Posted on 2 Comments

பரமார்த்த குருவும் பஞ்சதசீயும் | அரவிந்தன் நீலகண்டன்


பரமார்த்த குருவும் அவருடைய சீடர்களும் ஆற்றைக் கடந்தார்கள். பிறகு அவர்களில் எவரையாவது ஆறு விழுங்கி விட்டதா இல்லையா எனத் தெரிந்துகொள்ள அவர்கள் தங்களைத் தாங்களே எண்ணிக்கொண்டார்கள். அப்படி எண்ணும்போது எண்ணுகிறவர் அவரை விட்டுவிட்டு எண்ணியதால் ஒரு ஆள் குறைந்துகொண்டே இருந்தார். அவர்கள் எல்லோரும் ஆறு ஒரு ஆளை விழுங்கிவிட்டதே என்று அழுது புலம்பினார்கள். அப்போது அந்த வழியாக வந்த வழிப்போக்கன் விஷயத்தைக் கேட்டு, ‘எனக்கு யட்சிணி வித்தை தெரியும். செத்துப் போனவனைக் கொண்டு வருகிறேன். ஆனால் அதற்கு நான் மந்திரப் பிரம்பால் உங்கள் ஒவ்வொருவரையும் அடிப்பேன். அப்போது நீங்கள் உங்கள் பெயரைச் சொல்லி ஒன்று இரண்டு என்று சப்தமாக எண்ணிக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிக் காசு வாங்கிவிட்டு அவர்கள் ஒவ்வொருவரையும் அடித்தான். அவர்கள் அனைவரும் அடி வாங்கிக்கொண்டு இருப்பதைக் கண்டு மகிழ்ந்து அந்த வழிபோக்கனை கௌரவித்தார்கள்.

இது, கான்ஸ்டண்டைன் பெஸ்கி என்கிற கத்தோலிக்க மதமாற்றி எழுதிய ‘பரமார்த்த குருவும் சீடர்களும்’ கதையில் வருவது. சைவ ஆதீனங்களைக் கிண்டல் செய்வதும் அவர்களை அறிவற்ற மடையர்களாகக் காட்டுவதும் என எழுதப்பட்ட நூல். நாமும் இதை ‘சிறுவர் இலக்கியம்’ என்று பிரபலப்படுத்திக் கொள்கிறோம்.

இதை நம் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும்போது அவர்கள் மனதில் என்னென்ன பதிவுகள் ஏற்படக் கூடும் எனக் கொஞ்சம் சிந்திப்போம். நம்முடைய ஆச்சாரியர்கள், குருமார்கள் மடையர்கள். ஆறாவது மனிதனை விழுங்குவதாவது, தங்களில் ஒருவனை ஆறு விழுங்கிவிட்டது என்று எண்ணிக்கை கூடத் தெரியாமல் புலம்புகிறார்கள். அந்த வழிப்போக்கனும் இவர்களின் மடத்தனத்தை நன்றாகப் பயன்படுத்தி அவர்களை யட்சணி வித்தை என்று சொல்லி இவர்களிடம் பணம் பிடுங்கியிருக்கிறான். இவர்களும் ஏமாந்திருக்கிறார்கள். சாதாரண மக்களுக்கு இருக்கக் கூடிய மூளை கூட இந்த ‘பரமார்த்த’ குருவுக்கு இல்லை. எதுவானாலும் ஒட்டுமொத்த இந்துக்களும் முட்டாள்களாகவும் ஏமாற்றுக்காரர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இந்த எண்ணங்களை இந்த ‘நகைச்சுவை’ கதை மூலம் நாம் நம் குழந்தைகளுக்கு விதைக்கிறோம்.

பெஸ்கி இத்தாலி நாட்டுக்காரர். இத்தாலியில் இதைப் போல சங்கைக்குரிய போப்பாண்டையைக் கிண்டலடித்து ஒரு சிறுவர் இலக்கியம் எழுதியிருந்தால் அன்னாரின் கதி என்னவாயிருக்கும் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்க்விசிஷன் என்கிற புனித விசாரணையில் அவர் ‘விசாரிக்கப்பட்டிருப்பார்’. ஆனால் இந்துக்கள் இளிச்சவாயர்கள்.

கொஞ்சம் பொறுங்கள். இந்த ’பரமார்த்த குருவும் சீடர்களும்’ கதையில் வரும் இத்தகைய நகைச்சுவை நிகழ்வுகளெல்லாம் ஏற்கெனவே பாரதமெங்கும் கதைகளாக நிலவி வந்தவைதான். இந்துப் பண்பாட்டுச் சூழலில் அவை வெறும் கதைகளாக மட்டுமல்லாமல் அதைத்தாண்டி அவற்றுக்குச் சில பயன்பாடுகள் இருந்தன. இதோ மேலே கூறிய கதையையே எடுத்துக் கொள்வோம்.

இக்கதையை பெஸ்கிக்கு நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த ஸ்ரீ பாரதி தீர்த்தரும் ஸ்ரீ வித்யாரண்யரும் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆதி சங்கர பகவத் பாதரால் நிறுவப்பட்ட ஸ்ரீ சாரதா பீட வியாக்கியான சிம்மாசனத்தில் ஜகத் குருக்களாக இருந்த இவர்கள் இருவரும் பூர்வாசிரம சகோதரர்கள். இவர்கள் இணைந்து பல நூல்களை இயற்றியிருக்கிறார்கள். இவர்கள் வாழ்ந்த காலகட்டம் மிகவும் கொந்தளிப்பான காலகட்டம். அன்னிய மத ஆக்கிரமிப்பாளர்களால் தென் பாரதம் சூறையாடப்பட்டு வந்த காலகட்டம். வித்யாரண்யர் சன்னியாசியாக தர்மத்தைக் காக்க ஹக்க புக்கர்களைக் கொண்டு விஜயநகர சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர். இன்றைக்கும் தென்னிந்தியாவில் கோவில் கோபுரங்கள் வானளாவ உயர்ந்து நிற்கின்றனவென்றால் அதற்கு காரணம் ஸ்ரீ வித்யாரண்யரின் செயல்முறை அத்வைதத்தின் விளைவுதான் அது.

இவர்கள் இருவரும் இணைந்து இயற்றிய அத்வைத சித்தாந்த நூல் பஞ்சதசீ. பதினைந்து பிரகரணங்களைக் கொண்டது என்பதால் அந்த பெயர். ஸ்ரீ வித்யாரண்யரின் நேரடி சீடர் ஸ்ரீ ராமகிருஷ்ண பண்டிதர். இவர் பஞ்சதசீ நூலுக்கு மிக அழகான விதத்தில் மிகவும் எளிமையாக அனைவருக்கும் புரியும்படியாக வடமொழி வியாக்கியான நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். இந்நூலின் ஏழாவது அத்தியாயத்துக்கு திருப்தி தீபம் என்று பெயர். 298 சுலோகங்கள் கொண்ட இந்த அத்தியாயம்தான் பஞ்சதசீயில் மிகப்பெரிய அத்தியாயம். ஆனால் இவ்வளவு பெரிய பிரகரணம் பிரஹதாரண்ய உபநிடதத்தில் உள்ள ஒரு சுலோகத்துக்கு வியாக்கியானமாக எழுதப்பட்டிருக்கிறது என்பதுதான் விசேஷம் என்கிறார்கள் பெரியவர்கள். இதில்தான் மேலே கூறப்பட்ட கதை சொல்லப்பட்டிருக்கிறது. எப்படி எனப் பார்ப்போம்.

நேரில் தெரியாதது நேரில் தெரிவது என்பதும், அறிவு அறியாமை என்பதும், இவ்விரண்டும் எப்பொழுதும் தெரிந்து கொண்டேயிருக்கிற பதார்த்தத்தில் கூட இருக்கலாம், பத்தாயிருப்பவனில் போல. (22)


பத்தாவது மனிதன், ஒன்பது என்கிற எண்ணிக்கையால் விவேகஞானமிழந்தவனாய் அப்பொழுது அந்த ஒன்பது பேர்களைப் பார்த்துக் கொண்டிருந்த போதிலும் பிராந்தியால் தன்னைப் பத்தாவது பேர்வழியாக நான் இருக்கிறேன் என்று அறிந்து கொள்வதில்லை. (23)


தானே பத்தாவதாக இருக்கையில் ‘பத்தாவது மனிதன் காணவில்லை, அவன் இல்லை’ என்று அப்பொழுது நினைத்துக் கொண்டு சொல்கிறான். அதை அக்ஞானத்தினால் ஏற்பட்ட ஆவரணம் (மறைவு) என்று கருதுகிறார்கள். (24)


பத்தாவது மனிதன் நதியில் இறந்துவிட்டான்’ என்று துக்கப்பட்டு அழுகிறான். அழுவது முதலியதை அக்ஞானத்தினால் ஏற்பட்ட ‘விக்ஷேபம்’ என்று வித்வான்கள் அறிகிறார்கள். (25)


பத்தாமவன் இறக்கவில்லை. இருக்கிறான்’ என்று ஆப்தனுடைய வார்த்தையைக் கேட்டு அப்பொழுது மறைமுகமாய்ப் பத்தாவது மனிதனை அறிகிறான். (26)’நீயேதான் பத்தாவது’ என்று எண்ணிக் காட்டப்பட்டவுடன் நேரிலேயே அறிந்து, ஸந்தோஷத்தையே அடைகிறான். அழுவதில்லை. அழுவதை நிறுத்திவிடுகிறான். (27)


1.அறியாமை, 2. ஆவரணம், 3. விக்ஷேபம், (4. பரோக்ஷ ஞானம், 5. அபரோக்ஷஞானம் என்று) இருவித ஞானங்கள், 6. திருப்தி 7. துக்க நிவிருத்தி ஆகிய இவைகளை சைதன்யமான ஆத்மா விஷயத்திலும் சேர்க்க வேண்டும். (28)


விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்தக் கதை வழக்கில் உள்ள கதை. வித்யாரண்யரும் பாரதி தீர்த்தரும் இதை எப்படிப்பட்ட உயர்ந்த தத்துவத்தை எத்தனை எளிமையாக எவரும் புரியும் வண்ணம் சொல்லப் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கவனியுங்கள். இந்தக் கதையைக் குழந்தைகளுக்குச் சொல்வதன் மூலம் அவர்களை மிக உயர்ந்த ஒரு உண்மையை அறியும் பாதையில் செலுத்தக் கூடிய ஒரு முன்னேற்பாடு இந்தப் பண்பாட்டுக்கல்விச் சூழலில் நிலவுகிறது. மீண்டும் அதே அத்யாயத்தில் வித்யாரண்யர் கூறுகிறார்:

’பத்தாவது மனிதன் இருக்கிறான்’ என்ற பரோக்ஷ ஞானம் பிராந்தியில்லாததாகக் காணப்படுகிறது. அதைப் போலவே ‘பிரஹ்மம் இருக்கிறது என்பதும் (பிராந்தியில்லாத பரோக்ஷஞானம்). (இரண்டிடத்திலும்) அறியாமையினால் ஏற்படும் மறைவு ஒரே விதம். (57)

’பத்தாவதாக நீயே இருக்கிறாய்’ என்பதினால் எப்படி (விசேக்ஷத்தை நேரில் கிரகிக்கும் அறிவு ஏற்படுகிறதோ) அப்படியே ‘ஆத்மாவே பிரஹ்மம்’ என்ற வாக்கியத்தின் தாத்பர்யத்தை பாக்கியன்னியில் (எவ்வித ஸந்தேஹத்திற்கும் இடமன்னியில்) தீர விசாரணை செய்த பிற்பாடு (தானே ப்ரஹ்மம் என்ற பிரஹ்ம ஸ்வரூப) விசேஷம் நேரில் கிரஹிக்கப்படுகிறது. (வாக்கியத்தினால் பரோக்ஷ ஞானமும் அதே வாக்கியத்தின் அர்த்தத்தை நன்கு விசாரித்துப் பார்த்தோமானால் விசாரத்துடன் கூடைய அதே வாக்கியத்திலிருந்தே அபரோக்ஷ ஞானம் ஏற்படுகிறது. (58)

’பத்தாவது யார்?’ என்று கேட்டதற்கு ’நீயே தான்’ என்று பதில் வந்தவுடன், தன்னையும் சேர்த்து எண்ணிப் பார்த்துக் கொண்டு தான்தான் பத்தாவது என்று அறிகிறான்’ (59)

’நீதான் பத்தாவது’ என்ற வாக்கியத்தினால் ‘தான் பத்தாவது’ என்று ஏற்படும் இவனுடைய அறிவு அடிபட்டு போவதில்லை. முதலிலோ, நடுவிலிருந்தோ, கடைசியிலிருந்தோ எப்படி எண்ணிய போதிலும் ‘ஒன்பது பேர்தான்’ என்கிற ஸந்தேஹம் (மறுபடியும் ) ஏற்படுவதில்லை. (60)

’ஸத்தாகவேயிருந்தது’ இது முதலான வாக்யத்தினால் பிரஹ்மத்தின் ஸத்த்வம் (இருக்கிற வஸ்து என்ற தன்மையை) பரோக்ஷமாக கிரஹித்துக் கொண்டு, ‘தத் த்வம் அஸி’ (நீ அதுவாய் இருக்கிறாய்) இது முதலான வாக்கியத்திலிருந்து விசேக்ஷமாக (நானே ப்ரஹ்மம் என்று அத்விதீய பரஹ்மஸ்வரூபமான ஆத்மாவை) அறியலாம். (61)

ஆக இந்தக் கதையிலிருந்து வித்யாரண்யர் எங்கே செல்கிறார் என்பதைக் கவனியுங்கள். முட்டாள்கள் என அந்த வழிப்போக்கனை இழிபகடி செய்யவில்லை. மாறாக அவனிடம் இருக்கும் அதே அறியாமையின் மற்றொரு நிலையில்தான் நாம் இருக்கிறோம் என்பதை நமக்குக் காட்டுகிறார். பொதுவாகவே நல்ல நகைச்சுவை என்பதில் ஒரு சுய விமர்சனம் இருக்கும். பிறர் ஏளனம் இருப்பது மோசமான நகைச்சுவை. அது சிரிப்பை ஏற்படுத்தினாலும் இறுதியில் வெறுப்பை விளைவிக்கும். இங்கு ஒரு சாதாரண கதை உலகின் ஒரு மிக பெரிய சத்தியத்தை – தத் த்வம் அஸி – என்கிற பேருண்மையைச் சுட்டப் பயன்படுகிறது.

கான்ஸ்டண்டைன் பெஸ்கிக்கு இந்த ’ஆறு விழுங்கிய பத்தாவது ஆள்’ கதை ’கோதம் நகரின் அறிவாளி மக்கள்’ என்கிற பிரபல ஐரோப்பிய நூலில் இருந்து கிடைத்திருக்கலாம். கோதம் என்கிற நகரின் வழியே அரசன் சாலை அமைக்கத் திட்டமிட்டான். அதற்கு வரி கட்ட வேண்டி வரும் என்பதுடன் அதைப் பராமரிக்கும் செலவு தங்களுக்கு ஏற்படும் என்பதால் அப்படி ஒரு சாலை அமைவதைத் தடுக்க அந்த நகர மக்கள் தாங்கள் பெரும் பைத்தியக்காரக் கூட்டம் என்பது போல் காட்டிக்கொண்டார்களாம். அக்காலத்தில் பைத்தியம் என்பது தொத்து என்கிற அச்சம் இருந்ததால் சாலை அமைக்கும் திட்டமே இதனால் கைவிடப்பட்டதாம். உண்மையோ பொய்யோ இந்த நகர மக்கள் வேடிக்கை விநோதமாக நடந்தார்கள் என்பது ஒரு நூலாக மாறியது ஆண்ட்ரூ போர்ட் (1490-1549) என்கிற யாத்திரீகரால் எனக் கருதுகிறார்கள். இந்தக் கதையில் இதே போலப் பிரம்படிபடும் கதை வருகிறது. ஆனால் அதில் பிஷப் எவரும் பகடி செய்யப்படவில்லை. பரமார்த்த குருவின் கதைகளை ஆங்கிலத்தில் 1822ல் மொழி பெயர்ப்பு செய்த பெஞ்சமின் பாபிங்க்டன் இக்கதை இந்துச் சாமியார்களைப் பகடி செய்ய எழுதப்பட்டது என்கிறார். தோமா வழி கிறிஸ்தவமே இந்து மதம் என்பது போன்ற பரப்புரைகளைச் செய்யும் ஜான் சாமுவேல் இயக்குநராக இருக்கும் ‘ஆசிய ஆராய்ச்சி மையம்’ (Institute of Asian Studies) வெளியிட்ட நூலில் இன்னும் ஒரு படி மேலே சென்று பரமார்த்த குரு கதை பகடியாக இருந்தாலும் கூட அது ‘கல்விச் செயல்பாடுகள் பரமார்த்த குரு போன்றவர்களால் கூடக் கையாளப்படும் விதமாக இருந்தது என்கிற அடிப்படை உண்மையைக் காட்டுகிறது’ (1998) என்று நகைச்சுவைப் பகடிக்குள்ளிருக்கும் விஷச்சுவை வெளியே வருகிறது.

தன்னை எண்ணாமல் ஆற்றில் மூழ்கி விட்டதாக அழும் கதை வித்யாரண்யரால் பயன்படுத்தப்பட்டிருப்பது இங்கு மற்றொரு விதத்தில் முக்கியத்துவம் அடைகிறது. ஏனெனில் இதுவே முதன் முறையாக அந்தக் கதை இலக்கியத்தில் பதியப்படுவதாகத் தெரிகிறது. வித்யாரண்யரின் அருளாசியால் உருவாக்கப்பட்ட விஜயநகர சாம்ராஜ்ஜியத்துடன் ஐரோப்பியம் வர்த்தக உறவு வைத்திருந்ததை அறிவோம். இந்த உறவின் மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டவற்றுள் இது போன்ற வழக்கு கதைகளும் ஐரோப்பா சென்றிருக்கின்றன. ஆனால் அவற்றின் பயன்பாடு நகைச்சுவையையும் பகடியையும் தாண்டவில்லை, அவை மீண்டும் இந்துஸ்தானத்துக்கு வந்திறங்கியபோதோ அவை இந்து மதக் குருமார்களையே பகடி செய்யவும் இந்து சமுதாயத்தையும் வரலாற்றையும் கீழ்மைப்படுத்தவுமான ஒரு கதையாடலுக்கு விதையாக மாற்றப்பட்டுள்ளன.

இந்தக் கதையை நம் குழந்தைக்கு வித்யாரண்யரின் பார்வையில் சொல்லிக் கொடுத்தால் அந்தக் கதையும் குழந்தையின் தேடலுடன் மலரும், வளரும். அதே நேரத்தில் ‘பரமார்த்த குரு’ கதை மூலம் அதே கதையை நம் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தால் இந்தக் கதையின் ஆழமும் பண்பாட்டுப் பயன்பாடும் இல்லாமல் போய்விடும். சுய பண்பாட்டு வெறுப்பை மட்டுமே அந்தக் கதை கொடுக்கும். கான்ஸ்டண்டைன் பெஸ்கியின் இறுதி நோக்கமும் அதுதான். இந்துக்கள் தம் பண்பாட்டை, தம் சமயக்குரவர்களை இழிவாக நோக்க வேண்டும். இந்தக் கதைகள் அதற்கான மனமண்டலங்களைத் தொடர்ந்து உருவாக்குகின்றன. இத்தகைய சூழலில் வளரும் குழந்தை ஒரு இலக்கியவாதியாக மாறும்போது அது சித்தரிக்கும் பாரம்பரிய மடங்கள் மடையர்களால் ஆனதாக இருக்கும். நம் பண்பாட்டின் மகோன்னதங்களைக் கூட மார்க்சிய காலனியப் பார்வையில் உள்வாங்கி அது இலக்கியப் பிரதியாக வெளிப்படும்போது நம் ஆழ்வார்கள், நாயன்மார்கள், பாரம்பரிய மடங்கள் ஏளன நகைச்சுவையுடன் வெளிப்படும். அசட்டு ஆழ்வார்கள், ஏமாற்றுக்கார போஜனப் பிரிய பிராம்மண அதிகார வெறியர்கள் எனக் கதை மாந்தர்கள் உருவாக்கப்படுவார்கள். வரலாறே இப்படித்தான் இருந்ததென நம்மை அறியாமலே நாம் நம்ப ஆரம்பிப்போம்.
பொய்மையின் வெறுப்பின் ஊற்றுக்கண் விதைகள் நம் காலனிய வரலாற்றின்போது ரொம்பவே நம்மிடம் ஆழமாக விதைக்கப்பட்டிருக்கின்றன.

நாம் ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும் போதும் ஜாக்கிரதையாகவே அவற்றை எடுத்து வைக்க வேண்டியுள்ளது.

பஞ்சதசீ – ஸ்ரீ ஞானானந்த பாரதீ ஸ்வாமிகள் எழுதிய தமிழ் உரையுடன். வெளியீடு: ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்த்ரப்ரதிஷ்டா டிரஸ்ட், 2010  (சென்னையில் கிடைக்குமிடம்: Sri Vidyatheertha Foundation, GB, Sai Karuna Apartments, 49, Five Furlong Road, Guindy, Chennai – 600032 Phone: 097899 99160) 

2 thoughts on “பரமார்த்த குருவும் பஞ்சதசீயும் | அரவிந்தன் நீலகண்டன்

  1. அருமையான பதிவு. சங்கரர் தமது தைத்திரீய உபநிடத பாஷ்யத்தில் இக்கதையின் கருத்தை சூககமாகக் காட்டியுள்ளார்: ननु, सर्वगतं सर्वस्य चात्मभूतं ब्रह्म वक्ष्यति । अतो नाप्यम् । आप्तिश्च अन्यस्यान्येन परिच्छिन्नस्य च परिच्छिन्नेन दृष्टा । अपरिच्छिन्नं सर्वात्मकं च ब्रह्मेत्यतः परिच्छिन्नवत् अनात्मवच्च तस्याप्तिरनुपपन्ना । नायं दोषः । कथम् ? दर्शनादर्शनापेक्षत्वाद्ब्रह्मण आप्त्यनाप्त्योः, परमार्थतो ब्रह्मस्वरूपस्यापि सतः अस्य जीवस्य भूतमात्राकृतबाह्यपरिच्छिन्नान्नमयाद्यात्मदर्शिनः तदासक्तचेतसः । प्रकृतसङ्ख्यापूरणस्यात्मनः अव्यवहितस्यापि बाह्यसङ्ख्येयविषयासक्तचित्ततया स्वरूपाभावदर्शनवत् परमार्थब्रह्मस्वरूपाभावदर्शनलक्षणया अविद्यया अन्नमयादीन्बाह्याननात्मन आत्मत्वेन प्रतिपन्नत्वात् अन्नमयाद्यनात्मभ्यो नान्योऽहमस्मीत्यभिमन्यते । एवमविद्यया आत्मभूतमपि ब्रह्म अनाप्तं स्यात् । तस्यैवमविद्यया अनाप्तब्रह्मस्वरूपस्य प्रकृतसङ्ख्यापूरणस्यात्मनः अविद्ययानाप्तस्य सतः केनचित्स्मारितस्य पुनस्तस्यैव विद्यया आप्तिर्यथा, तथा श्रुत्युपदिष्टस्य सर्वात्मब्रह्मण आत्मत्वदर्शनेन विद्यया तदाप्तिरुपपद्यत एव । சங்க்யா என்ற சொல் இக்கதையின் கருத்தைத் தெரிவிக்கிறது.

  2. நல்ல முயற்சி, அறிமுகமான ஆசிரியர்கள், பொருத்தமான இதழ் பெயர்… தொடரட்டும் அருட்பணி… அறியாமை இருள் அழிய.வாழ்த்துக்கள்

Leave a Reply