Posted on Leave a comment

ஹேமு என்கிற ஹேமசந்திர விக்ரமாதித்யா : வரலாற்றில் மறக்கப்பட்ட மாவீரர் | ஜடாயு

இந்திய வரலாற்றில் மாபெரும் திருப்பங்களை
ஏற்படுத்திய போர்கள் என்று சிலவற்றைச் சொன்னால், மூன்று பானிபட் போர்களும் அதில் கட்டாயம்
இடம்பெறும். இவற்றின் முடிவுகள் சிறிது மாறியிருந்தாலும் கூட இந்தியாவின் சரித்திரம்
திசைமாறியிருந்திருக்கும். இதில், இரண்டாம் பானிபட் போரில் வீழ்ந்த ஹேமு என்ற மகத்தான
வீர அரசர் முகலாயப் பேரரசர்கள் மற்றும் அவர்களது படாடோபமான வரலாறுகளுக்கிடையில் சிக்கி,
அந்தக் காலகட்டத்தின் ஏராளமான இந்துக்களின் துயரமும் வேதனையும் நிறைந்த வாழ்க்கையைப்
போலவே, சாதாரண அடிக்குறிப்பாக மட்டுமே எஞ்சிவிட்டார் என்பது சோகம்.
அது 1500களின் தொடக்கக் காலம்.
பாரதத்தின் வடக்கு மேற்கு, மத்தியப் பகுதிகள் பெருமளவு இஸ்லாமிய ஆட்சிக்குள் வந்து
விட்டிருந்தன. விஜயநகரப் பேரரசின் கீழ் இருந்த தென்னிந்தியா, ராஜபுதனம், ஒரிஸ்ஸா, அஸ்ஸாம்
ஆகிய பகுதிகளில் மட்டுமே இந்து ஆட்சியாளர்கள் நிலைபெற்றிருந்தனர். இஸ்லாமியர்களாக மாறிவிட்டிருந்த
மத்திய ஆசியாவின் பல்வேறு இனக்குழுக்கள் தங்களுக்கிடையே தொடர்ந்து கடுமையாகப் போரிட்டுக்
கொண்டுமிருந்தனர். மத்திய கால இந்தியாவின் பல பெரும்போர்கள் ஆப்கானிய – முகலாய மோதல்களே.
இச்சூழலில் தில்லியை நோக்கிப்
படையெடுத்து வந்த தைமூர்-செங்கிஸ்கான் கலப்பு வம்சாவளியைச் சேர்ந்த பாபர் முதலாம் பானிபட்
போரில் (1526) ஆஃப்கானியரான இப்ராஹிம் லோடியைத் தோற்கடித்து முகலாய ஆட்சிக்கு அஸ்திவாரமிட்டார்.
பாபரின் மறைவுக்குப் பிறகு அவரது மகனான ஹுமாயூன் தொய்வடைந்திருந்த நேரத்தில், பீகாரில்
இப்ராஹிம் லோடியின் படைப் பிரிவின் தலைவனாக இருந்த ஷேர் கான் சூரி, தில்லியின் மீது
படையெடுத்து (1540) முகலாயப் படைகளைத் தோற்கடிக்க, பாபரின் மகன் ஹுமாயூன் ஈரானுக்குத்
தப்பியோடினார். சாதாரண ஆப்கானிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த படைத்தலைவனான ஷேர் கான்,
இவ்வெற்றிக்குப் பின்பு ஷேர் ஷா சூரி என்று தில்லியின் அரசனாக முடிசூட்டிக் கொண்டார்.
இந்தச் சூழலில்தான் ஹேமுவின் வாழ்க்கை
வெளிச்சத்துக்கு வரத் தொடங்குகிறது.  அவரது
இளமைப் பருவம் குறித்து அதிக விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. தில்லியிலிருந்து 150
கிமீ தொலைவில் ஜெய்ப்பூருக்கு வடக்கே ராஜஸ்தானத்தில் அல்வர் (Alwar) நகரின்
Dhansar பகுதியில் வசித்து வந்த ஒரு ஏழ்மையான வணிகக் குடும்பத்தில் (பனியா) அவர் பிறந்திருக்கலாம்
என்கிறார் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் R.C.மஜூம்தார். ஹேம ராய், பஸந்த் ராய் அல்லது
ஹேம சந்திர பார்கவா என்பது அவரது மூலப் பெயராக இருக்கலாம் என்று K.K.பாரத்வாஜ் கருதுகிறார்.
சிறுவயதிலேயே அவரது குடும்பம் தில்லி நகர்ப் புறத்திற்கு இடம் பெயர்ந்தது. தனது இளமைப்
பருவத்தில் அவர் ஹிந்தி, சம்ஸ்கிருதம், பாரசீகம், அரபி பாரசீக மொழிகளில் அடிப்படை தேர்ச்சி
உள்ளவராகவும், குதிரை ஏற்றம், மல்யுத்தம் ஆகிய கலைகளைப் பயின்றவராகவும் இருந்தார் என்று
கருதப் படுகிறது.

தில்லியின் புறநகர்ப் பகுதியான
ரேவாரி (Rewari) என்ற இடத்தில் சந்தையில் பலசரக்கு, காய்கறிகள் பழங்கள் விற்பனை செய்யும்
வியாபாரியாக ஷேர் ஷாவின் படைத்தலைவர்களுக்கு அவர் அறிமுகமாகிறார். பீரங்கிகளுக்கு வேண்டிய
வேதி உப்பு (saltpetre) தயாரித்துத் தருபவராகவும் அவர் இருந்திருக்கலாம். 1545ல் ஷேர்
ஷாவின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் இஸ்லாம் ஷா அரசராகும் போது, ஹேமு அரசு நிர்வாகத்தின்
அபிமானத்தைப் பெற்று பிரதான சந்தைக் கண்காணிப்பாளர் என்ற பதவியை அடைந்து. முக்கியமான
ஒற்றராகவும் பணியாற்றுகிறார்.
இஸ்லாமிய அரசில் இந்துக்கள் ஜிஸியா
வரி போன்ற கொடும் பொருளாதாரச் சுரண்டல்களுக்கும், பெண்களைக் கவர்ந்து செல்லுதல், அடிமைகளாக்கி
விற்றல், கட்டாய மதமாற்றங்கள், கோயில் அழிப்புகள் போன்ற கொடுமைகளுக்கும் தொடர்ந்து
உட்படுத்தப்பட்டு வந்தாலும், நடைமுறையில் அரசாட்சி இயங்குவதற்கு இந்துப் போர்க்குடிகள்,
வணிகர்கள் ஆகியோரின் ஆதரவும் தேவைப்பட்டது. மேலும் எப்போதும் உட்பகைகளாலும் சூழ்ச்சிகளாலும்
துரோகங்களாலும் நிறைந்திருந்த தில்லி இஸ்லாமிய அரசில், இந்துக்களையும் இஸ்லாமியர்களையும்
பரஸ்பரம் ஒற்றர்களாக வைத்திருப்பது போன்ற யுக்திகளும் புழக்கத்திலிருந்தன என்பதைக்
கவனிக்க வேண்டும்.
1553ல் இஸ்லாம் ஷாவின் மறைவிற்குப்
பின், அவரது 12 வயது மகனான பிரோஸ் ஷாவைக் கொன்றுவிட்டு, மாமன் அடில் ஷா சூரி தில்லியின்
அரசராகிறார். ஹேமுவின் அந்தஸ்து மேலும் உயர்ந்து அவர் பிரதம அமைச்சராகவும்
(Wazir), பிரதான கண்காணிப்பாளராகவும் ஆகிறார். அடில் ஷா சூரியின் அரசவையில் பணி நியமனங்கள்,
நீதி வழங்குதல் ஆகியவற்றுக்கான அதிகாரம் அனைத்தும் ஹேமுவிடம் இருந்தது என்று அபுல்
ஃபசல் தனது ‘அக்பர் நாமா’வில் குறிப்பிடுகிறார்.
அடில் ஷா சூரியின் அனைத்துப் போர்
வெற்றிகளுக்குப் பின்னும் ஹேமுவின் கூர்மையான யுத்த மேதைமையும் வீரமும் இருந்தது. மன்னருக்கு
எதிராகப் போர்க்கொடி உயர்த்திய ஆஃப்கானிய கிளர்ச்சியாளர்கள் உட்பட பல்வேறு  எதிரிகளைத் தோற்கடித்து 22 போர்களில் அடில் ஷாவுக்கு
வெற்றியைத் தேடித்தந்தார் ஹேமு. அப்படியும் ஷேர் ஷா சூரியின் பேரரசு நான்கு துண்டுகளாக
உடைந்து, ஆக்ரா-பீகார் பகுதிகளின் அதிகாரம் மட்டுமே அடில் ஷாவிடம் நீடிக்கிறது. வங்கத்தில்
முகமது ஷா சூரி தன்னை சுயமாக மன்னராக பிரகடனம் செய்து கொள்ள அங்கு பெரும்படையுடன் சென்று
அவரை ஹேமு முறியடிக்கிறார். வங்கத்தில் படைகளுடன் தங்கி அந்த மாகாணத்தில் நிர்வாக அமைப்பைச்
சீரமைத்து வருகிறார்.
இச்சூழலில் தில்லியில் ராணுவ பலம்
தளர்ந்த போது, ஈரானில் ஒளிந்திருந்த ஹுமாயூன் தனது படைத்தலைவர் பைராம் கான் தலைமையில்
படையெடுத்து வந்து 1555ல் அங்கு ஆண்டு வந்த சிகந்தர் ஷா சூரியைத் தோற்கடித்து தில்லியைக்
கைப்பற்றினார். 1556ல் ஹுமாயுன் இறந்தார். அவரது மகனான அக்பர் அப்போது 13 வயது சிறுவன்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தில்லியை நோக்கி தனது படைகளைத் திருப்பிய ஹேமுவை
தார்டி பெக் கான் தலைமையிலான முகலாயப் படைகள் துக்ளகாபாத் என்ற இடத்தில் சந்திக்கின்றன.
புகழ்பெற்ற துக்ளகாபாத் போரில்
(1556) முகலாயப் படைகளுடன் ஒப்பிடுகையில் ஹேமுவின் படை பெரும் வலிமை கொண்டிருந்தது.
அவரது படையில் இந்து வீரர்களும் ஆப்கானியர்களும் ஏறக்குறைய சம அளவில் இருந்தனர்.
1000 யானைகள், 50,000 குதிரைகள், 51 கனரக பீரங்கிகள், 500 falconets எனப்படும் மென்ரக
பீரங்களிகள் கொண்ட மாபெரும் படை ஹேமு என்ற ஹேமசந்திராவின் தலைமையில் அணிவகுத்து வந்தது
என்று இஸ்லாமிய வரலாற்றாசிரியர் பதாயுனி பதிவு செய்கிறார். பீதியுடன் போரிட்ட முகலாயப்
படைகளை வென்று தில்லியை ஹேமு கைப்பற்றுகிறார்.
தனது சுயமான வீரத்தாலும் தலைமைப்
பண்பாலும் தில்லியை வென்றடுத்த ஹேமு, தன்னை சுதந்திரமான மன்னராகப் பிரகடனம் செய்து
கொண்டார். புரானா கிலா எனப்படும் தில்லியின் கோட்டையில் பறந்து கொண்டிருந்த இஸ்லாமியக்
கொடியை இறக்கி இந்துக்களின் காவிக் கொடியைப் பறக்க விட்டார். 1556 அக்டோபர் 7 அன்று
பாரம்பரிய இந்து முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க, அந்தணர்கள் ஆசிகூற, புனித தீர்த்தங்களின்
நீர்த்திவலைகள் தெறிக்க, வெண்கொற்றக் குடை மேல்விரிய, தில்லியில் அவரது ராஜ்யாபிஷேகம்
விமரிசையாக நடைபெற்றது என்று வரலாற்றாசிரியர் ஜதுநாத் சர்கார் தனது நூலில் குறிப்பிடுகிறார்.
ஆப்கானிய சர்தார்களும், இந்து சேனாபதிகளும் அருகருகே நின்று தங்கள் மாமன்னராக அவரைப்
பிரகடனம் செய்து வாழ்த்தினர். பிருத்விராஜனுக்குப் பிறகு 350ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு
இந்து மன்னர் தில்லியின் அரியணையில் ஏறிய மகத்தான தருணம் அது. அதற்கு ஏற்ற வகையில்
‘சம்ராட் ஹேமசந்திர விக்ரமாதித்யா’ என்ற பட்டப் பெயரையும் அவர் ஏற்றார். அப்பெயரில்
நாணயங்களையும் உடனடியாக ஆணை பிறப்பித்து வெளியிட்டார். மிகச்சிறந்த நிர்வாக அனுபவம்
கொண்டிருந்த ஹேமு, சீரழிந்திருந்த நிர்வாக அமைப்புகளை உடனடியாக சீரமைக்கும் பணிகளில்
இறங்கினார். ஆப்கானிய சர்தார்களுக்கும் இந்து படைத்தலைவர்களுக்கும் பாரபட்சமின்றி வெகுமதிகளை
வழங்கினார்.
துக்ளகாபாத் போரின் தோல்வியினால்
பெரிதும் மனம் தளர்ந்திருந்த முகலாயப் படைத்தலைவரும் அக்பரின் பாதுகாவலருமான பைராம்
கான், ஹேமுவின் இந்த வெற்றியைக் கண்டு மேலும் பீதியடைந்தார். உடனடியாக, எஞ்சியிருந்த
முகலாயப் படைகள் திரண்டு 1556 நவம்பர் 5ம் நாள் பானிபட்டில் ஹேமுவின் பெரும் படைகளை
எதிர்கொண்டன. மீண்டும் முகலாயர்களின் தோல்விக்கான சாத்தியங்களே அதிகம் என்ற நிலை இருந்த
இப்போரில் எச்சரிக்கையுடன் அக்பரும் பைராம் கானும் போர்க்களத்திலிருந்து 8 மைல் தூரத்திலுள்ள
தளவாடத்திலேயே தங்கி விட்டனர். அலி குலி கான் ஷைபானி உள்ளிட்ட நான்கு படைத்தலைவர்கள்
முகலாயப் படைகளை நடத்திச் சென்றனர். எதிர்த்தரப்பில், ஹவாய் என்ற புகழ்பெற்ற யானை மீதேறி
ஹேமசந்திரா தானே தனது படைகளை நடத்தினார். இடப்புறம் அவரது சகோதரி மகன் ரமையா, வலப்புறம்
ஷாதி கான் கக்கார் ஆகியோர் படைத்தலைவர்களாக வந்தனர். போர் தொடக்கத்திலிருந்தே ஹேமுவின்
படைகளுக்கே வெற்றி கிடைத்துக் கொண்டிருந்தது. முகலாயப் படைகளையும் இரு பக்கப் பிரிவுகளையும்
சேதமடையச் செய்து மையத்தை நொறுக்குவதற்காக ஹேமுவின் படை முன்னேறிக் கொண்டிருந்தது.
வெற்றி மயிரிழையில் இருக்கும்
தருணத்தில் முகலாயர் படையிலிருந்து பறந்து வந்த அம்பு ஹேமுவில் இடது கண்ணில் தைத்து
விட, அவர் உடனே நினைவிழந்தார். இது ஹேமுவின் படைகளிடையே உடனடியாகப் பெரும் கலக்கத்தையும்
நிலைகுலைவையும் உண்டாக்கியது. படைகளின் வியூகம் குலைந்தது. ஹேமுவின் படைவீரர்கள் போரிடுவதை
விட்டு தப்பியோடத் தொடங்கினர். முகலாயப் படை இதைப் பயன்படுத்தி முன்னேறி பெரும் அழிவை
நிகழ்த்தியது. ஹேமுவின் படைவீரர்கள் சுமார் 5000 பேர் கொல்லப்பட்டனர். தோல்வியே கண்டறியாத
வீரர் என்று புகழ்பெற்றிருந்த ஹேமு தனது வாழ்வில் முதலும் கடைசியுமாகத் தோற்றார்.  
காயம் பட்டு நினைவிழ்ந்திருந்த
ஹேமுவைத் தாங்கிச் சென்ற யானையை முகலாயப் படை சிறைப்பிடித்து அக்பரும் பைராம் கானும்
தங்கியிருந்த கூடாரத்துக்கு எடுத்துச் சென்றது. இறந்து கொண்டிருந்த ஹேமுவின் தலையை
வாளால் வெட்டிக் கொன்று காஜி (காஃபிர்களைக் கொன்றவன்) என்ற புகழ்மிக்க பட்டத்தை அடையுமாறு
பைராம் கான் ஆணையிட, 13 வயதான அக்பர் அதை அப்படியே ஏற்று நிறைவேற்றினார். ஹேமுவின்
கொய்யப் பட்ட தலை வெற்றிச்சின்னமாக காபூலுக்கு அனுப்பப்பட்டது. அவரது சிதைந்த உடல்
தில்லிக் கோட்டையின் ஒரு வாயிலில் தொங்கவிடப்பட்டது. இப்போரில் கொல்லப்பட்ட காஃபிர்களின்
தலைகளைக் கொய்து அதனை மீனார் (ஊசிக் கோபுரம்) ஆகக் கட்டினார் அக்பர். இந்த செய்திகள்
அனைத்தையும் அபுல் ஃபசல் தனது அக்பர் நாமாவில் பதிவு செய்கிறார். அக்பர் தலைகளை வைத்துக்
கோபுரம் கட்டும் முகலாய பாணி ஓவியமும் நூலின் பிரதிகளில் வரையப்பட்டுள்ளது.
 
இத்தகைய கொடூரம் வாய்ந்த அக்பரைத்தான் நேருவிய-மார்க்சிய வரலாற்றாசிரியர்கள் பொய்களை அள்ளி வீசி அமைதியை விரும்பிய பேரரசர்
என்பது போல சித்தரித்துள்ளனர்.
ராஜஸ்தானில் அல்வர் நகருக்கருகில்
Machari என்ற கிராமத்தில் வாழ்ந்த ஹேமுவின் குடும்பத்தினரையும் முகலாயப் படைகள் வேட்டையாடினர்.
80 வயதான ஹேமுவின் தந்தை இஸ்லாமுக்கு மதம் மாறும்படி கட்டாயப் படுத்தப்பட்டார். அதை
மறுக்கவே, உடனடியாகக் கொல்லப்பட்டார். ஹேமுவின் மனைவி, குழந்தைகள் எங்கோ தப்பித்து
ஓடிப் பிழைத்ததாகக் கருதப்படுகிறது.
ஹேமுவின் மறைவிற்குப் பின் அடில்
ஷா சூரியும் அதிக நாள் வாழவில்லை. 1557ல் வங்கத்தில் ஹேமுவால் முறியடிக்கப் பட்ட முகமது
ஷா சூரியின் மகன் கிஸ்ர் கானால் கொல்லப்பட்டார்.
இவ்வாறாக ஹேமுவின் சகாப்தம் முடிவுக்கு
வந்தது. ஒளிவீசும் சூரியன் போல எழுந்து வந்த மாவீரன் மின்னல் போல மறைந்து விட்டான்.
இதற்குப் பிறகு 1709ல் அவுரங்கசீப் இறந்த பின்பு, 1737ல் தான் பேஷ்வாவின் மராட்டியப்
படைகளின் வெற்றி முழக்கத்துடன் இந்து அரசதிகாரம் தில்லியில் மீண்டும் தலையெடுக்க முடிந்தது. 
மிக எளிய பின்னணியிலிருந்து எழுந்து
வந்து மாபெரும் சாதனைகளை நிகழ்த்திய ஹேமுவின் வீரமும் பண்புகளும் அவரது எதிரிகளாலும்
கூடப் புகழப்பட்டன. பதாயுனி (The Muntakhabu-
rūkh),
அபுல் ஃபசல் (அக்பர் நாமா), நிஜாமுதீன் அகமது (Tabaqat-i-Akbari), அஹ்மத் யாத்கார்
(T
ārikh-i-Salātin-i-Afghāniyah), அப்துல்லா (Táríkh-i Dáúdí) ஆகிய இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களின்
பதிவுகளில் ஹேமுவைப் பற்றிய குறிப்புகள் வெறுப்பும், அசூயையும் அதே சமயம் பொறாமையும்
வன்மமும் கலந்த மதிப்புடனும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் நவீன காலகட்டத்திய வரலாற்றாசிரியர்களான
V.A.ஸ்மித், Sri Wolsey Haig, ஜதுநாத் சர்கார், R.C.மஜும்தார் ஆகியோர் ஹேமுவின் எழுச்சியையும்
வீழ்ச்சியையும் உள்ளவாறே பதிவு செய்துள்ளனர்.
ஒரு மாதம் கூட தில்லியின் அரியணையில்
அமர்ந்து அரசு செய்யாவிட்டாலும் கூட, ஹேமசந்திர விக்ரமாதித்யனின் புகழ்மிக்க வாழ்வு
இந்துக்களின் நெஞ்சில் நீங்காது நிலைபெற்று விட்டது. அச்சு ஓவியங்கள் வரத் தொடங்கியபோது
1910களில் அவரது ராஜதர்பார் ஓவியமாக வரையப்பட்டு வீடுகளில் வைக்கப்பட்டது.
  
தற்போது, ஹரியானாவில் பானிபட்டில்
உள்ள அருங்காட்சியகத்தின் வாயிலை ஹேமசந்திரரின் சிலை அலங்கரிக்கிறது.
அருங்காட்சியகத்தின் உள்ளே அக்பர்
கட்டிய ‘தலை கோபுரம்
ஓவியமும் உள்ளது.
வரலாற்றின் கசப்புணர்வுகளை ஒரு
நவீன சமுதாயம் கற்று, மறந்து முன்செல்லலாம். ஆனால் வரலாறு அளிக்கும் முக்கியமான பாடங்களையும்,
மகத்தான உத்வேகங்களையும் நாம் ஒரு போதும் மறந்துவிடக் கூடாது.
வீரரை வீரர்கள் போற்றுவர். ஹேமுவின்
புனித நினைவை நாம் போற்றுவோம்.  
Leave a Reply