Posted on Leave a comment

மகாத்மா காந்தி கொலை வழக்கில் சாவர்க்கரின் வாக்குமூலம் (பகுதி 6) | தமிழில்: ஜனனி ரமேஷ்



(22) குற்றத்துக்கு உட்படுத்தும் வகையில்
என்னிடம் இருப்பதாக எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
உரிமம் பெறாத வெடி மருந்துகள் அல்லது ஆயுதங்கள் அல்லது குற்றத்துக்கு
உட்படுத்தும் வகையில் ஆவணச் சான்றுகள் அல்லது பொருள் சான்று என்னிடம் இருப்பதாகக் எதுவுமே
கண்டுபிடிக்கப்படவில்லை.
(23) தொடர்பு மட்டுமே சதிக்கான ஆதாரமாகாது
வழக்கின் தொடக்கத்திலேயே ப்ராசிக்யூஷன் தரப்பு அதனிடம் இருக்கும்
வலுவான ஆவணச் சான்று மூலம் குற்றம் சுமத்தப்பட்டவர், குறிப்பாக கோட்சேவும், ஆப்தேவும்,
என்னோடு தொடர்பில் இருந்துள்ளனர் என்றும் அவர்களுடைய வழிகாட்டியாவும் குருவாகவும் நான்
திகழும் அளவுக்கு எனது அசைக்க முடியாத விசுவாசிகளாவும் விளங்கியதால், எனது ஆலோசனையோ,
ஒப்புதலோ இல்லாமல், அவர்களால் சதித் திட்டம் தீட்டி இச்செயலைச் (ஆதாவது படுகொலை) செய்திருக்கவே
முடியாது என்று குற்றம் சாட்டியது.
இப்போது இந்த ஆவணச் சான்று வெளிச்சத்துக்கு வந்த நிலையில் ப்ராசிக்யூஷன்
தரப்பு என் மீது குற்றம் சுமத்தியதைப் போன்றே நானும் உறுதியாக அந்தக் குற்றச்சாட்டு
ஆதாரமற்றது, நியாயமற்றது என்பதுடன் நீதிமன்றம் என் மீது காழ்புணர்வு கொள்ளவும் வழிவகுக்கும்
என்றும் சொல்வதற்கு வாய்ப்பை அளித்துள்ளது. இதற்கான காரணங்கள் பின்வருமாறு:
A) கவதங்கர் பி.டபிள்யு. 115 மற்றும் சி ஹெச் ப்ரதான் பி.டபிள்யூ.
130 ஆகியோரின் சாட்சிகள் என் வீட்டில் சோதனை நடைபெற்ற பிறகு ஏராளமான கடிதங்கள் சிஐடி
அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன என்பதை உறுதிப்படுத்துகின்றன. காவல் ஆய்வாளர்
ஏ.ஆர்.பிரதான் (பி.டபிள்யூ.129) இதற்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். கடிதப் போக்குவரத்தில்
மொத்தம் 143 கோப்புகள் இருந்தன என்றும் அவற்றில் மொத்தமாக 10,000 கடிதங்களுக்குக் குறையாமல்
இருந்தன என்றும் பிரதான் ஒப்புக் கொள்கிறார் (பி.டபிள்யூ.129 பக்கம் 4). மூன்று மாதங்கள்
இப்பணியில் முழுமையாக ஈடுபட்டு ஒவ்வொரு கடிதத்தையும் படித்து ஆய்வு செய்தார். பின்னர்
அவற்றில் பெரும்பான்மை தள்ளுபடி ஆனது – காரணம் என்னைக் குற்றத்துக்கு உட்படுத்தும்
வகையில் எதுவுமே கண்டுபிடிக்கப்படவில்லை. கோட்சேவும் ஆப்தேவும் எனக்கு எழுதியதாவும்,
நான் அவர்களுக்கு எழுதியதாகவும் கருதப்படும் 100-125 கடிதங்களை எனக்கு எதிரான சான்று
ஆவணங்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ப்ராசிக்யூஷன் தரப்பு முனைந்தது. ஆனால் இயல்பற்ற,
வழக்கத்துக்கு மாறான அக்கடிதங்களின் ஏற்புநிலை கேள்விக்குரியானது. ப்ராசிக்யூஷன் தரப்பு
சமர்ப்பித்த 100-125 கடிதங்களில் ஆப்தேவும், கோட்சேவும் எழுதிய 20 கடிதங்கள் மட்டுமே
ப்ராசிக்யூஷன் தரப்பு ஆவணங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. முக்கியமாக இந்த வழக்கில் அவற்றை
ஆவணச் சான்றுகளாக என்னை நேரடியாகக் குற்றத்துக்கு உட்படுத்தாமல், கோட்சே மற்றும் ஆப்தே
ஆகியோருக்கும் எனக்கும் இடையேயான பொதுவான தொடர்பைக் குறிப்பதற்கு மட்டுமே பயன்படுத்த
வேண்டும் என்னும் நிபந்தனையுடன் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
(B) மேற்கண்ட நிபந்தனையின் அடிப்படையில் இக்கடிதங்கள் சான்றாக
அனுமதிக்கப்பட்டாலும், இவை குறித்து நான் விரிவாகவே இந்த வாக்குமூலத்தின் பிரிவுகளில்
(10 & 11) தெரிவித்திருக்கிறேன். மேலும் கோட்சேவும், ஆப்தேவும், வெளிப்படையான,
சட்டப்பூர்வமான இந்து சங்கடன் மற்றும் மகாசபா செயல்பாடுகளின் ஊழியர்களாக மட்டுமே என்னுடன்
தொடர்பு கொண்டிருந்தனர் என்றும் அக்கடிதங்களிலிருந்து நான் தெளிவாக மேற்கோள் காட்டி
உள்ளேன்.
இதன் காரணமாக, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எனக்கு வந்த தபால்களில்
ப்ராசிக்யூஷன் வசமுள்ள சற்றேறக்குறைய 10,000க்கும் மேற்கண்ட கடிதங்களில், மிகத் தீவிர
ஆய்வுக்குப் பின்னரும், என்னைக் குற்றத்துக்கு உட்படுத்தும் வகையில் ஒற்றைச் சொல்லோ
வரியோ காணப்படவில்லை என்பதே, ஏனைய விஷயங்கள் சரிசமமாக இருக்கும் சூழலில், நான் அப்பாவி
என்பதை நிரூபிப்பதற்கான சான்றாகும். எப்படி இருப்பினும், கைவசமுள்ள சான்றாவணம் மூலம்,
கூறப்படும் இந்தச் சதித்திட்டத்தில், கோட்சே மற்றும் ஆப்தேவுடன் என்னைத் தொடர்புபடுத்தும்
ப்ராசியூஷன் தரப்புக் குற்றச்சாட்டு தவிடுபொடியாகும்.
(C) மேலும், ப்ராசிக்யூஷன் தரப்புச் சான்றே 1948ல் ஆப்தேவிடமிருந்து
ஒரு கடிதமும், கோட்சேவிடமிருந்து மூன்று கடிதங்களும் எனக்கு வந்திருப்பதை உறுதிப்படுத்துகிறது.
இக்கடிதங்கள் அனைத்துமே அதே ஆட்சேபணைற்ற வகையில் இருப்பதுடன், 1946 அக்டோபர் 30க்குப்
பிறகும், 1947லும், 1948லும், கோட்சே எனக்கு எந்தக் கடிதமும் எழுதவில்லை என்பதையும்
தெளிவுபடுத்துகிறது (பி.டபிள்யூ.129 பக்கம் 4).
மேற்கூறிய காலகட்டத்தில் ஆப்தேவிடமிருந்து எனக்கு எந்தக் கடிதமும்
வரவில்லை என்பதுடன் கோட்சேவுக்கோ ஆப்தேவுக்கோ தனியாகவோ கூட்டாகவோ எந்தக் கடிதத்தையும்
நானும் அனுப்பவில்லை. இதன் மூலம் அந்தச் சான்றாவணம் 1947 அல்லது 1948ல் எங்களுக்கு
இடையே எந்தக் கடிதப் போக்குவரத்தும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.
கர்க்கரே குறித்து பிரதான் (பி.டபிள்யூ.129 பக்கம் 3) தனது சாட்சியில்
கூறுவதாவது ‘நான் ஆய்வு செய்த 143 கோப்புகளில் சாவர்க்கருக்கு கர்க்கரே அல்லது கர்க்கரேக்கு
சாவ்சர்க்கர் எழுதியதாக ஒரு கடிதத்தைக் கூட காணவில்லை’ என்கிறார்.
(D) எனவே குற்றம் சாட்டப்பட்ட எவரோடும், குறிப்பாக ஆப்தே மற்றும்
கோட்சேவோடும், 1946 இறுதி தொடங்கி 1948 பிப்ரவரியில் நான் கைது செய்யப்படும் தேதி வரை,
எனக்கு எந்தக் கடிதத் தொடர்பும் இல்லை என்பது தெளிவு. ஆப்தே – கோட்சே கடிதத்தை அடிப்படையாகக்
கொண்டு ப்ராசிக்யூஷன் தரப்பு அவர்களுக்கும் எனக்குமான தொடர்பை நிரூபிக்க முனைவதை எதிர்த்து
அது மகாசபையின் சட்டபூர்வ மற்றும் பொதுவான செயல்பாடுகள் என்னும் எனது வேண்டுகோளை இது
உறுதிப்படுத்துகிறது. எனவேதான் 1946ல் நான் மகாசபை தலைவர் பதவியை உடல் நிலை சீராக இல்லாததால்
ராஜினாமா செய்த பிறகு எனது பொதுச் சேவை தொடர்பான அனைத்துப் பணிகளையும் தற்காலிகமாக
நிறுத்திவிட்டேன். இதன் காரணமாக ஏனைய இந்து சபா ஊழியர்களைப் போலவே ஆப்தேவும் கோட்சேவும்
இந்து சங்கடன் அறிக்கைகள் அல்லது எனது பிரசாரப் பயணம் அல்லது பொது விவகாரங்கள் தொடர்பான
எனது வழிகாட்டுதல்கள் ஆகியவை குறித்து எனக்கு எழுதுவதை நிறுத்திவிட்டனர். ஆகவே மேற்கொண்ட
கால கட்டத்தில் அவர்களது கடித்தப் போக்குவரத்து திடீரென நின்று போனதை இது விவரிக்கிறது.
E) கூறப்படும் சதித்திட்டம் 1947 டிசம்பரில் தொடங்கியதாகப் ப்ராசிக்யூஷன்
தரப்பு சொல்வதைக் கவனிக்க வேண்டும். என்னுடனான கோட்சே மற்றும் ஆப்தே கடிதப் போக்குவரத்து
அந்தக் காலத்துக்கு முன்பே நின்று விட்டதைப் ப்ராசிக்யூஷன் சாட்சியே மேற்கண்டபடி நிரூபிக்கிறது.
இதன் காரணமாக எனக்கும் கோட்சே மற்றும் ஆப்தேவுக்கும் இடையேயான தொடர்பு, அதாவது எந்தக்
கடிதப் போக்குவரத்தை ஆதாரமாக வைத்து ப்ராசிக்யூஷன் தரப்பு நிரூபிக்க முனைகிறதோ, அந்தத்
தொடர்பை நிரூபிக்க கடிதப் போக்குவரத்து, கூறப்படும் சதித்திட்டம் உருவாவதற்கு ஓராண்டுக்கு
முன்பாகவே நின்று விட்டது.
இந்தக் காரணங்களுக்காகவே நான் சமர்ப்பிப்பது என்னவெனில், கடிதப்
போக்குவரத்து குறிப்பிடும், இதுபோன்ற சட்டப்படியான மற்றும் முறையான தொடர்பு, கூறப்படும்
சதித் திட்டம் உருவாவதற்கு ஓராண்டுக்கு முன்பாகவே நின்றுவிட்டதால், என்னை எந்தச் சூழலிலும்,
குற்றவாளியாக்க இயலாது என்பதுடன், இதைக் குற்றம் மற்றும் சதித்திட்டத்துடனான தொடர்பாகவும்
சந்தேகிக்க முடியாது என்பதுதான். முறையான மற்றும் சட்ட ரீதியான தொடர்பையும், குற்றம்
மற்றும் சதித்திட்டத்தையும் இணைக்க முடியாத அளவுக்கு இடைவெளி உள்ளது. பல பிரபல வழக்குகளில்
இந்த அடிப்படைக் கொள்கைகள் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு,
சர்காரின் சாட்சியச் சட்டம் (பிரிவு 10 பக்கம் 98) ‘சதித் திட்டம் தீட்டிய எவருடன்
குற்றம் சுமத்தப்பட்டவரின் தொடர்பு குறித்த சாட்சி மட்டுமே அவரை அந்த சதியின் கூட்டாளியாகக்
குற்றவாளியாக்கப் போதுமானது அல்ல’ என்று தெளிவாகக் கூறுகிறது.
(24) இந்தச் சதித்திட்டம் குறித்துக் கோட்சேவும் ஆப்தேவும் என்னோடு
ஆலோசனை நடத்தினர் என்றும், அவர்கள் எனக்கு எழுதிய கடிதங்களில் தங்களது விசுவாசத்தை
மதிப்போடும் மரியாதையோடும் எனக்கும் நான் பின்பற்றும் இந்து சித்தாந்தத்துக்கும் தெரிவித்துள்ள
காரணத்தால், என்னுடைய ஒப்புதலின்றி இந்தக் குற்றத்தை அவர்கள் செய்திருக்க இயலாது என்று
ப்ராசிக்யூஷன் தரப்பு பிடிவாதமாக முடிவுக்கு வந்துள்ளது அபத்தம் என்பது மேற்கண்ட பிரிவிலிருந்து
தெளிவு.
பெரும்பான்மைக் குற்றவாளிகள் தங்களது மதப் பிரிவுகளின் குருக்கள்
மற்றும் வழிகாட்டிகள் மீது மிகுந்த மரியாதையும், விசுவாசத்தையும் செலுத்துவதுடன், அவர்களது
கொள்கைகளைப் பின்பற்றுவதிலும் உறுதியாக உள்ளனர். அப்படியெனில் அவர்களைப் பின்பற்றுவர்களின்
குற்றச் செயல்களுக்கு குருவும் வழிகாட்டியும் பொறுப்பாக முடியுமா? அந்தக் குற்றவாளிகள்
தங்கள் குருக்கள் மற்றும் வழிகாட்டிகள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கின்றனர்
என்ற ஒரே காரணத்துக்காக அவர்களையே குற்றவாளியாக்க முடியுமா? குற்றம் சுமத்தப்பட்ட பெரும்பான்மை
நபர்கள் தங்கள் பெற்றோர், சகோதரர்கள் மற்றும் உறவினர்களுடன் நெருங்கிய தொடர்பும், அன்பும்
மரியாதையும் வைத்துள்ளதுடன், அவர்களுக்கு எழுதும் கடிதங்களிலும் தங்கள் பணிவைத் தெரிவிக்கின்றனர்.
குற்றம் சுமத்தப்பட்டவர்கள் உறவினர்களிடம் பணிவோடு கீழ்ப்பணிவதால், குற்றச் செயல்களைச்
செய்வதற்கு முன்பு அவர்களின் ஆலோசனையையும் வழிகாட்டுதலையும் பெற்றார்கள் என்றும் குற்றத்துக்கு
உடந்தையாக இருந்தார்கள் என்றும் கூற முடியுமா? அரசியல் கட்சிகளிலுள்ள எண்ணற்ற தொண்டர்களில்
சிலர் ஏதேனும் குற்றம் செய்திருந்தால், தலைவர்கள் மீது அவர்கள் மதிப்பும், மரியாதையும்,
வைத்திருக்கும் ஒரே காரணத்துக்காகக் குற்றத்துக்கு அவர்களைப் பொறுப்பாக்கிக் காவல்
துறை கைது செய்ய முடியுமா? இன்னும் சொல்லப் போனால் தலைவருக்குள்ள தார்மிகச் செல்வாக்கைச்
அவரது அனுமதியைப் பெறாமலேயே சில தொண்டர்கள் தவறாகப் பயன்படுத்த முயற்சிக்கவில்லையா?
1942ல் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் போது காங்கிரஸ்
தொண்டர்களாக மகாத்மா மீது மதிப்பு மரியாதையுடன் நெருங்கமாக இருந்த சில முன்னணிச் செயல்
வீரர்கள் தலைமறைவாக வன்முறையில் ஈடுபட்டனர். அந்நிய ஆட்சிக்கு எதிரான இதுபோன்ற தலைமறைவு
வன்முறை நியாயமா, நியாயமற்றதா என்ற கேள்விக்குள் நான் போக விரும்பவில்லை. மகாத்மா காந்தி
இந்தத் தலைமறைவு வன்முறையைக் கண்டித்தார் என்பதை மட்டும் சொன்னால் போதுமென நினைக்கிறேன்.
ஆனால் இந்தச் செயல் வீரர்களின் பின்னால் அணிவகுத்த மக்கள் ‘மகாத்மா காந்திக்கு ஜே’
என்று முழக்கமிட்டுக் கொண்டே இரத்தம் பெருக்கெடுக்கக் கலவரத்திலும், நாசவேலையிலும்
ஈடுபட்டனர். ‘மகாத்மா காந்திக்கு ஜே’ என்று முழக்கமிட்டதாலும், குற்றச் செயல்களில்
ஈடுபட்டவர்கள் அவர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்ததாலும், காந்திஜியிடம் கட்டாயம்
வன்முறை குறித்த ஆலோசனைகளைக் கேட்டிருப்பார்கள் என்ற முடிவுடன் பிரிட்டிஷ் அரசு கூட
காந்திஜியைச் சிறையில் அடைக்கவில்லை. இந்த வழக்கில் ப்ராசிக்யூஷன் தரப்பு சில குருக்களையும்,
வழிகாட்டிகளையும் சாட்சிகளாக விசாரித்ததில், குற்றம் சுமத்தப்பட்டவர்களில் சிலருக்குப்
பயங்கரமான வெடி மருந்துகளை வழங்கியதுடன், இந்தச் சதித்திட்டம் நடைபெற்றதாகக் கூறப்படும்
டிசம்பர் – ஜனவரி காலகட்டத்தில், இந்தியக் குடிமகன்களாக இருந்த ஜின்னா மற்றும் லியாகத்
அலி ஆகியோரைக் கொலை செய்யத் தூண்டியதாகவும் பிரமாணத்தில் தெரிவித்திருந்தனர்.
இருப்பினும், ஒப்புக் கொள்ளப்பட்ட இத்தகைய குற்றத் தொடர்பைக்
கூடக் காரணம் காட்டி ப்ராசிக்யூஷன் தரப்பு குற்றம் சுமத்தப்பட்டவர், இச்சதித்திட்டம்
சம்மந்தமாக இந்தச் சாட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார் என்ற முடிவுக்கு வருவதுடன், அவரையும்
இந்தச் சதியில் குற்றவாளியாக்க இயலாது. அவர்கள் அனைவரும் குற்றவாளியாக்கப்பட்டிருக்க
வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் இதே ப்ராசிக்யூஷன், ஆப்தேவுக்கும் கோட்சேவுக்கும்
எனக்கும் இடையே பல ஆண்டுகளுக்கு முன்பிருந்த சட்டபூர்வ கடிதப் போக்குவரத்து மற்றும்
தொடர்பைக் காரணமாக்கி, இந்தச் சதித் திட்டம் சம்மந்தமாக என்னிடம் ஆலோசனை நடத்தினர்
என்பதுடன், என்னையும் குற்றவாளியாக்கும் பிடிவாதமான முடிவு அபத்தமும் அநியாயமும் ஆகும்.
ஆனால் ப்ராசிக்யூஷன் தரப்பு சாட்சியே அதே குணத்துடன், ‘இருந்திருப்பார்’ மற்றும் ‘இருந்திருக்க
மாட்டார்’ என்ற ஊக அடிப்படையில் இருப்பதால், எனக்கு எதிரான வழக்கை நிருப்பிக்கப் போதுமான
மற்றும் நேரடி சாட்சியைத் தேடுவதில் ப்ராசிக்யூஷன் தரப்பு நம்பிக்கையற்று இருக்கிறது.
அதே அளவுக்கு, சரியோ, தவறோ, இடரில் இருப்பதாகக் கருதும் தங்களது கௌரவத்தைக் காப்பாற்றப்
போதிய ஆதாரங்களின்றி அபத்தமான ஊகங்களின் அடிப்படையில் பொறுப்பற்று நடந்து கொள்வதும்
தெள்ளத் தெளிவாகிறது.
(25) ப்ராசிக்யூஷன் சாட்சியின் இந்தப் புனைவு
இரண்டே வரிகளில் அடங்கி உள்ளது. முதலாவது செவி வழிச் செய்தி, இரண்டாவது அனுமானம்
இப்போது எந்தச் சான்றாக இருந்தாலும், பொருள் அல்லது சூழ்நிலை,
வாய்மொழியாக அல்லது எழுத்துபூர்வமாக, எனக்கு எதிராக ப்ராசிக்யூஷன் தரப்பு கொண்டுவந்திருந்தாலும்,
எனது வாக்குமூலத்தின் மேற்கண்ட பகுதியில் அவற்றுக்கு விரிவான விளக்கம் அளித்துள்ளேன்.
இந்நிலையில் அதிலுள்ள ஒரேயொரு பகுதியில் காணப்படும் இரண்டே வரிகள் மூலம் மட்டுமே சதித்திட்டத்தில்
எனக்குள்ள தனிப்பட்ட தொடர்பை உறுதிப்படுத்துவதே அதன் நோக்கமாகும்! இவ்விரண்டுமே பேட்ஜ்
சுமத்திய குற்றச்சாட்டுகள்:-
காந்தி, நேரு மற்றும் சுராவார்டி ஆகியோரைத் தீர்த்துக் கட்டுமாறு
நான் ஆப்தேவிடம் சொன்னதாக, ஆப்தே தன்னிடம் கூறினார் என்பதே பேட்ஜின் முதல் வாக்கியமாகும்.
‘வெற்றிகரமாக முடித்துவிட்டுத் திரும்பி வாருங்கள்’ என்று நான் ஆப்தே மற்றும் கோட்சேவிடம்
சொன்னதைக் கேட்டதாக பேட்ஜ் கூறுவது இரண்டாவது வாக்கியமாகும். ஆப்தே சொன்ன முதல் வாக்கியத்தின்
அடிப்படையில் இதை பேட்ஜ் ஊகித்திருக்கலாம்.
வண்டிகள் நிறையக் கடிதப் போக்குவரத்து, தேடல்கள், அமைச்சர் முதல்
திரைப்பட நடிகர் வரை, மகாராஜா முதல் டாக்ஸி ஓட்டுனர் வரை, ஏராளமான சாட்சிகளுடன் ப்ராசிக்யூஷன்
சான்றாவணத்தை பிரம்மாண்டமாக்கித் தீவிரப்படுத்தியதன் முக்கிய நோக்கம் எதிர்பார்த்த
விளைவு கிடைக்க வேண்டும் என்பதே. ஆனால் என்னுடைய வழக்கைப் பொருத்தவரை, மகா சபா பவன்
தொலைபேசி ‘ட்ரங்கால்’ போன்று ‘பயனற்றுப்’ போய்விட்டது.
இந்த வாக்குமூலத்தில் பிரிவுகள் (18 மற்றும் 19) கூறிய காரணங்களின்படி
மதன்லாலின் கதையிலும் எதுவுமில்லை. ஜெயின் சொன்னதாக அங்கத் சிங்கும், அமைச்சரும் கூறுகிறார்கள்;
ஜெயின் தனக்கு மதன்லால் சொன்னதாகக் கூறுகிறார்; மதன்லாலோ நான் ஜெயினிடம் எதுவுமே சொல்லவில்லை
என்கிறார்; ஜெயின் சொன்ன கதையாகவே இருப்பினும், கூறப்படும் சதித்திட்டத்தோடு தனிப்பட்ட
முறையிலும் உறுதியாகவும் என்னைத் தொடர்புபடுத்தவில்லை.
இப்போது, என்னை இந்தச் சதித்திட்டத்துடன் உறுதியாகவும், நேரடியாகவும்
தொடர்புபடுத்த முனைவு மேற்கொள்ளப்படும் பேட்ஜ் சான்றாவணத்தில் மேற்கண்ட இரு வாக்கியங்களுள்,
முதலாவது செவி வழிச் செய்திதான். அப்ரூவரான பேட்ஜ் இந்த வாக்கியத்தைத் தன்னிடம் ஆப்தே
கூறியதாகச் சொல்கிறார். ஆனால் ஆப்தேவும் கோட்சேவும் அவ்வாறு பேட்ஜிடம் எதுவுமே சொல்லவில்லை
என்றும் நானும் அவர்களிடம் எதுவும் கூறவில்லை என்றும் மறுத்துள்ளனர். எனவே பேட்ஜின்
குற்றச்சாட்டை உறுதிப்படுத்த எந்தச் சான்றும் நிச்சயமாக இல்லை. பேட்ஜின் முதல் குற்றச்சாட்டு
செவிவழிச் செய்தி மட்டுமின்றி உறுதிப்படுத்தப்படாத செவிவழிச் செய்தியும் ஆகும். உறுதிப்படுத்தப்படாத
நிலையில், ஒரு அப்ரூவர் தனிப்பட்ட முறையில் கேட்டதையோ, பார்த்தையோ கூட நம்பகமான சான்றாகப்
பொதுவாகச் சட்டம் ஏற்றுக் கொள்வதில்லை. எனவே ஒரு செவிவழிச் செய்தியை, ஒரு அப்ரூவர்
செவிவழிச் செய்தி என்று ஒப்புக் கொண்ட பிறகு, நம்பகத்தன்மை அற்றதாகவும், உறுதிப்படுத்தப்படாததாகவும்
தானே இருக்க முடியும்!
அதுமட்டுமன்றி, அதைப் போன்ற சில காரணங்கள், ஆப்தே மற்றும் கோட்சேவிடம்
சொன்னதைத் தனிப்பட்ட முறையில் கேட்டதாக பேட்ஜ் சொன்னது இரண்டாம் வாக்கியத்தின் நம்பகத்தன்மையைப்
பழுதாக்குகிறது. இது உண்மையெனில் பிறகு அது செவிவழிச் செய்தி அல்ல. ஆனால் பேட்ஜ் அதே
வாக்கியத்தில் ‘வெற்றிகரமாக முடித்துவிட்டுத் திரும்பி வாருங்கள்’ என நான் சொன்னது
சதித்திட்டம் தொடர்பாக நேரடியாக இல்லை என்பதை அவரே ஒப்புக் கொள்கிறார். சதித்திட்டத்துடன்
எனக்கு தொடர்பிருக்கலாம் என்ற பேட்ஜ் அனுமானித்திருக்கலாம். மேலும் ஆப்தே மற்றும் கோட்சே
ஆகிய இருவரும் என் வீட்டுக்கு மூவர் வந்த கதையும், அந்த வாக்கியத்தை நான் சொன்னதாகக்
கூறிய குற்றச்சாட்டும், புனையப்பட்டவை மற்றும் முற்றிலும் பொய் என்று தெளிவாகக் கூறியுள்ளனர்.
இதை யாரும் எதற்கும் உறுதிப்படுத்தவில்லை. ஆகவே உறுதிப்படுத்தப்படாத இந்தச் செய்தியை
அனுமானித்தது தர்க்கவியலாளர் கூட இல்லை, ஒரு அப்ரூவர் என்பதால், அதற்கு நீதிமன்றத்தில்
எந்த விதமான நம்பகத்தன்மையோ, சான்றாவண மதிப்போ கிடையாது. இவ்விரண்டு குற்றச்சாட்டுகளின்
அடிப்படையில் என் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது – முதலாவது அப்ரூவர் சொன்ன உறுதிப்படுத்தப்படாத
செவிவழிச் செய்தி. இரண்டாவது அப்ரூவரின் உறுதிப்படுத்தப்படாத அனுமானம். இவ்விரண்டுமே
எந்த நீதிமன்றத்தின் முன்பாகவும் ஏற்றுக் கொள்ளத்தக்க சான்றாவணமாக இருக்க முடியாது
என்ற நிலையில், நான் தாழ்மையுடன் பணிந்து சமர்ப்பிப்பது என்னவெனில், எனக்கு எதிரான
வழக்கு முழுவதுமாகத் தானாகத் தகரும். அத்துடன், நான் குற்றமற்றவன் என்பதும் சந்தேகத்துக்கு
இடமின்றி நிரூபணமாகும்.

Leave a Reply