வெளியிடும் முடிவை எடுத்தது ஏன்? அதுவும் 2017 ஜனவரியில்தான் இணையப் பத்திரிகை வெளியிடப்படுகிறது.

7. இணையப் பத்திரிகை நடத்த இன்று என்ன செலவாகும், அதற்கு எந்தளவிற்கான இடமும் சர்வர் தேவையும் உள்ளது என்பது நமக்குத் தெரியாதா? பத்திரிகை நடத்துவது போலக் காண்பித்துவிட்டு AJL மூலமாக வாடகைக்கு வரும் பணத்தின் பெருந்தொகையை இவர்கள் அனுபவிப்பது திட்டமிட்ட செயல் கிடையாதா?

சோனியா, ராகுல் மற்றும் காங்கிரசிற்கு இது மிகப்பெரிய அவமானம்தான். ஆனால் இதிலிருந்து வெளியே வரமுடியாமல் சட்டத்தின் மூலமாக வெளிவந்து விடலாம் என்பதை மட்டுமே பார்க்கிறது. சாமானியர்களாக நமது கேள்விகளில் உள்ள உண்மை சோனியாவும் ராகுலும் எத்தகைய தகிடுதித்தங்களைப் பண்ணியுள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இப்போது ஆட்சியில் காங்கிரஸ் இருந்திருந்தால் வருமான வரித்துறை வழக்கோ, அமலாக்கத்துறை வழக்கோ இதில் இணையாத வண்ணமும், அரசின் அதிகாரத்தின் மூலமாகவே டாக்குமென்ட் வரை தயாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இந்த வழக்கை என்றோ முடிவுக்குக் கொண்டு வந்திருப்பார்கள். ஆனால் நேரெதிர்க் கட்சி ஆட்சி செய்வதும், வழக்கைத் தொடந்த சுப்பிரமணியன் சுவாமியை எதிர்கொள்வதும் கடினம் என்பதால்தான் இந்த வழக்கிலிருந்து எந்த வகையிலும் விடுபட இயலாமல் ராகுலும் சோனியாவும் தவித்து வருகின்றனர் என்பதே உண்மை.

Posted on Leave a comment

ஹொய்சாளர் ஆட்சிக்காலத்து ஆலய-சிற்ப-கட்டட எழில் | அரவக்கோன்

இன்றைய கர்நாடகப் பகுதியை பொ.பி. 10-14 நூற்றாண்டுகளுக்கு (பொ.பி. பொது யுகத்துக்குப் பின்) இடையில், முதலில் பேலூர் பின்னர் ஹளேபீட் நகரங்களைத் தலைநகரங்களாகக் கொண்டு, ஹொய்சாள மன்னர் பரம்பரை திடமானதும் உறுதியானதுமான ஆட்சி செய்தது. இவர்களின் முதல் நிலம் மேற்குத் தொடர்ச்சிமலையில் உயர்ந்த பகுதிகளாகும். அதை மலைநாடு என்பர். மேற்கு சாளுக்கியருக்கும் காலசூரியருக்கும் தொடர்ந்து இருந்து வந்த பகையும் போர்களும் இவர்கள் கால் ஊன்றித் தழைப்பதற்கு நல்ல வாய்ப்பாயின.

சாளா என்னும் ஒரு இளைஞன் தனது ஜைன குரு சுதத்தாவை அவரைத் தாக்க வந்த ஒரு புலியிடமிருந்து அதைக் கொன்று காத்ததாகவும் அங்காடி என்னும் ஊரில் உள்ள வாசந்திகா பெண் தெய்வத்தின் ஆலயத்துக்கு அருகில் இது நிகழ்ந்ததாகவும் கிராமிய வீரகதை ஒன்று உண்டு. அது ‘ஹளே’ என்னும் பழைய கன்னட மொழியில் உள்ளது. ‘ஹொய்’ என்னும் கன்னடச் சொல்லுக்கு ‘அடி, கொல்’ என்று பொருள். சாளா என்பவன் புலியைக் கொன்றதால் ‘ஹொய்சாளா’ என்னும் பெயருடன் அந்த அரசவம்சம் தோன்றியது. இந்தச் செய்தி பேலூர் கல்வெட்டில் (விஷ்ணுவர்த்தனன் பொ.பி. 1117) காணப்படுகிறது. ஆனாலும் இது உறுதியான செய்தி அல்ல.

தலைக்காட்டில் விஷ்ணுவர்த்தனன் சோழர்களைப் போரில் வென்றபின் தனது அரசு அடையாளச் சின்னமாக சோழரின் அரசக்குறியீடான புலியுடன் போரிடும் வாலிபன் உருவத்தைத் தோற்றுவித்தான். அவனது இடைவிடா முயற்சியால் ஹொய்சாள அரசு நிலை கொண்டு தனியரசாக விளங்கத் தொடங்கியது. அவனது ஆட்சியில்தான் (பொ.பி.1116) தலைநகரம் பேலூரிலிருந்து ஹளேபீடுக்கு மாற்றப்பட்டது. ‘மலப்பா’ என்னும் சிறப்புப் பெயரிலும் இவர்கள் அழைக்கப்பட்டனர். விஷ்ணு வர்த்தனனின் சுதந்திர ஆட்சி என்பது அவனது பேரன் இரண்டாம் வீரபல்லாளன் மூலம் நனவாயிற்று. அதுவரை அவர்கள் மேற்கு சாளுக்கியர்களுக்கு அடங்கிய குறுநில மன்னர்களாகவே இருந்தனர். அவ்வரசனுக்கு தட்சிண சக்ரவர்த்தி (தென்னகப் பேரரசன்) ஹொய்சாள சக்ரவர்த்தி (ஹொய்சாளப் பேரரசன்) என்பன பட்டப் பெயர்கள். திருவரங்கத்திற்கு அருகில் உள்ள கண்ணனூர் குப்பம் இவர்களது தமிழ் நிலத்துத் துணைத் தலைநகரமாக விளங்கியது. அங்கிருந்தவாறு தமிழ்நிலத்தை ஆட்சிசெய்தனர்.

பொ.பி. 14ம் நூற்றாண்டில் வட இந்தியாவில் திடமாக நிலைகொண்ட இஸ்லாமிய மன்னன் சுல்தான் அலாவுதீன் கில்ஜீ தனது தளபதி மாலிக் காஃபூர் மூலம் தெற்கு நோக்கிப் படையெடுத்து மதுரையை பொ.பி.1336ம் ஆண்டு கைப்பற்றினான். ஹொய்சாள தலைநலர் ஹளேபீட் நகரை பொ.பி.1311-1327 ஆகிய இரு ஆண்டுகளிலும் தாக்கிப் பேரழிவை உண்டாக்கினான். மூன்றாம் வீர பல்லாளன் சுல்தானுடன் மதுரையில் நிகழ்ந்த போரில் (பொ.பி. 1343) இறந்து போனான். அத்துடன் ஹொய்சாள வம்சமும் நசித்தது.

இந்தக் காலகட்டத்தில்தான் கர்நாடகத்தில் பௌத்த, ஜைன மதங்களின் வலிமை குன்றி அவை நலியத் தொடங்கின. பசவண்ணா, மத்வாச்சாரியார், ராமானுஜர் ஆகிய மூன்று முக்கியமான சமய குரவர்கள் இந்து மதத்தை விரிவாக்கம் செய்யத் தொடங்கினர். இது கர்நாடக நிலத்தில் இலக்கியம், கலை, வாழ்க்கைவழி என்று எல்லாவற்றிலும் ஊடுருவிப் புதிய வெளிச்சம் பாய்ச்சியது. சைவமும், வைணவமும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்தன.

ஜைனத்திலிருந்து வைணவத்திற்கு மாறிய விஷ்ணுவர்த்தனன் பல வைணவ ஆலயங்களை எழுப்பினான். இன்று ஹொய்சாள வம்சம் சார்ந்த ஆட்சிக் காலத்தை அவர்களால் எழுப்பட்ட ஆலயங்கள்தான் நமக்கு நினைவுறுத்துகின்றன. அப்போது கற்றளி ஆலயங்கள் தொடர்ந்து தோன்றிய வண்ணம் இருந்தன. தொடர்ந்து நிகழ்ந்த போர்கள் அதற்குத் எப்போதுமே இடையூறாக இருந்ததில்லை. இவர்களின் ஆலயங்களின் அமைப்பு முறை சிற்பவழி மேலைச் சாளுக்கியர்களின் நீட்சிதான். அந்தச் சிற்பிகளும் முந்தைய சாளுக்கியர் காலத்துச் சிற்பிகளின் தலைமுறைகள்தான்.

இவர்களது ஆலயக் கட்டட வழி, கூடுதலான நுணுக்கங்களும் ஏராளமான அணிகலன் கூடியதுமாகும். அனுபவ முதிர்ச்சியுடன் கூடிய சிற்பங்கள் இவர்களது தனித்தன்மை. இவர்களின் அக்கறை கோபுரத்தை உயர்த்துவதில் இருக்கவில்லை. மாறாக, அதில் அடர்த்தியும் நுட்பமும் கூடிய சிற்பங்களை உருவாக்குவதில்தான் இருந்தது. பெண்களின் உருவச் சிலைகளில் பெண்மை, அவர் உடல் வனப்பு போன்றவை தூக்கலாகவே காணப்படுகிறன. அந்தச் சிற்பிகள் மாக்கல் வகைப் பாறையைப் பயன்படுத்தி நேர்த்தியின் உச்சத்தைத் தொட்டனர். இந்தச் சிற்பவழியே பின்னர் தோன்றிய விஜயநகரப் பேரரசு, தமிழ்நாட்டில் நாயக்கர் ஆட்சிக் காலங்களிலும் பின்பற்றப்பட்டது.

பேலூர் சென்னகேசவ ஆலயம் பொ.பி. 1117
ஹளேபீட் ஹொய்சாளேஸ்வர ஆலயம் பொ.பி.1121
சோமனாதபுரம் சென்னகேசவ ஆலயம் பொ.பி. 1279

இம்மூன்றும் மற்ற ஆலயங்களிலும் அதிக கவனம் கொள்ளப்படுபவையாகும். அது அவற்றின் அமைப்பிற்கும், சிற்ப எழிலின் உச்சத்துக்குமானதாகும். ஹளேபீட் ஆலயத்தை ஹிந்து ஆலயக் கட்டமைப்பில் ஒரு முன்மாதிரியாகவும், அதன் வளர்ச்சியின் ஒரு மைல் கல்லாகவும் வரலாற்று, கலை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

இனி நாம் இந்த மூன்று ஆலயங்களைப் பற்றியும் விரிவாகப் பேசுவோம்.

பேலூர் சென்னகேசவ ஆலயம்- பொ.பி.1117

பேலூரில் உள்ள யாகாச்சி (Yagachi) ஆற்றின் கரையில் மன்னன் விஷ்ணுவர்த்தனால் பொ.பி.1117ல் கட்டப்பட்ட சென்னகேசவர் ஆலயம் முதலில் விஜய நாராயணர் ஆலயம் என்றுதான் அறியப்பட்டது. இந்த ஆலயம் எழுப்பப்பட்டதற்கு வரலாற்று வல்லுநர்கள் கூறும் காரணங்கள் மூன்றாகும்.

1. தனது தலைவனாக இருந்த சாளுக்கிய மன்னன் நாலாம் விக்ரமாதித்யன் தனக்கு அளித்த ‘சுதந்திர மன்னன்’ என்ற தகுதியைக் கொண்டாடும் விதமாகவும் சாளுக்கிய சிற்ப கட்டடக் கலையை விஞ்ச வேண்டும் என்னும் அவாவின் காரணமாகவும் இந்த ஆலயத்தை அவன் எழுப்புவித்தான்.

2. பொ.பி.1116ல் தலைக்காட்டில் சோழருடன் நிகழ்த்திய போரில் தான் பெற்ற வெற்றியையும் அதன் மூலம் கங்கவாடி எனப்படும் தெற்கு கர்நாடகப் பகுதியைத் தனது ஆட்சியின் வளையத்திற்குக் கொண்டு வந்ததையும் கொண்டாடும் விதமாக இதை உருவாக்கினான்.

3. திருவரங்கம் வைஷ்ணவப் பிரிவின் மடாதிபதியான ராமானுஜர் அவனிடம் உண்டாக்கிய தாக்கத்தால் ஜைன மதத்திலிருந்து விலகி வைணவத்துக்கு வந்ததையும் வைணவத்தின் பெருமையைப் பரப்பும் விதமாகவும் அவன் இதைக் கட்டுவித்தான்.

இந்த ஆலயம் இங்குக் கட்டப்பட்ட பின் பேலூர் பரபரப்பான வழிபாட்டு நகரமாக மாற்றம் கொண்டது. பொ.பி.1000-1346களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஹொய்சாள ஆட்சியில் 958 இடங்களில் ஏறத்தாழ 1500 ஆலயங்கள் உண்டாக்கப்பட்டதாக வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலயத்தில் 118 கல்வெட்டுச் செய்திகள் காணப்படுகின்றன. அவை பொ.பி.1117 முதல் 18ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அவ்வப்போது சேர்க்கப்பட்டவையாகும்.

முதலில் எழுதப்பட்ட கல்வெட்டு செய்தியில் மன்னன் தான் தனது வாளின் மூலம் வென்ற பெரும் செல்வத்தைக் கொண்டே இந்த ஆலயத்தை எழுப்பியதாகக் குறிப்பிட்டிருக்கிறான். சாளுக்கியரிடமிருந்து தனக்குக் கிட்டிய விடுதலையைப் பறைசாற்றும் விதமாகவே இதை எழுப்பியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவேதான் தொடக்கத்தில் இந்த ஆலயம் விஜய நாராயண ஆலயம் என்று அழைக்கப்பட்டது. இந்த வளாகத்தில் இந்த ஆலயம் தவிர கேசவருக்கும் லட்சுமிநாராயணருக்கும் வேறு இரு ஆலயங்களையும் எழுப்பினான்.

இந்த ஆலயத்தை உருவாக்கிய சிற்பிகளும், கட்டட, கைவினைக் கலைஞர்களும் சாளுக்கிய ஆட்சியிலிருந்து பெறப்பட்டவர்தான். இதுதான் ஹொய்சாளர் ஆட்சியில் தோன்றிய முதல் ஆலயமும் கூட. இதனால் பின்னாட்களில் இடம்பெற்ற நெரிசலான, நுணுக்கம் மிகுந்த சிற்ப அணுகுமுறை இந்த ஆலயத்தில் இருக்கவில்லை. தேவையான இடங்களில் கல்பரப்பு வெறுமையாக விடப்பட்டது.

கிழக்குமுகம் பார்க்கும் மைய நுழைவாயிலில் உள்ள ராஜகோபுரம் ஹொய்சாளர் கட்டியது அல்ல. அது விஜயநகர மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. ஆலயத்தைச் சுற்றி உள்ள உயர்ந்த மதிற்சுவரும் கூட அப்போதுதான் கட்டப்பட்டிருக்க வேண்டும்.

சென்னகேசவ ஆலயத்துக்கு வலப்புறத்தில் கப்பே சென்னிகராயர் ஆலயமும் இலக்குமியின் ஒரு தோற்றமான சௌம்யநாயகியின் ஆலயமும் (மிகவும் சிறியது) சிறிது பின் தள்ளி அமைந்துள்ளன. இடப்புறத்திலும் ஒரு ஆலயம் உள்ளது. அது ரங்கநாயகி எனப்படும் ஆண்டாளுக்கானது. வளாகத்தில் இரண்டு கற்தூண்கள் உள்ளன. ஒன்று தீபத்தூண், இது ஹொய்சாளர் காலத்தில் நிறுவப்பட்டது. மற்றது கருடத்தூண். இது விஜயநகர அரசின் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டது.

ஆலயம் மாக்கல் கொண்டுதான் எழுப்பப்பட்டது. ஹொய்சாள வழி ஆலய அமைப்புக் கொண்ட இதன் அடித்தளப் பகுதிகள் பெரும் அளவில் உள்ளன. ஒற்றை கருவறையும் மேலே கோபுரமும் உள்ள அதன் பரப்பு 10.5. மீட்டர் சதுரமானது. முன்னால் உள்ள மண்டபத்தை நீண்ட தாழ்வாரம் இணைக்கிறது. கருவறை மேல் இருந்த கோபுரம் இப்போது இல்லை.

மண்டபத்தில் அறுபது பிரிவுகள் உண்டாக்கப்பட்டுள்ளன. பெரிய மேடை நிலத்திலிருந்து ஏறத்தாழ ஒரு சராசரி மனிதனின் உயரத்துக்கு உண்டாக்கப்பட்டு அதில் பக்தர்கள் சுற்றிவர அகன்ற பாதையுடன் ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. நிலத்திலிருந்து மேடைத்தளத்தை அடையப் படிகளும் தளத்திலிருந்து நுழை வாயிலை அடைய இன்னும் சில படிகளும் காணப்படுகின்றன. அவை அகலம் கூடியவை. ஆலயம், மண்டபம் இரண்டின் அடித்தள வடிவையே அதைத் தாங்கும் தளமும் கொண்டுள்ளது. அந்த மண்டபம் முதலில் திறந்தவிதமாகவே இருந்தது. ஆலயம் கட்டி முடித்து ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் அது மண்டபத்தின் எல்லைத் தூண்களை இணைக்கும் விதமாக, கல்சுவர் கொண்டு பாதுகாப்புக் கருதி மூடப்பட்டு விட்டது. அது பலவடிவத் தூண்கள் கொண்டதாகும். இந்தச் சுவர்களின் பிரிவுகள் 28 ஆகும். மேற்புறப்பரப்பில் இலைகளும் தாவர வடிவங்களும் இடம் பெற்றுள்ளன. மன்னன் விஷ்ணுவர்த்தனும் அரசி சாந்தலாதேவியும் அமர்ந்திருக்கும் சிலைகளும் நிற்கும் சிலையும் உண்டு.

கருவறையில் கேசவரின் ஆறு அடி உயரம் கொண்ட சிலை நிற்கும் விதமாக உள்ளது. அதன் நுழைவாயிலின் இருபுறமும் ஜய விஜயர்களின் நெடிய உருவமும் அவர்களுக்கான பெண் ஏவலர் சிலைகளும் உள்ளன. இந்த மண்டபத்தின் முன்புறம் உள்ள படிகளின் இருபுறமும் புலியுடன் போரிடும் வீரன் சிலைகள் காணப்படுகின்றன. புலியின் தோற்றம் சிங்கம் போன்ற முகத்துடன் சிலையாகி உள்ளது. இந்து ஹொய்சாளர்களின் அரசு இலட்சினையாகும். மண்டபத்தில் உள்ள கடைசல் தூண்கள் உலகப் புகழ் பெற்றவையாகும். நரசிம்மதூண் முன்னர் சுழலும் வகையாக மேற்புறத்தில் பொருந்தியிருந்தது. இந்த கடையப்பட்ட தூண்கள் பல்வேறு வடிவ வேறுபாடுகளுடன் உள்ளன. மொத்தம் உள்ள 48 தூண்களில் நடுவில் உள்ள நான்கு தூண்கள் கடையப்பட்டவை அல்ல. செதுக்கப்பட்டவை. மற்ற தூண்களைக் காட்டிலும் எழிலும் மிடுக்கும் கூடியவை. நான்கு தூண்களிலும் அவை கூரையைத் தாங்கும் இடத்தில் ‘சிலாபாலிகா’ எனப்படும் பெண் சிலைகளைக் கொண்டுள்ளன (இவை பற்றி விரிவாக பின்னர் தனியாகப் பேசுவோம்). அவை மொத்தம் 42 அவற்றில் மண்டபத்தின் வெளிச்சுற்றில் உள்ள தூண்களில் 38 சிலைகள் உள்ளன.

ஆலய வெளிச்சுவரின் கீழ்புறம் உள்ள அடுக்குகளில் யானை, சிங்கம், புரவி, மலர் வடிவம் அன்னம், புராணக்காட்சிகள் போன்றவை தொடராகச் சிற்பமாகி உள்ளன. யானைகளின் எண்ணிக்கை 650 ஆகும். இவை பத்து (தோராயமாக) ஒன்றன் பின் ஒன்றாகவும் அவற்றை எதிர்நோக்கும் பத்து யானைகளும் என்று சிலையாகி உள்ளன. மற்றவையும் இந்த விதமாகவே வடிவமைக்கப் பட்டுள்ளன. ஒரு அடுக்கின் அகலம் என்பது தோராயமாக 12 முதல் 18 அங்குலம் வரை இருக்கும். ஹொய்சாள ஆலயங்களில் உள்ள சிற்றின்பவகைச் சிற்பங்கள் ஒதுக்குப்புறமான இடத்திலேயே காணப்படுகின்றன. எண்ணிக்கையிலும் அவை குறைவுதான். கஜ்ராஹோ ஆலயம் போன்றதல்ல. சுவர்ப்பரப்பின் தென்மேற்கு மூலையில் நரசிம்மர், மேற்குப்புறத்தில் ஐராவதேஸ்வரர், ஆலயத்தின் முகப்பில் இறக்கையை விரித்தபடியான கருடன், நடமிடும் காளி, அமர்ந்த விநாயகர், வாமனர், கைலாயத்தை அசைக்கும் இராவணன், மகிஷனை அழிக்கும் துர்க்கை, வராகர், நிற்கும் பிரம்மன், அந்தகாசுரனை வதைக்கும் சிவன், பைரவர், சூரியன், மீன் இலக்கைக் குறிவைக்கும் காண்டீபன் ஆகிய சிற்பங்கள் அவற்றின் சிற்ப முதிர்ச்சிக்கு எடுத்துக்காட்டு. அவற்றில் வடக்குக் கர்நாடகம் மற்றும் மஹாராஷ்டிர வழிச் சிலைவடிவங்களின் பாதிப்பு உள்ளது.

இந்தச் சிற்பிகள் தாங்கள் உருவாக்கிய சிலைகளில் தங்கள் பெயர், குடும்ப விவரம், தாங்கள் சார்ந்த குழு போன்ற செய்திகளை எழுதி வைத்துள்ளனர் என்பது சிறப்பான செய்தியாகும். ருவரி மல்லிதம்மா என்னும் சிற்பி உருவாக்கியதாக நாற்பது சிலைகளுக்கும்மேல் காணப்படுகின்றன. ஐந்து மதனிகா சிலைகளுக்கு உரிய சிற்பி என்று சவனாவின் பெயரும், தாசோஜா என்னும் சிற்பி உருவாக்கியவை நான்கு என்றும், மல்லியண்ணா, நாகோஜா என்னும் இரு சிற்பிகள் பறவை, விலங்குகளை உருவாக்கியதில் முதன்மையானவர் என்றும் அறிகிறோம்.

கப்பே சின்னி ஆலயம்

சென்னகேசவர் ஆலய வளாகத்தின் உள்ளேயே காணப்படும் இந்த ஆலயம் அமைப்பில் அது போலவே இருப்பினும் வடிவத்தில் சிறியது. கருவறையில் 6.5 அடிகள் உயரம் கொண்ட சென்னிகராயர் சிலை நின்றவாறு உள்ளது. சுற்றுச் சுவரில் தசாவதாரக் காட்சிகள் சிற்பமாகி உள்ளன. பொ.பி.1117 நூற்றாண்டில் மன்னர் விஷ்ணுவர்த்தனரின் மூத்த மனைவியும் பட்டத்து ராணியுமான சந்தலாவின் பொருளுதவியுடன் இது கட்டப்பட்டது. ஆலயத்தின் துளைகளுடன் கூடிய சாரளங்கள் பொ.பி.1206ல் மன்னன் 2ம் பல்லாளனால் உண்டாயின. நுழைவாயிலின் மேற்புறச்சுவர் இருபுறமும் மகரமீன்கள் கூடிய லக்ஷ்மி நாராயணர் சிலை ஏராளமான அணிகலன்களுடன் காணப்படுகிறது. இது சென்னகேசவர் ஆலயத்தின் வலப்புறத்தில் உள்ளது. சிற்பங்களுக்கு முக்கியத்துவம் இல்லாவிடினும் அதன் ஆலய அமைப்புக்குச் சிறப்பானது. பின்னாளில் இங்கு இன்னொரு கருவறையும் இணைக்கப்பட்டது. அது மடிப்புகளற்ற சதுரப் பரப்பில் எழுப்பப்பட்டது.

ஹளேபீட்

12ம் நூற்றாண்டில் ஹளேபீடு ஹொய்சாளர் தலைநகரமாகத் திகழ்ந்தது. கன்னட மொழியில் ஹளேபீடு என்பது ‘சிதைந்த நகரம்’ என்று பொருள்படும். இதன் முந்தைய பெயர் தொரசமுத்திரம் அல்லது துவார சமுத்திரம் என்பதாகும். அந்தப் பெயரில் ஒரு பெரிய ஏரி உள்ளது. பஹாமனி சுல்தானால் இந்த நகரம் இரண்டு முறை தாக்குதலுக்குள்ளாகி சிதைந்து போனது. ஹளேபீடு நகரத்தில் மூன்று ஆலயங்கள் குறிப்பிடத் தக்கவையாகும். அவை:

1. ஹொய்சாளேஸ்வரர் ஆலயம், 2. கேதாரேஸ்வரர் ஆலயம், 3. பார்வதநாதர் ஆலயம்.

1-ஹொய்சாளேஸ்வரர் ஆலயம்

சிவனுக்கான இந்த ஆலயம் பொ.பி.12ம் நூற்றாண்டில் கர்நாடகத்தை ஆட்சி செய்த விஷ்ணுவர்த்தன ஹொய்சாள மன்னரின் ஆட்சியில் பொ.பி.1120ம் ஆண்டில் எழுப்பப்பட்டது. ஹளேபீட் என்னும் பகுதி முன்னர் துவாரசமுத்திரம் அல்லது தொரசமுத்திரம் என அழைக்கப்பட்டது. முதலாம் நரசிம்மன் இரண்டாம் வீரபள்ளாலன் ஆகிய மன்னர்கள் காலத்தில் விரிவாக்கம் பெற்றது. இந்த ஆலயம் எழுப்ப 86 ஆண்டுகள் ஆனபின்னும் இது முற்றுப் பெறவில்லை. பொ.பி.1310ல் மாலிக் காஃபூரின் படைகள் நகரைச் சின்னாபின்னம் செய்தன. ஆலயத்தின் சிலைகள் உடைக்கப்பட்டன.

இந்த ஆலயம் அமையக் காரணமானவர் அவ்வூரில் இருந்த சைவப் பிரிவு வர்த்தகச் செல்வந்தர்கள்தான். அவர்களுள் கேடமல்லன், கேசரசெட்டி ஆகிய இருவரும் முன்னின்று பொருள் திரட்டி மன்னனின் ஆதரவுடன் ஆலயத்தை எழுப்பினார்கள். இது பேலூரில் சென்னகேசவர் ஆலயம் கட்டப்பட்ட காலத்திலேயே அதற்குப் போட்டியாகக் கட்டப்பட்டது. தொரசமுத்திரம் என்னும் மாபெரும் ஏரிக்கு அருகில் இவ்வாலயம் உண்டானது. ஏரி ஆலயத்திற்கு 75 ஆண்டுகள் முந்தியது. இவையெல்லாம் கல்வெட்டுக் குறிப்புகளில் கிட்டும் செய்திகள். தென் இந்தியாவில் உள்ள பெரிய சிவ ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்த ஆலயம் இரண்டு கருவறைகளையும், அவற்றின் மேல் உயரம் குறைந்த கோபுரங்களையும் கொண்டது. அவற்றில் ஒன்று ஹொய்சாளேஸ்வரருக்கும், மற்றது சுந்தரேஸ்வரருக்கும் ஆனது. (ஒன்று அரசன் விஷ்ணுவர்த்தனனுக்கும், மற்றது அவனது மனைவி சாந்தலாதேவிக்கும் காணிக்கையானது.) ஆலயம் முழுவதும் மாக்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இதைத் ‘த்விகுட’ (இரண்டு கோபுரம் கொண்டது) என்பர். நிலத்திலிருந்து நன்கு உயர்த்தப்பட்ட தரைத்தளம் பின்னர் கட்டப்பட்ட ஆலயங்களுக்கு முன்மாதிரியானது. கிழக்குப்பார்த்த இரு கருவறைகளுக்கும் தனித் தனியான முக மண்டபங்கள் உண்டு. இரண்டும் ஒரு பாதையால் இணைகின்றன. பேலூர் சென்னகேசவர் ஆலயத்தைக் காட்டிலும் அளவில் சிறிய கருவறைகள்தான் இங்கு உள்ளன.

துர்க்கை, ஹளேபீடு

கருவறை லிங்கமும் எளிமையான தோற்றம் கொண்டதுதான். ஆனால், ஆலயத்தின் வெளிப்புற சுவர்ப்பரப்பு அவ்விதமானதல்ல. செங்கோண அமைப்பில் சுவர் நீண்டும் உள்மடிந்தும் வெளிவந்தும் பலவித வடிவங்களுடன் உண்டானது. அவற்றில் சிற்பங்கள் குவிந்து கிடக்கின்றன. கோபுரம் இப்போது இல்லாவிடினும் அது எவ்விதம் அமைந்திருந்தது என்பதை எளிதில் ஊகிக்க முடியும். அது நட்சத்திர வடிவமான கோபுரம்தான். நிலத்திலிருந்து உயர்த்தப்பட்ட வடிவங்களுடன் கூடிய மேடையில் பல அடுக்குகள் கொண்ட அடித்தளம் உண்டாக்கி அதன் மேல் சுவரும் கோபுரமும் மண்டபமும் கட்டப்பட்டது. நாற்புறமும் ஆலயத்தைச் சுற்றி உயர்ந்த மதிலும் தூண்கள் கூடிய கூரையுடன் தாழ்வாரமும் அவற்றுக்குத் தரையிலிருந்து படிகளும் உள்ளன.

ஆலயத்திற்குப் புகுமண்டபங்கள் உள்ளன. அவற்றில் ஆலயத்தின் நுழைவாயிலில் உள்ள மண்டபம் நேராக இல்லாமல் வடக்கு முகமாக மடங்கி உள்ளது. தெற்கில் ஒரு மண்டபமும் கிழக்கில் இரண்டு மண்டபங்களும் உள்ளன. இம்மண்டபங்களின் மேற்தளத்தைக் கடைசல் முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட தூண்கள் தாங்குகின்றன. இந்த மண்டபங்களுக்கு உள்ள படிகளின் இருபுற ஓரத்திலும் நிலத்தில் இரண்டு சிற்றாலயங்கள் காணப்படுகின்றன. ஆலயத்தின் அடித்தள மேடை திறந்த வெளியிலும் விரிவடைந்து உள்ளது. ஆலயத்தின் மண்டபம் தூண்களுடன் முதலில் நாற்புறமும் திறந்த விதமாகவே உருவானது. பின்னர் மண்டபத்தைக் கற்சுவர்கள் கொண்டு மூடிவிட்டனர். சுவரில் சதுரமான துளைகள் வெளிச்சமும் காற்றும் பரவும் விதமாய்க் கொண்டுள்ளது. அதன் வடக்கு தெற்கு நுழைவில் வரிசையான கடைசல் தூண்கள் உள்ளன. ஆலயத்திற்கு முன்புறம் உள்ள அவ்விதத் தூண்களில் மட்டுமே மதனிகா என்று குறிப்பிடப்படும் பெண் சிலைகள் கூரையையும் தூணையும் இணைத்தபடி முன்புறம் சாய்ந்தவாறு காணப்படுகின்றன. ஆலயத்தில் வேறெங்கும் அவற்றைக் காணவியலாது.

ஆலயத்தின் சுவரை மேலிருந்து கீழாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். கூரையைத் தொடும் பகுதிலிருந்து கீழிறங்கும் சுவரின் ஒரு பகுதியில் அணிவகுக்கும் சிற்றாலயங்கள். நடுப்பகுதியில் கடவுளர்ச் சிற்பங்கள். அதற்குக் கீழ்ப்பகுதி நிலத்திலிருந்து சுவரின் தொடக்கம். இது எட்டு அடுக்குகள் கூடியது.

இடப்புறத் தெற்கு நுழைவாயில் சுவரில் தொடங்கும் நடன விநாயகர் சிலை வடக்குப் புற வலது பக்கத்தில் இன்னொரு விநாயகர் சிலையுடன் முடிகிறது. இவற்றின் இடையில் ஆலயத்தின் வலது, பின்புறம், இடது ஆகிய மூன்று பக்கச் சிவர்களிலும் உள்ள சிலைகளின் எண்ணிக்கை 140. அனைத்தும் பேருருவச் சிலைகள்தான்.

மேடையிலிருந்து தொடங்கும் சுவரின் முதல் அடுக்கில் யானைகளின் வரிசை (வலிமை/ உறுதி இவற்றின் அடையாளம்) அதற்கு மேலுள்ள அடுக்கில் சிங்கங்களின் வரிசை (அச்சமின்மை) மூன்றாவதில் மலர்களின் வரிசை, நான்காவதில் புரவிகள் (வேகம்) ஐந்தாவதில் திரும்பவும் மலர்களின் வரிசை, ஆறாவதில் புராண நிகழ்வுகளின் காட்சிகள், ஏழாவதில் யாளி, மகரமீன் போன்ற கற்பனை விலங்கு வடிவங்கள், எட்டாவதில் அன்னப் பறவைகளின் வரிசை என்றிருக்கும் இதன் தொடரின் நீளம் 660 அடிகளாகும். (முப்புறமும் முன்புறத்தின் நுழைவாயிற்படிகளை விலக்கியும் உள்ள பகுதி) புராண நிகழ்வுகளுக்கு இடையில் அவற்றுக்குத் தொடர்பற்ற வேறு காட்சிகளும் உள்ளன. இதன் பின்னர் ஹொய்சாள ஆலயங்களின் அமைப்பு முறை இதை ஒட்டியே அமைந்தது. ஆனால் அவற்றில் ஆறு அடுக்குகள் மட்டுமே உண்டு. தெற்கில் உள்ள நுழைவாயில்தான் முன்னர் பிரதானமானதாக விளங்கியது. இப்போது புழக்கத்தில் இருக்கும் வடக்கு நுழைவாயிலின் மேலே உள்ள சிற்ப வேலைப்பாட்டைக் காட்டிலும் அதில்தான் சிறப்பு கூடுதலாக உள்ளது. ஆலயத்தின் உட்புறம் ஏறத்தாழ எளிமையாகவே உள்ளது. ஆயின் அதன் மைய மண்டபம் அளவில் பெரியது. இரண்டு கருவறையின் நுழைவாயிலில் உள்ள வாயிற்காப்போரின் சிலைகள் கருங்கல்லில் ஆனவை. பணிப்பெண்களுடன் காணப்படுகின்றன.

‘கருட தூண்’

இந்த ஆலய வளாகத்தில் காணப்படும் ஒற்றைக்கல் தூண் ‘கருட தூண்’ என்றழைக்கப்படுகிறது. இது போரில் உயிரிழந்தவருக்குக் கட்டப்படும் வீரக்கல் வகையானது அல்ல. கருடர் எனப்படுபவர் அரசனின் மெய்க்காப்பாளர்கள். அரசனுடனேயே அவனுக்குப் பாதுகாப்பு அரணாக இருந்து அவனது மரணத்துக்குப் பின் தம் தலையைக் தாமே கொய்து தம்மை மாய்த்துக் கொள்பவர்கள். இந்தத் தூணில் அது பற்றின கல்வெட்டுச் செய்தி உள்ளது. குருவ லக்ஷ்மணன் என்னும் வீரன் தன் மனைவி மற்ற மெய்க்காப்பாளர்களின் தலையை வெட்டிக் கொன்று தானும் தனது தலையைக் வெட்டிக் கொண்டு மாண்ட செய்தி உள்ளது. கன்னட எழுத்தில் அந்த மொழியிலேயே இது பதிவாகி உள்ளது. தூணிலும் வாளால் தமது சிரம் கொய்யும் வீரர்களின் சிலைகளும் உள்ளன.

நந்தி மண்டபங்கள்

ஆலயத்தின் கிழக்குப் பகுதி வளாகத்தில் உள்ள இரண்டு நுழைவாயில்களின்  எதிர்ப்புறத்தில் இரண்டு மண்டபங்கள் அருகருகே உள்ளன. ஏறத்தாழ ஒரு சிறு கோயிலின் தோற்றம் கொண்ட அவை வேலைப்பாடுடைய உயர்த்திய மேடை கொண்டவை. மண்டபங்களின் மையத்தில் மாபெரும் அளவில் படுத்திருக்கும் ஒற்றைக்கல் நந்திகள் இரண்டிலும் உள்ளன. அதைச் சுற்றிவர தூண்களுடன் கூடிய வழி உள்ளது. சிலபடிகள் ஏறி அதை அடையலாம். நிலத்தில் படிகளின் இருபுறமும் அளவில் சிறிய ஆலயங்கள் உள்ளன. இரண்டாவது நந்தி மண்டபத்தின் பின்னால் உள்ள கருவறையில் கருங்கல்லால் உருவான ஏழடி உயரம் கொண்ட சூரியனின் சிலை நிற்கிறது. இவை அடைக்கப்பட்ட மண்டபங்கள் அல்ல. அவற்றிலுள்ள அனைத்துத் தூண்களும் கடைசல் முறையில் உருவானவை. ஒன்று போல மற்றது இல்லை. அமர்ந்த நிலையில் பெரும் விநாயகர் சிலை ஒன்றும் தெற்குப் புறத்தில் திறந்தவெளியில் உள்ளது. மேடையும் சேர்த்து அதன் உயரம் எட்டு அடிகள்.

இந்த வளாகத்தில் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினரால் பராமரிக்கப்படும் அருங்காட்சியம் ஒன்றும் உள்ளது. திறந்தவெளியில் பல்வேறு இடங்களிலிருந்து சேகரித்துக் கொண்டுவந்த சிலைகளின் தொகுப்பு இங்குக் காணப்படுகிறது. அவை ஏறத்தாழ 1,500 எண்ணிக்கை கொண்டவையாகும். 18 அடி உயரம் கூடிய ஜைன தீர்த்தங்கரரின் நிற்கும் சிலை சிதைந்து போன ஜைன ஆலயத்திலிருந்து மீட்கப்பட்டதாகும். இங்குள்ள சிலைகள் உலக நாடுகள் பலவற்றிலும் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

ஆலயத்தில் காளிதாசன், தாமோஜன், கேதனா, பல்லானா, ரெவோஜா, ஹரிஷ ஆகிய சிற்பிகளின் பெயர்கள் கல்வெட்டுக் குறிப்பு அவர்களின் பங்களிப்பை பற்றின விவரத்தைச் சொல்கிறது.

கேதாரேஸ்வரர் ஆலயம்

ஹொய்சாளேஸ்வர ஆலயத்தினின்றும் 500 மீட்டர் தாண்டி அமைந்துள்ளது இவ்வாலயம். கல்வெட்டுக் குறிப்புகளிலிருந்து மன்னன் இரண்டாம் வீரபல்லாளன் அவனது பட்டத்துராணி அபிநவகேதலா தேவி இருவராலும் பொ.பி.1219ல் இந்த ஆலயம் எழுப்பட்ட விவரம் தெரிகிறது. ஆலயத்துக்குச் சேதம் நேர்ந்த போதிலும் அது ஏறத்தாழ முழுமையாகவே உள்ளது. பின்னாட்களில் விரிவாக்கமும் கூடியது, இது.

மாக்கல் கொண்டு எழுப்பப்பட்ட இந்த ஆலயம் 16 முனைகள் கொண்ட நட்சத்திர வடிவம் கூடிய உயர்த்தப்பட்ட சுவர் அடுக்குகளின் மீது அதே வடிவத்தில் கட்டப்பட்டு உள்ளது. மூன்று கருவறைகள் கொண்ட அது இப்போது வெறுமையாக உள்ளது. கோபுரங்களும் இல்லை. கடைந்து உருவான தூண்கள், உட்கூரை சிற்ப குவியல்கள் சுவரை இரண்டாகப் பிரித்து உண்டாக்கிய சிலைகள், தள அடுக்குகளின் நாற்புறமும் உள்ள தொடர் வடிவங்கள் என்று அனைத்தையும் கொண்ட இந்த ஆலயத்தை மேலும் அழிவிலிருந்து காப்பாற்றும் விதமாக பார்வையாளர் உள்ளே செல்ல அனுமதிப்பதில்லை.

சோமநாதபுரம் சென்னகேசவ ஆலயம்

ஹொய்சாள அரசன் மூன்றாம் நரசிம்மன் ஆட்சியிலிருந்தபோது அவனது படைத் தளபதிகளில் ஒருவனான சோமநாதன் மன்னனிடம் கேசவருக்கு ஒரு ஆலயம் கட்டுவதற்கு அனுமதி கேட்டான். மன்னன் அதற்கு அனுமதி அளித்ததுடன் அதற்கான பொருளையும் வழங்கினான். ஆலயம் கட்டப்பட்டு பொ.பி. 1268 இல் குடமுழுக்கும் கண்டது. ஆலயத்தில் உள்ள கல்வெட்டுச் செய்தியில் இவை தெரிய வருகின்றன.

இது மூன்று கருவறைகளை அடுத்தடுத்து உள்ளடக்கிய ஆலயமாகும். அவற்றின் மேலே அளவில் சிறிய கோபுரங்களும் உண்டு. கிருஷ்ணனின் மூன்று தோற்றங்களான ஜனார்த்தனன், கேசவன், வேணுகோபாலன் சிலைகளவற்றில் நிறுவப்பட்டு வழிபாடுகள் நிகழ்ந்தன. பின்னால் நிகழ்ந்த ஆலய அழிப்பினால் கேசவனின் சிலை இப்போது இல்லை. மற்ற இரண்டு கருவறைகளும் மூளியாகக் காணப்படுகின்றன. மூன்று கருவறை உள்ளதால் இது திரிகூட ஆலயம் என்று குறிப்பிடப்படுகிறது.

தளபதி சோமநாதன் தன் பெயரில் ஏற்படுத்தியதாக இது இருப்பதாலும், இது தோன்ற அவன் காரணமானதாலும் இது சோமநாதபுர கேசவ ஆலயம் எனப்படுகிறது. நட்சத்திர தள அமைப்பை உடையது. பல அடுக்குகள் கொண்ட உயர்த்திய தரைதளத்தில் ஆலயத்தில் சுற்றிவர திறந்தவெளிப் பாதையுடன் காணப்படுகிறது. சுவர்களிலும் உட்கூரை கோபுரங்களிலும் காணப்படும் சிற்பங்களின் சிறப்பைச் சொற்களால் கூறவியலாது.

இவையல்லாமல், குறிப்பிடத்தகுந்த ஆலயங்கள் உள்ள மற்ற இடங்கள்:

1) கோரிவங்கலா- பொ.பி. 1173
2) அம்ருதபுரா பொ.பி. 1279
3) பெலவாடி-பொ.பி. 1200
4) அரசிகரே பொ.பி. 1220
5) மொசலே-பசலூரு-பொ.பி. 1234
6) ஹரண ஹள்ளி -பொ.பி. 1235
7) நக்கஹள்ளி-பொ.பி. 1246
8) ஹொசஹோலலு-பொ.பி. 1250
9) அரலகுப்பே-பொ.பி. 1250

Posted on Leave a comment

தங்கத் தேடல் | ஜெயராமன் ரகுநாதன்

“A series of Gold-bearing reefs strike across the Wayanad gneiss. That they contain gold was perhaps known for two centuries as far back as 1793..”

The Madras District Gazettier, The Nilgiris, W Francis

புல்பள்ளி கிராமம் கேரளாவின் வயநாட்டு தாலுகாவில் இருக்கிறது. சுல்தான் பத்தேரி என்னும் வினோதப்பெயர் கொண்ட ஊருக்கு இருபத்து நான்கு கிலோமீட்டரில் இருக்கும் படு கிராமம். கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் காலூன்ற எடுத்த அபார முயற்சிகளில் இந்தப் புல்பள்ளியும் சிக்கிக்கொண்டது. புல்பள்ளி மட்டுமில்லை, சுற்றுவட்டார ஊர்களான செட்டப்பாலம், மடப்பள்ளிக்குன்னு, வனமூலிகா, பெரிக்கல்லூர், பிரக்கடவு என்று எல்லா ஊர்களிலுமே எஸ்டேட் வேலைக்கு ஆள் எடுக்க மேஸ்திரிகள் வந்து அப்பாவி கிராம மக்களை அள்ளிக்கொண்டு போவார்கள்.

ஜி.எஃப்.ஃபிஷெர் துரை 1820களிலேயே சேலத்தில் சேர்வராயன் மலையில் காபித் தோட்டங்களைப் பயிரிட்டுச் சம்பாதித்தார். அப்போதைய சேலம் கலெக்டர் காக்பர்ன் அவருக்கு மலைத்தொடர்களில் காபி பயிரிட அனுமதித்துவிட, நல்ல விளைச்சல். இவரைத் தொடர்ந்து ஜே.ஔச்டர்லொனி துரை வயநாட்டில் காபித் தோட்டங்களை உருவாக்கி நிர்வகித்தார். 1840-50 காலகட்டங்களில் வேலை செய்ய மேஸ்திரிகள் கிராமம் கிராமமாகப்போய் அப்பாவி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி அரக்கத்தனமான கொடுமைக்கு ஆளாக்கின கால கட்டம்.

துரைகளின் மற்றும் துபாஷிகளின் வாழ்க்கை படு சுவாரஸ்யமானதாக இருந்திருக்கிறது.

துரை வரும்போது என்ன பரபரப்பு! முதலில் அந்த பியூன் என்பவன் “நவுரு நவுரு, துரை வந்தாச்சு” என்று விரட்டிக்கொண்டே போக, பின்னால் குமாஸ்தாக்கள் கையில் பேப்பர் கட்டுக்களுடன், “நிக்காதய்யா வழியில! துரைக்கு கோவம். எதுனா பண்ணிப்பிடப்போறார்!”

அதன் பின் ஒன்றிரண்டு துபாஷிகள், அவர்களின் எடுபிடிகள் செய்யும் ஆர்ப்பாட்டங்கள்.

“என்ன அய்யிரே! என் காண்ட்ராக்ட் இன்னிக்கு கையெழுத்தாவுமா?”

“எது, அந்த பிலாத்தோப்பு நிலமா? நேத்தே தொர யாருட்டயோ கேட்டுக்கினு இருந்தாரு. நீங்க ஒண்ணும் நெஜத்துக்கு மாறா வெல சொல்லலியே?”

“கும்பினி வெல பதிமூணு ரூவாத்தான் போட்ருக்கேன். நெசமாலும் அது பதினேழுய்யா. உன்னாண்ட சொன்னேனே, ரெண்டு ரூவா காசும், மொந்தன்பழத்தார் ஒண்ணும் வீட்ல தரச்சொன்னெனே?”

“எனக்கு சரின்னா, அவாளுக்கு மனசு கனியணூமே!”

“பாத்து நீங்களும் சொல்லிடுங்க சாமி! அடுத்த மாசம் கல்யாணம் வருதாமே, நானே நேர்ல வர்ரேன்!”

“ஆஹா, கொடுத்து வெச்சிருக்கேன்னா!”

துரைக்கு முன்னால் அடிமையாய்க் கூனிக்குறுகும் துபாஷி, துரை அந்தாண்டை நகர்ந்ததும் ஒரு சமஸ்தான ராஜாவாய் மற்றவரைச் சிறுமைப்படுத்துவது வாடிக்கையாக நடந்தது.

‘டேய்! கேட்டே இல்ல தொர சொன்னத? பேசாம கிரயம் பண்ணிக்கொடுத்துட்டு வாங்கின்னு போ!”

“இல்லீங்க, எட்டு ரூவான்னு…..”

“என்னடா எட்டு ஏழுன்னு இழுக்கற? கேசவா! விஜாரி!”

“வாடா இங்க, உம்முகத்துக்கு மூணு ரூவா போறாதா? நம்ம அய்யாட்டயே எதுத்து பேசுவியா? தொர சொல்றதக் கேக்கல நீயி? நைன் ருபீஸ்ன்னாரே, நைன்னா என்ன, மூணுடா!”

“சரிங்க சரிங்க கைய விடுங்க, வலிக்குது”

“போ போ குடுத்ததை வாங்க்கிக்கினு நட, வேலயைப்பாரு”

அந்த துபாஷிக்குக் கிடைக்கும் மரியாதை, அந்தஸ்து, அவனைச் சுற்றிய எடுபிடிக் கூட்டம், அடியாட்கள், துபாஷி போலப் பட்டு வேஷ்டியும் சில்க் ஜிப்பாவுமாய் அத்தர் மணக்க ஆள் படை என்று வலம் வரும் காட்சி கண்ணில் தெரிந்து, சாதாரணர்களை, நாமும் ஏதாவது செய்து துரையின் அருகில் போய்ச் சம்பாதிக்க மாட்டோமா என்று ஏங்க வைத்தது.

1840களில் வயநாட்டிலும் நீலகிரியிலும் சேலம் அருகிலுள்ள சேர்வராயன் மலைகளிலும் காபி நன்றாக விளைந்து லாபம் தர ஆரம்பித்துவிட்டது. மேற்சொன்ன ஃபிஷெரும் ஔச்டர்லோனியும் பல ஏக்கராக்களில் காபி பயிரிட்டுக் கொழித்துக்கொண்டிருக்க, இருபதே வருடங்களில் நிலைமை மாறியது.

1865ம் வருடத்தில் நல்ல மழை அடித்துப் பெய்தது. எஸ்டேட்டை வலம் வந்த துரைகள் சிலாகித்து மேஸ்திரிகளிடம், இன்னும் நூறுபேர் வேலைக்கு வேண்டும் என உத்தரவிட்டனர். இங்கிலாந்துக்கு எழுதின கடிதத்தில் இந்த முறை இன்னும் 20 சதவீதம் கூடவே காபி ஏற்றுமதியாகும் என்று ஔச்டர்லொனி கடிதம் எழுதினார்.

ஆனால் போரர் (Borer) என்னும் பூச்சி பரவி பல எஸ்டேட்டுகளில் காபித் தோட்டங்கள் அழிந்தன. அதோடு இலைப்புழு புகுந்து அடித்த கொட்டத்தில் 1871ல் காபி சுத்தமாகக் கையை விரித்தது.

இந்த வருடத்தில்தான் தங்கப்புரளி மறுபடியும் கிளம்பியது.

மறுபடியுமா?

ஆம். 1831ம் ஆண்டே வயநாட்டுப் பள்ளத்தாக்குகளில் மாப்ளா என்று சொல்லப்படும் அடிமை வேலையாட்கள் உள்ளூர் நிலச்சுவான்தார்களால் அமர்த்தப்பட்டு தங்கம் எடுக்கும் முயற்சிகளைச் செய்து வந்தார்கள். அவர்களின் முறை பழங்காலச் சல்லடை முறையானதால் குந்துமணி குந்துமணியாகச் சில பொட்டுத் தங்கமே கண்ணில் பட்டது. ஆனால் அதற்கான கூலியோ, கிடைக்கும் தங்கத்தைவிட அதிகமாக இருந்தது. அப்போது அங்கு டூர் வந்த லெஃப்டினெண்ட் வூட்லி நிகொல்ஸன் இந்தத் தங்க சமாசாரங்களை ஆராய முற்பட்டார். அவர் வருவதை அறிந்த உள்ளூர் ஆசாமிகள் அவரிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, தங்கம் எடுக்க உத்தரவாதம் தர, நிக்கோல்ஸன் கொஞ்சம் அவசரக்கோலமாக ஆராய்ந்து ஆகா ஓகோவென அறிக்கை கொடுத்துவிட்டார். இதை நம்பி அரசாங்கம் பல இயந்திரங்களைத் தருவித்து தங்கத்தேடலுக்கு ஆரம்ப மணி அடித்தாலும் சில மாதங்களிலேயே இந்தத் தேடலில் பைசா பேறாது என்பது புரிந்துவிட்டது. எனவே 1833ம் ஆண்டு அரசாங்கம் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

1871ல் காபி ஏமாற்றிவிட, தோட்ட உரிமையாளர்கள் மறுபடி இந்தத் தங்கப்புரளியை சீரியஸாக எடுத்துக்கொண்டு இதில் இறங்கினார்கள். ப்ரோ ஸ்மித் (Mr.Brough Smith) என்னும் விற்பன்னர் ஆஸ்திரேலியாவிலிருந்து தருவிக்கப்பட்டார். இந்த ப்ரோ ஸ்மித்தின் வாழ்க்கை வரலாற்றையே ஒரு தனி அத்தியாயமாக எழுதலாம். ரத்தினச் சுருக்கமாக – 1846ல் சாதாரண க்ளார்க்காக இங்கிலாந்தில் கான்செட் இரும்பு கம்பெனியில் ஆரம்பித்த ப்ரோ ஸ்மித், 1853ல் மெல்போர்னுக்கு வந்தார். 12 வருடஙகளில் என்னென்னமோ செய்து வானிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவராகிவிட்டார். கூடவே கனிம சமாச்சாரங்களில் உஸ்தாத் என்று பெயரெடுத்தார். இவர் வயநாட்டுக்கு வந்து ஒன்றரை வருடம் தங்கி என்னத்தையோ ஆய்வெல்லாம் செய்து, இங்கு தங்க உற்பத்திக்கு வாய்ப்பிருக்கிறது என்று அறிக்கை எழுதிக்கொடுத்துவிட்டு அங்கேயே இருந்து பல கம்பெனிகளுக்கு ஆலோசகராகக் கொழிக்க ஆரம்பித்தார்.

குமாஸ்தாக்களும் பியூன்களும் அபார ரகசியங்கள் வைத்துக்கொண்டிருந்த காலம். நம்ம பயல்களின் மஹா அடிமைத்தனங்கள் ஒரு சில ஆண்டுகளிலேயே கும்பினிக்காரர்களை ஓரளவுக்கு ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது. 1836லேயே இங்கிருந்த ஒரு ஆங்கில மாது தன் சகோதரிக்குக் கடிதத்தில் எழுதின விஷயம் இப்போது படித்தால் மறுபடி இங்கிலாந்துடன் சண்டைக்குப் போக வேண்டியிருக்கும்.

“ஆர்மகமும் சுப்பூவும் விருந்து முடிந்தவுடன் எங்கள் காலில் விழுந்து எழுந்தனர். ‘துரைசானி அம்மா! எங்களால் முடிந்த அளவு உங்களை உபசரித்தோம். அதில் ஏதாவது தவறு இருந்தால் அது எங்களின் அறியாமையால்தான். மரியாதைக்குறைவால் அல்ல. உங்களை நாங்கள் எம் தாயினும் மேலாகப் பாவிக்கிறோம்.’

சங்கீதம் என்று ஏதோ இசைத்தார்கள். நம் ஊரில் மரண ஊர்வலம் போல இருந்தது.

எல்லோரும் திருடர்கள். எல்லோரும் நடிக்கிறார்கள்.”

இந்த ஆர்மகமும் சுப்பூவும் இத்தனைக்கும் பணக்கார துபாஷிகள்.

இப்படிப்பட்ட காலகட்டத்தில் கும்பினி வெள்ளையர்களுக்கு குமாஸ்தாக்களும் பியூன்களும் இன்னுமே மனிதர்களாகவே படவில்லை. இவர்கள் இருப்பதையே ஒரு பொருட்டாக மதிக்காமல் அவர்கள் தத்தம் திட்டங்களைப் பற்றிப் பேசலானார்கள். அரைகுறை ஆங்கிலம் அறிந்து வைத்திருந்த நம் குமாஸ்தாக்களும் பியூன்களும் இந்த விஷயங்களை ஏதோ ராஜ ரகசியமாக குடும்பத்தாரிடமும் நண்பர்களிடமும் பெருமை அடித்துக்கொண்டிருக்க, அரசாங்க செய்திகள் கசியத்தொடங்கின.

தங்கத் தேடலுக்குத் தோதாக தென்னிந்திய ஆல்ஃபா கோல்டு மைனிங் கம்பெனி நிறுவப்பட்டதிலிருந்தே பாரி அண்ட் கம்பெனி அதற்கு ஏஜண்ட்டானார்கள். எங்கடா சம்பாதிக்கலாம் என்று தேவுடு காத்துக்கொண்டிருந்த கும்பினி அதிகாரிகள் தத்தம் மச்சான், சகலைகளுக்கு எழுதின சுருக்கில் 41 கம்பெனிகள் இங்கிலாந்தில் ரெஜிஸ்தர் செய்யப்பட்டு 50 லட்சம் பவுண்ட் ஸ்டெர்லிங் முதலீடு செய்ய, இந்தியாவில் ஆறு கம்பெனிகள் செய்த முதலீடு கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் பவுண்டுகள். எல்லா கம்பெனிகளும் வயநாட்டை நோக்கி வர, அப்போது சில சாதாரணர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்.

துரைமார்களுக்கும் கம்பெனி ஆசாமிகளுக்கும் கூழைக்கும்பிடு போட்டு இடம் காண்பிக்கிறேன், ஆள் தருவிக்கிறேன் என்று ஏஜண்டு வேலை செய்து பணம் பார்த்தார்கள். இதில் ஒரு பேக்கரி வைத்து நொடித்துப்போனவனும் சர்க்கஸில் கோமாளியாக இருந்தவனுங்கூட அடக்கம்! கூடவே பின்னி கம்பெனியும், பாரியும் அர்பத்னாட்டும் அந்த கம்பெனிகளுக்கான மானேஜிங் ஏஜன்சி எடுத்து ஆட்களை வயநாட்டிற்கு அனுப்பினார்கள். காபியும் அப்போது விலை சரிந்துகொண்டிருந்ததால், காபி தோட்ட முதலாளிகள் தங்கள் நிலத்தைத் தங்கம் தோண்ட விற்க ரெடியானார்கள். அதற்கு ஏகப்பட்ட போட்டி இருக்கவே நிலத்தின் விலை எகிறியது. ஆரம்பத்தில் 70 பவுண்டுக்கு ஒரு ஏக்கர் விற்ற நிலம் விரைவிலேயே 2600 பவுண்டு வரை ஏறியதாம்.

இந்த அழகில் சென்னையில் வியாபாரிகளிடையே ஏகப்பரபரப்பு.

மைசூர் மாகாணத்தில் எத்தனை சலுகைகள் தெரியுமா, நம்ம ப்ரெசிடென்ஸியில் கொடுக்கவில்லையென்றால் தொழில் எப்படி முன்னேறும் என்றெல்லாம் கூட்டம் போட்டுப்பேசி கும்பினியிடம் சலுகைகள் கேட்க, லண்டன் எப்போதும் போல ஈசானிய மூலையைப் பார்த்து யோசித்துக்கொண்டிருந்தது.

ஒவ்வொரு கம்பெனிக்கும் இந்த மூன்று ஏஜண்ட்டுகள் – பாரி, பின்னி அர்பத்நாட் – முழு வேலையையும் கவனித்தார்கள். மேஸ்திரிகள் இப்போது மண் தோண்ட ஆள் சேகரித்தார்கள். காப்பி தோட்டத்தில் இடுப்பொடிந்தவர்கள் இப்போது பள்ளம் நோண்டுவதில் முதுகெலும்பை முறித்துக்கொண்டார்கள். அந்த உழைக்கும் கூட்டத்தில் ஒவ்வொரு நாளும் விழுந்த அடிகளும், சிந்திய ரத்தங்களும், பிறந்த குழந்தைகளும், அகாலமாக இறந்த ஆட்களும், சக்கையாக உபயோகப்படுத்தப்பட்ட பெண்களும்… ஒவ்வொன்றும் ஒரு கதையாகிப் போனது.

ஆல்ஃபா கம்பெனியின் பங்கு விஷமாய் ஏறி, பல கை மாறி, ஒவ்வொரு மாற்றலிலும் விலை ஏற்றம் கண்டது. இன்றும் நாம் பார்க்கும் அதே பங்கு மார்க்கெட் ரசாயன விலையேற்றத்திற்குச் சூடு கிளப்ப, வெகு சீக்கிரத்திலேயே அங்கே தங்கத்தேடல் குப்புறத் தலைவிழ்ந்தது. மிஞ்சி மிஞ்சிப் பார்த்ததில் ஒரு டன்னிலிருந்து நான்கு அவுன்ஸ் தங்கமே கிடைத்ததாம். இன்னொரு இடத்தில் 19 டன்னில் கிடைத்த தங்கம் 2 Dwts. அதாவது ஒன்றின் கீழ் ஒன்பது அவுன்ஸ் மட்டுமே. (அதாவது ஒரு அவுன்ஸ் தங்கம் என்பது 18.23 Dwts)

பெரும் பள்ளங்கள் தோண்டினதுதான் மிச்சம். ஸ்மித்தின் அறிக்கை படியெல்லாம் தங்கம் அப்படி ஒன்றும் அகப்பட்டுவிடவில்லை. தோண்டத் தோண்ட மண்ணும் சகதியும் தண்ணீரும்தான் கிடைத்தன. ஒரே ஒரு கம்பெனி 363 அவுன்ஸ் தங்கமும் இன்னொரு கம்பெனி 60 அவுன்ஸும் எடுத்ததோடு ரகளை முடிவுக்கு வந்தது.

இதை அறிந்தோ என்னவோ ப்ரோ ஸ்மித் அதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்னும் ரீதியில் நடித்து,  நிறைய பணத்தைக் கவர்ந்துகொண்டு ஆஸ்திரேலியாவுக்கு ஜூட் விட்டிருந்தார்.

அடுத்த சில நாட்களிலேயெ ஒவ்வொரு கம்பெனியாகக் கதவைமூடிப் பூட்டுப் போட்டார்கள். ஆசாமிகளுக்கு வேலை போனது. புல்பள்ளி கிடங்க நாடு நாஞ்சில் நாடு பிரதேசங்களில் கோச் வண்டிகள் நடமாட்டம் குறைந்து மறுபடியும் சோகையான ஆடுகளும் மாடுகளும் அழுக்கு மேல் துணி அணிந்த கிராமத்தார்களும் தெருவில் ஊடாட, துரைமார்கள் போக்குவரத்தும் நின்று போனது. எஸ்டேட்டுகளில் காபி பயிரிடல் மீண்டும் ஆரம்பிக்க, மேஸ்திரிகள் மறுபடியும் கிராமங்களுக்கு வந்து அடிமைகளைத் தேடிப் பிடித்துக்கொண்டு போக ஆரம்பித்தார்கள்.

ஏராளமான மனிதர்களின் உயிரையும் இன்னும் பலரது நல் வாழ்க்கையையும் காவு வாங்கிய பின்னர் தங்கத்தேடல் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.

மீண்டும் The Madras District Gazettier, The Nilgiris by W Francis……

“By 1906, at Pandalur, three or four houses, the old store, traces of race course survive; At Devala, were a grave or two; topping many of the little hills derelict bungalows and along their contours, run grass grown roads. Hidden under thick jungle are heaps of spoil, long forgotten tunnels used only by she-bears and panthers expecting an addition to their families and lakhs worth of rusting machinery that were never installed…..”

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 13 | சுப்பு


ஆங்கிலத்தின் வழியாக ஆர்.எஸ்.எஸ்

1971ல் நடந்த பாகிஸ்தான் தேர்தலில் கிழக்கு வங்காளத்தைச் சேர்ந்த முஜிபுர் ரஹமானின் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்றது. சட்டப்படி முஜிபுர் ரஹுமான் பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்றிருக்க வேண்டும். ஆனால் பாகிஸ்தானின் ராணுவம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

ராணுவ பலத்தோடு கிழக்கு வங்காளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கோடிக்கணக்கானவர்கள் வன்முறையிலிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். அந்தச் சமயத்தில் வங்கதேச விடுதலைக்கு இந்தியா உதவ வேண்டும் என்று ஜனசங்கம் நாடு தழுவிய இயக்கத்தை நடத்தியது.

சென்னையில் புரசைவாக்கம் தர்மபிரகாஷ் மண்டபத்தில் நடந்த ஊழியர் கூட்டத்தில் வாஜ்பாய் பேசினார். நான் ஜனசங்க உறுப்பினர் இல்லை என்றாலும் கூட்டத்திற்குப் போய் முன்வரிசையில் அமர்ந்துவிட்டேன். என்னை இந்தக் கூட்டத்திற்கு அழைத்துப்போனது அனில்குமார் சோனி என்கிற கான்பூரைச் சேர்ந்த நண்பர். இவர் தீவிர ஜனசங்கப் பற்றாளர். எந்தப் பேச்சைப் பேசினாலும் அது வானிலை அறிக்கையாக இருந்தாலும் வரப்போகிற திரைப்படமாக இருந்தாலும் ‘ஜனசங்கம் ஒருநாள் தில்லியின் செங்கோட்டையில் கொடி ஏற்றும்’ என்று சொல்லித்தான் முடிப்பார்.

வாஜ்பாயின் பேச்சு – அது பேச்சல்ல, நாட்டியம் என்றுதான் சொல்ல வேண்டும். கைகளை உயர்த்தியும் தாழ்த்தியும் முகத்தை அசைத்தும் பாவத்தோடு அவர் உரையாற்றும்போது அந்த வார்த்தைகளுக்குள் புதிய வலு சேர்ந்துகொண்டது.

கூட்டம் முடிந்து திரும்பும்போது சோனி என்னிடம் கேட்டார். “வாஜ்பாய் பத்தி என்ன நினைக்கிற” என்று. நான் சொன்னேன், “அவருடைய கால்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவரது கால்கள் வலுவாய் இருக்கின்றன” என்று. நண்பர் சோனிக்குப் புரியவில்லை.

வாஜ்பாய்தான் பாரதநாட்டைத் தூக்கிப்பிடிக்கப் போகிறார், அதற்கேற்ற வலு அவருடைய கால்களில் இருக்கிறது என்று விளக்கிச் சொன்னேன்.

*

சென்னை மயிலாப்பூர் தொகுதியில் ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற டி.என்.அனந்தநாயகி சில மாதங்களிலேயே இந்திரா காங்கிரசுக்கு மாறிவிட்டார். எனக்கும் என்னுடைய நண்பர்களுக்கும் இது அதிர்ச்சியாக இருந்தது. இந்த அரசியல் அயோக்கியத்தனத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் எங்களுடைய குழு சிதறிவிட்டது. நான் மட்டும் பாதையை மாற்றிக்கொண்டு ஆர்.எஸ்.எஸ் நோக்கிப் பயணப்பட்டேன். அதற்கான காரணிகள் பல. ஒவ்வொன்றாய்ச் சொல்லுகிறேன்.

பள்ளிப் படிப்பை முடிக்கும் காலத்திலிருந்து ஆர்.எஸ்.எஸில் சேரும் வரை ஏழாண்டு கால இடைவெளி. இந்த ஏழாண்டுக் காலத்தில் நான் நூற்றுக்கணக்கான ஆங்கிலப் புத்தகங்களைக் கரைத்துக் குடித்திருந்தேன். இப்படி எக்கச்சக்கமான புத்தகங்களைப் படித்து ஆங்கிலப் பதங்களைப் பழக்கப்படுத்திக்க கொண்டதால் என்னுடைய எழுத்து நடை சராசரிக்கு மேலாகவும், ஆங்கிலத்தைப் பேசிப் பழக வாய்ப்பில்லாத காரணத்தினால் என்னுடைய பேச்சுநடை சராசரிக்குக் கீழாகவும் இருப்பதாக நண்பர்கள் அபிப்ராயப்படுகிறார்கள். இப்படிப் படித்த புத்தகங்களில் இரண்டு புத்தகங்கள் என்னுடைய அரசியல் மாற்றத்திற்கு வழிகாட்டியாக அமைந்தன. ஒன்று லியோன் யூரிஸ் எழுதிய எக்ஸோடஸ் ((EXODUS – LEON URIS)) என்கிற ஆங்கிலப் புதினம். ஒரு அமெரிக்க நர்ஸுக்கும் யூதப் போராளிக்கும் இடையே ஏற்பட்ட ரசாயன மாற்றங்களைச் சொல்வதாகத்தான் கதை தொடங்குகிறது. ஆனால் பக்கங்கள் விரிய விரிய ஒரு இனத்தின் வீர / சோக வரலாறாக மாறிவிடுகிறது. யூதர்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்ற கோரிக்கை காகிதங்களில் எழுதப்பட்டு, ரகசியக் குழுக்களில் பேசப்பட்டு, ஊர்வலங்களில் முழங்கப்பட்டு, பல லட்சம் பேரை பலி கொடுத்த பின்னர் சாத்தியம் ஆனது எப்படி என்பதைச் சொல்கிறார் லியோன் யூரிஸ்.

யூதர்கள் செய்ததை இந்துக்கள் ஏன் செய்யக்கூடாது என்ற கேள்வி என்னுள் எழுந்தது. அது, செய்யவேண்டும் என்ற ஆசையாக மாறியது. அதற்கான வேலையில் நானும் பங்கெடுக்க வேண்டும் என்ற சங்கல்பமாகக் கெட்டிப்பட்டது. இப்படி வேகமான உணர்ச்சிகளோடு ஆர்.எஸ்.எஸ்ஸைத் தேடி ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் ஆழ்வார்பேட்டை ஆஸ்தீக சமாஜ ஷாகாவுக்கு போனேன் (1973). அங்கே எதேச்சையாக ஹண்ட்ரெட்ஜி என்று அன்போடு அழைக்கப்படும் ஆர்.ஸ்ரீநிவாசன் எக்ஸோடஸ் பற்றி பேசிக்கொண்டிருந்தார். இதுதான் நம்முடைய இடம் என்று நிச்சயப்படுத்திக்கொண்டேன்.

இன்னொரு புத்தகம் பால்ராஜ் மதோக் எழுதிய இந்தியனைசேஷன் ((Indianisation – What, Why, and How). இந்தப் புத்தகத்தைப் பக்கத்துக்குப் பக்கம் பாஸ்பரஸ் என்று சொல்லலாம். தேசிய உணர்வு என்பதைப் புள்ளி வைத்துக் கோலம் போட்டுக் கொலுவேற்றிக் கும்பிட்டிருப்பார் இவர். அரேபியத் தன்மை என்பது இஸ்லாமிய நம்பிக்கைக்கு அவசியமானது அல்ல என்பதை அழகாக விளக்கி இருப்பார். நேருவின் பிடிவாதத்தால் இந்திய நாடு இழந்தவை பற்றிச் சொல்லி இருப்பார். ஸ்தாபனக் காங்கிரசை விட்டு வெளியேறி அரசியலரங்கத்தில் நடைபெறுகிற நிகழ்ச்சிகளை வெளியில் நின்று நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். என்னை ஆட்டத்துக்குள்ளும் ஆர்.எஸ்.எஸ்க்குள்ளும் தள்ளிவிட்ட காரணிகளில் இந்தப் புத்தகமும் ஒன்று என்று சொல்லலாம்.

என் நண்பன் ஒருவன் தி.மு.க சார்புடையவன். நாங்கள் இருவரும் அதிகமான நேரங்களை அறிவாராய்ச்சியில் செலவழிப்போம். எனக்கு அமெரிக்க நாத்திகர் இங்கர்சாலை ((ROBERT G INGERSOLL) அறிமுகப்படுத்தியது இவன்.

நண்பனுக்கு வீட்டு வசதி வாரியத்தில் வேலை கிடைத்தது. வேலையில் சேருவதற்கு டாக்டர் சர்ட்டிபிகேட் வேண்டும். அவனுக்கோ டீ குடிக்கக்கூடக் காசில்லாத நிலைமை. மிகவும் வருத்தப்பட்டான். அவனை அழைத்துக்கொண்டு அடையாரிலுள்ள டாக்டர்களை ஒவ்வொருவராகப் பார்த்து சர்ட்டிபிகேட் கொடுக்கும்படியும் அதற்கான பீஸைப் பிறகு வாங்கிக் கொள்ளும்படியும் வேண்டினேன். யாரும் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. திரு. ராமமூர்த்தி என்ற E.N.T. சர்ஜனை அணுகினோம். சிறிது தயக்கத்துடன், “இப்பொழுது முடியாது, நீங்கள் மதியம் வாருங்கள்” என்றார். எனக்குப் பொதுமையில்லை. “இப்பொழுதே கொடுத்துவிடுங்களேன்” என்று வற்புறுத்தினேன். அவர், “தம்பி வீட்டில் ஒரு சாவு ஆகிவிட்டது. என்னுடைய நம்பர் ஸ்டாம்ப் அந்த அறையில்தான் இருக்கிறது. பிரேதத்தை எடுத்த பிறகுதான் நான் அங்கே போக முடியும்” என்று கூறினார். இவ்வளவு நல்ல மனதுடையவரைத் தொந்தரவு செய்வதற்குக் கஷ்டமாயிருந்தது. இருந்தாலும் எங்கள் நிலைமை அப்படி. அந்த வீட்டில் வாசலிலேயே காத்திருந்தோம். பிரேதம் வெளியே போன பிறகு நாங்கள் உள்ளே போய் சர்ட்டிபிகேட் வாங்கிக் கொண்டோம். திரு.ராமமூர்த்தி பணம் எதுவும் தர வேண்டாமென்று சொல்லிவிட்டார். திரு.ராமமூர்த்தி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவரென்று பிறகு தெரிந்து கொண்டேன்.

இப்படி பல விஷயங்கள் சேர்ந்து என்னை இந்து இயக்கப் பற்றாளனாக மாற்றிவிட்டன. இதைத் தொடர்ந்து எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் சுவாரஸ்யமானவை.

கன்னியாகுமரியிலிருக்கும் விவேகானந்தர் நினைவாலய கமிட்டியும், ஆர்.எஸ்.எஸ்ஸால் ஏற்படுத்தப்பட்டதுதான். வெளிப்படையாக அரசாங்கத்தை விரோதம் பண்ணிக் கொள்ள விரும்பாத சில ஹிந்து அபிமானிகள் இந்த மாதிரி ஸ்தாபனங்களில் இடம் பெறுவார்கள். விவேகானந்தர் நினைவாலய கமிட்டி புத்தகம் ஒன்றை வெளியிட்டிருந்தது. நூற்று ஐம்பது ரூபாய் விலையுள்ள இந்தப் புத்தகத்தை விற்றால் இருபத்தைந்து ரூபாய் கமிஷன். ஆர்.எஸ்.எஸ் முகாமிற்கு ஒரு சிறுவனை அனுப்புவதற்காக இந்தப் புத்தக விற்பனையில் நானும், கண்ணன் என்ற நண்பனும் இறங்கினோம். ஒரு சைக்கிள் கேரியரில் புத்தகம், ஹாண்டில் பாரில் கண்ணன் என்று ஒரு வாரம் தெருத்தெருவாக அலைந்தோம். யாரிடம் இதை விற்பது என்று எங்களுக்குத் தெரியவில்லை. பெரிய பங்களாவாகப் பார்த்து, அவர்களுக்கு நூற்றைம்பது ரூபாய் பெரிய தொகையாக இருக்காது என்ற எண்ணத்தில் முயற்சித்தோம். இது சிறிது பலனளித்தது.

தொழிலதிபர் சுந்தரமையர் வீட்டில் கூர்க்கா எங்களை உள்ளேவிட மறுத்துவிட்டான். நாங்கள் கூர்க்காவோடு தகராறு செய்து கொண்டிருந்ததை சுந்தரமையர் பார்த்துவிட்டார். எங்களை உள்ளே அழைத்துப் பேசினார். ஒரு புத்தகம் விற்பனை ஆயிற்று.

திரைப்பட பைனான்சியர் ஒருவர் புத்தகத்தை வாங்கி எடைபோடுவதுபோல் தூக்கிப் பார்த்தார். விவேகானந்தர் புத்தகத்தை எடைபோடுவது என் தேச பக்திக்குச் சவாலாயிருந்தது. அவரை நன்றாகத் திட்டிவிட்டு புத்தகத்தைப் பிடுங்கிக்கொண்டு வந்துவிட்டேன். ஒரு வாரத்தில் பன்னிரண்டு புத்தகங்கள் விற்றதில் நானும் கண்ணனும் ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்களில் பிரபலமானோம்.

(தொடரும்)

Posted on Leave a comment

நரசிம்மராவ் என்னும் பாதி சிங்கம் – புத்தக விமர்சனம் | ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன்

இந்தப் புத்தகத்தைக் கிட்டத்தட்ட ஓராண்டாக வைத்திருக்கிறேன். இருமுறை வாசிக்க ஆரம்பித்துச் சில பக்கங்களிலேயே நிறுத்திவிட்டேன். முக்கியமான காரணம், பொதுவாக வாழ்க்கை வரலாறுகள் தரும் இனம் புரியாச் சலிப்பு மற்றும் வறண்ட எழுத்து. அடுத்து, புத்தகத்தின் பக்கங்களின் எண்ணிக்கை தரும் மலைப்பு. அதோடு, மொழிமாற்ற புத்தகங்களின் மீதான அவநம்பிக்கை.

ஆனால், இந்தப் புத்தகத்தை நான் வாங்கியதே, நான் கண்ட, எனக்குத்தெரிந்த, நான் புரிந்து வைத்திருக்கும் நரசிம்மராவுக்கும், ஆராய்ச்சி செய்து எழுதப்பட்ட நரசிம்மராவுக்குமான இடைவெளியைத் தெரிந்துகொள்ளவே. அந்த வகையில் வாசித்து முடிக்கையில் இந்தப் புத்தகம் என் எதிர்பார்ப்பை நிறைவேற்றியிருந்தது.

நரசிம்மராவின் இறுதிச்சடங்கிலிருந்து புத்தகம் துவங்குகிறது. காங்கிரஸ் கட்சியின் கோர முகத்தையும், நேருவின் இன்றைய பரம்பரையின் கேவலமான முகத்தையும் தோலுரித்துக் காட்டுகிறது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரின், இந்திய முன்னாள் பிரதமரின் சடலத்திற்கு நேரும் அவமானம். டெல்லியில் இறுதிச்சடங்கு செய்யக்கூடாது என சோனியாவின் கண்ணசைவுக்கு இணங்கச் சொல்லப்பட்டு, காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்திற்குள் பொதுமக்கள் அஞ்சலிக்குக்கூட அவரது பூத உடலை வைக்க விடாமல், ஹைதராபாத்திற்குத் துரத்திய செயல், இந்திய அரசியலில் மிகக் கேவலமான பக்கங்கள். அதைவிடக் கொடுமையாக, நரசிம்மராவ் இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னரே, அவர் இறந்தால் எங்கு இறுதிச் சடங்குகளைச் செய்வதாக உத்தேசம் எனக் கேட்கும் அளவிற்கு, மனிதாபிமானம் அற்ற, சீழ்பிடித்த மனநிலையில் சோனியாவும் அவரது சகாக்களும் இருந்ததை இந்தப் புத்தகம் விவரிக்கிறது.

நரசிம்மராவின் ஆட்சிக்காலத்தில் நான் கல்லூரியில் இருந்தேன். அரசியலின் அரிச்சுவடியைத் தெரிந்துகொள்ள முயன்றுகொண்டிருந்தேன். விரும்பியோ விரும்பாமலோ, கர சேவை, பாபர் மசூதி (சில பத்திரிகைகளில் சர்ச்சைக்குரிய கட்டிடம்) பிரச்சினை, டெல்லி இமாம் புஹாரியின் சவடால்கள், நான் படித்த பல்கலையின் அருகிலிருந்த திண்டுக்கல்லில் நடந்த ஹிந்து முஸ்லீம் மோதல்கள், இந்தியா தங்கத்தை அடகு வைத்த செய்திகள், வாயே பேசாமல் ஒரு பிரதமர், நரசிம்மராவைக் குறித்த கேலிச்சித்திரங்கள் குறித்த செய்திகள் எல்லாம் கண்ணில் படும். ஆனால் இதில் நமக்கு என்ன இருக்கிறது என்ற மிஸ்டர் பொதுஜனமாகத்தான் இருந்தேன்.

ஹிந்து இயக்கங்கள் நடத்திய ஹிந்து விழிப்புணர்வு முகாம்களில் கலந்துகொண்ட காலங்களில் நரசிம்மராவின் திறந்த பொருளாதாரம் கிழக்கிந்திய வாணிப கம்பெனி நம்மை அடிமையாக்கியதைப்போல மீண்டும் நம்மை அடிமையாக்கிவிடும் என ஒரு சொற்பொழிவாளர் விளக்கியதைக் கேட்டிருக்கிறேன். ஆனால், அவை அர்த்தமற்ற பயங்கள் எனப் புரிய வாஜ்பாய் அவர்களின் ஆட்சி வரவேண்டியிருந்தது. குஜராத்தில் நடந்த பாஜக ஆட்சி குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது. பின்னர்தான் நரசிம்மராவின் முக்கியத்துவம் புரியத் தொடங்கியது.

இடதுசாரிகள் நாட்டில் எந்த வித நல்ல மாற்றத்தையும் நடத்தவிடாமல் முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருந்த காலத்தில் நரசிம்மராவின் பொருளாதாரச் சீர்திருத்த சாதனைகள் எல்லாம் மலைக்க வைப்பவை.

வாயைத்திறந்து பேசுங்க என அப்போதைய எதிர்க்கட்சிகளும், சில ஆளும்கட்சி உறுப்பினர்களும் கதறியிருப்பார்கள் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. ஆனால், வாயைத்திறந்து பேசிக்கொண்டிருந்தால் பதில் மட்டுமே சொல்லிக்கொண்டிருக்க வேண்டும் என்பதை நரசிம்மராவ் உணர்ந்திருந்தார்.

நரசிம்மராவ் தன் அரசியல் வாழ்க்கையில் சிங்கம், நரி மற்றும் எலியாக இருந்திருக்கிறார் என்பதையும், எந்தெந்தச் சூழலில் எந்தெந்த அவதாரம் எடுத்தார் என்பதையும் மிக விரிவாய்ப் பேசுகிறது இந்நூல். கிட்டதட்ட அரசியல் சாணக்கியராய் நரசிம்மராவ் இருந்தார் என வெற்றுப்புகழாரமாய் இன்றி அவரது சாணக்கியத்தனங்களை நிகழ்வுகள் வாரியாய்ப் பட்டியலிடுகிறது இந்நூல்.

ஜெனிவாவில் பாக்கிஸ்தான் இந்தியாவிற்கு எதிராய் காஷ்மீர் குறித்துக் கொண்டு வரவிருந்த தீர்மானத்திற்குப் பதில் சொல்ல எதிர்க்கட்சியைச் சேர்ந்த அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களை அனுப்பும் அளவு எதிர்க்கட்சியினருடன் நட்புறவு கொண்டிருந்தார், அந்தச் சூழலில் வாஜ்பாய் அவர்களை அனுப்பியது ஒரு ராஜதந்திரம். இப்படியான ஒரு பார்வை, நரசிம்மராவின் அமைச்சரவைத் தேர்வுகளிலும், அரசாங்க அதிகாரிகளின் தேர்விலும் காணக் கிடைக்கிறது.

நம் அனைவருக்கும், குறிப்பாய்ப் பெருவாரியான இந்தியர்களுக்கு பிரதமர் நரசிம்மராவைத்தவிர வேறு எந்த நரசிம்மராவ் குறித்தும் எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பதே உண்மை.

உண்மையான நரசிம்மராவ் ஒரு மிகப்பெரும் நிலச்சுவான் தாரர். சிறுவயதிலேயே உருது மற்றும் பாரசீக மொழி உள்ளிட்ட பல மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார்.

நில உச்ச வரம்புச் சட்டம் வந்ததும் அதை உண்மையாய் நடத்திக்காட்டிய வல்லமையாளர். தன்னிடம் இருந்த 1200 ஏக்கரில் (தத்துப்போனதால் கிடைத்த பெரிய நிலப்பங்கையும் சேர்த்து) அரசு அனுமதித்ததுபோக மீதமுள்ளதை அரசிடமே ஒப்படைக்கும் அளவு நேர்மையாளராக ஒரு காலத்தில் இருந்திருக்கிறார். நில உச்சவரம்புச் சட்டத்தின் ஓட்டைகளை அனுபவத்தில் கண்டறிந்து அவற்றை அடைத்து உண்மையான நிலச் சீர்திருத்தத்தை ஆந்திராவில் மேற்கொண்டிருக்கிறார்.

ஆந்திராவின் முதலமைச்சராய் இரு ஆண்டுகள் இருந்தவர். மேலும் பலகாலம் ஆந்திராவில் காங்கிரஸ் அமைச்சரவையில் அமைச்சராய் இருந்தவர். உண்மையைச் சொன்னால் பிரதமர் ஆகும்வரை நரசிம்மராவ் என ஒருவர் இருப்பதையே நான் அறிந்திருக்கவில்லை.

இந்தப் புத்தகம் நரசிம்மராவ் குறித்த மிகப்பெரிய திறப்பைக் கொடுத்தது என்றால் அது மிகையில்லை. அதைவிட முக்கியமாய் இந்தியாவின் மோசமான காலகட்டத்தில் ஆட்சியில் அமர்ந்து, கிடைத்த ஐந்து ஆண்டுகளில் அவர் செய்திருக்கும் சாதனைகள் மலைக்க வைக்கின்றன. பொருளாதாரம், தீவிரவாதம் ஒழிப்பு (பஞ்சாப், காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள்), அறிவியல், கல்வி மேம்பாடு, நவோதயா பள்ளிகள் துவக்கம், தொழில்நுட்ப வளர்ச்சியில் அக்கறை, அணுகுண்டு தயாரிக்க ஊக்கம், மன்மோகன் சிங் என்ற பொருளாதாரப் புலியை நமக்களித்தது எனப் பல நல்ல விஷயங்கள் அவர் காலத்தில் நடந்தன. ஆனால் பொருளாதாரப் புலியான மன்மோகன் பிரதமரானதும் என்ன ஆனார் என்பதையும் பார்த்தோம்.

ஒரு சிறுபான்மை அரசு முழுமையாக ஐந்தாண்டுகள் தாக்குப் பிடித்தது மிகப்பெரிய சாதனை. சொந்தக் கட்சியினரே வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் அவரை எதிர்த்தார்கள். அரசியல் எதிரிகள்/ எதிர்க்கட்சிகள் இன்னொரு புறம். இதற்கு மத்தியில் அடிக்கடி நரசிம்மராவ் ஆட்சிமீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானங்களையும் வென்று, ஆட்சியையும் தக்க வைத்து, இந்தியாவின் பொருளாதாரத்தையும் உயர்த்தி, இந்தியா இன்றைக்குப் பொருளாதாரத்திலும், அறிவியலிலும், தொலைத்தொடர்பிலும் நாலுகால் பாய்ச்சலில் ஓடுவதற்கான முதல் அடியை எடுத்துக் கொடுத்தவர் நரசிம்மராவ்.

கிட்டத்தட்ட அந்தரத்தில் கட்டப்பட்ட கயிற்றில் சைக்கிளும் ஒட்டிக்கொண்டு, இரண்டு கையிலும் தட்டை வைத்துக்கொண்டு இக்கரையில் இருந்து அக்கரைக்குப் போய்வரும் சர்க்கஸ் வித்தைக்காரனின் நிலையே நரசிம்மராவுக்கு இருந்தது. ஆனால், அவரது நிதானம், அமுக்குளித்தனம், எதிரிகளைத் தனக்கு சாதகமாய், சூழலைத் தனக்கு சாதகமாய் மாற்றிக்கொள்ளும் திறன், சில அநியாய சமரசங்கள் என ஐந்து ஆண்டுகளாய் ஆட்சியில் இருந்திருக்கிறார்.

நரசிம்மராவுக்கு மனைவியுடன், இணைவிக்கு இணையான துணையும் உண்டு என்பது கூடுதல் தகவல். என்.டி.ராமாராவ் போல அந்திமக் காலத்தில் இல்லாமல் அவரது அரசியல் ஆரம்பக் காலத்திலிருந்தே இந்த நெருங்கிய நண்பி இருந்திருக்கிறார்.

சந்திராசாமியுடனான நரசிம்மராவின் உறவு நமக்கே தெரிந்த ஒன்றுதான். ஆனால், நரசிம்மராவ் பிரதமராவதற்கு முன்பு குற்றாலத்தில் இருக்கும் ஒரு மடத்திற்குத் தலைமை தாங்க ஒப்புதல் அளித்து, பொறுப்பை ஏற்கும் தருணத்தில் பிரதமர் ஆனார் என்பது நமக்கெல்லாம் புதிய தகவல்.

பல மொழிகளைச் சரளமாக பேசக்கூடியவர் என்பது மட்டுமே சாதாரண இந்தியனுக்கு நரசிம்மராவின் பெருமைகளில் ஒன்றாய்த் தெரிந்திருக்கிறது. ஆனால், நரசிம்மராவ் எழுத்தாளராகவும், மொழி பெயர்ப்பாளராகவும், கம்ப்யுட்டரில் நிரல் எழுதக்கூடிய அளவு கணினி அறிவைக்கொண்டவராகவும் இருந்திருக்கிறார் என்பதை இப்புத்தகம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

நாட்டின் எந்தப் பகுதியிலிருந்து மக்களவைக்குப் போட்டியிடச் சொன்னாலும் அவரால் எளிதாய்ப் போட்டியிட முடிந்ததற்குக் காரணம், அவரது அசாத்திய மொழிப்புலமை. மன்மோகன் சிங் போலன்றி, மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பியாகவே நாடாளுமன்றத்திற்குள் நுழைந்திருக்கிறார். பிரதமரான தொடக்கத்தில் தடுமாறித்தான் போயிருக்கிறார் என்பதையும், தவறிலிருந்து பாடம் கற்றுக்கொண்டிருக்கிறார் என்பதையும் தெரிந்துகொள்ள முடிகிறது.

இஸ்ரேல் உடனான ராஜாங்க உறவுகளை முழுவதுமாக ஆரம்பிக்கும் முன்னர், யாசர் அராபத்தை இந்திய விருந்தாளியாக அழைத்ததும், யாசர் அராஃபத்தையே இந்தியா யாருடன் ராஜாங்க உறவு வைத்துக்கொள்வது என்பதெல்லாம் இந்திய இறையாண்மைக்குட்பட்ட விஷயம் எனச் சொல்ல வைத்ததிலும் இருக்கிறது அவரது சாணக்கியத்தனம்.

அரபுநாடுகளுடனான உறவையும் கெடுத்துக்கொள்ளாமல் வாஷிங்டனுக்கு செல்லும் வழியான இஸ்ரேலின் டெல் அவிவ் உடனும் நட்பு வைத்துக்கொள்ள வழிவகை செய்த பெருமை நரசிம்மராவையே சாரும். மேலும், இஸ்ரேலுடன் நட்பு வைத்தால் இந்திய முஸ்லிம்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற சிந்தனை காங்கிரஸுக்கு இருந்தது எனப் படிக்கையில், காங்கிரஸ் வாக்கு வங்கிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை நாட்டின் வெளியுறவுக்குக் கொடுக்கவில்லை என்பதை மீண்டும் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும், இந்திய முஸ்லிம்களை இத்தனை மதவெறியர்களாகத்தான் காங்கிரஸ் கருதி வந்திருக்கிறது. இன்றைக்கு இஸ்ரேலும் இந்தியாவும் இவ்வளவு நடப்புணர்வுடன் இருக்க முடிவதற்கு ஒரே காரணம் நரசிம்மராவினுடைய உழைப்பு.

நரசிம்மராவ் அவர்களின் பலமாக இந்தப் புத்தகம் முன் வைப்பது அவரது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளும் தன்மையும், உள்ளொடுங்கிய தன்மையும், (இண்ட்ரோவேர்ட்), தாமரை இலை தண்ணீர் போலப் பதவியை நினைத்ததுமே. அவரது அரசியல் காலகட்டத்தில் பலமுறை அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளார். ஆனால், அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதாமல், ஒதுக்கப்பட்ட காலங்களில் புத்தகம் எழுதும் மனநிலைக்குத் தன்னைக் கொண்டு செல்ல முடிந்திருக்கிறது அவரால். அவரது மகள் சொன்னதாக ஒரு வரி வருகிறது, அவர் ஸ்தித ப்ரக்ஞனாகவே வாழ்ந்தார் என. அதுவே உண்மையாக இருக்கவேண்டும். இன்று நாம் பார்க்கும் அரசியல்வாதிகள் ஒரு தேர்தலில் போட்டியிட இடம் தரப்படவில்லையெனில் எந்தக் கூச்சமும் இன்றி அடுத்த கட்சிக்கு தாவ அஞ்சுவதில்லை. ஆனால் நரசிம்மராவ் காங்கிரஸ்காரராகவே அரசியலை ஆரம்பித்து காங்கிரஸ்காரராகவே வாழ்ந்து மறைந்தவர்.

குடும்பத்துடன் அவருக்கான ஒட்டுதல் குறைவாகவே இருந்திருக்கிறது. அவரது மூத்த மகனால் பகிரங்கமாகவே விமர்சிக்கப்பட்டிருக்கிறார். அரசியலில் குடும்பத்தைச் சேர்க்காமல் இருந்திருக்கிறார் என்பதும் அவரது புத்திசாலித்தனத்துக்கு இன்னொரு சான்றாகக் கொள்ளலாம்.

அரசியலில் அவரைத் துரத்திய ஊழல் குற்றச்சாட்டுகளில் முக்கியமானது, எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு. ஆனால், அன்றைய அரசியல் சூழலில் நரசிம்மராவுக்குப் பதவியில் இருப்பதைவிடத் தான் முன்னெடுத்த சீர்திருத்தங்களையும், நாட்டிற்கான வளர்ச்சித் திட்டங்களையும் தொய்வின்றி நடத்தஅதிகாரத்தில் இருக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தே இப்படிப்பட்ட விஷயங்களுக்குத் தலை சாய்த்திருப்பார் என்றே நான் நம்ப விழைகிறேன். ஆனாலும் இந்திய அரசியல் வரலாற்றில் இது மோசமான ஒரு விஷயம் என்பதையும், அதில் நரசிம்ம ராவுக்குப் பங்குண்டு என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன்.

சோனியாவை அரசியலில் ஒதுக்கி வைத்த சாமர்த்தியசாலி என்றெல்லாம் மிகையாகப் புகழப்படுவதும் நரசிம்மராவுக்கு வழக்கமாக நடக்கும் ஆதாரமற்ற புகழுரை. ஆனால், உண்மையில் தலைமை சொன்னால் பதவியைத் தூக்கியெறிய அவர் தயாராகவே இருந்தார். காங்கிரசில் உட்கட்சி ஜனநாயகத்தை மீண்டும் கொண்டு வந்ததில் நரசிம்மராவுக்குப் பங்கிருப்பினும், அது அவரது அரசியல் எதிரிகளுக்குப் பலனளித்ததும், அந்த ஜனநாயகத்தை ஒதுக்கி வைக்கும் சின்ன புத்தியாளராகவும் நரசிம்மராவ் இருந்திருக்கிறார் என்பதையும் புத்தகம் குறிப்பிடத் தவறவில்லை.

நரசிம்மராவின் ஏற்ற இறக்கங்களையும், குடும்ப வாழ்க்கையையும், முடிந்தவரை உண்மைக்கு மிக அருகில் நின்று சொல்ல முயன்றிருக்கிறது இந்தப் புத்தகம். அதற்காக ஏகப்படட உழைப்பைக் கொட்டியிருக்கிறார் புத்தக ஆசிரியர் வினய் சீதாபதி.

ஜெ.ராம்கியின் மொழிமாற்றம் மிக அருமை. தமிழில் நேரடியாக எழுதப்பட்ட புத்தகத்திற்கு சற்றும் குறைவில்லாத மொழியாக்கம். மொழியாக்கத்தில் பிடிவாதம் ஏதும் வைத்துக்கொள்ளாமல் விஷயத்தைச் சிதைக்காமல், வாசிப்பவனுக்கு எளிதாய் இருக்க மெனக்கெட்டிருக்கிறார். அதுவே இந்த மொழிமாற்றப் புத்தகத்தின் பலமாய் நான் கருதுகிறேன். வறண்ட நடையின்றி எழுதப்பட்டிருந்தால் ஒழிய இத்தனை பக்கங்களைத் தாண்டுதல் என்பது எனக்கு இயலாத காரியம். இலகுவாய் வாசிக்கும்படிக்குச் சிறப்பாய் மொழிபெயர்ப்பைச் செய்திருக்கிறார் ராம்கி.

நரசிம்ம ராவ் – இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி.
மூலம் – வினய் சீதாபதி
தமிழில் – ஜெ. ராம்கி
கிழக்கு பதிப்பகம்.
விலை – 400 ரூபாய்

Posted on Leave a comment

சிலைத் திருட்டு – தனியொருவனின் போராட்டம் | அரவிந்தன் நீலகண்டன்

ஒரு கோவிலுக்குப் போகிறீர்கள். சோழர் காலக் கோவில் என்கிறார்கள். ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிற கோவில். அங்கே சுற்றி வரும்போது புடைப்புச் சிற்பமாக அர்த்தநாரீஸ்வரர் இருக்கிறார். பின்னால் நந்தி. அழகாக இருக்கிறது என வியக்கிறீர்கள். ஆனால் ஒரு பத்து வருடம் ஆன பிறகு தெரிகிறது – அந்த அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் சோழர் காலச் சிற்பம் இல்லை; பத்து வருடங்களுக்குள் திருட்டுத்தனமாக செய்து அங்கே வைத்திருக்கிறார்கள்; அங்கே இருந்த அர்த்தநாரீஸ்வரர் வெளிநாட்டு அருங்காட்சியகம் ஒன்றில் இருக்கிறார் என்று. விருத்தாசலம் கோவில் அர்த்தநாரீஸ்வரர் சிற்பத்தின் கதை இது.

2002ல் இந்து அறநிலையத் துறை அதிகாரிகளால் அர்த்தநாரீஸ்வரருடன் சேர்த்து ஏழு சிற்பங்கள் ‘பழுதடைந்துள்ள’ காரணங்களால் அகற்றப்படுகின்றன. அவை கோவிலுக்குள் ‘பாதுகாப்பாக’ வைக்கப்பட்டு அவற்றுக்குப் பதிலாக அவற்றைப் போன்ற மூன்றாம் தரச் சிற்பங்கள் செய்யப்பட்டுக் கோவிலில் வைக்கப்படுகின்றன. 2004ல் உண்மையான பழமையான அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தால் மிகப்பெரிய தொகைக்கு ($300,000) வாங்கப்படுகிறது. பிரத்தியங்கா தேவி என இன்று அறியப்படும் சரபனிமூர்த்தி மற்றொரு அருங்காட்சியகத்தால் ஜூன் 1 2005ல் மற்றொரு கொழுத்த தொகைக்கு ($328,244) வாங்கப்படுகிறது. இந்து அறநிலையத்துறையில் தொடங்கி காவல்துறை வரை எவருக்கும் இந்த உண்மையான சிற்பங்கள் காணாமல் போனது குறித்து எதுவும் ‘தெரியாது.’ ஆனால் ஆஸ்திரேலிய அருங்காட்சியகங்களிடம் இந்தச் சிற்பங்களையெல்லாம் 1971லேயே வாங்கிவிட்டதாக ‘சிறப்பான’ ஆவணத் தரவுகள் இருக்கின்றன.

இந்நிலையில் சிங்கப்பூரில் ஒரு மனிதர் இரட்டை வாழ்க்கை வாழ்கிறார். பகல் நேரங்களில் அவர் கப்பல் கம்பெனி ஒன்றில் மேலாண்மை அதிகாரி. இரவு நேரங்களில் அவர் தம் இணையத் தளம் மூலமாக பாரத நாட்டின் ஆன்மிகக்-கலை பொக்கிஷங்கள், அவற்றின் நிலை ஆகியவற்றைத் துப்பறியும் சூப்பர் ஹீரோவாக மாறிவிடுவார். 2013ல் அவர் இந்த அர்த்தநாரீஸ்வரரைப் பார்த்திருக்கிறார். அதாவது உண்மையான அர்த்தநாரீஸ்வரரை. அவர் பிறந்து வளர்ந்த கிராமத்தின் அருகே உள்ள கோவில் விருத்தாசலம் கோவில்.

விருத்தாசலம் கோவிலில் உள்ள அர்த்தநாரீஸ்வரரின் தற்போதைய சிற்பம் கிடைக்குமா? தனது வலைப்பதிவில் கேட்கிறார். கிடைக்கிறது. பார்த்ததும் நம் துப்பறிவாளரின் கண்களில் தெளிவாக அது போலி என்பது தெரிந்து விடுகிறது. மூலச் சிற்பம் கோவிலில் குறைந்தபட்சம் 1973-74 ஆண்டுகளிலாவது இருந்தது என்பதற்கு ஆதாரம் வேண்டும். ஏன்? 1972ல்தான் இந்திய அரசாங்கம் ஒரு தடையைக் கொண்டு வந்தது. நூறு ஆண்டுகளுக்குப் பழமையான எந்தச் சிற்பமும் இந்தியாவை விட்டு வெளியே கொண்டு செல்லப்பட்டால் அதனை வாங்கியவரிடமிருந்து இந்தியா அந்தச் சிற்பத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம் – எந்த ஈடுதொகையும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. எனவேதான் ஆஸ்திரேலிய அருங்காட்சியக ஆவணங்களில் வாங்கப்பட்ட ஆண்டுகள் இந்த ஆண்டுகளுக்கு முன்னதாக இருக்க வேண்டும் என்பதில் பிரத்யேகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்திடம் உள்ள ஆவணங்களின் சரிபார்ப்பு தொடங்கி அங்கிருக்கும் அர்த்தநாரீஸ்வரர் விருத்தாசலத்திலிருந்து 2004ல் அபகரிக்கப்பட்டதுதான் என்பது வரை நமது சூப்பர் ஹீரோவும் அவரது உதவியாளர்களுமாக நிரூபிக்கிறார்கள். இறுதியில் வேறு வழியே இல்லாமல் ஆஸ்திரேலிய அருங்காட்சியகம் விருத்தாசலம் அர்த்தநாரீஸ்வரரை இந்தியாவிடம் திரும்பக் கொடுக்கிறது. ரொம்ப சுருக்கமாக சுவாரசியமில்லாமல் இங்கே சொல்லப்பட்டிருக்கிற விஷயத்தை, இப்புத்தகத்தை வாசித்தால் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.

சூப்பர் ஹீரோ நூல் ஆசிரியர் விஜயகுமார். அவர் தன்னை சூப்பர் ஹீரோ என்றெல்லாம் சொல்லவில்லை. இன்னும் சொன்னால் அவர் தன்னைத் துருத்திக்கொண்டு காட்டவே இல்லை. நூலில் அவரும் வருகிறார் என்பது போலவே தன்னைச் சுருக்கிக்கொண்டிருக்கிறார். ஆனால் உண்மையான சர்வதேச ஹீரோக்களுக்கு ‘உலகநாயகனே’ என்றோ எவரும் ஊளையிட கோமாளித்தனம் செய்துகொண்டோ அல்லது ‘வந்துட்டேன் பாரு’ என்று வெத்து பஞ்ச் டயலாக் பேசி ஸ்டைல் என்கிற பெயரில் குரங்குச் சேட்டை செய்துகொண்டோ இருக்கவேண்டிய அவசியமில்லை.

விஜயகுமார் தமிழர்களின் பொக்கிஷம். விருத்தாசலம் அர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீபுரந்தன் நடராஜர் என நீளும் பட்டியலையும் அவற்றை எல்லாம் மீட்க விஜயகுமார் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளையும் படிக்க படிக்க ரத்தம் கொதிக்கிறது.

பழமையான கலைப்பொருட்களுக்கான திருட்டுச் சந்தையும் அவற்றைக் கடத்தி விற்கும் மாஃபியாக்களும் உலகமெங்கும் செயல்படுகின்றனதான். ஆனால் இந்தியாவில் மட்டும்தான், அப்படிப்பட்ட பழமையான கலைப் பொருட்கள் அகழ்வாராய்ச்சிக் களங்களிலிருந்தோ அல்லது அருங்காட்சியகங்களிலிருந்தோ மட்டும் திருடப்படுவதில்லை. இங்கே, தமிழ்நாட்டில் மட்டும், இன்னும் உயிர்த்துடிப்புடன் இருக்கும் பல்லாயிரக்கணக்கான கோவில்கள் உண்டு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் வரலாறுகளில் மிகக்கொடுமையான படையெடுப்புகளையும் சூறையாடல்களையும் தாண்டி இன்னும் விளக்கேற்றப்படும் கோவில்கள். அங்கே உயிர்த் தன்மையுடன் திகழும் நம் தெய்வத் திருவிக்கிரகங்கள் – அவை திருடப்படுகின்றன. அவை வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டு அங்கே உள்ள மிகப்பெரிய உயர்தர ஹோட்டல்களின் மதுபான விடுதிகளில் மாமிச உணவகங்களில் கலைப்பொருட்களாக அல்லது மிக மிஞ்சிய செல்வந்தர்களின் வீட்டு வரவேற்பறைகளில் அலங்காரப் பொருட்களாக நிற்க வைக்கப்படுகின்றன. மேற்கத்திய அருங்காட்சியகங்களில் எவ்விதப் பூஜையும் மரியாதையும் இல்லாமல் கலைப்பொருட்களாகக் காட்சிப்படுத்தப்படுகின்றன. இந்த அவலங்களைச் செய்ய இந்தியாவில் எல்லாத் தளங்களிலும் ஆட்கள் இருக்கிறாரகள்.

சட்டம், அரசு அமைப்புகள், அரசு அதிகாரிகள், உள்ளூர்த் திருடர்கள், இடைத்தரகர்கள், காவல்துறையில் சில திருட்டு ஆடுகள். அரசியல்வாதிகள், வர்த்தக புரோக்கர்கள் என அனைத்துத் தளங்களிலும் கோவில்களின் திருவிக்கிரங்களைக் கொள்ளையடிக்க என்றே ஒரு செயல்முறை அமைப்பாக அனைத்தும் இயங்குகின்றன என்பதைத் தோலுரித்துக் காட்டுகிறார் விஜயகுமார்.

சட்டம் என்னய்யா செய்தது என்கிறீர்களா? விஜயகுமார் விளக்குகிறார். இந்தியத் தண்டனைகள் சட்டத்தில் 1993ல் 380ம் பிரிவில் தமிழ்நாட்டு சட்டமன்றம் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருகிறது. ஏதாவது வீட்டுக்குள் புகுந்து திருடினால் ஏழு வருடம் வரை கடுங்காவல் தண்டனை, அதற்கு மேல் அபராதமும் வரலாம். ஆனால் கோவிலுக்குள் புகுந்து திருடினால் இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகள் வரை தண்டனை – அபராதம் குறைந்தது 2,000 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கலாம். ஆனால் நீதியரசர் கருதினால் இந்த இரண்டு ஆண்டுகளையும் கூடக் குறைத்துக் கொள்ளலாம்.

இன்றைக்கும் இந்தச் சட்டத்திருத்தம் அப்படியே இருக்கிறது என்கிறார். அதாவது கோவிலில் கலைச்செல்வங்களைத் திருடுகிறவர்களை (இவர்கள் சர்வதேச சிலைத் திருட்டு மாஃபியா வலையில் இறுதிக் கண்ணி) காவல்துறை பிடித்தால் கூட அவர்களுக்குக் கிடைக்கும் ‘ஊதியத்துடன்’ ஒப்பிடுகையில் அவர்களின் தண்டனை என்பது நேருவின் ஜெயில் வாசம் போல ஒரு சுற்றுலா விடுமுறையாகத்தான் இருக்கும். ஆனால் இவர்களுக்குக் கிடைக்கும் ஊதியமோ பல்லாயிரங்களிலிருந்து சில லட்சங்கள். ஆனால் இந்த ஊதியம் கூட இந்தியாவிலிருந்து செயல்படும் இடைத்தரகனின் ஊதியத்துடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவு. அது பல லட்சங்களிலிருந்து சில கோடிகள் வரை. அதுவும் இறுதியில் நியூயார்க்கில் இருந்து கொண்டு சிலைகளை சர்வதேச சந்தையில் விற்கிறானே அவனுக்குக் கிடைக்கும் பணத்துடன் ஒப்பிடுகையில் ஒன்றுமே இல்லை – பல்லாயிரம் தொடங்கி கணிசமான மில்லியன் டாலர்கள்.

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு என்கிற பெயரில் தமிழ்நாட்டில் செயல்படும் காவல்துறைப் பிரிவு எவ்வித வசதிகளும் இல்லாத, வேண்டுமென்றே பலவீனமாக்கப்பட்ட பிரிவு என்பதையும் விஜயகுமார் காட்டுகிறார்.

சுபாஷ் கபூர் என்கிற ‘பிக் பாஸ்’ அவனுடைய முன்னாள் காதலி, இந்திய இடைத்தரகர்களான சஞ்சீவ் அசோகன், தீனதயாளன் (திருட்டுத் தரகனுக்குக் கிடைத்த பெயரைப் பாருங்கள்!), சிலைத் திருட்டுப் பிரிவில் இருந்த காதிர் பாட்சா, இது போக கலையுலக மேதாவிகள், மேற்கத்தியச் சந்தையின் ‘பெரிய மனிதர்கள்’ – அப்பட்டமான திருட்டுத்தனம் செய்தாலும் ஆவணங்களைச் சரியாக வைத்துக் கொள்ளும் நிபுணர்கள் என ஒரு பெரிய வலைப்பின்னலை தோலுரித்துக் காட்டுகிறார் ஆசிரியர்.

புத்தகம் ஒரு சரித்திர காட்சியின் விவரிப்புடன் தொடங்குகிறது. எப்படி தெய்வ விக்கிரங்களை விஸ்வகர்ம குலத்தினரும், அர்ச்சகர்களும், ஊர் மக்களும் இணைந்து படையெடுப்புகளிலிருந்து பாதுகாத்து வைத்தனர்; எப்படிச் சித்திரவதைகளையும் மீறித் தங்கள் உயிரையும் உடலையும் துறந்து நம் தெய்வங்களை நம் முன்னோர்கள் பாதுகாத்தனர் என்பதைத் தத்ரூபமாக விவரிக்கிறார். ‘மீண்டும் கோவில் வந்தேறத் திருவுளம் கொள்ளும் வரை இங்கே பாதுகாப்பாக இருங்கள்’ என இறைவனிடம் வேண்டி அவ்விக்கிரகங்களை அவர்கள் பத்திரமாக வைக்கிறார்கள். அதே பிரார்த்தனையுடன் புத்தகத்தை முடிக்கிறார் விஜயகுமார். கண்களில் நீர் திரையிட கோபமும் இயலாமையும் ஒரு புறம்; விஜயகுமார், செல்வராக், ‘இண்டி’ ஆகியோரிடம் நன்றி மறுபுறம் என இரு அதி தீவிர உணர்ச்சி நிலைகளுடன் புத்தகம் ஒரு தொடர்கதையாக முடிகிறது.

கோவிலின் மீதான மதிப்பும் மரியாதையும் அதைவிட முக்கியமாக அங்கிருக்கும் தெய்வத் திருவுருவங்களிடம் அன்பும் கொண்ட ஒரு அமைப்பை நம் முன்னோர்கள் உருவாக்கித் தந்திருந்தார்கள். சமூகத் தேக்கநிலையால் அதில் புகுந்துவிட்ட சில தீமைகளுக்காக அந்த அமைப்பையே நாசமாக்கிவிட்டு அதைவிடக் கேடுகெட்ட ஒரு அமைப்பை உருவாக்கி நம் கோவில்களை நாமே அழித்துக் கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு இந்து அறநிலையத்துறை அதிகாரியையும், ஒவ்வொரு கோவில் தொடர்பான ஊழியரையும், கோவில் திருவிக்கிரங்களையும் அதன் புனிதத்தையும் தம் உயிரினும் மேலாகப் பாதுகாப்பதாக அந்தந்த ஊர் மக்கள் முன்னிலையில் தம் குழந்தைகள் மீதும் தம் குடும்பத்தின் மீதும் சத்தியம் செய்ய வைக்கும் ஒரு சடங்கை உருவாக்க வேண்டும்.

இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது என் நினைவில் உடனே வந்தது மானம்பாடி கோவில்தான். அங்குள்ள கோவில் விக்கிரகங்கள், சிற்பங்கள் உடைக்கப்பட்டு எவ்விதக் காவலும் இல்லாமல் வைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு என்னென்ன போலிகள் உருவாகப் போகின்றனவோ, அவை எந்த அமெரிக்க ஹோட்டல் லாபியிலோ அல்லது எந்த ஆஸ்திரேலிய அருங்காட்சியகக் கூடத்தில் நிற்கப் போகின்றனவோ தெரியவில்லை. இந்தச் சிலைகள் விற்ற காசில் முதுபெரும் கிழத் தாரகைகளின் திரைப்படங்கள் எடுக்கப்பட்டு அதில் இந்தியாவும் இந்து மதக் கடவுளரும் பழிக்கப்பட அதற்கும் விசிலடித்து இந்துத்துவர்களே முதல் காட்சி பார்த்துப் புளகாங்கிதப்பட்டு ஃபேஸ்புக் போஸ்ட் போடுவதும் கூட நடக்கலாம்.

ஆனால் மேலும் மேலும் விஜயகுமார்கள் உருவாக வேண்டும். அப்படி உருவாகி இந்தப் புத்தகங்கள் தொடர்கதைகளாக இல்லாமல் இறந்த கால ஆவணங்களாக மாற வேண்டும். வெளிநாடு சென்றுவிட்ட நம் தெய்வத் திருவுருவங்கள் அனைத்தும் மீண்டும் நம் கோவில்களில் வேத மந்திரங்களும் இசைத்தமிழ்ப் பாசுரங்களும் முழங்க பூஜையேற்க வேண்டும். அதைச் செய்வதற்கான முதல் அடியை எடுத்து வைத்திருக்கும் விஜய் குமாருக்கு வணக்கங்கள்.

Posted on Leave a comment

சிலைத் திருட்டு – கடந்த காலத்தைக் கடத்துபவர்கள் | சுஜாதா தேசிகன்

To every man upon this earth
Death cometh soon or late
And how can man die better
Than facing fearful odds,
For the ashes of his fathers,
And the temples of his gods?

– Thomas Babington Macaulay, Lays of Ancient Rome

உலகில் எல்லோருக்கும் ஒரு நாள் மரணம் நிச்சயம்
நம் முன்னோர்களையும், தெய்வத்தின் கோயில்களையும்
காக்கும்போது ஏற்படும் மரணத்துக்கு
அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.

அந்தக் கவிஞன் பாடிய கோயில் தெய்வங்கள் இன்று பல நாடுகளில் சிதறி, பல கோயில்கள் காலியாக இருப்பது வருத்தமான விஷயம் என்பதைவிட வெட்கக்கேடான விஷயம்.

சமீபத்தில் நண்பர் எஸ்.விஜயகுமார் எழுதிய ‘The Idol Theif’ என்ற புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். புத்தகத்தை ஆர்டர் செய்தபின் ஒரு வாரத்தில் வந்தது. அந்த ஒரு வாரத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்தித்தாளில் சிலைக் கடத்தல், திருட்டு என்று செய்திகள் வந்த வண்ணமாக இருந்தன.

*
ஸ்ரீவைஷ்ணவத்தில் இரண்டு படையெடுப்புகள் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. ஒன்று 1311, இன்னொன்று 1323. இரண்டாம் படையெடுப்பில் ஸ்ரீரங்கத்தின் உற்சவ மூர்த்தியான நம்பெருமாள் காப்பாற்றப்பட்டு, 48 வருடம் பல இடங்களில் வாசம் செய்து திரும்பி வந்தார். காப்பாற்றப்பட்டதற்கு ஸ்ரீவைஷ்ணவர்கள் கொடுத்த விலை பிள்ளை ஸ்ரீலோகாச்சாரியார் என்ற ஆசாரியனை இழந்தது; ஸ்ரீவேதாந்த தேசிகன் பிணக் குவியல்களின் நடுவில் சுதர்சன சூரியின் சுதபிரகாசிகா என்ற ஓலைச் சுவடியையும் அவருடைய இரண்டு சின்ன பிள்ளைகளையும் பிணத்தோடு பிணமாகக் காப்பாற்றினார். நம்பெருமாள் கிடைக்கவில்லை என்று தெரிந்து முகமதிய படைகள் 12,000 ஸ்ரீவைஷ்ணவர்களைக் கொன்று குவித்தார்கள். இது ‘பன்ணீராயிரவர் குடிதிருத்திய பன்றி யாழ்வான் மேட்டுக் கலகம்’ என்று கோயிலொழுகில் குறிப்பிடப்பட்டுள்ளது.

*
எங்கள் வீட்டில் ஆழ்வார்கள் மூர்த்தி செய்ய விருப்பப்பட்டு பல இடங்களில் அலைந்து கடைசியாக சிற்பி வித்யாசங்கர் ஸ்தபதியைக் கண்டுபிடித்தேன். தமிழ்நாட்டின் தலைசிறந்த சிற்ப மரபில் வந்தவர். இவரைத் தேடிக்கொண்டு கும்பகோணம் சென்றபோது அவர் வீட்டுக் கதவில் இவருடைய சிற்ப மரபின் பரம்பரை ‘குடும்ப மரம்’ அச்சடித்து ஒட்டப்பட்டிருந்தது. அதை உன்னிப்பாகக் கவனித்தபோது இவர் மூதாதையர்கள் சோழ காலத்தவர்கள் என்று புரிந்தது. ராஜராஜசோழன் பெரியகோயில் செய்த சிற்பிகளுக்கும் இவர் பாரம்பரியத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அவரிடம் சிற்பம் செய்யவேண்டும் என்றபோது தயங்கினார். “நியமத்துடன் பாரம்பரிய முறைப்படி சிற்பம் செய்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்”. 3D பிரிண்டிங் காலத்தில் இந்த மாதிரி செய்ய இன்று யாரும் இல்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.

சிற்பங்கள் எப்படிச் செய்கிறார்கள் என்று பார்க்கலாம். முதலில் மெழுகில் ஒரு மாடல் செய்துவிடுவார்கள். அதைக் காவிரியில் கிடைக்கும் களி மண்ணால் மூடி உள்ளே இருக்கும் மெழுகை உருக்கி பிறகு அதில் உலோகத்தைக் காய்த்து ஊற்றி வடிவமைப்பார்கள். நான்கே வரியில் இதைச் சொல்லிவிட்டாலும், இதைச் செய்ய பல காலம் ஆகும். ‘Lost wax techinque’ என்று கூகிளில் தேடிப் பார்த்தால் இதன் கஷ்டம் தெரியும்.

“ஒவ்வொரு சிற்பத்தை வடிக்கும் முன்பு, நாள், நட்சத்திரம் பார்த்து பசுவிற்குப் பூஜை… உலோகத்தை ஊற்றும் போது அது ஒழுங்கான சிற்பமாக வர வேண்டும்… கிட்டதட்ட பிரசவம் மாதிரி” என்றார் அந்த எண்பது வயது சிற்பி.

ஸ்ரீவைஷ்ணவத்தில் பெருமாளின் விக்கிரகம் அளவில் பெரியதா, சிறியதா, தங்கமா, செப்பா என்று நினைத்தால் அது என் தாய் தந்தையரை ஆராய்வது போன்ற செயலாகும். ஆனால் இன்று நாளிதழ்களில் ஐம்பொன் சிலை கடத்தல் என்று செய்தி பெட்ரோல் விலை ஏற்றம் என்பது போல சாதாரண விஷயமாகிவிட்டது. நம் பாரம்பரியத்தை எப்படிக் காத்துக்கொண்டு இருக்கிறோம் என்பதற்கான அத்தாட்சி இது.

கோயில்களும், நினைவுச்சின்னங்களும்தான் நம் பாரத நாட்டின் பொக்கிஷம். நமது செழிப்பான கலாசாரத்தின் எடுத்துக்காட்டுகள்.

நம் வரலாறு எழுதப்பட்டது, திருத்தப்பட்டது; ஆனால் நம் பாரம்பரியம் மாறவேயில்லை. பல படையெடுப்புகள் நிகழ்ந்தது. பலவற்றை இழந்தார்கள். மதம் மாற்ற முயன்றார்கள். ஆனால் மக்கள் ஹிந்து மத நம்பிக்கையை மட்டும் என்றுமே இழக்கவில்லை.

சில வருடங்களுக்கு என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவரது ஊரில் அவர் தந்தை அர்ச்சகராக இருக்கும் கோயிலில் சிலைக் கடத்தல் எப்படி நடந்தது என்று விவரித்தார். சிலைக் கடத்தல் எப்படி நடக்கிறது என்று மேலும் தெரிந்துகொள்ள ஏதாவது புத்தகம் கிடைக்கிறதா என்று தேடியபோது ‘The Plunder of Art’ என்ற புத்தகத்தைப் படித்தேன். அதில் தமிழ்நாட்டுச் சிலைகள் மட்டுமல்ல, நம் நாட்டுப் பொக்கிஷங்கள் பல எப்படித் திருடப்படுகிறது என்று படித்தபோது அதிர்ச்சியாக இருந்தது.

கலைப் பொக்கிஷங்கள் என்றால் உடனே நாம் சிலைகளை மட்டுமே யோசிக்கிறோம் – சிலைகள் தவிர, நகை, ஓவியத்திரை (tapesteries), ஓவியங்கள், மரச்சாமான்கள், சிறு பொருட்கள் என்று பல பொருட்களும் அதில் அடங்கும்.

ஸ்ரீரங்கத்தையும் மஹாபலிபுரத்தையும் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி இந்த அற்புதங்களை முதல் முதலில் தீடீரென்று நேரில் பார்க்கும்போது அவருக்கு ஒரு ‘cultural shock’ ஏற்படுவது இயற்கையே. ஏனென்றால் இந்த மாதிரி அவர்கள் நாட்டில் கனவில்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். இந்தப் பொக்கிஷங்களுக்குப் பக்கத்தில் நாம் காலி ஜூஸ் பாட்டிலைப் போடுவது அவருக்கு இன்னும் பெரிய அதிர்ச்சியாக இருக்கும்.

1970 – 1988 வரை நம் நாட்டில் 3,500 கலைப் பொருட்கள் களவாடப்பட்டிருக்கின்றன. கணக்கில் வந்தவை இவை. வராதவை இன்னும் நிறைய. இந்தியா முழுவதும் பல இடங்களுக்குச் சென்றபோது நமது கலைப் பொக்கிஷங்கள் பல தெருவில் கிடப்பதைப் பார்த்திருக்கிறேன்.

உதாரணமாக, அஹோபிலத்தில், ராமேஷ்வரம் திருப்புள்ளாணியில், காஞ்சிபுரத்தில் என்று எல்லா இடங்களிலும் சாதாரணமாகச் சாலையில் கிடக்கிறது. இந்த ஊருக்குச் சென்று பல கலைப் பொருட்களை ஒரு கார் டிக்கியில் போட்டுக்கொண்டு வந்துவிடலாம்.

ஸ்ரீரங்கம் உட்பட பல கோயில்களில் கல்வெட்டுகளை உடைத்து அதன் வழியே வயரிங் செய்வது, சுவரின் மீது போஸ்டர் ஒட்டுவது என்று நம் பாரம்பரியத்தைச் சிதைத்துக்கொண்டிருக்கிறோம்.

ஒரு முறை சுஜாதாவின் தம்பியிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, மத்தியப் பிரதேசத்தில் சுற்றுலா சென்றபோது அங்கே சுற்றுலாப் பயணிகளிடம் அருகில் இருக்கும் கோயில்களில் உள்ள கலைப் பொருட்களைக் கூவிக் கூவி விற்றுக்கொண்டு இருந்தார்கள் என்று சொன்னார்.

கலைப் பொருட்களின் திருட்டு 1936ல் ஆரம்பித்தது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். டாக்டர் டர்டீஸ் (Dr. Durdaise) என்ற பிரஞ்சுக்காரர் பாண்டிச்சேரியிலிருந்து பல கலைப் பொருட்களை உள்ளூர் ஆட்களை வைத்துக் கடத்தினார் என்று தெரிகிறது. 1937ல் மிஸ் பியர் குஸ்டன் (Miss Pierre Gustan) கலைப் பொருட்களை ஏற்றுமதி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஜம்மு, ஹிமாச்சல், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, ஒடிஸா, ஆந்திரா என்று இந்தியாவில் எந்த இடத்தையும் விட்டு வைக்கவில்லை. கஜுராஹோ கோயிலில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட சிற்பங்கள் பல மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இன்றும் ஏதாவது ஒரு கோயிலில் சிற்பங்கள் திருடப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

புத்தகத்தை எழுதிய விஜயகுமார் தன் வலைப்பதிவில் சிற்பங்களைப் படத்துடன் எழுத ஆரம்பித்தபோது அவருக்குச் சில ஆச்சரியங்கள் ஏற்பட்டன. அவர் எழுதிய சிற்பம் வெளிநாட்டு மியூசியத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவை எப்படி திருடப்படுகின்றன, எந்த வழியாகப் போகிறது, யாரிடம் போகிறது, நடுவில் ஏஜண்ட் யார் என்று நிஜ சம்பவங்களைப் படிக்கும்போது, உண்மை கற்பனையைவிட விநோதமானதாக இருக்கிறது.

மிக நேர்த்தியான நடராஜர், சிவகாமி சிலைகள், பல நூறு கிலோ எடையிலானவை. இதைக் கடத்த சாமர்த்தியம் தேவை இல்லை; நம் நாட்டில் கலாசாரம் தெரியாதவர்கள் இருக்கும்வரை இது தொடந்துகொண்டேதான் இருக்கும்.

புத்தகத்தைப் படிக்கும்போது இது சுபாஷ் கபூர் ‘திருட்டு’ வாழ்க்கை வரலாறு என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. சுபாஷ் கபூர் என்ற ஒரு மனிதர் மாதிரி இன்னும் எவ்வளவு கபூர்கள் இருக்கிறார்களோ என்ற ஐயமும் ஏற்படுகிறது. இந்த கலைப் பொருள் சேகரிப்பு என்னும் ஒரு விதமான பணக்காரப் பொழுதுபோக்கு ஒரு எல்லைக்கு மேல் செல்லும்போது அங்கே குற்றம் நடைபெறுகிறது.

சுபாஷ் கபூர் விற்ற கலைப் பொக்கிஷங்களை எல்லா அருங்காட்சியகத்திலும் பார்க்கலாம். 2011ல் அவர் ஜெர்மனி வந்தபோது அவரை இண்டர்போல் தமிழ்நாட்டில் நடந்த இரண்டு சிலைத் திருட்டுக்குக் கைது செய்தது. அமெரிக்கா அவருடைய கிடங்கைச் சோதனை செய்தபோது கிட்டத்தட்ட நூறு மில்லியன் டாலர் மதிப்பு மிக்க பல கலைப் பொருட்கள் கிடைத்தன. கபூர் இந்தத் தொழிலில் கடந்த நாற்பது வருடங்களாக இருக்கிறார். கூலிக்கு வேலை செய்யும் சாதாரணத் திருடர்கள் முதல் சில காவல்துறை அதிகாரிகள், அருங்காட்சியகத்தில் வேலை செய்பவர்கள், கல்வியாளர்கள், அழகிகள் என்று இந்தக் கொள்ளைக்குப் பலர் உடந்தையாக இருந்திருக்கிறார்கள். அரசியல்வாதிகள்?

இவ்வளவு சிலைக் கடத்தலைப் பார்க்கும்போது அரசியல் தொடர்பு இல்லாமல் இதை எல்லாம் செய்திருக்கவே முடியாது. புத்தகத்தில் இதுபற்றி இல்லை.

மோடி அரசு வந்த பின்தான் இந்தியாவிற்குச் சிலைகள் திரும்ப வரும் மகிழ்ச்சியான செய்தியே வருகிறது.

புத்தகத்தில் விருத்தாசலம் அர்த்தநாரீஸ்வரர் மற்றும் ஸ்ரீபுரந்தான் நடராஜர் சிலையும் மீண்டும் கிடைக்கப்பெற்றோம் என்று படிக்கும்போதே நம் மனதுக்கு ஒரு வித நிம்மதி ஏற்படுகிறது. புத்தகத்தில் சுத்தமல்லி சிலைகளின் மதிப்பு ரூ34,00,00,000 என்று போடப்பட்டிருக்கிறது. என்னுடைய கருத்து இந்தச் சிலைகளுக்கு மதிப்பே கிடையாது; விலைமதிப்பற்றது!

பண்டையப் பொக்கிஷங்களும், நினைவுச்சின்னங்களும்தான் நம் பாரத நாட்டின் ஆன்மா. நமது வரலாற்றையும் கலாசாரத்தையும் அவை பிரதிபலிக்கின்றன. இவற்றை 3D பிரிண்டர் மூலம் கூட மீண்டும் கொண்டு வர முடியாது.

விஜயகுமார் செய்யும் செயலை அரசு செய்ய வேண்டும். பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம். எல்லா இடங்களிலும் உள்ள பொக்கிஷங்களை ஆவணப்படுத்த வேண்டும். இதைச் செய்தாலே பாதி வேலை முடிந்தது. இன்றைய டிஜிட்டல் உலகில் இதைச் செய்வது மிகச் சுலபம். அடுத்து சட்டத்தை இன்னும் கடுமையாக்க வேண்டும்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 49வது ஷரத் இப்படி சொல்லுகிறது

Article 49 [Protection of monuments and places and objects of national importance]

It shall be the obligation of the State to protect every monument or place or object of artistic or historic interest, declared by or under law made by Parliament to be of national importance, from spoliation, disfigurement, destruction, removal, disposal or export, as the case may be.

புத்தகத்தில் சிலைக் கடத்தலைவிட என்னை அதிர்ச்சியாக்கியது தமிழ்நாடு அரசு 1993ல் இந்திய தண்டனைச் சட்டம் 380 பிரிவில் கொண்டு வந்த திருத்தம்தான்.

380 பிரிவு சட்டம் இப்படி இருக்கிறது:

“Whoever commits theft in any building, tent or vessel, which building, tent or vessel is used as a human dwelling, or used for the custody of property, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.

1993ல் தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் பின் வரும் திருத்தத்தைக் கொண்டு வந்தார்கள்:

Whoever commits theft in respect of any idol or icon in any building used as a place of worship shall be punished with rigorous imprisonment for a term which shall not be less than two years but which may extend to three years and with fine which shall not be less than two thousand rupees.

அதாவது வீட்டில் திருடினால் ஏழு வருடம் கடுங்காவல் தண்டனை. அதே கோயிலில் திருடினால் இரண்டே வருடம்தான் தண்டனை. கூட இரண்டாயிரம் ரூபாய் அபராதம். இந்தத் திருத்தம் இன்றும் இருக்கிறது. அவர்களைக் குறை சொல்ல முடியாது, நாம் ஓட்டுப் போட்டு வந்தவர்கள்தானே. அதனால் நமக்கும் ஒரு விதத்தில் இந்தக் குற்றத்தில் பங்கு உண்டு.

சிலைக் கடத்தலுக்குத் தனிப் படை என்று செலவு செய்வதைவிட இந்த மாதிரி திருத்தங்களைக் கொண்டு வராமல் இருப்பதே மேல்.

நண்பர் விஜயகுமார் முயற்சியால் 2000 – 2012 வரை 26 சிலைகளை இந்தியா திரும்ப பெற்றிருக்கிறது. இதற்காக நாம் அவருக்கு கடமைப் பட்டிருக்கிறோம்.

புத்தகத்தின் கடைசியில் சொல்லும் விஷயம் மிக முக்கியமானது:

“சில வருடங்கள் முன் புகழ்பெற்ற ஏல நிறுவனம் ஒன்று என் ஆராய்ச்சிக்கு ஸ்பான்சர் செய்வதாகச் சொன்னார்கள் அதைத் தவிர அவர்களுடைய அருமையான நூலகத்தில் எனக்கு இலவச அனுமதி அளிப்பதாகவும் சொன்னார்கள். அவர்களிடம் இருக்கும் பழங்காலத்துக் கலைப்பொருட்களை நான் ஆராய்ந்து கொடுக்க வேண்டும்.

நான் இலவசமாகச் செய்து தருகிறேன் ஆனால் ஒரே ஒரு நிபந்தனையை அவர்களிடம் முன் வைத்தேன் அது, ‘பொருட்கள் எங்கிருந்து தருவித்தார்கள் என்று சொல்ல வேண்டும். சந்தேகப்படும்படி ஏதாவது பொருட்கள் இருந்தால் ஏழு நாட்களுக்குள் அந்தக் கலைப் பொருளை சப்ளை செய்தவரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்’.

அதற்குப் பிறகு அவர்கள் என்னிடம் பேசவே இல்லை. அவர்கள் வக்கீலுக்கு என் மறுப்பைத் தெரிவித்து நன்றிக் கடிதம் எழுதினேன். அதில் கடைசியில் ‘Not every Indian is for sale!’ என்று முடித்திருந்தேன்.”

அடுத்த முறை பணக்கார ஹோட்டலிலோ அல்லது சாலை ஓரத்திலோ நம் கலைப் பொக்கிஷங்களைப் பார்த்தால் உங்களால் ஆன உதவியைச் செய்யுங்கள். மீண்டும் கட்டுரையின் ஆரம்பத்தில் உள்ள வரிகளை படித்துப் பாருங்கள்.

The Idol Thief, பக்கங்கள் 248, பதிப்பகம்: Juggernaut.